மழைவில் மனிதர்கள் – புத்தக மதிப்புரை

1

மதிப்புரை – விஜயஸ்ரீ சிந்தாமணி

முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் திரட்டிய நினைவுகளின் தொகுப்புக் கட்டுரைகளே “மழைவில் மனிதர்கள்”. ஆங்கிலத்துறைப் பேராசிரியரான இவர், தமிழ் இலக்கியங்களிலும் புலமை பெற்றவர். யாரும் எழுதலாம், எதைப் பற்றியும் எழுதலாம் என்றாலும் சுவைபட எழுதுவது சிலருக்கே கைவந்த கலை. அப்படி ரசனையாக எழுதும் திறன் பெற்றவர் ஜெயந்தஸ்ரீ. இவரது நினைவுக்குறிப்புகள் நம்மைக் கட்டிப்போடுகின்றன. மனிதர்களின் இயல்பைக் கண்ணாடிபோல் காட்டுகின்றன.மொழிகளில் இவர் பெற்றுள்ள புலமையும், கதாசிரியராகவும், இதழாசிரியராகவும், கல்லூரிப் பேராசிரியராகவும் பெற்ற அனுபவமும் இவரது எழுத்துக்கு மெருகூட்டுகின்றன.

Mazhaivil ManithargaL - Cover

பெண் எழுத்தாளர்களில் நகைச்சுவையாக எழுதக் கூடியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தச் சிலரில் இன்றைய தினம் முதன்மையாக நிற்பவர் ஜெயந்தஸ்ரீ. இவரது பல திறமைகளில் மேலோங்கி நிற்பது நகைச்சுவையாக எழுதும் திறன். ‘உப்புமாஞ்சலி’, ‘ஆதலால், தூங்கச்செல்வீர்’, ‘யாண்டுபலவாக’, ‘மறக்கத்தெரிந்தமனமே’, ‘ஆஈன, மழைபொழிய’ என்று எதைப் பற்றி இவர் எழுதினாலும் அதைப் படிக்கையில் வயிறு புண்ணாகிறது, சிரித்துச் சிரித்து. நகைச்சுவை என்றால் பிறரை எள்ளி நகையாடுவதுதான் என்பது பலரது கொள்கை. ஆனால்ஜெயந்தஸ்ரீ தன்னுடைய ஓயாத தும்மல், ஞாபகமறதி, நகரை விட்டு நகர்ந்து வீடு கட்டி வாழ்வது, தலைச்சாயம் பூசுவது போன்ற தன் அனுபவங்களை சோகமும், ஹாஸ்யமும் ஒருங்கே இணைத்துச் சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறார். இவரது கைவண்ணத்தில் அவை வெகுளித்தனமும், ஹாஸ்யமும் நிரம்பி ரசனையாக மாறிவிடுகின்றன. முழங்கால் வலியில் கூட வசீகரம் காணும் ரசிகத்தன்மை இவரிடம் நிறைய உள்ளது. பிறர் மனத்தை நோகச் செய்யாமல் சுயஎள்ளல் செய்துகொள்ளும் ஒருவரை யாருக்குத் தான் பிடிக்காது?

எழுத்தாளர்களுக்கு கூர்ந்து நோக்கும் திறன் தேவை. இந்த எழுத்தாளர் மனித இயல்புகளைக் கூர்ந்து நோக்கி படம்பிடித்துக் காட்டுகிறார். ‘வட்டத்தின் மூலையில்’ பஸ்ஸில் பிரயாணம் செய்யும் பயணி, ‘நிஜப்போலி’யில் பூனையை வரவேற்றுத் தன் வீட்டைக் காட்டும் பெண்மணி, திறமை இருந்தும் வெளிக்காட்ட வாய்ப்பு இல்லாத ‘மற்றும்பலர்’ என இவர்களை உதாரணம் காட்டலாம். நாய், பூனை, பூச்சி போன்ற ஐந்தறிவு பெற்ற ஜீவராசிகளின் தன்மைகளையும் ஆராய்ந்திருக்கிரார். முற்றம், பரண், கதவு, பேனா என்றுஅஃறிணை பொருள்களின் குணாதிசயங்களையும் இவர் விட்டு வைக்கவில்லை.

Mazhaivil ManithargaL - Back Cover

இவரது இருமொழிப் புலமையும் கவிதை நடையும் நம்மை வசீகரிக்கின்றன. மாக்பெத்வரிகளை மின்னல் கீற்றாக மொழிபெயர்க்கும் மாணவன், ‘பௌர்ணமி போலப் பால் ஊத்தறேன்’ என்னும் பால்காரன், ‘பூவு ரெண்டு பூக்கும்; நாவு ரெண்டு பேசுமா?’ என்று கேட்கும் பாட்டி என்று எளிய மனிதர்களின் வார்த்தைகளின் கவிதை ஜாலத்தில் மயங்கி, நம்மையும் மயங்க வைக்கிறார். ஆலிஸின் அதிசய உலகப் பூனையின் புன்சிரிப்பைப் போல ‘நிஜப்போலி’யில் வரும் பூனையின் புன்சிரிப்பும், பூனை சென்ற பின்னும் அந்தரத்தில் நிற்கிறது! ‘திறந்திடு செசெமே’யில் தீக்குளித்து, பூட்டிய உள்ளில் இறந்த அத்தை மட்டுமில்லாமல், டேவிட் காப்பர்பீல்ட், ஜேன் அயர், ஆலிவர் ட்விஸ்ட் போன்ற ஆங்கில இலக்கிய மாந்தர்கள், அலிபாபாவின் அண்ணன் காசிம் எல்லோரும் பூட்டிய கதவின் பின் என்ன மனநிலையை அடைந்திருப்பார்கள் என்ற பறந்துபட்ட சிந்தனை இலக்கிய சிந்தனையாளர் ஜெயந்தஸ்ரீக்கு உண்டாகிறது.

‘குறுந்தொகையில் பெண்குரல்’ என்பது அன்றைய பெண்ணின் குரல், இன்றைய பெண்ணின் ஆவேசப் பேச்சுக்கு முற்றிலும் மாறானது என்று இவர் கண்ட ஆராய்ச்சியின் முடிவாக உள்ளது. ‘பாரதியை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்; நிராகரிப்பதென்றால் முழுமையாக நிராகரியுங்கள்’ என்று சொல்லும் துணிச்சல் படைத்த அறிவாளி.

இவரது எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தும் இவரது உரைநடையே ஓர் உல்லாச ஓடை போல், சின்னஞ்சிறுமி போல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒடுங்கிய வெண்கல உருளி நிலா, வீட்டிற்கு ஓட்டுக் குல்லாய் போன்ற உருவகங்களை வேறு யாரால் எழுத முடியும்? ‘இரண்டுகால் பூச்சியும், ஆறுகால்அவளும்’ தலைப்பே கவிதைத்தன்மை கொண்டிருக்கிறது அல்லவா?முற்றுப்புள்ளி அளவில் வளர்ந்த பூச்சிக்கும், அவளுக்கும் நடக்கும் போராட்டத்தில் அவள் பூச்சியாகவும், பூச்சி அவளாகவும் மாறிவிடுகின்றனர்.

குருவிகள், முதியோர் இல்லங்களில் தொலைக்கப்பட்ட பெற்றோர்கள், குழந்தைத்தன்மையைத் தொலைத்த குழந்தைகள் அனைவரும் காணாமல் போய்விட்டனர் என்று துடிக்கிறார் நெஞ்சில் நேசத்தைச் சுமந்த ஜெயந்தஸ்ரீ. வேப்பமரம் வெட்டப்படுமுன், காக்கை மின் கம்பியில் அடிபட்டு இறந்து போகும் முன் அவைகளிடம் தனக்கு இருந்த பாசத்தை வெளியிடாமல் இருந்ததற்காக வருந்துகிறார் இந்தக் கருணையுள்ளம் கொண்ட தாய்.

ஜெயந்தஸ்ரீயின் மொழிப்புலமை, நகைச்சுவை உணர்வு, உல்லாச உரைநடை, கவிதைநோக்கு, மனிதநேயம் யாவும் கலந்து, அறிவுக்கு விருந்தாக, வண்ணச்சித்திரமாக வானவில் போல் ஆனந்தத்தைத் தருகிறது ‘மழைவில் மனிதர்கள்’.

நூல்:                                          மழைவில் மனிதர்கள்

ஆசிரியர்:                              முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்

பதிப்பு:                                     திரிசக்திபப்ளிகேஷன்ஸ்

முதல் பதிப்பு:                     ஏப்ரல் 2010

மொத்தப் பக்கங்கள்:     240

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மழைவில் மனிதர்கள் – புத்தக மதிப்புரை

  1. I’m in Singapore and would love to read Professor’s book. I can’t buy it online. Could you please advise me on how to purchase this book. Thank you.

Leave a Reply to Mary Doris Thomas

Your email address will not be published. Required fields are marked *