இந்த வார வல்லமையாளர்!
திவாகர்
வரும்காலம் பூராவுமே காகிதமில்லா உலகமாக மாற இருக்கிறது என்பதில் எல்லோருக்குமே ஒரு கவலையும், சந்தோஷமும் இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். கவலை என்னவென்றால் பேப்பர் (செய்திகளாகட்டும், புத்தகங்களாகட்டும்) சம்பந்தப்பட்ட தொழிலின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ என்றுதான். அதே சமயத்தில் பேப்பரில்லா காலத்தில் எத்தனை சேமிப்புகள், எத்தனை எளிமைகள், என்பதையும் எண்ணிப்பார்த்து சந்தோஷப்பட வேண்டும்தான்.
எத்தனைதான் மின்வழிச் சாதனங்கள் மூலம் படித்துப் பார்த்தாலும் புத்தகம் மூலம் பொறுமையாக பார்த்துப் படித்து ரசிப்பது போல வருமா எனக் கேட்ப்போருமுண்டு. பழங்காலத்தில் செவி வழிக் கல்விதான். பின்புதான் ஏட்டுக் கல்வி வந்தது.ஏட்டுக் கல்வி போய் கணினிக் கல்வி வரும்போது கணினிக்கு ஏடு தாராளமாக வழிவிட வேண்டுமென்றுதான் நான் நினைக்கிறேன். ஏற்கனவே தினப் பத்திரிகைகள் மின்னிதழ்களை இப்போதே ஆரம்பித்து விட்டன. இந்தப் போக்கு இன்னும் வேகமடையுமா..காகிதம் முழுவதும் . மின் தொலைத் தொடர்புச் சாதனங்கள் மூலமாக ஓரங்கட்டப்பட்டு ஒரேயடியாக கிழிந்து போகும் நிலை வருமா. காகிதத்தை வெறும் காற்றாடிக்காக மட்டுமே பயன்படுத்தும் காலம் வருமா.. ஏனோ இதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
இதற்கிடையில் இந்த கால கட்டத்தில் வாழும் படைப்பாளிகள் வரும் எதிர்காலத் தலைமுறைக்காக தம்மைத் தயார் செய்துகொள்ளத்தான் வேண்டும். காகிதப் புத்தகங்கள் நிச்சயமாக நமக்குச் செல்வம் போலத்தான்.ஆனால் காலம் மாறுகிறது என்பதை நம் கண் முன்னால் காணும்போது காலத்துக்கேற்றவாறு மாறுவதும் இயல்புதானே.. காகிதப் புத்தகங்கள் காகிதத்தைத் துறந்து மின் புத்தகமாக மாறி வரும் இந்த இடைப்பட்ட காலத்தை படைப்பாளிகள் தகுந்தமுறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
இப்படிப்பட்ட நிலையில் சென்னையைச் சேர்ந்த திரு ஸ்ரீனிவாசன் . படைப்பாளிகளுக்கு ஒரு நல்லதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் இந்த பணி ஒரு உயரிய பணி என்பதோடு படைப்பாளியின் படைப்புகள் உலகெங்கும் பரவ வழியின் செய்தது போல ஆகிறது. நல்லுதவி செய்து வரும் திரு ஸ்ரீனிவாசன் இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்
தெடுக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகள். அவரைப் பற்றி மேலும் அறிய தேமொழியின் தொடுப்பைக் காணலாம்.
கடைசி பாரா: கிரேஸி மோகன் அவர்களின் வேதாந்த பண்டு
உண்டாகி உண்டுமிழும் குண்டாகி, வேதக்கற்
கண்டாகி, வேதாந்த சிண்டாகி -தண்டாகி
செண்டாகி, முண்டகத்து வண்டாகி ஜீவான்மா
ரெண்டாகி வந்துபோகும் பண்டு
மிக அருமையான தேர்வு.. திரு.ஸ்ரீநிவாசன் அவர்களுக்கும், திரு.கிரேஸி மோகன் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!
இந்தவார வல்லமையாலராகத் தேர்வு பெற்றிருக்கும் திரு.ஸ்ரீநிவாசன் அவர்களுக்கும், அருமையானதொரு அந்தாதியை வழங்கி கடைசி பாரா வில் பாராட்டப்பட்டுள்ள திரு.கிரேசி மோகன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.