முன்னுரை :

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள வட்டூர் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட மோர்ப்பாளையம் என்னும் சிற்றூரில் எழுந்தருளி இருக்கும் வைரவநாதமூர்த்தியின்(பைரவர்)திருக்கோயிலில் அமர்ந்து சிவபெருமானைப் பற்றிப் பாடுவதாக மனதில் நினைத்து “பரம்பொருள் பாமாலை” என்னும் இச்சிறு தொகுப்பை எழுதுயுள்ளேன்.

      சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு மோர்ப்பாளையம், சேலம் மாவட்டம்  சங்ககிரி வட்டத்தில் உள்ள மோரூர் மகுடஞ்சாவடி அருகில் உள்ள கூடலூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மூன்று அடியார்கள் ஆற்றில் நீராடச் சென்ற போது மரப்பேழை ஓன்று மிதந்து வரக் கண்டனர். அந்தப் பேழையைத் திறந்து பார்த்த பொழுது உள்ளே மரத்தினால் ஆன ஒரு அழகான பைரவர் சிலையைக் கண்டனர். இறைவனே தங்களைத் தேடி வந்ததைக் கண்டு மூவரும் பேருவகை அடைந்து இறைவனை வணங்கினர்.

      பின்னர் இறைவனின் திருவுருவச் சிலையை மோர்ப்பாளையம் கொண்டு வந்து கோயில் எழுப்பி வழிபடத் தொடங்கினர். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் சிவன் இராத்திரி தினத்தன்று மூன்று ஊர் மக்களும் ஓன்று கூடி இறைவனுக்கு விழா எடுத்துக்  கொண்டாடி வணங்கி வருகின்றனர். தைத் திங்கள் அமாவாசை தொடங்கி, மாசித் திங்கள் அமாவாசை வரை ஒரு மாதம் விரதம் இருந்து அதன் இறுதியில் மகாசிவன் இராத்திரி விழாவைக் கொண்டாடுகின்றனர். இந்த விழாவின் ஒரு பகுதியாக தமிழரின் தொன்மையான கலைகளில் ஒன்றான கூத்துக் கலையை வளர்க்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து தெருக்கூத்து நடத்தப்பட்டு வருகிறது. ஆதிநாதர் என்னும் வம்சத்தைச் சேர்ந்த இம்மக்களால் இறைவனுக்கு, மாதந்தோறும் தொடர்ந்து அட்டமித் தினத்தன்று பூசனைகள் செய்யப்பட்டு அடியார்களுக்கு திருஅமுது வழங்கப்பட்டு  வருகின்றது. கடந்த கி.பி.2001ம் ஆண்டு இறைவனின் அருளினாலும் சமயப் பெரியோர்களின் தொடர் முயற்சியினாலும் இக்கோயில் புனரமைக்கப்பட்டு திருக்குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.

 

பரம்பொருள் பாமாலை

காப்பு:

 

சுழல் குழல் கரத் தனின்,

திகழ் பெருங் கருணை யால்,

குழல் திகழ் நிலவுடை யோன்,

எழில் புகழ் புனைந்திடு வோம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பரம்பொருள் பாமாலை-1

  1. பரம்பொருள் பாமாலை பரமனருளால் துவங்கியிருக்கும் சகோதரருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.. பூமாலைகள் பல சூடும் பொன்னார் மேனியன் தங்கள் தரும் பாமாலையையும் மகிழ்ந்து சூடி, அருள் மழை பொழிந்து வாழ்விக்கப் பிரார்த்திக்கிறேன்!!..

  2. @@ திருமதி.பார்வதி இராமச்சந்திரன்,

    தங்களது அன்பான மொழிக்கு நன்றி சகோதரி!

Leave a Reply to பார்வதி இராமச்சந்திரன்.

Your email address will not be published. Required fields are marked *