அன்பு நண்பர்களே,

வணக்கம். இணையமும் செல்பேசிகளும் பரவலாகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், கடிதம் எழுதும் வழக்கம் அருகி வருகிறது. குறுஞ்செய்திகளில் நம் எண்ணங்களைச் சுருக்கி இரண்டு வரிகளில் அளிக்க வேண்டிய நிலையில், நம் உள்ளக் கிடக்கைகளை விலாவாரியாக விவரிக்கும் கடித இலக்கியம் இன்று பெரும்பாலும் மறைந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அரிதான கடித இலக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் நம் வல்லமையில் வருகிற மகளிர் தினத்தை முன்னிட்டு ‘அன்புள்ள மணிமொழிக்கு’ என்ற தலைப்பில் போட்டி அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

themozhi1

இப்போட்டியை நடத்துவதற்கான பரிந்துரையும், பரிசுத் தொகையும் வழங்க, தானே முன்வந்து அறிவித்திருக்கும் திருமதி தேமொழி அவர்களுக்கு நம் மனமார்ந்த பாராட்டுதல்களும், வாழ்த்துகளும்.

6013173dc1e51011d1a99625f6b92946

பதினாறாம் அகவையில் தம் இலக்கியப் பயணத்தை ஆரம்பித்து, இன்று இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனிப்பட்ட இடத்தையும் பிடித்து, தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் சொற்பொழிவாற்றலும், இலக்கிய மன்றங்கள், கவியரங்கம், தொலைக்காட்சித் தொடர்கள் என அனைத்துத் தளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் திரு இசைக்கவி இரமணன் அவர்கள் இப்போட்டியின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கச் சம்மதித்துள்ளார். அவருக்கும் நம் மனமார்ந்த நன்றி.

போட்டிக்கான விதிமுறைகள்:

ஒருவர் எத்தனை கடிதங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

போட்டிக்கு அனுப்பும் கடிதங்கள், இதற்கு முன் அச்சிலோ, இணையத்திலோ வேறு எங்கும் வெளியாகாத ஆக்கமாக இருக்க வேண்டும்.

மணிமொழியை சகோதரி, மகள், மருமகள், பேத்தி, தோழி, காதலி என எந்த ஒரு கற்பனைப் பாத்திரமாகவும் வரித்துக் கொண்டு தங்கள் ஆக்கங்களைப் படைக்கலாம். இலக்கியப் பாத்திரங்கள் முதல் இல்லாத கற்பனைப் பாத்திரங்கள் வரை மணிமொழியை விளித்து தனது எண்ணத்தில் தோன்றுவதை எந்தவொரு வரையறையும் இன்றி வேண்டுகோள், அறிவுரை, தனது அன்பை சொல்லுதல், நாட்டு நடப்பை அலசுதல் என எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி தமது கருத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.

கடிதங்களுக்குப் பக்க எண்ணிக்கை இல்லை.

போட்டிக்கான இறுதி நாளான மார்ச் 31ம் தேதி வரை வருகின்ற ஆக்கங்களிலிருந்து சிறந்த மூன்று ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.

பரிசு பெறுவோர், அயல்நாட்டில் வசிப்பவர் எனில், தம் இந்திய முகவரியை அளிக்க வேண்டும்.

படைப்புகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.

படைப்புகள் தெளிவான நடையில், யுனிகோடில் இருப்பது அவசியம்.

போட்டிக்கான இறுதி நாள் மார்ச் (2014) 31ம் நாள்.

முதல் பரிசு ரூ. 1000
இரண்டாம் பரிசு ரூ. 750
மூன்றாம் பரிசு ரூ. 500

பிப்ரவரி மாதம் 21ம் தேதியிலிருந்து வருகிற படைப்புகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுக்குரிய படைப்பின் விவரம் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படும். ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.

வல்லமை ஆசிரியர் குழுவினரும் ஆலோசகர்களும் கடிதம் எழுதலாம்;  அதை வல்லமையில் வெளியிடத் தடையில்லை. ஆனால் அதை போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இதர போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாதிரி ஆக்கங்களாக அவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

திரளாக வந்து போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாழ்த்துகள் நண்பர்களே!

உங்கள் படைப்புகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
பவள சங்கரி

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “கடித இலக்கியப் பரிசுப் போட்டி!

  1. மறைந்துவரும் அரிய இலக்கிய வகையான ’கடித இலக்கியத்தை’ மீட்டெடுக்கும் வகையில் ’அன்புள்ள மணிமொழிக்கு’ என்ற போட்டியைப் பரிந்துரைத்துப் பரிசுத் தொகையையும் தானே வழங்க முன்வந்திருக்கும் தோழி தேமொழிக்கு பலத்த கரவொலியோடு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அவர் விருப்பத்திற்கிணங்க இப்போட்டியை நடத்த முன்வந்திருக்கும் வல்லமை இதழுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகுக!

    போட்டியின் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க இசைவு தெரிவித்திருக்கும் இசைக்கவி திரு. இரமணன் அவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

    அன்புடன்,
    மேகலா

  2. புதுமையானதொரு முயற்சியாக கடித இலக்கியப் போட்டியை அறிவித்து பரிசுத் தொகையையும் வழங்க முன்வந்துள்ள சகோதரி திருமதி.தேமொழி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    புதுமையான முயற்சிகளுக்கான சிறந்ததொரு களமாக விளங்கிவரும் வல்லமை இதழுக்கும், நடுவராக செயல்பட முன்வைத்திருக்கும் இசைக்கவி. திரு.இரமணன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

  3. கடிதம் எழுதுவது என்பது இப்போது அறவே நின்றுவிட்டது.  அந்நாட்களில் பணி நிமித்தமாக வெளியூரிலிருக்கும் போது வீட்டிலிருந்து கடிதம் வரும் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்?  திரும்பத் திரும்ப வாசித்து க் கடிதமே மனப்பாடம் ஆகிவிடும்.  கடிதம் எழுதுவது ஒரு கலை.  அரிதாகி விட்ட இக்கலையைப் புதுப்பிக்கும் நோக்கத்துடன் இப்போட்டியை அறிவித்திருக்கும் வல்லமை ஆசிரிய குழுவுக்குப் பாராட்டுக்களுடன் கூடிய நன்றி.  இதனை முன்மொழிந்த தேமொழி அவர்களுக்கும் நடுவர் பொறுப்பை ஏற்றிருக்கும் திரு ரமணன் அவர்களுக்கும் என் நன்றி. 

  4. கடிதம் எழுதும் இலக்கியத்தை டாக்டர் மு.வ. விரிவாகப் படைத்தார், தம்பிக்கு, தங்கைக்கு என்றெல்லாம். பிறகு சி.என்.அண்ணாதுரையின் கடிதங்கள் ‘தம்பிக்கு..” எனும் தலைப்பில் அரசியலையும் சமூகத்தையும் அலசத் தொடங்கிய காலத்தில் அவருடைய ‘திராவிட நாடு’ பத்திரிகையைக் கையில் சுருட்டி வைத்துக் கொண்டே திரிந்த நண்பர்களை நான் அறிவேன். என்னதான் மனிதன் துன்பத்தில் ஆழ்ந்திருந்த போதும் கடிதத்தைப் படிப்போர் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக “நலம், நலமறிய ஆவல்” என்று இந்தக் கடிதம் சுபச் செய்தியைத்தான் சுமந்து வருகிறது என்பதற்கு அடையாளமாக எழுதுவர். இன்று ஆங்கில சொற்களைக் கூட ஒலி அடிப்படையில் சுருக்கி கைபேசி மூலம் அனுப்பும் ‘மினி’ வாழ்க்கை நடக்கிறது. இந்த சமயத்தில் நல்லதொரு வாய்ப்பினைத் தாங்களும், சகோதரி தேமொழியும் தந்திருப்பதற்கு நன்றி செலுத்தியாக வேண்டும். கடிதம் என்பது தனிப்பட்ட இருவருக்குள் பரிமாறிக் கொள்ளப்படும் செய்தியாக மட்டுமின்றி அது பல சுவையான செய்திகளையும் சுமந்து வரவேண்டும். பார்ப்போம், எத்தனை சுவையான கடிதங்கள் போட்டிக்கு வருகின்றன என்று. ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, தங்கள் கடிதமும் இந்த நேரத்தில் வெளிவர வேண்டுமென்று அனைவருமே ஒரு கடிதமாவது எழுதுவது நல்லது. செய்யவேண்டுமென்பதும் என் ஆவல். நன்றி.

Leave a Reply to மேகலா இராமமூர்த்தி

Your email address will not be published. Required fields are marked *