“தாய்மொழி வழிக் கல்வியை உயர்த்திப் பிடியுங்கள்…..”

1

தொகுப்பு: எஸ். வி. வேணுகோபாலன்

முனைவர் ம. திருமலை,

துணைவேந்தர்,

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

“கிராமத்தில் மாட்டுக் கொட்டகை போன்ற இடத்தில் நடத்தப்பட்டுவந்த  பள்ளியில் தொடக்கக் கல்வி முடித்த என்னை சோழவந்தான் உயர்நிலைப் பள்ளியில் கொண்டுவந்து போட்டார்கள். இங்கே சொல்லத் தக்க மதிப்பெண்கள் எதையும் நான் பெற்றிருக்கவில்லை. நான் தேற மாட்டேன் என்றார்கள். எனினும் படிப்பைத் தொடர அனுமதிக்கப்பட்டேன். முழுக்க முழுக்கத் தாய்மொழிவழியிலேயே கல்வி பயின்றவன். இப்போது உங்கள் முன் ஒரு பல்கலைக் கழகத் துணை வேந்தராக நிற்கிறேன்…..எனவே பெற்றோரைக் கேட்டுக் கொள்கிறேன்… மதிப்பெண்களை வைத்துக் குழந்தைகளை எடை போடாதீர்கள்… குறைந்த மதிப்பெண் பெற்றாலும் அவர்கள் நல்ல சாதனையாளர்களாக வர வாய்ப்பு உண்டு.

“காலனி ஆதிக்கம் இருந்த நாட்களில், அர்பட்நாட் என்ற ஆங்கிலேயர் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகப் போனபோது, அவரது வங்கியில்  பணம் போட்டிருந்தவர்கள் பட்ட பாடுகளை மகாகவி பாரதி தமது கட்டுரையில் எழுதினார். நாமே ஒரு சுதேசி வங்கி தொடங்கினால் என்ன என்று அவர் விடுத்த வேண்டுகோளில் இருந்து பிறந்ததுதான் இந்தியன் வங்கி. பின்னர் அதே அர்பட்நாட்டின் கட்ட்டடத்தையும் வாங்கி அங்கேயே இந்த வங்கி இயங்கத் தொடங்கியது. அதன் ஊழியர்கள் எங்களுக்குச் சமூக அக்கறை உண்டு என்று கம்பீரமாக நடத்தும் இந்தத் தொழிற்சங்க சேவை போற்றுதலுக்குரியது. இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் வாழ்த்துதலுக்கு உரியவர்கள்.

இங்கே தலைமை ஆசிரியை வாசித்த ஆண்டறிக்கையில், இந்தப் பள்ளியில்  பிரம்படி இல்லை. ரேங்க் கார்டு இல்லை என்றார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரேங்க் கார்டு கொடுத்ததும் இந்த அம்மாக்கள் உடனே அடுத்த வீட்டுப் பிள்ளைகளோடு ஒப்பிடுவார்கள். இது எங்கே கொண்டுபோய் விடும் தெரியுமா? முதல் முறை அடிபட்ட  பிள்ளை, அடுத்த முறை  அப்பா கையெழுத்தை அவனே போட்டுக் கொண்டுபோய்விடுவான். பிள்ளைகள் தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படும் வாய்ப்பு உண்டு.  ஒரே வீட்டில் அண்ணனும், தம்பியும் இருப்பார்கள். ஒருவன் நிறைய மதிப்பெண்கள் வாங்கியிருப்பான். அவன் தனது ரேங்க் கார்டைப் பெற்றோரிடம் கொண்டு காட்டுவான். அடுத்தவன் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருப்பான். அவனால் அப்படிக்காட்ட முடியாது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்படும். எனவே இப்படிப்பட்ட நிலையில் பெற்றோர்கள் மிக்க் கவனமாகவும் திறமையாகவும் செயற்படவேண்டும். இருவரையும்  பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

முனைவர் ம. திருமலை, துணைவேந்தர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
முனைவர் ம. திருமலை,
துணைவேந்தர்,
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

ஒருமுறை நான் விமான நிலையத்தில் காத்திருந்தேன். எனக்குப் பின்புற வரிசையில் செப்புச் சிலை போல் ஒரு பெண் குழந்தை. மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கும் பெற்றோர் அந்தக் குழந்தையை அவள் சரியாகப் படிப்பதில்லை என்று யார் யாரோடோ ஒப்பிட்டவண்ணம் அத்தனை திட்டு திட்டிக் கொண்டிருந்தனர். என்னிடம் கொடுத்தால் அந்தக் குழந்தையை மடிமீது ஏந்திக் கொண்டாடி இருப்பேன். அவ்வளவு உயர்கல்வி படித்திருந்தும் அந்தப் பெற்றோர் இப்படி மூடத்தனமாகக் குழந்தையை நடத்தும் விதம் என்னை மிகவும் பாதித்தது.

பெற்றோரே, உங்களைக் கேட்டுக் கொள்கிறேன், உங்கள் குழந்தைகள் எத்தனை மதிப்பெண்கள் வாங்குகின்றனர் என்பதை வைத்து அவர்களை மதிப்பிடாதீர்கள். அவர்களிடம் காணும் திறன்களை ஊக்குவித்து வாழ்க்கையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள். பள்ளியில் மிக அதிக மதிப்பெண்களைப் பள்ளியில் பெற்ற  குழந்தைகள் சிலர் மேற்படிப்பில் சமாளிக்க முடியாமல் நொறுங்குவதைப் பார்க்கிறோம். வாழ்க்கையில் வெற்றி பெற்ற எத்தனையோ மனிதர்கள் தங்களது பள்ளிக் கல்வியில் அதிகம் மதிப்பெண் பெறாதவர்கள் என்பதை அன்பு கூர்ந்து கவனியுங்கள்.

பள்ளிக்கூடப் படிப்பில், எங்களுக்குக் கணக்குப் பாடம், கணக்கு ஆசிரியர்  என்றாலே வயிற்றைக் கலக்கும். ஆனால் அவர் வராத அன்றைக்கு, கருப்பையா வாத்தியார் என்பவரை அந்த பாட வேளையில் ஏதாவது சொல்லிக் கொடு என்று எங்கள் வகுப்புக்கு அனுப்பி வைப்பார்கள். அவர் படித்தவர் இல்லை. கைநாட்டு மனிதர்தான். ஆனால் அவர் வந்தால் அப்படி உற்சாகம் கொள்ளும் வகுப்பறை. பஞ்ச தந்திரக் கதைகளைச் சொல்வார். நல்ல சுவாரசியமாகக் கதை போய்க்கொண்டிருக்கையில் சட்டென்று விறுவிறுப்பான ஒரு கட்டத்தில் கதையை நிறுத்திவிட்டு,இடுப்பிலிருந்து மூக்குப்பொடிப் பட்டையை எடுத்து அதில் ஒரு சிட்டிகை எடுத்து நிதானமாகப் பொடியை உறிஞ்சுவதில் ஈடுபடுவார். நாங்களோ கதையின் அடுத்த கட்டம் என்ன என்று அறியத் துடிப்போம். இப்படியாக எங்களை வசீகரித்து, வாழ்க்கை குறித்த புரிதல்களையும் எங்களுக்கு எடுத்துச் சொல்லி வளர்த்தவர் அவர். பள்ளிக் கல்வியைக் காட்டிலும் கருப்பையா கற்றுக் கொடுத்த நுட்பங்களே வாழ்க்கையில் சோதனைக் காலங்களில் – சவாலான தருணங்களில் பிரச்சினைகளைத் துணிவோடு சந்திக்கும் நெஞ்சுரத்தை வளர்த்துக் கொடுத்திருக்கிறது.

இன்றைக்கு இப்படியான சூழல் இல்லாததால், மாணவர்கள் எப்படித் திணறுகின்றனர் என்று பார்க்கிறோம். ஒரு கல்லூரி முதல்வரை மாணவர்கள் வழிமறித்துக் கொல்லும் அளவுக்குப் போயிருக்கிறது நிலைமை. இன்னொரு மாணவர் ஒரு பெண் ஆசிரியரையே குத்திக் கொன்றுள்ள கொடூரம் நடந்துள்ளதைப் பார்க்கிறோம். இது ஆரோக்கியமான சூழல் இல்லை.

கற்றலின் இனிமை பற்றிக் குறிப்பிட்டார்களே… மாணவர்-ஆசிரியர் உறவு இணக்கமாக இருக்க வேண்டும். தாய்மொழியைக் கேவலமாக நினைக்காதீர்கள்…உலகில் அதிகம் பேசப்படும் மொழி சீன மொழி.  ஆங்கிலம் அல்ல. ஆங்கில மோகம் கொண்டு அலைவது தேவையற்றது. மகாகவி பாரதியே,ஆங்கிலக் கல்வி பற்றி வருத்தமுற்றுத் தனது சுயசரிதையில், “செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது, தீது எனக்குப் பல்லாயிரம் சேர்ந்தது” என்று சொல்வார். இதனால் ஓர் எள்ளின் முனையளவு  நலமும் பெற முடியவில்லை என்றார். இதை எந்தக் கோயிலிலும் வந்து சத்தியம் செய்வேன் என்றும் சொன்னார். நானும் தமிழ் வழிக் கல்வி படித்துத்தான் இன்று துணைவேந்தராக உயர்ந்திருக்கிறேன். ஒன்றும் விளங்காமல் எல்லாம் போய்விடவில்லை. தமிழ் கற்றால் நல்ல நிலை ஏற்படும் என்பதற்கு வேறு ஒரு நிரூபணம் தேவையில்லை.

இந்தப் பள்ளி தாய்மொழிவழிக் கல்வியைத் தொடர்ந்து நடத்துவது அருமையான விஷயம். 6சதவீதம் பேர் பேசும் ஆங்கிலத்தின்பின் ஓட வேண்டாம். நான் முழுக்க முழுக்கத் தமிழ்மொழி வழியிலேயே படித்து – அரசுப் பள்ளிகளிலேயே படித்து உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அரசாங்க வேலைகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு உண்டு. எனவே உற்சாகமாகத் தாய்மொழியில் படிக்க வையுங்கள்..

இந்தப் பள்ளி மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்..”

(இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி கிராமத்தில் நடத்திவரும் ஐ பி இ ஏ பள்ளியில்  பிப்ரவரி 15 அன்று நடைபெற்ற 12ஆவது ஆண்டுவிழாவில் ஆற்றிய சிறப்புரையிலிருந்து…)

நன்றி: வண்ணக்கதிர்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on ““தாய்மொழி வழிக் கல்வியை உயர்த்திப் பிடியுங்கள்…..”

  1. அருமையான தொகுப்பு. நானும் தாய்மொழி மாணவன் தான். முனைவர். ம. திருமலையிடம் கேட்டுச்சொல்லுங்கள், சோழவந்தானில் ஹெட்மாஸ்டர் ஜனாப். ஜி.யாக்கூப் கான் அவர்களா
    என்று. என்னை நிறுத்தி வைத்தவர், அவர் தான். நிஜமாகவே, பதிலுக்குக் காத்திருக்கிறேன்.

    வாழ்த்துக்கள், திரு.எஸ்.வி,வே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *