என் உருவம்
சங்கர் சுப்பிரமணியன்
என் உருவம்
பழகிடத் தோழியும்
யாரிடமும் பழகாத மனைவியும்…
சம்பாதித்த அண்ணனும்
சமமாக சொத்து பிரிக்கும் நியாயமும்…
கேளாமல் உதவிடும் நண்பனும்
கேட்டாலும் உதவ மறுக்க நல்ல காரணங்களும்…
சேஷ்டை செய்யும் பையனும்
அதைத் தாங்கிக்கொள்ளும் அவன் நண்பனும்…
மனம்நிறையும் மாற்றான் விருந்தும்
மறுதலிக்கும் உற்றான் வருகையும்….
சோம்பித் திரியும் நாட்களும்
செல்வம் கொழிக்கும் வாழ்க்கையும்…
உள்ளொன்று புறமொன்றென
மாறி நிற்கும் என் உருவம்….