குறளின் கதிர்களாய்…(24)
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டிக் கொளல்.
-திருக்குறள் -401(கல்லாமை)
புதுக்கவிதையில்…
காயுருட்டி விளையாடக்
களம் வேண்டும்,
குழி அமைக்குமுன்னே
காயுருட்டல் வீண்தானே..
கற்றவர் அவையில்
உற்ற நூற்கள்
கல்லாமல் பேசுபவரின்
கதை இதுதானே…!
குறும்பாவில்…
களம் அமைத்தபின் காயுருட்டு,
கற்றுத் தேர்ந்தபின்
கற்றோர்முன் வாதாடு…!
மரபுக்கவிதையில்…
களமது அமைத்தாங்குக் குழிசெய்து
காயது உருட்டுதல் விளையாட்டு,
விளங்கிடும் கருத்திதுதான் வாழ்க்கையிலும்
வித்தை கற்றிடும் கல்வியிலும்,
தெளிவுடன் தெரிந்திடத்தான் பலநூலும்
தெரிந்து கற்றிடாமல் செல்லாதே,
தெளிவாய்க் கற்றறிந்தோர் சபையினிலே
தெரிந்ததைச் சொல்லித்தான் வாதிடவே…!
லிமரைக்கூ…
அரங்கம் அமைத்தபின் விளையாடச் செல்,
அவைநிறைந்த கற்றோர்முன்
அளவாய்நூல் கற்காமல் செல்லாதே நில்…!
கிராமியப் பாணியில்…
வெளயாடு வெளயாடு
விருப்பம்போல வெளயாடு,
அரங்கத்த தயார்பண்ணி
அப்புறமா வெளயாடு,
வெளயாடு வெளயாடு
விருப்பம்போல வெளயாடு..
அதுபோல
ஒரயாடு ஒரயாடு
படிச்சோர்கிட்ட ஒரயாடு,
படிச்சித் தெரிஞ்சி ஒரயாடு
படிச்சித் தெளிஞ்சி ஒரயாடு..
இப்போ,
ஒரயாடு ஒரயாடு
விருப்பம்போல ஒரயாடு…!
http://www.thechessstore.com/product/SAB008FE/Indian-Theme-Chess-Set-with-Chess-Board.html
கல்லாமை கல்வியை மட்டுமல்லாமல், பொதுவிலும் எதையும் தெரிந்து கொள்ளும் முன் அமைதி காப்பது சபை முன் உதவும்.
வழக்கம் போல் அனைத்தும் அருமை
கருத்துரை வழங்கிய திரு.அமீர் அவர்களுக்கு
மிக்க நன்றி…!