சிறுகை அளாவிய கூழ் (20)
இவள் பாரதி
ஏதேதோ காரணங்களால்
அவசரப்பட்டு அடித்துவிட்டு
துடித்துக் கொண்டிருக்கிறேன்
ஒவ்வொருமுறையும்
அடித்த மறுநொடி
மடிநோக்கி வரும் குழந்தையை
முத்தமிட்டுக் கொஞ்சும்போதெல்லாம்
குற்ற உணர்வில் குமைகிறேன்
இயற்கையே வரம் தருவாய்
அத்தனை துயரிலிருந்தும் விடுபட்டு
நானுமொரு குழந்தையாய் மாற
——————–
எந்தக் காதல் பாடல்களைக் கேட்டாலும்
எங்கே காதல் கவிதைகளைப் படித்தாலும்
உனக்காக நான் பாடுவதைப் போலவும்
உனக்காக நான் எழுதுவதைப் போலவும்
நினைத்துக் கொள்கிறதென் தாய் மனம்
கவிதையோ
பாடலோ
எழுதப்பட்ட வரிகள்
எல்லாம் உன்னையே பிரதிபலிக்கின்றன
எழுதப்படாத கவிதைகளும்
பாடப்பெறாத பாடல்களும்
எங்கெங்கோ தேடுகின்றன
இளைப்பாறுவதற்கும்
நிலைபேறு பெறுவதற்குமான இடமொன்றை
உன்னையவை கண்டடையும்
சிறுபொழுதுகளில்
மழை இசைக்கும் தனது பாடலொன்றை
நிலவு எழுதும் தனது கவிதையொன்றை
———————-
கவிதை மிக அருமை! வாழ்த்துக்கள் !!!
அடித்துவிட்டு வலியால் அழுவதும் அம்மா தான். சலிக்காமல் இனிக்கிறது கூழ்.