சிறுகை அளாவிய கூழ் (21)
இவள் பாரதி
’குட்டியைப் பிடி’ என்றதும்
வேகமாக எட்டெடுத்து வைத்து
அறைக்குள் ஓடி எட்டிப் பார்க்கிறாய்..
தள்ளிய முன்வயிறும்
குட்டி உருவமுமாய்
மீண்டும் தத்தி தத்தி நடந்து
பொத்தென்று விழுந்து
மீண்டும் எழுந்து
குடுகுடுவென நடக்கிறாய்..
உன்னை ரசித்து ரசித்து
பூரிக்கிறேன்..
என்னிடம் செலவாகாமலிருந்த
நேற்றைய கண்ணீர்த்துளியொன்று
இப்போது புன்னகையாக மாறி
சேமிக்கப்படுகிறது
———————————
அலுவலகம் செல்ல
கையசைத்து விடைபெறும்போது
குரலுயர்த்தியழுது
தெருவையே கூட்டிவிடுகிறாய்
சிறிது நேரத்தில்
உன் கவனம் திசைமாறி
விளையாட்டில் செல்ல
அதையே நினைத்து
கலங்கியிருந்தேன்
செல்லும் வழியெங்கும்
அலுவலகம் வந்த பின்னும்
————————————-