இந்த வார வல்லமையாளர்!
இந்த வார வல்லமையாளர்!
மே 12, 2014
சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …
இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு
திரு. கே.எஸ்.சுதாகர் அவர்கள்
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர் திரு. கே.எஸ்.சுதாகர் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் எழுதி வருகின்றார். பொறியியல் பட்டதாரியான இவர் சுருதி, கதிரொளியான் என்னும் புனைபெயர்களிலும் எழுதுவதுண்டு.
இலங்கை, இந்தியா, மலேஷியா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா எனப் பலநாடுகளில் வெளியிடப்படும் பத்திரிக்கைகளிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. குறிப்பாகப் மரத்தடி, திண்ணை, திசைகள், பதிவுகள், கீற்று, ஈழநேசன், வல்லினம், அப்பால் தமிழ், அக்கினிக்குஞ்சு, தமிழ்முரசு, எதுவரை? வல்லமை எனப் பல இணைய தமிழ் மின்னிதழ் தளங்களிலும் இவரது கட்டுரைகளையும் கதைகளையும் இவர் எழுதியதால் தமிழ் இணைய வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.
கே.எஸ்.சுதாகரின் சிறுகதைகள் பெரும்பாலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பெற்றவை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், ஞானம் சஞ்சிகை, நார்வே தமிழ்ச்சங்கம், ஈழம் தமிழ்ச்சங்கம் (ஆஸ்திரேலியா), பூபாள ராகங்கள் (இங்கிலாந்து), மரத்தடி இணையம், தென்றல் (அமெரிக்கா), தாய்த் தமிழ்ப்பள்ளி (ஆஸ்திரேலியா), வல்லமை உட்பட மொத்தம் 20 சிறுகதைப்போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். ‘எங்கே போகின்றோம்’ ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற சிறுகதைத்தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான கே.எஸ்.சுதாகர் தற்போது இந்த அமைப்பின் நிதிச் செயலாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
சென்றவாரம் இவர் வல்லமை வாசகர்களுடன் அவருடைய “அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்” என்ற சிறந்த கட்டுரை ஒன்றினைப் பகிர்ந்து கொண்டார்.
அக்கட்டுரையில் கருத்தைக் கவர்ந்த ஒரு சிறு பகுதி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இரு பகுதிகளாக வெளிவந்த இக்கட்டுரையின் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும் – 1
அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும் – 2
……பண்டைய தமிழர்கள் ஓடித் தப்பிப்பவர்களைப் பிடிப்பதற்கு ‘வளரி’ என்ற ஆயுதத்தைப் பாவித்தார்கள். சங்க கால இலக்கியமாகிய புறநானூற்றுப் பாடலில் (பாடல் எண் 233) வரும் ‘திகிரி’ என்னும் பதம் இந்த ‘வளரி’யையே குறிக்கின்றது.
பாடல் எண். 233 – பொய்யாய்ப் போக!
பாடியவர் : வெள்ளெருக்கிலையார்“பொய்யா கியரோ! பொய்யா கியரோ!
பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ!”என்று செல்கின்றது அந்தப்பாடல்.
‘வளைதடி’ என்று தமிழில் சொல்லப்படும் இந்த ‘வளரி’ என்ற ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டது. இந்த வளரியைப் போன்று அவுஸ்திரேலியா ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதம் ‘பூமராங்’ (boomerang) ஆகும். எனவே இந்த ஆயுதம் தமிழருக்கும் அவுஸ்திரேலியா ஆதிவாசிகளுக்கும் பொதுவானதாகின்றது. இது ஒருமுனை கனமாகவும் மறுமுனை இலேசாகவும் கூராகவும் ஒரு பிறை வடிவில் மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படுகிறது. இதை ஆதிவாசிகள் ஒரு இலக்கை நோக்கி எறிவார்கள். இலக்கு தவறும் பட்சத்தில் அந்த பூமராங் எறிந்தவரின் கைகளுக்குத் திரும்பி வந்து விடும். இதை ஆதிவாசிகள் வேட்டையாடுவதற்கு உபயோகித்தார்கள்.
மத்திய அவுஸ்திரேலியாவில் இருந்த பழங்குடிகளின் இனத்தின் பெயர்களாக (Tribes Names) – வாகை (Waagai), சிங்காலி (Chingali), இளம்பிறை (Ilpirra), வால்பாறை (Walpari), அருந்தா (Aruntha) போன்ற பெயர்கள் இருப்பதைக் காணலாம். Alice Springs போன்ற இடங்களில், சிறுசிறு குழுக்களாக பரந்த அளவில் ‘அருந்தா’ இனக்குழுவினர் உள்ளனர். மேலும் இவர்கள் விலங்குகள், மரங்களின் பெயர்களைக் கொண்டும் வகைப்படுத்தப்படுகின்றனர். ஏமு மனிதன் (Emu man), கங்காரு மனிதர்கள் (Kangaroo men), பிளம் மர மக்கள் (‘Plum tree’ people) போன்றவறை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
பழங்குடி மக்களின் பெரும்பாலான உரையாடல்களில் தமிழின் உச்சரிப்பைக் காணலாம். ‘Ten Canoes’ என்ற அவுஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட அபரிஜினல் மக்களைப் பற்றிய படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கும் இந்த அனுபவம் ஏற்படலாம். அவர்கள் பாவிக்கும் சில சொற்களிற்கும் தமிழ்ச் சொற்களுக்கும் ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம்.
சிட்னியில் ‘விண்மலே’, ‘காக்காடு’ என இரு இடங்கள் இருக்கின்றன. ஆகாயமும் (விண்) மலையும் ஒட்டி நிற்பதைப் போல இருக்கும் அந்த அற்புதமான இடத்திற்கு winmalle (விண்மலை) என்று பெயர். ‘கா’ என்றால் சோலை, காடு என்றால் வனம். உண்மையிலே சோலைவனம் போல ஏராளமானவர்களைக் கவர்ந்திழுக்கும் அந்த இடத்திற்கு kakadu என்று பெயர் வழங்குகின்றது. மேற்கு அவுஸ்திரேலியாவில் மதுர (Madura) என்று இன்னொரு இடம் இருக்கின்றது. இன்னொரு ஆதிவாசி இனம் அதிகம் பாவிக்கும் சொற்றொடர் ‘பூனங்கா யிங்கவா’. அதன் அர்த்தம் ‘பெண்ணே இங்கே வா’. ‘பூ நங்கையே இங்கே வா’ என்பதியே அவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள்.
ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட மனிதர்கள் தெற்குப்பக்க கடற்கரை வழியாக வந்து இந்தியாவினூடாக அவுஸ்திரேலியாவை அடைந்திருக்கக்கூடும் என்று ஒரு பொதுவான கருத்து நிலவுகின்றது. இந்தக்கருத்தை இந்தியாவிலுள்ள Dr Raghavendra Rao என்பவருடைய ஆய்வு உறுதி செய்கின்றது. இவரது குழுவின் மனிதவர்க்கசாஸ்திர ஆய்வின்படி (Anthropological Survey), திராவிடப்பழங்குடிமக்களிற்கும் தற்போதைய அபரிஜினல் இனத்தவருக்கும் பொதுவான DNA மரபணு மூலக்கூறுகளைக் கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவர்களின் கருத்துப்படி 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் அபோர்ஜினமக்கள் தென்னிந்தியா வழியாக அவுஸ்திரேலியாவிற்கு வந்து குடியேறியதாகவும், தற்போதைய அபரிஜினமக்களுக்கும் இந்தியக்குடிமக்களுக்கும் பொதுவான முன்னோர்கள் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்கள்……..
தமிழர்களின் பரவலுக்கு சான்றாக அமையக்கூடிய கருத்துக்களை தனது கட்டுரையின் வழியாகப் பகிர்ந்து கொண்ட திரு. கே.எஸ்.சுதாகர் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
இந்தவார வல்லமையாளராகத் தேர்வாகியிருக்கும் திருவாளர் கே.எஸ்.சுதாகர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். பரிந்துரைத்துத் தெரிவு செய்த வல்லமை குழுவினருக்கு நன்றி.
என்னை இந்தவார வல்லமையாளராக தேர்ந்து கெளரவித்தமைக்காக எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இது இலக்கியத்தை மேலும் படிக்கவும் ரசிக்கவும் எழுதத் தூண்டவும் ஊக்கம் தருகின்றது.
பவளசங்கரி, தேமொழி மற்றும் குழு உறுப்பினர்களுக்கு எனது நன்றிகள்.