ஔவையார் எழுதிய புகழ்பெற்ற அறநூல்களில் ஒன்று ’ஆத்திசூடி’ என்பது அனைவரும்  அறிந்ததே. ஆயினும், அதில் ஆத்திசூடியாகக் குறிக்கப்படுபவர் யார் என்பதில் அறிஞர் பெருமக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அதுகுறித்து ஓர் சுவையான கருத்தாடல் நிகழ்த்தி ஆத்திசூடி குறித்த பல புதிய தகவல்களை வாசகர்களுக்கு அறியத் தரலாமே என்ற எண்ணத்தின் வெளிப்பாடே ‘ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்’ எனும் இப்பகுதி.

இதில் அறிஞர்கள் பலர் பங்கேற்று ’ஆத்திசூடி’ பற்றித் தங்கள் கருத்துக்களை, விளக்கங்களை நம்முன் படைக்க இருக்கின்றார்கள்.

முதலில், ’ஆத்திசூடி’ என்பது சமண சமயத்தைச் சேர்ந்த தீர்த்தங்கரர் ஒருவரைக் குறிப்பதாகும் என்று நிறுவ வருகின்றார் முனைவர் நா. கணேசன் அவர்கள்.

இனி அவருடைய கருத்துக்கள் நம் சிந்தனைக்கு…

“ஆத்திசூடி அமர்ந்த தேவன்” என்று சமணர்கள் கொண்டாடும் தேவர், பார்சுவநாத தீர்த்தங்கரர். அவர் ஒரு வரலாற்று நாயகர். பார்சுவநாதர், நேமிநாதரை அடுத்துத் தோன்றியவர். கி.மு 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சமணர்களின் 23-ஆவது தீர்த்தங்கரராகப் போற்றப்படுபவர்.

அரச குலத்தில் தோன்றிய பார்சுவநாதர் நூறு ஆண்டுகள் உயிர்வாழ்ந்தார். தம் வாழ்நாளில் 30 ஆண்டுகள் இல்லறத்தை மேற்கொண்டும், 70 ஆண்டுகள் துறவறத்தை மேற்கொண்டும் சிறப்புற்றார். உயிர்க்கொலை, சாதிப் பாகுபாடு ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்தவர் அவர்.

போதி மர நீழலில் புத்தர் ஞானம் பெற்றதுபோல, ஆத்தி (வடமொழியில் தாதகி என்பர்) மர நீழலில் தவஞ்செய்து ஞானம் அடைந்தவர் பார்சுவநாதர். புத்தரும், பார்சுவநாதரும் காசி அருகே மகத மண்டலத்திலே சமகாலத்தில் வாழ்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.

ஔவைக் குரத்தியார் தாம் எழுதிய ஆத்திசூடி என்ற நூலின் கடவுள்வாழ்த்துப் பாடலில்,

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே”
என்று ஆத்திமர நீழலில் அமர்ந்து ஞானம் பெற்ற  பார்சுவநாதரையே குறிப்பிடுகின்றார். ஏனெனில் ’சூடுதல்’ என்றால் ’அணிதல்’ என்ற பொருள்மட்டுமின்றிச் சூழ்ந்து கவிந்திருத்தல் என்ற பொருளும் உண்டு. அந்த அடிப்படையில் ஔவையால் ’ஆத்திசூடி’யாகச் சுட்டப்படுவர் பார்சுவநாதரே எனக் கொள்வதில் தவறேதுமில்லை.

அலங்காரமான ஆத்தி/தாதகி நீழலில் அமரும் தேவன்:

Parsvanatha_Lodhruva

’சூடுதல்’ என்ற சொல்லுக்குச் சூழ்ந்து கவிந்திருத்தல் என்ற பொருள் இருப்பதைச் சென்னை தமிழ்ப் பேரகராதியும் உறுதிசெய்கின்றது.

Madras Tamil Lexicon:
சூடு¹-தல் cūṭu-
To surround, envelope; கவிதல்.

இதற்கான சான்றுகள் சில சங்க நூல்களிலிருந்தும் கீழே தரப்பட்டுள்ளன:

சான்று 1:

புறநானூறு 35

நளியிரு முந்நீ ரேணி யாக
வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்…

உரை: நளியிரு முந்நீர் ஏணியாக – நீர் செறிந்த பெரிய கடல்
எல்லையாக; வளியிடை வழங்கா – காற்று ஊடு போகாத; வானம்
சூடிய மண்திணி  கிடக்கை – வானத்தைச்  சூடிய  மண்செறிந்த
உலகத்தின்கண்; தண் தமிழ்க் கிழவர் – குளிர்ந்த தமிழ்நாட்டிற்
குரியராகிய;

சான்று 2:

வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் (பெரும்பாண். 409).

 இதற்கு நச்சினார்க்கினியரின் உரை:

409-10: புலவு கடல் உடுத்து வானம் சூடிய மலர்தலை உலகத்துள்ளும்-புலால் நாற்றத்தையுடைய கடல்சூழ்ந்த ஆகாயங்கவிந்த அகன்ற இடத்தையுடைய உலகத்து நகரில் விசேடித்தும்,

சான்று 3:

வான்கவிந்த வையகமெல்லாம்” (நாலடி.பொறை.10)

சான்று 4:

ஐங்குறுநூறு 209

அன்னாய் வாழிவேண் டன்னை நீமற்று
யான்அவர் மறத்தல் வேண்டுதி யாயின்
கொண்டல் அவரைப் பூவின் அன்ன
வெண்டலை மாமழை சூடித்
தோன்றல் அனாதுஅவர் மணிநெடுங் குன்றே.

இவையல்லாது, ஆத்திமரத்தின் கீழ் அமர்ந்த  தீர்த்தங்கரர் (பார்சுவநாதர்) மீதான பாடல் தமிழிலக்கண நூலான வீரசோழியத்தில் உள்ளது. மேலும் ஒரு பாடல் அகத்துறையாய்ச் சோழ மன்னன் மீதும் இருக்கிறது. பார்சுவநாதரது அடியாராகிய ஒரு குரவடிகள் சோழமன்னர்களுக்கு ஆத்தியைக் குலமரமாகப் பரிந்துரைத்திருக்கலாம் என்று எண்ணுதற்கும் இடமுண்டு.

 ’ஆத்திசூடி’ சிவபெருமானைக் குறித்தது என்று கருதுவோரும் உளர். ஆனால் அதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. ஆத்தியைச் சிவனது திருமேனியிலே காட்டும் சிற்பங்களோ, தேவாரமோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பல சிற்பங்களில் ஆத்தி தாவரமும், நாகக் குடையும் கொண்டு பார்சுவநாத தீர்த்தங்கரரே விளங்குகிறார்.

சுமார் 1500 வருடப் பழமை வாய்ந்த ஆத்திசூடித் தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று கர்நாடகாவில் கிடைத்துள்ளது. தீர்த்தங்கரசாமிமேல் முழுவதும் ஆத்தி தாவரம். அந்த அலங்காரத்தின் உச்சியில் ஒரே ஓர் அரவம். இந்த உச்சி நாகத்தால்தான் அந்த ஆத்திசூடித் தீர்த்தங்கரர் பார்சுவர் என அடையாளம் தெரிகின்றது.

parsuvanatha with one snake

எனவே, ஆத்திசூடி நூலின் கடவுள்வாழ்த்தில் ’ஆத்திசூடி’யாகக் குறிப்பிடப்படுவர் சமண தீர்த்தங்கரராகிய ‘பார்சுவநாதரே’ என்பது ஐயத்திற்கிடமின்றித் தெளிவாகின்றது.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்

  1. https://groups.google.com/d/msg/vallamai/_ytQ2FuE0bY/R51CcNl_XoYJ

    இவை அத்தனையும் ப்ரூடா என்பதற்கான ஆதாரத்தை மேலுள்ள  சுட்டியில் அளித்திருக்கிறேன். 

    அவர் எடுத்துக்காட்டு என்று காட்டிய படங்களில் பெரும்பாலானவற்றில் இலைகள் என்பதற்கான அடையாளமே இல்லை. அப்படியாக கற்பிதம் செய்து கொண்டு இது தான் இலை.. அதுவும் ஆத்தி இலை என்றால் என்ன சொல்வது ?

    தாதகி தான் ஆத்தி என்று   ரொம்ப காலமா “ வழக்கமான முறையில் ஆதாரத்தோடு “ சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

    சரி அது நிற்க.

    கொடுத்திருக்கும் படங்களில் அவர் இலைகள் என்று சொல்பவை இலை போலில்லாமல் புடைத்த மாதிரி இருப்பதை கவனியுங்கள்…. சற்றே உற்று கிட்டே  பார்க்கலாம்.

     படம் 1 :

     படம் 2 

    இதில் தெரிவது இலை என்று யாருக்கேனும் படுகிறதா ? இல்லை இது பூப்போன்ற வடிவம் , பூவில் கிளைத்தெழும் இதழ்கள் ( உதாரணத்திற்கு சூரிய காந்தி என்று கொள்வோமா ?)  போன்று தெரிகிறதா என்று பார்ப்பவர்கள் முடிவெடுக்கட்டும்.

    இதை இலை என்று எந்த ஆராய்ச்சியாளர் ஒப்புக் கொள்கிறார்கள் என்று தான் தெரியவில்லை.  

    ஆதாரம் இருக்கிறது, ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்கிறார்கள்… எல்லாம் சரி.. எங்கே ஆய்வின் முடிவு ? வாயால் வடை சுட்டால் கேட்கும் செவிக்கு வேண்டுமானால் நல்லது. சாப்பிட உதவாது. 

    நிற்க.

    ஓவியங்களில் அழகினைக் கூட்ட வரைவுகள் /வளைவுகள் அதிகம் வரும். எந்த ஒரு சிற்பக் கலைஞரும் அழகற்றதாக இருக்க எண்ண மாட்டார்.  போலவே நீங்கள் சிற்பியாக இருந்தால் மரத்தின் கீழ் அமர்ந்த சிற்பம் பின்னே என்னத்தை வரைவீர்கள்.. இலை, பூ, நாகம் போன்றவை  தவிர்த்து வேறு ஏதும் ?  

    மேலும்  சிற்பங்களில் செதுக்கப் பட்ட இலைகள் யாவும் ஆத்தி இலைகள் தான் என்று எதை வைத்து முடிவு செய்தார்கள் ?  ஏதோ ஒன்றை முடிவு செய்து கொண்டு அதற்கேற்றார் போல் எல்லாவற்றையும் யூகித்துக் கொண்டு அது தான் ஆய்வு முடிவு என்றால் எப்படி ஏற்க முடியும்???

    இலைகள் யாவும் ஆத்தி, தேவன் யாவும் தீர்த்தங்கர்கள் என்பது வேண்டுமானால் எண்ணிக் கொள்பவர்களின் ஆசைக்கு நன்றாக இருக்கலாமே தவிர்த்து உரிய ஆதாரம் இல்லாமல்  உண்மையாகிவிடாது.

  2. அருணகிரிநாதரின் வேளைக்காரன் வகுப்பில்,
    “தாதகி கடுக்கைபுனை வேணியர் துதிப்பதொரு கேள்விக்காரன்” என்று முருகனைத் துதிக்கும் அடியார் வேணியில் தாதகி புனைந்திருப்பதாக வருகிறதே, அந்த அடியார் பார்சுவநாதர் தானா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *