அன்பினிய நண்பர்களே,

வல்லமையின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தில் ‘இசைக்கவியின் இதயம்’ என்ற புதிய பகுதி பிறக்கிறது. இதில் இசைக்கவி இரமணன் அவர்களின் எண்ணங்களில் உதிக்கும் பல்வண்ணக் கிரணங்களின் ஒளி வீச்சினை நாம் தரிசிக்கலாம். இவர், பாரதி, இசை, இலக்கியம், பக்தி, யோகம், ஞானம்.. எனப் பல துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடும் ஆற்றலும் அர்ப்பணிப்பும் கொண்டவர். இவற்றையெல்லாம் ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பாக, இந்தப் புதிய பகுதி அமைகிறது. இரமணன் அவர்களின் இனிய குரலில், நம் வல்லமையில் ஏற்கெனவே ஒலிபரப்பாகியுள்ள பாடல்களின் தொகுப்பையும் இந்தப் பகுதியில் காணலாம். இசைக்கவியின் இதயம் மிகப் பெரியது; அதில் நம் எல்லோருக்கும் இடம் உண்டு. வாருங்கள், இசைக்கவி இரமணன் அவர்களின் தொடரை இனி தொடர்ந்து சுவைப்போம். இதோ, தவம் புரிய அழைக்கும் அவருடைய முதல் பகுதி…

 நிர்வாக ஆசிரியர்

1800026_10152014436087919_583660219_o

பாரதியும் தவமும்


தவம் என்பது, கவனம் அனைத்தும் ஒருமுனையில் குவிவது. ஊசி முனையில், சின்னஞ் சிறிய பனித்துளியாய் உயிர் ததும்புவது போல; வெயில்நாளில் வேல்முனையில் துளி வெண்ணையாக உணர்வு நின்று உருகுவதைப் போல; இடைவிடாத வேட்கை ஓர் இடைவிடாத விசைப்பில் கனல்வதைப் போல.

bharathi9பாரத நாட்டின் அடிநாதம் ஆன்மிகம். அதன் உயிரூட்டம் தவம். யோகம், ஞானம், வைராக்கியம், பக்தி இவையெல்லாம் தவமின்றிக் கனிவதில்லை. அந்தத் தவம், மனிதப் பண்பில்லாமல் கனிவதில்லை. மனிதப் பிறவியை ஓர் அரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, தன்னுள்ளே தெய்வதத்தை நிறுவிக் கொள்ளவும் தவம் தேவை. உடம்பில் இருந்துகொண்டும் வரம்புகளை மீறிய ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளவும் தவம் தேவை. சக மனிதனிடம் எதிர்பார்ப்பில்லாத அன்பு பாராட்டவும் தவம் தேவை. அனைத்துயிர்களிடமும் சமமான நேயம் பழகவும் தவம் தேவை. அனைத்தும் யாமே என்னும் உன்னத நிலையை எய்தவும் தவம் தேவை.

ஒரு மனிதன், தன் மனதினுள்ளே எந்தச் சிக்கலும் பூசலுமின்றி, ஒரு சாதாரணமான, இனிய. எளிய மனிதனாக வாழவும் தவம் தேவைப்படுகிறது.

காட்டில் சென்று ஆற்றப்படுவது மட்டுமில்லை தவம். விதிவசத்தால் விளைந்த சூழ்நிலைகள் நம்மை வைத்திருக்கும் இடம், நமக்கு வழங்கியிருக்கும் அடையாளம் இவற்றுக்கேற்பத் தோன்றும் கடமைகளைப் பற்றின்றிச் செய்வதும் தவம்தான்.

தனியே இருப்பதில்லை தவம். கூட்டத்தில் தனித்திருக்கும் திறமை தவம். நீரில், நிழல்போல் நனையாமல் நீந்தும் லாகவம் தவம். எல்லாவற்றிலும் பங்குகொண்டு எதனாலும் தொடப்படாத வானமாய் விளங்கும் திறமை தவம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னால் உலகிற்கு நன்மை விளையவேண்டும் என்ற எண்ணமுள்ளவனுக்கு அது ஈடேறத் தவம் தேவைப்படுகிறது.

ஆக, ஒரு சாதாரண மனிதன் ஆச்சரியமான ஆற்றல் பெறுவதற்கும், அந்த ஆற்றல்களைப் பொருட்படுத்தாமல் அவன் சாதாரண மனிதனாகவே விளங்குவதற்கும், ஒரு மனிதனால் பலருக்கும் நன்மை விளைவதற்கும். ஒரு மனிதன் அனைத்துக்கும் அறுதியான ஆன்மிக இலக்கை அடைவதற்கும் தவமே தேவை.

தவத்தின் சிறப்பு என்னவென்றால், தான் உலகை விட்டு நீங்கும்போது, அந்தத் தவத்தை உலக நன்மைக்காக விட்டுச்செல்வதே! பற்பல அறிவியல் கண்டுபிடிப்புகளும், கலைகளும், கவிதைகளும் காலம் தாண்டி வாழ்ந்து உலகிற்கு ஒளிவழங்கக் காரணம், அவை தவத்தின் விளைவு என்பதுதான்!

எனவே, பாரதி நமக்குக் கவிதைகள் மூலமாக விட்டுச் சென்றிருப்பது அவனது தவத்தைத்தான். அவனது ஒவ்வோர் எழுத்தும் ஒளியுடன், கனலுடன், ஒரு விசைப்புடன் விளங்கக் காரணம் அவை அவனது ஆன்ற தவத்தின் விளைவே என்பதுதான். ஒரு சராசரி மனிதனின் அத்தனை அம்சங்களும் அவனிடத்தில் காணப்பட்டதால் நமக்கு அவனோடு ஓர் அணுக்கம் ஏற்படுகிறது. ஒரு மகாமனிதனின் அபாரமான வீச்சுக்கள் அவனிடம் அனாயசமாக விளங்குவதைக் காணும்போது நமக்கு வியப்பும் திகைப்பும் விஞ்சுகிறது.

கர்ம யோகத்தில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தவன் பாரதி. கீதையை மொழிபெயர்க்கும்போது, `செய்கையில் கீர்த்தியே யோகம்` என்றான். கடமையே தவம் என்ற கருத்துள்ளவன், அந்தக் கடமை என்ன என்பதையும் தெளிவுறவே தெரிவிக்கிறான்:

கடமை யாவன தன்னைக் கட்டுதல்
பிறர்துயர் தீர்த்தல் பிறர்நலம் வேணுதல்
உலகெலாம் போற்றும் ஒருவனைப் போற்றுதல்

என்றுசொல்லி, இந்த நான்முகம் கொண்ட கடமையின் பயனாய் விளைவதே அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பேறு என்றும் தெளிவுபடுத்துகிறான். தனது வாழ்நாள் முழுதும் இந்தக் கடமைகளில் அவன் சலியாது ஈடுபட்டிருந்து, அதன் மூலம், பயன்களைத் தாண்டிய ஒரு செம்மாந்த மனப்பான்மையை, பிரபஞ்சம் அளாவிய பார்வையை அவன் பெற்றிருந்ததால் தன் மனதிற்குச் சொல்வதுபோல் மனிதர்களுக்கு ஓர் அறைகூவல் விடுக்கிறான்:

செய்கதவம் செய்கதவம் நெஞ்சே! தவம்செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம்! வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு (வினாயகர் நான்மணி மாலை)

அவன் எய்த விரும்பியது அன்பே! எய்தியதும் அன்பே! அதுவே மனித நேயமாக அவன் சொல்முழுதும் வெளிப்படுகின்றது. தவம் என்பது ஒன்றைப் பெறுவதற்கு மட்டுமல்ல. பெற்றதைப் பேணுவதற்கும் தவமே தேவை. ஒரு குழந்தையைப் பெறுவதோடு தாய்மை முடிந்துவிடுகிறதா என்ன? தனது குழந்தையைப் பேணி வளர்ப்பதற்கான துவக்கமே அல்லவா அது? எனவேதான் அன்பிற் சிறந்த தவமில்லை என்கிறான்.

துறவு பூண்டு ஒதுங்கி வாழ்ந்து இயற்றப்படும் தவம் மேன்மையானதே. அதில் எந்தவிதமான ஐயமும் வேண்டாம். ஆனால், அதனினும் பெரிது, ஆண்டவனைப் போற்றும் தொண்டர்கள் செய்யும் தவம் என்கிறான்.

துறந்தார் திறமை பெரிததினும் பெரிதாகும் இங்குக்
குறைந்தாரைக் காத்து எளியார்க்கு உணவீந்து
அறந்தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்டமெல்லாம்
சிறந்தாளு நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே!

தொண்டர்களின் இயல்பு தொண்டு செய்தலே. தங்களால் இயன்ற தொண்டில் எப்போதும் ஈடுபட்டிருப்பவர்கள் தொண்டர்கள். நம்மைவிடக் கீழான நிலையில் இருப்பவர்களைக் காத்தல், இல்லார்க்கு உணவீதல், அறவழியில் வாழ்பவர்கள் நீடூழி வாழ்கவென வாழ்த்தி அண்டமெல்லாம் ஆள்பவன் ஆண்டவன். அடியார்கள், இவையே ஆண்டவனின் குணங்கள் என்று கருதுவதால் அவர்களுக்கு அதே இயல்புகள் வந்தனவோ, இல்லை அந்த இயல்புகள் தம்மிடத்தில் காணப்படுவதால் அவற்றை ஆண்டவனிடம் காண்கிறார்களோ யாரறிவார்? இந்த இயல்புகளால் அவர்கள் செய்யும் தவம் சிறப்படைகிறது என்கிறான் பாரதி.

தவம் என்பதை ஓர் உரிமையாகக் கருதிவிட முடியாது. அதனால்தான், யார் வேண்டுமானாலும் தவம் செய்யலாமா என்ற கேள்விக்கு `ஆம்` என்று விடைகூற இயலவில்லை. ஒருவனுடைய குண இயல்பில், தவம் செய்யவேண்டும் என்ற வேட்கை இருக்க வேண்டும். அல்லாதவன் அதில் புகுவது, செயற்கையாய்த் துவங்கி, பொய்யாய் நீண்டு, ஆணவ வீம்பாய் முடியும்.

`புத்தி என்பது கர்ம வினையை அனுசரித்தே இயங்குகிறது` என்பது யோக சூத்திரங்களைத் தொகுத்தளித்த பதஞ்சலி முனியின் கூற்று. செய்த வினையின் விளைவு, மனிதனின் புத்தியில் உட்கார்ந்துகொண்டு அவனை இங்குமங்கும் செலுத்துகிறது. இதனால்தானோ என்னவோ, திருவள்ளுவர்,

தவமும் தவமுடையார்க் கேயாம் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது

என்றார். இதை, பாரதி உள்வாங்கிக் கொண்டு சொல்லும் அழகே அழகு:

இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம்
செயலிங்கு சித்த விருப்பினைப் பின்பற்றும்; சீர்மிகவே
பயிலுநல் லன்பை இயல்பெனக் கொள்ளுதிர் பாரிலுள்ளீர்
முயலு வினைகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே!
(மொய்ம்பு = வலிமை, தோள்)

இயல்பு என்பது அதுவாய் நம்மில் இருப்பது என்றுதான் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அன்பு போன்ற ஆன்ற பண்புகள் பயின்று பயின்றுதான் இயல்பாகிறது. பழக்கம் வழக்கமாகி, பண்பாகி, இயற்கை அல்லது இயல்பாகி விடுகிறது. சாதாரண பழக்கங்களுக்கும் அசாதாரணப் பண்புகளுக்கும் இது பொருந்தும் என்று சரியாக அறிந்துவைத்திருந்தபடியால்தான், பாரதி `பயிலுநல் லன்பை இயல்பெனக் கொள்ளுதிர்` என்கிறான். அன்பு என்பது பயின்றுகொண்டே இருக்க வேண்டிய ஒப்பற்ற பண்பு. அறிவைப் போல அதற்கும் அந்தம் கிடையாது.

சரி. அன்பைவிடச் சிறந்த தவமில்லை என்றான். தவத்தைக் கடமையென்றான். கடமையைத் தவமென்றான். துறவைக் காட்டிலும் தொண்டே பெரிய தவமென்றான். தனது இயல்பில் தவவேட்கை இல்லாதவர்கள் அன்பைத் தவமாய்ப் பயிலுங்கள் என்கிறான். ஏனெனில் அன்பிற் சிறந்த தவமில்லையே!

செய்வது தவம், பெறுவது வரம் என்பது பொதுவான கருத்து. எனவே முதலில் `செய்க தவம்` என்றான். இப்போது அதைத் தாண்டி, தவத்தைத் தருக என்று ஞானாசிரியனும் பரம குருவுமான முருகனிடம் வேண்டுகிறான்:

தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகன் பாட்டு)
(தகவு = தகுதி, பெருமை,அருள், நடுவுநிலை,வலி, அறிவு,தெளிவு, கற்பு,நல்லொழுக்கம்)

எப்படி, உருக்கம் என்பது வேண்டிப் பெறப்படுகிறதோ, அப்படியே, தவம் என்பதும் பெறக்கூடிய ஒன்று என்னும் அரிய சேதியைப் போகிற போக்கில் பதிவு செய்கிறான் பாரதி.

தனது கண்ணம்மாவைத் தவத்தின் உச்சத்தில் கிடைக்கும் விளைவாக, ஒப்புயர்வற்ற பயனாகக் கருதுகிறான்.

பீடத்திலேறிக்கொண்டாள் – மனப்
பீடத்திலேறிக்கொண்டாள்

நாடித் தவம்புரிந்து – பீடுற்ற முனிவரர்
கேடற்ற தென்றுகண்டு – கூடக் கருதுமொளி
மாடத்தி லேறிஞானக் – கூடத்தில் விளையாடி
ஓடத் திரிந்துகன்னி – வேடத் திரதியைப்போல்
ஈடற்ற கற்பனைகள் – காடுற்ற சிந்தனைகள்
மூடிக் கிடக்கு நெஞ்சின் – ஊடுற்ற தையமரர்
தேடித் தவிக்குமின்ப வீடொத்தினிமைசெய்து
வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி)

இந்த வரிகள், பாரதியின் அரிய யோக நிலையை விளக்குவதாகவே படுகிறது. சித்தத்தில் எதனைப் பதியம் போடுகிறோமோ, சித்தம் அதன்மயமாகிறது என்பார்கள் பெரியோர். இங்கே பாரதி `மனப்பீடம்` என்பது சித்தமே. அந்தச் சித்தத்தில் யாரை வைத்தான்? கண்ணம்மாவை! அதுவும் அவளாகவே சித்தத்தில் ஏறிக்கொண்டாளாம்! யாரிந்தக் கண்ணம்மா? காளி! கண்ணனும் காளியும் ஒன்றுதானே? அந்தக் கண்ணம்மா என்னும் கண்ணனாகிய காளி சித்தத்தில் ஏறிக்கொண்டு சப்பணம் போட்டு அமர்ந்துகொண்டபின் எல்லாம் எளிதாகிவிட்டது. என்னவெல்லாம்?

தவத்தினை எளிதாப் புரிந்தனள், யோகத்tumblr_mqminyR2bz1s461fro1_1280
தனிநிலை எளிதெனப் புரிந்தாள்
சிவத்தினை இனிதாப் புரிந்தாள், மூடச்
சித்தமும் தெளிவுறச் செய்தாள்
பவத்தினை வெறுப்ப அருளினள், நானாம்
பான்மைகொன் றவள்மயம் புரிந்தாள்
அவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள்
அநந்தமா வாழ்கவிங் கவளே (மஹாசக்தி பஞ்சகம்)

செய்யப்படுவதல்ல தவம். அது நிகழவேண்டும். மனப்பீடத்தில் காளி ஏறிக்கொண்டால் அது தானாக நிகழும். அவளே வேண்டும் என்ற வேட்கை இருந்தால் அவள் தானே பீடத்தில் ஏறிக்கொள்கிறாள். அப்போது தவம் எளிதாகிறது. தன்னில் தான் தனித்து விளங்கும் யோகநிலை எளிதாகிறது. முரட்டுச் சிவம் முறுவல் பூக்கிறது. அவளைத் தவிர வேறேதும் இல்லாததால் சித்தம் தெளிவாகிறது. சித்தம் தெளிவானால் அங்கே காளிதான் தென்படுகிறாள். அவளே சித்தத்தின் ஒவ்வொரு மூலையையும் ஆக்கிரமித்துக்கொண்டு நிற்கிறாள். அப்போது அவளோடு நேருக்கு நேரே பேசிக்கொள்ள முடிகிறது:

யோகந்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ என்றேன்
யோகமேதவம் தவமேயோகமென உரைத்தாள் (அழகுத் தெய்வம்)

யோகம் என்னும் சொல்லுக்கு வேர்ச்சொல் `யுஜ்` என்பது. அதாவது, இணைதல். மானுடம் தெய்வதமாவது. இந்தத் தெளிவுடன் தவத்தில் அமர்ந்தால் யோகம் எளிதாகிறது. அல்லது, இந்த நோக்கத்துடன் யோகம் பயின்றால் தவம் எளிதாகிறது. எத்தனை அரிய சேதியை எவ்வளவு எளிதாக, அவளிடமே கேட்டுப் பெற்றதாகத் தெரிவிக்கிறான் பாருங்கள்!

தவத்தின் உச்சம் என்ன? தான் தவம் செய்கிறோம் என்னும் உணர்வு நீங்குதலே. முழு உணர்வோடு, நோக்கம், இலக்கு பற்றிய தெளிவோடுதான் தவத்தில் இறங்கவேண்டும். பிறகு, அதில் தன்னைத் தொலைத்துவிட வேண்டும். ஏனெனில், சாதனை செய்கிறோம் என்னும் உணர்வே வெற்றிக்குத் தடை! மேலும், சாதனை என்பது சித்தசுத்திக்காகவே. மோட்சத்திற்கு நேரடி சாதனை கிடையாது. சித்தம் சுத்தமடைந்து, இறுதி இலக்கான சிவம் என்னும் சிந்தனையில் அப்படியே காத்துக் கிடப்பதே செய்ய வேண்டியது; செய்ய முடிவது. இங்கே, பாரதியின் சித்தம் சுத்தமாகிவிட்டது, அதாவது சக்திமயமாகிவிட்டது. அப்போது என்ன தோன்றும்?

தவமொன்றும் இல்லையொரு சாதனையும் இல்லையடா
சிவமொன்றே உள்ளதெனச் சிந்தைசெய்தாற் போதுமடா
(பரசிவ வெள்ளம்)

சரணாகதிக்கு அடிப்படை பக்தி. அதே பக்தி, சித்தசுத்தியின் முடிவிலும் தேவைப்படுகிறது! பாரதியின் வீச்சு, நினைக்க நினைக்க வியப்பாக இருக்கிறது!

பாரதிக்கு ஆதாரம் பாரத நாட்டின் தவவலிமையே. அவன் பாரத நாட்டைக் கொண்டாடும் போதிலெல்லாம் மறவாமல் தவத்தைக் குறிப்பிடுகிறான்:

யாகத்திலே தவ வேகத்திலே – தனி
யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்திகொண்டார்தம்
அருளினிலே உயர் நாடு (பாரத நாடு)

யாகம் என்பது தவத்திற்கு முற்பட்ட, அல்லது கீழ்ப்பட்ட நிலைதான். ஆபத்தில்லாத யோகம் என்பது, தவத்தின் வழியே பெறப்படும் யோகம்தான். போகம் என்பது தவத்தின் மூலமே நியாயமாகிறது. சரி, அதென்ன தவ வேகத்திலே? தவம் என்றால் நிதானம் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறோம்! தவம் என்பது, ஒரு சக்தி விசைப்பு, மின்சாரம் போல! எதைநோக்கியும் செல்லாமல் இருந்த இடத்திலேயே விசைத்துக் கொண்டிருக்கும் ஒரு வினோதமான வேகமே தவம். ‘Resultless dynamism.’

பாரத நாடு தவத்தலம். உலகில், வேறெந்த நாடும் நாகரிகத்தின் அரிச்சுவடியைப் பயின்றுகொண்டிருந்த வேளையில், நம் நாடு தவத்தின் உச்சங்களைக் கண்டது. இறைவனுக்குச் சமமான ஆற்றல் பொருந்திய மாமுனிவர்கள் பலர், சாதாரண மனிதர்கள் போலவே நடமாடிய நாடிது. எல்லோரும் வேறெதுவும் செய்யாமல் தவத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார்களா? நாட்டை நடத்திச் செல்லும் வீரமிக்க அரசர்கள் இல்லையா? கடமையே தவம் என்ற கருத்தை உலகிற்கு வழங்கிய நம் நாட்டில் வீரர்களுக்குப் பஞ்சமேது?

மாரத வீரர் மலிந்த நன்னாடு
மாமுனிவோர் பலர் வாழ்ந்தபொன்னாடு (எங்கள் நாடு)

`புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு` என்பது போல் `வீரர் மலிந்த நன்னாடு` என்று கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட வீரர்களில் பலர், மாமுனிவோர்களாகத் திகழ்ந்தார்கள். நாடாளும் அரசர்களும் காடாளும் முனிவர்களும் ஒரேபோல் வீரர்களா? ஆம்! நாடாண்டது மட்டுமல்ல. உரிய நேரத்தில், பொறுப்பைத் தக்கவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, விரும்பி ஏழ்மையைத் தழுவி, தவமியற்றக் காட்டுக்குச் சென்ற எத்தனையோ அரசர்களை உலகம் இந்த நாட்டில்தான் கண்டிருக்கிறது. மேலும், பற்றைத் துறக்கப் பெரும் வீரம் வேண்டும்! எனவேதான் ஞானியரை `தீரர்` என்று நாம் அழைக்கிறோம்.

எனவே, சித்தம் எப்படியோ அப்படித்தான் இந்த உலகமும். சித்தம் சிவமயமானால் உலகம் சிவமயமாய்த் தோன்றும். சித்தம் உறுதிப்பாடோடிருந்தால், கடலும் கூடக் குளம்படி நீராய்க் குறுகும். இதுதான், ஆரிய ராணியாகிய பாரத மாதா தனக்குச் சொன்ன வாசகம் என்கிறான் பாரதி:

சித்த மயமிவ் வுலகம் உறுதிநம்
சித்தத்தில் ஓங்கிவிட்டால் – துன்பம்
அத்தனையும் வெல்லலாம் என்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல் (பாரத மாதா)

அப்படி, சித்தத்தில் உறுதி கொண்ட துறவியரை எல்லோரும் வணங்கும் பாரத மாதாவே வணங்குகிறாளாம்!

கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்
கைதொழுவாள் எங்கள் தாய் (எங்கள் தாய்)

ஆகவே, சித்தத்தில் ஒளியிருந்தால் உலகம் ஒளிமயமாகவே தோன்றும். சித்தத்தில் மேன்மையான எழிலிருந்தால், காண்பதெல்லாம் எழிற்கொள்ளையாகவே தோன்றும். உலகம் என்கின்ற காட்சியே சித்தம் அதைப் பிரதிபலிப்பதால் காணப்படுகிறது. அந்தச் சித்தம் மேன்மையான பண்புகளால் நிறைந்திருந்தால், நகர்க என்றால் மலை நகரும். விலகு என்றால் கடல் விலகும். விழி திறந்தாலே இருள் விடியும்! இதை எவ்வளவு அழகாகச் சொல்கிறான் பாரதி!

பொழுது புலர்ந்தது யாம்செய் தவத்தால்images
புன்மை இருட்கணம் போயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கிய தறிவெனும் இரவி
(பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி)

இந்த வரிகளை, பாரதமாதா திருப்பள்ளி எழுச்சியில் அவன் வைத்ததுதான் எத்தனை சிறப்பு! நமக்கு விழிப்பு ஏற்பட்டால்தான் நாடு செழிக்கும். சுப்ரபாதம் என்பது கடவுளை எழுப்புவதற்காக அல்ல. கடவுள் உறங்குபவரும் அல்ல. அவர் உறங்கினால், சுப்ரபாதம் எங்கே? பாடுவார் எங்கே? ஆசை மண்டிக்கிடக்கும் நம்முள்ளத்தில் இறையுணர்வைத் தட்டி எழுப்புவதற்காக ஏற்பட்டதே திருப்பள்ளியெழுச்சி.

தமிழும் தமிழ் இனமும் இதுநாள் வரை வாழ்ந்திருக்கக் காரணம் என்னவாம்? அதைத் தமிழ்த்தாயின் வாயிலாகவே சொல்கிறான் பாரதி:

தந்தை அருள்வலியாலும் – முன்பு
சான்ற புலவர் தவவலியாலும்
இந்தக் கணமட்டுங் காலன் – எனை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்

ஆனால், மேன்மைக் கலைகள் மேற்கில் மெத்த வளர்கின்றன என்றும் மெல்லத் தமிழினிச் சாகும் என்றும் கேட்டுத் துடிக்கிறாள் `சீரிளமைத் திறம்` கொண்ட தமிழ்த்தாய். ஆனால், இந்தப் பழிதீரும், நான் பார்மீதில் சாகாதிருப்பேன் காண்பீர் என்கிறாள். எதை ஆதாரமாகக் கருதி அப்படிச் சொல்கிறாளாம்? அதே அருள், அதே தவம்தான்!

தந்தை அருள்வலியாலும் – முன்பு
சான்ற புலவர் தவவலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் – புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன் (தமிழச் சாதி)

புலவர் தவவலிமை என்னும் கொள்கை வேறெந்த நாட்டிலும் உண்டோ? சொல்லேர் உழவர் பகைகொள்ளற்க என்னும் திருவள்ளுவரின் வாக்கு இங்கே நினைவுகூரத் தக்கது.

`வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றி,` என்று பாரதி அந்த மராட்டியச் சிங்கத்தை வெகுவாகப் போற்றிப் பாடுகிறான். சத்ரபதி சிவாஜி என்னும் கனல்பறக்கும் ஒரு கவிதையில் இந்த நாட்டின் மேன்மையைப் பற்றி சிவாஜி சொல்வதாக அவன் அமைத்திருக்கும் வரிகள் பாரதியின் பாரத நேசம் எத்தனை அறிவார்ந்தது, ஆழமானது என்று நமக்குக் காண்பிக்கின்றன:

இன்னரு பொழில்களும் இணையிலா வளங்களும்
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு
பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க
மைந்நிற முகில்கள் வழங்குபொன்னாடு
தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர்
ஆவலோ டடையும் அரும்புகழ் பூமி!
வானவர் விழையு மாட்சியர் தேசம்!
பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ
நீரதன் புதல்வர்; இந் நினைவகற்றாதீர்!

இமயத் தொடர்களை, தேவர்களின் ஆன்மாக்கள் என்றான் காளிதாசன். தேவர்கள் வாழ்வதே இங்குதான் என்கிறான் பாரதி. தவத்திற்கு இதுதான் தகுந்த இடம் என்பதால் முனிவர்கள் நாடிப் பிறக்கும் நாடிது என்கிறான்! வானவர்களும், தங்களது நிலையில் உயரவேண்டும் என்றால், அது பாரதத்தின் மூலமே என்று பறைசாற்றுகின்றான். இவையெல்லாம் வெறும் புகழ்ச்சியில்லை. ஆழமான அரியதான, நாம் அறவே மறந்துபோன உண்மைகள்.

அதெல்லாம் சரி, இந்த முழக்கம் போர்க்களத்தில் எதற்கு? நமது வாழ்வின் ஆதாரமான பண்பாட்டுக்கு ஆபத்து வரும்போது எவரும் அதைக்காக்கத் தமது உயிரைக் கொடுக்கச் சித்தமாக இருக்க வேண்டும். இங்கே அப்படியோர் ஆபத்தான கட்டத்தில்தான் மன்னன் சிவாஜி தனது மக்களைத் தட்டியெழுப்பி, ஒவ்வொருவரையும் உயிரைத் துச்சமாக மதிக்கச் செய்து, பாரதத்தை மிலேச்சர்களிடமிருந்து காக்கும் அரிய பணியில் ஈடுபடும் வீரர்களாகத் தயார்செய்கிறான்.

சரி, இது தவத்தில் சேருமா என்றால் இதைவிடச் சிறந்த தவம் இல்லை என்கிறான். `அன்பிற் சிறந்த தவம் இல்லை` என்றவன்தான்,

…நெஞ்சக்குருதியை நிலத்திடை வடித்து
வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம் யாம்!
தவத்தினில் இதுபோற் தவம்பிறிதில்லை (சத்ரபதி சிவாஜி)

இவ்விதம், அன்பிற் சிறந்த தவமில்லை, கடமையே தவம், தவமே கடமை, தொண்டர் செயுந்தவமே சிறந்த தவம், என்றெல்லாம் விதவிதமாகத் தவத்தின் பரிமாணங்களை நமக்கு விரிவாகப் பல இடங்களில் காட்டுகிறான் பாரதி.

வாருங்கள் தவம் புரிவோம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *