பரமகுரு பஞ்சகம்
இசைக்கவி ரமணன்
சற்றுமெனை விலகாத வெட்டவெளியே! துளியும்
தன்மை மாறாத களியே!
சந்தடிமி குந்தவிடர் த்வந்தமெனும் சந்தையினில்
தந்தையென வந்த தயவே!
முற்றுமெனைப் பற்றும்வினைக் கற்றையினை ஒற்றைவிரல்
இற்றுவிழச் செய்த விடிவே!
மூலையி லிருந்தவனைச் சாலையினில் நடமாட
முத்துரதம் தந்த நிதியே!
அற்றுவிழும் அத்தனையும் வெர்றியெனச் சொல்லிவிழும்
அற்புதம்நி கழ்த்தும் அருளே!
அறிவுமறி யாமையென அலைபுரளும் அனுபவத்
தடிநாத மான அழகே!
உற்றுற்று நோக்கியே உயிர்மாற்றி உன்னையே
உயிராக வார்த்த திருவே!
ஒருநொடியும் உனதுதிரு வடிவழகை மறவாமல்
உருகமனம் அருள்க குருவே!
கத்துகட லாம்மனது கைகட்டி வாய்பொத்திக்
கண்களால் கவிபாடுதே!
கசடுமிக வேமண்டி வசைகொண்ட என்சித்தம்
காளாவி ளக்கானதே!
புத்திதடு மாறிமலை யேறிமடு வீழ்ந்தகதை
பொத்திச் சிரிக்கின்றதே
புனைவான ஆணவமுன் புன்னகையின் சன்னலில்
புகைந்துமணம் நீள்கின்றதே!
மத்துகடைந் தேவெண்ணை தத்திவர மறவாமல்
மொத்தமுமெ டுத்தகரமே!
மணிவாயில் கொஞ்சமதை அணிபுரள வைத்துப்பின்
மாந்தாமல் பார்க்குமழகே!
பித்துக்கும் பக்திக்கும் சித்துக்கும் பேதைக்கும்
பிரிவின்றிச் செய்தகுறும்பே!
பின்னல் களைந்துபுதுப் பின்னலிடும் பம்மாத்தில்
என்னசுகம் என்றன்குருவே!
ஒருதுளியில் உயிராகி உருவாகி உடலாகி
ஓயாத துயரானதே
ஒளியாகி இருளாகி மருளாகி உயிரெங்கும்
ஒழியா அயர்வானதே
கருவிலுயிர் நுழையுமுனர் இருந்தகதை காட்டினாய்
கண்முன்பு படம்காட்டினாய்
கதிகலங் கிச்சிதறி சிதிலமென நின்றவனைப்
பற்றாமல் காத்தருளினாய்
ஒருவாறு திருவிடியல் ஒழிவற்ற கடல்மீதில்
புலர்வாகிப் பொழுதானதே
ஒற்றையிழை யில்மொத்தம் பற்றியொளி யாய்மாறிக்
கற்றைவி ரிக்கின்றதே
அருளாளனே அன்பின் திருவாளனே! வேடம்
அத்தனையும் புனையும் வேளே!
அடியேனை ஆட்கொள்ளப் படியற்ற மலைநீங்கிப்
படியேறி வந்தகுருவே!
ஒருபோதும் மறவாத மனதும், அதன் மலைமடுவில்
ஒருசிறிதும் குறையாத நினைவும்
ஒருதுளியும் மிஞ்சாமல் உருகுமுயிரும், கொஞ்சம்
உருகும்நினை வான உணர்வும்
இரவுபகல் அல்லாத இகபரமும் இல்லாத
இடையில்நிலை யான நிலையும்
இதயமலர் விளிம்பிலெழும் உதயத்தின் தறுவாயில்
இசையாகும் மெளன நிலையும்
ஒருநினைவு மறுநினைவு எனும்ஸ்ருதி விகாரங்கள்
ஒட்டா தொழிந்த பேறும்
ஒன்றுமே இல்லை நான் ஒன்றுமே இல்லையெனும்
ஒருவிடிவின் கொடியேற்றமும்
கருவபங்கங்களின் தலைநகர மானவுன்
திருவடியில் கூடுமென்றே
கணநேரம் கொண்டதாய் யுகநேரம் விண்டதாய்க்
கண்ணீரில் நாணி நின்றேன்…
தொலைவுநீ என்றெண்ணித் துயர்கொள்ள, தோள்தொட்டுத்
தூவானத் தென்றலாவாய்
தொட்டகரம் பற்றத் தொடுங்காலை ஏனோநீ
தொடுவான மாய்ச்சிரிப்பாய்
அலைகள்நீ என்றெண்ணி அயர்கையில் கால்களை
அழகாய்ந னைக்கவருவாய்
அந்தசுகம் மிஞ்சாமல் ஆழத்தைக் காட்டாமல்
காட்டியெனை அயரவைப்பாய்
சிலையில்நீ எங்கென்று கல்லாக நான்நிற்கச்
சித்திரக் கண்சிமிட்டி
சித்தத்தைச் சிலையாக்கி மொத்தத்தைக் கலையாக்கி
சிங்கார மாக்கிவிடு வாய்
மலையாவும் மலராகி மனம்யாவும் புலர்வாகி
மல்லாந்தி ருக்கிறேன் நான்
மறுபடியும் வீழுமொரு மழைத்துளியில் சிலிர்க்கவே
மெளனத்தில் யுகங்கடந் தே!
கண்டனன் என்றுவாய் கத்தவும் முடியாது
கண்டிலன் என்பதும் பொய்
கடல்தாண்டக்கடல்தாண்டக் கடல்மண்டும்பயணத்தில் கலமாக வந்தநீ மெய்
விண்டனன் என்பதும் வீழ்ந்தனன் என்பதும்
விண்ணில்நி றம்போலப் பொய்
வேதனையும்சாதனையும் போதனையும் இன்றியொரு
வேடிக்கை பார்த்ததே மெய்
கொண்டவித மறியாமல் கொள்ளைபோ குங்கதையில்
கொண்டாட்டம் மிகவினிய பொய்
கோயிலிலும் என்வீட்டுக் கொல்லைப் புறத்தும்நீ
கூத்தாடி நிற்பதே மெய்
உண்டவிதம் தெரியாமல் உண்டாலும் அமிழ்தாக
உயிர்காக்கும் ஒற்றை மெய்யே!
உண்மையெது பொய்மையெது ஒருசிறிதும் புரியாமல்
உன்முன்பு நிற்கிறேனே!
படங்களுக்கு நன்றி