— சங்கர் சுப்ரமணியன்

young-romantic-indian-couple“நன்கு யோசித்து சொல் வான்மதி… இது நம்முடைய கடைசி சந்திப்பாக கூட இருக்கலாம். உன்னுடைய பக்கமிருப்பு என்னுள் கிளர்ந்தெழ செய்யும் உணர்வுகளையெல்லாம் என் வாழ்நாளில் உணரவே முடியாமல் போய் விடுமோ என்றேதான் நான் கவலை கொள்கிறேன். அண்ணன், அம்மா, அப்பா இப்படியான உறவுகளிலிருந்து நீ எப்படி… விடுபட்டு வெளிவந்து விடுவாய் என்று கவலைகொள்கிறாய் . உன் கவலையும் எண்ணமும் எனக்கு அர்த்தமற்றதாகத்தான் தோன்றுகிறது . முதலில் உன்னை புரிந்து கொள். உனக்கே நீ செய்வது சரியென்று தோன்றுகிறதா ..நம்முடைய பழக்கமெல்லாம் பொய்யாகித்தான் போகணுமா… நன்றாக யோசித்துகொள். மறுமுறை எடுத்து கூற நான் உன் பக்கமில்லாமல் போகலாம்…”

கவலையும் கோபமும் கலந்து அவன் நிற்க . அவள் வார்த்தைகளற்று எதிர் நின்றாள். அவள் வீடும் இவனுமென அவளுடைய மனம் முடிவெடுக்க முடியாமல் தவித்தது. யார் பேச்சு நியாயம் என்பதை எப்படி யோசித்தாலும் அவிழ்க்க முடியாத முடிச்சாக இறுகிக் கொண்டே போனது அவளுக்கள். சார்புதன்மை கொண்ட பெண்னினமே இப்படித்தானோ எனறு அவள் இனம் மேலே வெறுப்பாக உணர்ந்தாள். யாரையும் கஷ்டப்படுத்தாமல் எந்த முடிவும் இல்லையோ. கடவுள் எதற்காக எதிர்மறையான சந்தர்ப்பங்களை வைத்து வாழ்க்கையை சோதிக்கிறான் என்பது புரியாத புதிராகத்தான் உள்ளதாகவே அவளுக்கு தோன்றியது. இலேசான தலையசைப்பும் முகச்சுழிப்புமாக அவன் எழுந்து நடந்தான் . சுற்றியிருந்த வயல்வெளிக்கு நடுவில் அமந்திருந்த அந்த அழகு குன்றின் மேற்புறம் வளர்ந்திருந்த அந்த வேப்ப மரத்தின் நிழலில் இருவர் மட்டும் தனித்திருந்தனர்.

“ஒவ்வொருமுறை பிரச்சனைகள் வரும்பொழுதெல்லாம் உன்னை உன் மனதிற்குள் முடிக்கொள்ளவே முயலுகிறாய். நானொருவன் உனக்காக எதுவும் செய்ய காத்திருக்கிறேன் என்ற உணர்வு ஏன் உனக்கு வராமலே போகிறது வான்மதி. இதுவரை நடந்துமுடிந்த அத்தனை பிரச்சனைகளும் நான் உன்னை மீட்டு வரும் எல்லைக்குள் இருந்தது. ஆனால் நீ இப்பொழுது எடுக்கும் இந்த முடிவு என்னையே எல்லை கடந்து தூரதள்ளிவிடும். சரியான சிந்தனைகளில் நாம் தீர்மானிக்கும் கணங்களே நம்முடைய வாழ்க்கையின் முன்னிருந்து நம்மை வாழ்தலுக்கு அழைத்து செல்வதாகத்தான் நான் நம்புகிறேன். உறவுகள் எப்பொழுதுமே நம்மை முழுமையாக வெறுத்து தள்ளுவதில்லை. காலம் முன்னிருந்து காயங்களை ஆற்றி சேர்த்து வைத்துவிடும். நாம்தான் அவர்களுக்கான தியாகம் என்பதான கற்பனையான எண்ணத்தில் சுயம் இழக்கிறோம்”

அவளுடைய இழப்பு என்பது மீட்டெடுக்க முடியாத மரணம் என்பதாகத்தான் அவன் உணர்ந்தான். அவன் மனம் சமாதானப்படுத்த ஆயிரம்ஆயிரமாக வார்த்தைகளை கோர்த்து காத்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் இவள் இல்லையென்றானால் இனி இல்லவே இல்லை என்பதை எண்ணும் பொழுதே இதயம் நடுங்கியது. ஆனால் அவளோ தடுக்க முடியாத உள்ளக்குமுறலில் உடைந்து அழுதாள் . அவளால் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் கரைபுரண்டு வெளியேறிக்கொண்டிருந்தது.

“வான்மதி உன்னை அழவைக்க வேண்டும் என்பதற்காக நான் பேசவில்லை . உன்னை நன்கு உணர்ந்ததாலே பேசுகிறேன். முடிவுகளை உன் குடும்பத்திற்கென்று எடுக்காதே. அவர்களை சமாதானப்படுத்தும் சந்தர்ப்பங்களை நாம் உருவாக்கி கொள்ளலாம். ஆனால் சந்தரப்பங்களை இழந்தபின் வருத்தத்தில் வாழ்க்கை கஷ்டப்படும். நாளை நான் ஊருக்கு கிளம்புகிறேன் ஒனறிரண்டு மாதங்கள்தான் நான் இந்தியாவிலே இருக்கும் நிலை ஏற்படலாம். ஆகையால் கடைசியாக நான் நாளை ஊருக்கு செல்லும் பேருந்தில் உனக்கும் என் பக்கத்து இருக்கையை எடுத்திருப்பேன். நன்றாக யோசித்து முடிவெடு வான்மதி . உன் முடிவு எதுவென்றாலும் எனக்கு பூரண சம்மதமே. என்னை கஷ்டப்படுத்துவதாக நினைத்து உன்னை வருத்தி கொள்ளாதே. நம் வாழ்க்கை பயணங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.” என்றபடி பக்கமாக அமர்ந்து அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்து இறுக்கி பிடித்து கொண்டான். இப்படியான இருப்போடு காலம் கடந்து வாழ்ககை இங்கேயே முடிந்து விடாதா என்ற ஏக்கமே அவள் நெஞ்சில் நிறைந்தது.

“ஏய் வன்மதி எப்படி இருக்கேடி” குரல் கேட்டு திரும்பி பார்க்க தோழி நின்றிருந்தாள்

“என்னடி இவ்வளவு லேட்டா வர்ற . ஊர்விட்டு போய்விட்டா பழகியதெல்லாம் மறந்திருவியோ” புன்னகையுடனும் பார்த்த சநதோஷமாகவும் ஒடிச்சென்று தோழியின் கை படித்து உரிமையுடன் வான்மதி கேட்டாள்

“கொஞ்சம் லேட்டாயிருச்சுடி. அதுக்கே இப்படியா… எங்க யாரையும் கானோம். உன்னோட வீட்டுக்காரரும் இல்ல” என்றபடி புன்னகையுடன் தோழி அவள் பக்கமாக வந்தாள். “அப்பா எல்லாரையும் அழைச்சுட்டு டவுனுக்கு போயிருக்கார். நான்தான் இன்னைக்கு ஊரச் சுத்திட்டு நாளைக்கு சேர்ந்துகிறேன்னு சொன்னேன். அப்பா சிரிச்சுக்கிட்டே உன்னை வரச்சொல்லட்டான்னு கேட்டாரு. அதுக்குதான் நான் போகறத தள்ளிபோடுறேன்னு அவருக்கு புரிஞ்சிரிச்சுன்னு தெரிஞ்சு நானும் சிரிச்சுட்டேன்” என்றாள் புன்னகையுடன்

இருவரும் பக்கமாக அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள். இருபக்கமும் திறந்த அவர்கள் மனது வார்த்தைகளை அள்ளிக்கொட்டியது சரளமாக. ஆடி ஒடி அலுத்தபடி, ஊருக்கு ஒதுக்குபுறம் ஆலமரத்தடியில் ஒத்தையில் தனித்திருந்த பிள்ளையாரின் பக்கமாக இருவரும் அமர்ந்து காரணமின்றி சிரித்ததில் ஆரம்பித்த பேச்சு, தட்டாம் பூச்சி பிடிக்க மார்க்குச்சியை வைத்துக்கொண்டு தெருவெங்கும் சேர்ந்து திரிந்தும், ஒன்றுகூட கிடைக்காமல் அழுதபடி வீடு வர அண்ணன் இருவருக்குமாக பிடித்துகொடுத்த தட்டாம் பூச்சியுடன் நாள் முழுவதும் வளையாடிக் களித்தது, வம்பு பேசும் பையன்களிடம் எனக்காக அவள் இட்ட சண்டை. வெளிநாட்டிலிருந்து வந்த அப்பா கொண்டு வந்ததில் அவளுக்கு பிடித்ததென மறைத்து எடுத்து வந்து கொடுத்தது. அம்மாவிடம் கூட பேச முடியாத இளமையின் இரகசியங்களை பரிமாறிக்கொண்டது என எல்லாமுமாக கடந்த பேச்சு அவனிடம் வந்தது.

“என்னடி அவனை மறந்துட்டேல்ல” என்று தோழி மெதுவாக கேட்டதும் அவள் கண்களில் வேகமாக கண்ணீர் திரையிட…

“ஏய்…இதுக்குதான் அத பேசவே வேண்டாம்னுதான் இருந்தேன். ஸாரிடி..” தோழி வருத்தத்துடன் அவளை சமாதானப்படுத்த முயல…

“என்ன சொல்லனே தெரியல… என்னால அவன் நினைப்பு இல்லாம ஒரு நாள் கூட இருக்கவே முடியலடி… அவனுக்கு என்னை பத்தி சரியா தெரிஞ்சிருக்கு . எனக்குதான் என்னையே தெரியல….நல்லா தூங்கிகிட்டு இருக்கிற நட்ட நடு ராத்தரியில அவன் பக்கத்தில உட்கார்ந்து தலைகோதி விடுறமாதிரி இருக்க.. சடக்குன்னு தூக்கத்திலருந்து விழிச்சா…அப்பறம் மனசு பூரா அவன் நினப்பு புகுந்துகிட்டு இராப்பூரா தூக்கமே வரமாடக்குதிடி.. எப்பவாவது என்னோட புருஷன் எந்திரிச்சு பார்த்தா …ஒன்னுமில்லைங்க வீட்டு நினைப்புன்னு சொல்லி சமாளிக்கிறேன். அவன என்னால மறக்க முடியும்னு தோனலடி . நினப்பு ஒருபக்கம் நிசம் ஒருபக்கம்னு என்னைய இரண்டா சாமி பிரிச்சு கொடும படுத்துற மாதிரு இருக்கு. எதுக்கு இப்படி பொய்யா வாழணும் பேசாம எதையாவது குடிச்சிட்டு செத்து போய்ரலாம்னு கூட இருக்கும். ஆனா இந்த மனுஷன் என்ன தப்பு செஞ்சுதுன்னு என் புருஷனுக்காக வாழுறேன்.”

“ஏய் என்னடி இது காலம்னு ஒன்னு இருக்கு கன்டிப்பா அது நம்மை மாத்திடும். நீ வீனாப்போட்டு மனச கொளப்பிக்காத… நம்ம பொம்பள சென்மமே அடுத்தவளுங்களுக்காக வாழ்றதுக்குதானே..புருஷனையும் ஆத்தா வீட்டையும் நினைச்சு… அவன மறக்க முடியலன்னாலும் அவனோட நினைப்பை குறைச்சுக்கோடி….”

“முடியும்னு தோனல.. ஆனா விடுறதுக்கு முடிவெடுத்த மாதிரி மனச கொண்ணுக்கவேண்டியதுதான். அவன எப்படியாவது என்னோட வாழ்க்கைல திரும்ப ஒருதடவை பரர்க்கனும்… பார்த்து உன் நினைப்ப என்னால என்னோட உசருல இருந்து பிரிக்கவே முடியலன்னு அவன்கிட்ட சொல்லி கதறி அழனும்னு தோனுதுடி.. ஊருக்கு ஏதும் வந்தானாடி. எப்படி இருக்கிறான்னு ஏதாச்சும் விஷயம் உனக்கு தெரியுமா…”

“வந்தாண்டி.. வந்து இந்த ஊர்ல இருந்த சொத்த எல்லாம் அவனை வளரத்த பெரியப்பா பேருக்கே எழுதுக்கொடுத்துட்டான். ஊர்ல அவனோட சொந்தக்காரங்கெல்லாம் யோசிச்சு செய்ப்பான்னு சொன்னாங்க. என்னை பெரியப்பா குறையில்லாம புள்ளையாத்தான் வளர்த்தார். மாடசாமியை நான் என்னுடை சொந்த அண்ணனாத்தான் பார்க்கிறேன் . இதப்பத்தி வேற யாரும் பேசவேண்டாமனு சொல்லிட்டான்னு ஊரெல்லாம் ஒரே பேச்சு. சிங்கப்பூர்ல இப்ப வேலை பார்க்கிறானாம். கல்யாணம் இங்கேயே முடிச்சுக்கிலாம்னு அவனோட பெரியப்பா மூலம் பேசிப்பார்த்தாங்க. அவன் ஒரேடியா வேண்டாம்னு சொல்லிட்டானாம். அவனுக்கு மனசுக்கு பிடிச்சவங்களத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டானாம்” என்றாள் தோழி

“இப்படித்தான் தீர்மானமானிக்கிற பாதையிலதான் மனசு போகணும். மனசு பாதையை தேடக்கூடாதுன்னு எப்பவுமே அவன் சொல்லுவான்….” என்றாள்.

“என்னடா இப்ப ஜென்னியோட அடிக்கடி உன்ன பார்க்கிறேன்” என்று புன்னகையுடன் கேட்ட நண்பனின் பக்கமாக திரும்பி பார்த்தான்.

“ஜென்னிக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. எங்களுடைய எண்ணங்களும் விருப்பங்களும் நேர்பாதையில் பயணிப்பதில் எங்களுக்கே வியப்பாகத்தான் உள்ளது. வாழ்க்கையைத்தேடி நாம் ஓடுவதாகவும், அதுவே விரும்பி நம்மை நோக்கி வருவதுவுமான சுற்றுப் பயணத்தில் இது இரண்டாவதாக எனக்கு படுகிறது. என்னை சுற்றி வரும் இந்த வாழ்க்கையில் ஜென்னியோடு பயணித்தால் சுகமாக இருக்கும் என்பதாக தோன்றுகிறது. கடக்கும் எல்லா கணங்களையும் இருவருமாக சேர்ந்து கடக்க விரும்புகிறோம். அவளுடன் இருக்கும்பொழுது இவ்வுலகம் எனக்கு இன்னும் கொஞ்சம் அழகில் மெருகேறி மின்னுவதாக தோன்றுகிறது. ” என்றான்

“ஜென்னியோட ப்ராஜக்ட் முடியப்போகுதே. அவள் விசாவை எக்ஸ்டென்ட் பண்ண போகிறாளா”

“நாங்கள் இருவரும் இங்கிலாந்திலே குடியேறிவிடலாம் என்று தீர்மானித்துள்ளோம். அனேகமாக இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் இந்த ப்ராஜக்ட் முடிந்து அவள் திரும்ப இங்கிலாந்து செல்லுவதற்கு முன் எங்கள் திருமணத்தை முடித்துவிட்டு இருவரும் சேர்ந்தே அங்கு போய் என்னுடைய விசாவை மாற்றி கொள்ளலாம் என்றுள்ளோம்.”

“ஜென்னியின் வீட்டில் பேசியாகிவிட்டதா…” நணபனின் கேள்விக்கு

“சரியான தோழி என்பதாகவே மனத்தில் இருத்தியிருந்த ஜென்னியை, வாழ்க்கையும் ஜென்னியுடனே என்று நான் தீர்மானித்த கணம். அவளுடைய குடும்பத்தை சந்தித்தபின்தான் என்றால் அது ஒன்றும் மிகையில்லை. அப்பா அம்மா இருவருமாக இங்கு வந்திருந்த பொழுது அவள் என்னையும் அவள் வீட்டிற்கு அழைத்திருந்தாள். அறிமுகமற்றவன் எனபதாக ஒரு கணம் கூட நான் உணரவில்லை அவர்களுடன் இருந்தபொழுது. எது செய்தாலும், எங்கு செல்ல முடிவெடுத்தாலும் ,எது பேச ஆரம்பித்தாலும் , எல்லோருக்கும் அது பிடித்தமானதாக இருக்கிறதா அல்லது எல்லோரும் அந்த மனநிலைக்கு மாறுவதற்கு உகந்ததான முடிவா என்று நன்கு ஆராய்ந்தபிறகே ஆரம்பிக்கிறார்கள். உடன் வருபவர்களே முக்கியம் என்பதாக யாருக்கேனும் உடன்படாத மனநிலை ஏற்பட்டால் அத்தனையும் கலைத்து வீடு திரும்ப எப்பொழுதும் தயார் நிலையலே அவர்களது செயலோ பயணமோ அமைகிறது. எதற்காக இப்படி என்று ஆச்சரியத்துடன் நான் கேட்டால் . என் அப்பாவின் எண்ணம் உடன் வாழும் மனிதனின் சந்தோஷத்திற்கு பின்தான் உலகம் என்பது என்றாள். அற்புதமான அந்த குடும்பத்து உறுப்பினர் என்பதில் நான் பெருமையாக உணர்கிறேன்” பேசி முடிக்கும்பொழுது பெருமிதம் கலந்த புன்னகை அவன் முகத்தில் வழ்ந்தது

“சந்தோஷம்… ஊரில் யாருக்காவது தெரியப்படுத்த வேண்டுமெனில் தெரியப்படுத்து. இங்கு செய்யப்படவேண்டிய ஏற்பாட்டுக்கு நான் பொறுப்பு” புன்னகையுடன் நண்பன் கூற

“ஊருக்கு நான் எப்பொழுதும் ஒரு காட்சி பொருளாகவே இருக்கிறேன். பெற்றோர்களின் இழப்பு, பெரியப்பாவின் வளர்ப்பு, போராட்டமான வாழ்க்கை , இப்பொழுதோ சுகமாக சம்பாதிக்கும் வெளிநாட்டு வேலைக்காரன். எதிலும் அவர்களின் இருப்பு பார்வையாளர்கள் என்பதாகவே எனக்கு தோன்றும் . ஆகையால் அவர்களைப்பற்றி பெரியதாக எனக்கொன்றும் கவலையில்லை. பெரியப்பாவிடம் மட்டும் தெரியப்படுத்த வேண்டும். ஆனால் கடந்தமுறை நான் ஊருக்கு செல்லும்போதே அவர் தளரந்திருந்தார். அதனால் இப்பொழுது நான் அனுப்பும் பணத்தில் அவருக்கென்றும் மருத்துவ செலவுக்கென்றும் தனித்தனியாக அனுப்புகிறேன். ஆகையால் அவராலும் வரமுடியாது. பெரியப்பா தவிர வீட்டில் என்னுடைய வளர்ச்சியல் பிடித்தவர்களும் இல்லை, வெறுத்தவர்களும் இல்லை. அவர்களுக்கு நான் அவர்கள் ஊரில் வாழ்ந்த ஒரு ஊர்க்காரன்” என்றான்

“உன்னை தேடுபவர்கள் என்று யாருமே ஊரில் இல்லையா…” நணபன் மறுபடியுமாக கேட்க

“அப்படி தேடுபவர்கள் யாரும் ஊரிலில்லை. எனக்கென்று இருந்த சொத்துகளையும் நான் பெரியப்பா பேருக்கு மாற்றி விட்டதில் என்னுடைய பெரியப்பா வீட்டில் அனைவருக்குமே சந்தோசம் . என்னை வளர்த்ததற்கு என்னால் அவர்களுக்கு இப்படியாக கைமாறு செய்யமுடிந்ததில் எனக்கும் சந்தோசம். வாழ்க்கை என்னும் இந்த நதிமூலத்தில் கடந்து வந்த பாதைகளை விட சேரும் கடல்தான் முக்கியம் என்று நான் நம்புகிறேன். பதித்து கடந்த தடங்களை திரும்பி பார்க்க எனக்கு எப்பொழுதுமே விருப்பமாய் இருப்பதில்லை. எனக்கு எதுவும் இழப்பென்று தோன்றவில்லை . அடுத்த முயற்சிக்கான உந்து சக்தியாகத்தான் என்னுடைய முந்தைய தோல்விகள் அமைவதாகவே எனக்கு எப்பொழுதும் தோன்றும்..”

“டேய்… வான்மதி ஞாபகம் இல்லையா.. மறைக்கிறாயா…” லேசான கோபம் கலந்து வேகத்துடன் நணபன் கேட்க..

“வான்மதி……” நீளபெருமுச்சு விட்டபடி பெயரை மெதுவாக உச்சரித்த அவன்

“அவள் ஞாபங்களின் உயிர்ப்புகளை நான் மறக்கவோ , மறுக்கவோ அவசியம் இல்லை. அது அதுவாகவே என்னுள் கலந்திருக்கட்டும” அவனுடைய கண்களில் கண்ணீர் மெல்லிய திரையிட்டு அவன் விழி மறைத்தது.

பட உதவி: http://www.123rf.com/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *