– சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.

அதற்குள் மற்றொரு வாரம் வந்து விட்டதா? கால ஓட்டத்தின் வேகம் கணிக்க முடியாதபடி இருக்கிறது. இயந்திர வாழ்க்கை போல எமது வாழ்க்கை எந்த வித காரணங்களுக்கும் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது..

உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனக் கணிக்கப்படும் பாரத தேசத்தின் தேர்தல் மிகவும் ஒழுங்கான முறையில் நடந்து முடிந்திருக்கிறது.

தேர்தல் முடிவுகள் இந்திய மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பியதற்கான சான்றாகத் தென்படுகிறது.

நான் எந்தவொரு அரசியல் சாயமும் அற்றவன். யார் பதவிக்கு வந்தாலும் நாட்டின் அடிப்படை ஜனநாயக உரிமைகளும், சராசரி மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கான விழுமியங்களும் பாதுக்காக்கப்பட வேண்டும் என்று விரும்புபவன்.

உலகில் மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்பதே யாதார்த்தமான கருத்து. ஒரு நாட்டில் சமத்துவமான ஆட்சி நிலவ வேண்டுமெனில் அந்நாட்டின் அரசாட்சியில் மாற்றங்கள் ஏற்படுவது அவசியம்.

ஓரே கட்சி பலவருடங்கள் ஆட்சியில் நீடித்திருப்பது ஜனநாயகத்திற்கு உகந்த செயலாக இருக்காது.

இக்காலகட்டத்தில் இந்திய மக்கள் முற்றுமுழுதாக தேசியரீதியில் ஒரு மாற்றத்தை வேண்டி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

அரசியல் கட்சிகள் அதுவும் தேசியரீதியிலான அரசாங்கத்தில் பிரதமராக அல்லது நாட்டின் தலைவராக வருபவர்கள் அத்தகையதோர் குடும்பத்தில் பிறந்தவர்களாகவோ அன்றி வாழ்க்கை வசதியில் மேல்நிலையில் உள்ளவர்களாகவோ இருக்கும் நிலையைத்தான் காணக்கூடியதாக இருக்கிறது.

ஆனால் நடந்து முடிந்த இந்தியத் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் வாழ்வின் அடிமட்டத்திலிருந்து உழைப்பினால் உயர்ந்து வந்தவர் என்பதனால் நாட்டின் அடிமட்ட மக்களின் வாழ்வின் சுபீட்சத்திற்கு வழிவகுப்பார் எனும் நம்பிக்கை ஒளி சிறுகீறலாக உள்ளத்தின் ஓரத்தில் எழத்தான் செய்கிறது.

இன்றைய இங்கிலாந்து நாட்டின் அரசியல் கட்சிகளின் தலைவர்களை உற்று நோக்கினால் அவர்கள் அனைவரும் வாழ்வில் மேல்நிலையிருப்பவர்களே.

இங்கிலாந்தின் முக்கியமான கட்சிகளான கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சி எனும் மூன்று கட்சிகளின் தலைவர்களான பிரதமர் டேவிட் கமரன், எட் மில்லிபாண்ட், நிக் கிளேஹ் என்பவர்களின் வாழ்வாதாரங்களைப் பார்க்கும் போது அவர்கள் வாழ்க்கை வசதிகளின் அளவுக்கோட்டில் மேல்நிலையிலேயே உள்ளார்கள்.

ஊடகங்களில் இத்தலைவர்கள் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களுக்கு விடிவு காணப்போகிறோம் என்று கூறி அதற்கான வழிமுறைகளைக் கொள்கைப்பிரகடனங்களாக வெளியிடும் போது இவர்களுக்கு எப்படி நமது வாழ்வின் தேவைகளின் அவசியம் புரியப் போகிறது என்று சாதாரண மக்கள் அங்கலாய்ப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

கடந்தவாரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த லேபர் கட்சித் தலைவர் எட் மில்லிபாண்ட் இரண்டு இடங்களில் சரியான வகையில் மட்டிக் கொண்டார். வானொலிப் பெட்டியில் நீங்கள் சாதாரண மக்களின் அன்றாடச் சிக்கல்களை நன்கு அறிந்ததாகச் சொல்கிறீர்களே உங்களுடைய குடும்பத்தின் வாராந்த செலவு என்ன என்று கேட்கப்பட்டபோது 80 ஸ்ரேலிங் பவுண்ஸ் என்று குறிப்பிட்டு விட்டார் போங்கள் !

போச்சுடா ? கணவன், மனைவி இரண்டு குழந்தைகள் எப்படி வாராந்த 80 பவுண்ஸ் செலவில் வாழ்லாம் என்று நாலா திக்குகளிலும் இருந்து கருத்துக்கள் எகிறிப் பாய்கின்றன.

அது மட்டுமின்றி அடுத்த தேர்தலில் தாம் அரசமைக்க வேண்டுமானல் கன்சர்வேடிவ் கட்சி வசமிருக்கும் தொகுதிகளில் 58 ஜக் கைப்பற்ற வேண்டிய லேபர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட் 58 தொகுதிகளில் ஒன்றுக்கு விஜயம் செய்திருந்தார்.

அவ்விஜயத்தின் போது அவரைப் பேட்டி கண்ட ஊடகவியலாளர் அப்பகுதியின் லேபர் கட்சியின் அமைப்பாளரின் செயற்பாடுகளைப் பற்றி வினவும் போது, எட் மில்லிபாண்ட் அவ்வமைப்பாளரின் பெயரைக் கூறி அவர் நகராட்ச்சியின் தலைவராக நன்றாகச் செயற்படுவதாகக் கூறினார். அங்கேதான் மற்றொரு சர்ச்சை லேபர் கட்சியின் தலைவருக்கு எழுந்தது,

ஆமாம், அவ்வூடகவியளாளர் என்ன அப்படிக் கூறிவிட்டீர்கள் இப்பகுதி நகராட்ச்சியில் அதிகாரத்திலிருப்பது கன்சர்வேடிவ் கட்சி, பின் எப்படி உங்கள் கட்சி அமைப்பாளர் நகராட்ச்சிச் சபையில் தலைவராகச் செயற்பட முடியும் ? என்றாரே பார்க்கலாம்!

நாட்டின் எதிர்க்கட்சியின் தலைவர், நாட்டின் அடுத்த பிரதமர் என்று தன்னை எண்ணிக் கொண்டிருப்பவர் தமது கட்சி வெற்றியடைய வேண்டிய ஒரு தொகுதியின் பிரச்சாரத்திற்காக வரும்போது அத்தொகுதியின் நகரசபை ஆட்சி அதிகாரம் யார் கையிலிடுக்கிறது என்பது கூடத் தெரியாமல் வருவதா?

இவரா எமது நாட்டை வழிநடத்தப் போகிறார்? எனும் கேள்வி மிகவும் பலத்த சத்தத்துடன் பல ஊடகங்களில் குறிப்பாக கன்சர்வேடிவ் கட்சிக்குச் சார்பான ஊடகங்களில் ஒலிக்கத் தொடங்கி உள்ளது.

பன்னாட்டு அரசியல் இன்று பல மாற்றங்களுக்குள்ளாகி மீண்டும் ஒரு அடிப்படை வாதத்தில் வந்து நிற்கிறது என்றே சொல்ல வேண்டும்.

மக்களுக்காக அரசியல்வாதிகளா? இல்லை அரசியல்வாதிகளுக்காக மக்களா? எனும் கேள்வி இன்னமும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டே இருக்கிறது.

modi_emoஆனால் இந்தியாவின் இன்றைய பிரதமர் தெரிவு மிகவும் நெஞ்சை நெகிழ்வூட்டும் விதமாக அமைந்துள்ளது. முதற்தடவையாக ஒரு பிரதமர் நாடளுமன்றத்தினுள் காலடி வைக்கும் போது தலை வணங்கி விட்டுச் சென்றதைப் பார்க்கும் போது பாராளுமன்ற அரசியலில் அவர் வைத்திருக்கும் அலாதியான மரியாதை மனதுக்குத் தெம்பூட்டுகிறது.

அவர் பேசும்போது மிகவும் உணர்ச்சிபூர்வமாகப் பேசிக் கண்ணீருடன் இந்திய தேசத்தைத் தன் தாயாகவும் இந்திய மக்களைத் தன் சகோதரர்களாகவும் கருதிப் பேசியது மிகவும் உற்சாகமூட்டுவதாகவும் உலகெங்கும் உள்ள ஜனநாயக அரசியல் தலைவர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாகவும் அமைந்திருந்தது.

மிகவும் எதிர்பார்ப்புக்களுடன் பதவியேற்கும் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, அவரது திணிக்கப்பட்ட எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதன் மூலம் மற்றைய நாட்டு அரசியல் தலைவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைவார் என எதிர்பார்க்கிறேன்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி

 

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

 

 

 

படம் உதவி: http://amritasabat.blogspot.com/   –    http://www.coastaldigest.com/images/stories/pictures/May2014/May15/modi_emo.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *