நான் அறிந்த சிலம்பு – 121
-மலர் சபா
மதுரைக்காண்டம் – 11: காடுகாண்காதை
இடைப்பட்ட வழி
”முன்பு கூறிய இரு வழிகளிலும்
நீவிர் செல்லவில்லையென்றால்
இடைப்பட்ட செவ்விய வழியொன்று காணப்படும்.
அவ்வழி செல்லுங்கள்.
அவ்வழிதனில்
தேன் வடியும் பூக்களையுடைய சோலைகளும்,
ஊர்களும், காடுகளும்
இடையிடையே காணப்படும்.
அவற்றைக் கடந்து சென்றால்
ஆங்கே அரிய வழியொன்று தென்படும்.
அங்கே துன்பம் துடைக்கும்
தெய்வம் ஒன்று உள்ளது.
அவ்வழியில் செல்பவர்களை
அச்சுறுத்தாது அத்தெய்வம்;
என்றாலும்,
கண்டவர் நடுங்காத வண்ணம்
அழகான தோற்றம் கொண்டு
அவர்களை மயக்கிப்
பயணம் தொடரவிடாமல் தடுத்திடும்.
அதற்கு மயங்கிவிடாமல்
நீங்கள் தொடர்ந்து சென்றால்,
பல கிளைவழிகளைத் தன்னுள் அடக்கியிருக்கும்
ஒன்றியிருக்கும் இடைப்பட்ட வழியான
மதுரைப் பெருவழி காண்பீர்கள்.
அவ்வழியை மேற்கொண்டு செல்லுங்கள்.
இந்நிலவுலகையளந்த நெடுமுடி கொண்ட
எம் தலைவனாம் திருமாலின் அடிகளைக்
கண்டுதொழ நானும் போக வேண்டும்”
என்றான் மாங்காட்டு மறையோன்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 141 – 149
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html
படத்துக்கு நன்றி:
http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section30a.html