திருமால் திருப்புகழ் (108)
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————
’’கண்ணன் வெண்பாக்கள்’’
————————————————
கன்னிப்பெண் ராதைகைத், தாம்பால் கட்டுண்டு,
பின்னிப் பிணைந்த கண்ணனவன், -முன்னம்,
உரலிழுத்த ந்யாபகம், உந்த உருள,
மருள முழித்தனள், மாது….(156)
வெறுத்துப் பேசுவதாய், கார்முகில் வண்ணா,
அருத்தம் கொள்ளாதே , கேளென் -வருத்தத்தைக்,
கண்ணனுனைக் காணாது, போனாலென் கண்கள்முக்,
கண்ணனைக் காணப்போம் காண்….(157)
கத்திரிக்காய் தொட்டு, கணினி வரையில்வான்,
உத்திரத்தில் வைத்துவிலை விற்கிறார்கள், -மொத்த,
விலைவாசி ஏற்றம், விழுந்துதா காதில்,
அலைவாசி தூங்காய் அயர்ந்து….(158)
கவிதை வருவது, கண்ணன் அருளா !
செவியுண்ட செய்யுள் செயலா !,-புவியத்தா,
காவிய வாழ்க்கையா!, கைவல்ய வேட்கையா!,
சாவியுன் கையில், செப்பு….(159)
கோபத்தில் ராமன், கணையெடுத்து கர்ஜிக்க,
ஆபத்(து) உணர்ந்த அலையரசன், -சாபத்துக்(கு),
அஞ்சி சகியோடு, அண்ணல் சரணாகதி
கெஞ்சிடும் கோலம், கவி….(160)
தள்ளாடி னாலும், தடியூன் றினாலும்,
பல்லாடி பொக்கையாய்ப் போனாலும், -கில்லாடி,
கண்ணனைப் பாடும், கவியாக உள்ளவரை,
வண்ணமுறும் வாழ்வு, வரம்….(161)
———————————————————————————————————————-
படங்களுக்கு நன்றி :
http://kamadenu.blogspot.in/