கிரேசி மொழிகள்!
கிரேசி மோகன்
தூக்கக் கலக்கத்தில் தோன்றியது….CrazY Quotes From Crazy Coat….
”ஆறாவது அறிவுடன் நிறுத்திக் கொள்வ்பவன் அடிமுட்டாள்
ஏழாவது, எட்டாவது என்று தொடர்ந்து படித்து டிகிரி வாங்குபவனே புத்திசாலி’’….(1)
‘’இளமையில் கல்….முதுமையில் சிலை….நடுவயதில் வாழ்வின் நாராசமான உளியின் ஓசை’’….(2)
‘’பாவம் செய்தவன் நரகம் செல்கிறான்
புண்ணியம் செய்தவன் சொர்கம் செல்கிறான்
எதுவும் செய்யாதவன் பூமியில் பிறக்கிறான்’’….(3)
’’கெட்ட பழக்கத்தை நாம விடலாம்….பாழாய்ப்போன
நல்ல பழக்கமோ நம்மை விட்டால்தான் உண்டு’’….(4)
‘’அளவுக்கு மீறிய பசியில் நஞ்சும் அமிர்தமாகும்’’….(5)
‘’சொறிவதற்கு தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’’….(6)
‘’ஐந்தில் வளையாத முதுகு ஐம்பதில் வளையும்’’….(7)
‘’நான் ஆடாவிட்டாலும் KNEE ஆடும்’’….(8)
‘’கற்றோர்க்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு
கல்லாதவனுக்கோ செல்ல வேண்டிய அவசியம்
இல்லாததால் இருக்கும் இடத்திலேயே சிறப்பாக இருப்பான்’’….(9)
’’தானாய் வருவது வெற்றி
முயன்று பெறுவது தோல்வி’’….(10)
‘’முக்கால்வாசி வெற்றி
மயிரிழையில் தோல்வியிடமிருந்து
தப்புவதுதான்’’….(11)
’’பசி தாளாமல் பொய் சொன்ன வாய்க்கு போஜனம் உண்டு’’….(12)
’’5 பெண்ணைப் பெத்தவன் ஆண்டியாகலாம்
5 பிள்ளை பெத்தவன் அந்த ஆண்டிக்கு சம்பந்தி ஆனால்
ஆண்டியாகலாம்’’….(13)
‘’தைரிய சாலிக்கு வீர மரணம்
கோழைக்கோ இருமி இருமி சளி மாரடைத்து
ஈர மரணம்’’….(14)
‘’சுலபமான யோகம் வினியோகம்’’….(15)
‘’மெளனம் சங்கடத்துக்கும் அடையாளம்’’….(16)
‘’அனாவசியமாக அடிக்கடி கசக்கி கட்ட முடியாத அளவுக்குக்
கந்தையாக்காதே’’….(17)
‘’பாம்பு, பூரான்,பூச்சிக்கு பயப்படாதவர்கள்
தாராளமாக இயற்கையோடு ஒன்றி வாழலாம்’’….(18)
‘’சுறுசுறுப்பாக இருக்க உடலில் உறுதி வேண்டும்
சோம்பேறியாக சுகமாக வாழ மனதில் உறுதி இருந்தால் போதும்’’….(19)
‘’இடுக்கண் வருங்கால் நகருக’’….(20)
‘’அளவுக்கு அதிகமாக ஆப்பிளை சாப்பிட்டதால்
ஆதாம் ஏவாளுக்கு வந்த அஜீர்ணமே காதல்’’….(21)
’’ஞானப் பசி வந்தால் பற்றும் பறந்து போம்’’….(22)
‘’பகைச்சுவை இல்லாத எதுவுமே நகைச்சுவைதான்’’….(23)
‘’பயம்தான் சாவு….செத்தால் கொள்ளி….
பயந்தால் கொள்ளிதான் பயந்தாங்கொள்ளியாச்சோ!’’….(24)
————————————————————————————————————————-
தானாய் வருவது வெற்றி
முயன்று பெறுவது தோல்வி
இது மிக அருமை, முயன்றும் தோல்வி என்ற அனுபவம் பெற்றவர்களுக்கே இது நன்கு புரியும். நன்று..மிகவும் பிடித்தது.