கதைக்குள் நிச்சயம் ஒரு சிங்கம் இருந்தாக வேண்டும். மரங்கள், அருவிகள், மலைகள் இருந்தாக வேண்டும். காட்டுக்குள் மழை பெய்தாக வேண்டும். யானையோ, புலியோ, முயலோ, மானோ, கரடியோ – இதில் ஏதொன்றுக்காவது பிறந்தநாள் கொண்டாடவேண்டும். கதையில் சண்டை இருக்கக்கூடாது. சிங்கமும் மானும் நண்பர்களாக இருக்கவேண்டும். அவனது நண்பர்கள் சிலரின் பெயரைச் சொல்லவேண்டும். அரவம் கூடாது. பறவைகள் பற்றி பேசலாம்.
கண்டங்களும், நாடுகளும், கடல்களும் பற்றிய விவரிப்பு இருந்தாக வேண்டும். அவ்வப்போது இந்தியாவையும், சென்னையையும், ஏலகிரி மலையையும் தொட வேண்டும். வானவில்லும் அதை நோக்கிச் செல்லும் விமானமும் வந்தாக வேண்டும். கதை சொல்லிக்கொண்டிருக்கும் போதே, ஆங்காங்கே இடைமறித்து அதை அவன் திருத்துவதற்கு முழுவதுமாக அனுமதிக்க வேண்டும். மிக முக்கியமாக, அவனுடைய கதாப்பாத்திரம் அதில் நிச்சயம் இருந்தாகவேண்டும். வெறும் கதாப்பாத்திரமாக அல்ல, கதாநாயகனாக! அந்த கதாநாயகனின் வீரத்தைப் பற்றிய விவரிப்பும் நிச்சயம் இருந்தாக வேண்டும்.
விண்வெளி பற்றி பேசவேண்டும். அவன் விஞ்ஞானி என்று கூறவேண்டும். இறுதியில் அவனுக்குப் பிடித்தமான அத்தனை மிருகங்களையும், பறவைகளையும், நண்பர்களையும், உறவுகளையும், எங்களையும் விண்கலத்தில் கூட்டிக்கொண்டு அவன் விண்வெளிப் பயணம் போவது பற்றி ரசனையுடன் விவரிக்க வேண்டும். பூமியில் தொடங்கி, வியாழனைக் கடந்து, (கோள்களின் வரிசை மாறக்கூடாது!) புளூட்டோவைத் தொட்டு, பால்வெளியை விட்டு வெளியேறி, வேறு ஏதேதோ மண்டலங்களுக்கெல்லாம் சென்று விட்டு மீண்டும் பூமிக்கு வந்து சென்னையில் இறங்கி, அனைவரும் தாத்தா பாட்டி வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும்.
“மாதவன் இளங்கோ”, தமிழகத்தின் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில், 1979 ஆம் ஆண்டு, திரு. பாரதி-திருமதி. சியாமளா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். திருப்பத்தூரில் பள்ளிக்கல்வி பயின்ற அவர், கோயமுத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி ‘இயந்திரவியல்’ துறையில் இளநிலை பட்டம் பெற்றவர். இந்திய மேலாண்மை கழகத்தில் பொது மேலாண்மையும் பயின்றவர்.
கடந்த ஐந்து வருடங்களாகத் தமிழில் சிறுகதைகளையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதிவரும் இவரது படைப்புகள் வல்லமை, சொல்வனம், திண்ணை, சிறகு, விகடன், தினமலர் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் மட்டுமின்றி, இலக்கியம், மெய்யியல், உளவியல், மற்றும் மேலாண்மையில் மிகுந்த நாட்டமுடையவர்.
வல்லமை இணைய இதழின் ‘வல்லமையாளர்’ விருது பெற்றவர். வல்லமை இணைய இதழ் – ஐக்கியா அறக்கட்டளை இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதைகளை மூத்த கலை இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களும், மூத்த எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்களும், சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுத்து மதிப்புரை வழங்கியுள்ளார்கள். திரு.வெ.சா அவர்கள், திண்ணை மற்றும் சொல்வனம் இணைய இதழ்களில் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் பற்றி எழுதிய கட்டுரைகளில் இவரது படைப்புகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். கணையாழி இலக்கிய இதழிலும் இவருடைய சிறுகதைத் தொகுப்பைப் பற்றி ‘இப்போது பெல்ஜியத்திலிருந்து ஒரு மாதவன் இளங்கோ’ என்கிற தலைப்பில் விரிவாக விமர்சனம் எழுதியுள்ளார். விக்கிபீடியாவில் இவரது பங்கு – ஆங்கில விக்கியில் தொடங்கி, தற்போது தமிழ் விக்கியில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதியும், திருத்தியும் வருவதன் மூலம் தொடர்ந்து வருகிறது. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான அம்மாவின் தேன்குழல் அகநாழிகை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
தற்போது ஐரோப்பாவில் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்சு மாநகருக்கு அருகிலுள்ள லூவன் நகரில் தன் மனைவி தேவிப்ரியா மற்றும் மகன் அம்ரிதசாயுடன் வசித்து வருகிறார். பெல்ஜியத்தின் முதன்மையான வங்கி ஒன்றில் செயல் திட்ட மேலாளர், பயிற்சியாளர், விரிவுரையாளர், தொழில்நுட்ப நிறுவன நிர்வாகி எனப் பல திறக்குகளில் இயங்கி வருகிறார். அண்மையில் ஏஜைல் சர்வதேச கூட்டமைப்பின் பெல்ஜியம் பிரிவின் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.