என் பார்வையில் கண்ணதாசன்
–பி.தமிழ்முகில் நீலமேகம்
பொதுவாக, திரையிசைப் பாடல்கள் காலத்தால் நிலைத்து நிற்கக் கூடியவை அல்ல. இன்று நாம் முணுமுணுக்கும் இக்காலத்துத் திரையிசைப் பாடல்கள், நாளை நம் நினைவில் நிற்குமா என்று கேட்டால், நிச்சயமாக இருக்க முடியாது என்று அடித்துச் சொல்லலாம். இன்றைய பாடல்கள் காளான்கள் போன்றவை. அவற்றிற்கான ஆயுட்காலம் மிகக் குறைவு. கருத்தாழம் மிக்க பாடல்களே காலமெலாம் நிலைத்து நிற்கும். காலத்தால் அழியாத அற்புதப் படைப்புகள் பலவற்றை நமக்குப் பெரும் பொக்கிஷங்களாகக் கொடுத்தவர் கவிஞர் கண்ணதாசன் என்பது நிதர்சனமான உண்மை.
காதல் ஆயினும் சரி, தத்துவமாயினும் சரி, கவிஞரது கவிதை வரிகள் எல்லாமே சராசரி மனிதன் தனது வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் வகையில் இருக்கின்றபடியால், கேட்பவர்களின் மனதில் சட்டென்று ஒட்டிக் கொள்கிறது. காலம் பல கடந்தும், இன்றளவும் நம் மனதில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கின்றன அவரது பாடல்கள்.
நிறப் பேதம் பார்த்து, மனங்களை வருத்தும் மானுடர்கள் மத்தியில் வாழும் பெண்ணொருத்தி, தன் மனக்குமுறலைக் கண்ணனிடம் கொட்டுவதாகக் கவிஞர் எழுதியுள்ள இந்தப் பாடலினுள் மாநிறம் அல்லது கருப்பு நிறத் தோல் கொண்ட பெண்கள், தம்மையும் அச்சூழலில் பொருத்திப் பார்த்துக் கொள்ளுமளவுக்கு, மனத்துயரை அச்சூழலில் எவ்வளவு அழகாகத் தன் கவிதையில் வடித்திருக்கிறார் கவிஞர்!
மனம் பார்க்க மறுப்போர் முன்
படைத்தாய் கண்ணா!
நிறம் பார்த்து வெறுப்போர் முன்
கொடுத்தாய் கண்ணா!
இனம் பார்த்து எனைச் சேர்க்க
மறந்தாய் கண்ணா!
மனித மனம் பச்சோந்தியைப் போன்றது. சந்தர்ப்பத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தன் நிலையை மாற்றிக் கொள்வது.எடுத்த முடிவில் நிலையாக நில்லாதது. உயர்ந்த இடத்தில் இருக்கும் அனைத்துமே உயர்வானவை என்றும், எளிமையானவை அனைத்தும் தாழ்வானவை என்னும் மாயையை உண்மை என்று நம்புவது மனித மனம்.
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்.
ஒரு மனிதனுக்கு அத்தியாவசியமானது நிம்மதியானஉறக்கம். மனதினுள் எத்துணை பெரிய பாரம் ஏறிக்கொண்டு, உறக்கம்தனைக் கண்களை அண்ட விடாது செய்தாலும், கவிஞரின் மெல்லிய பாடல்கள் மயிலிறகாய் வருடி, நித்திராதேவி நம் கண்களைத் தேடி ஓடிவரும்படி செய்துவிடும். அத்தகைய பேராற்றல் கொண்டவை கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள்.
உதாரணத்திற்குச் சில பாடல்கள்…
•பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
•மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
•தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
•கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
•கண்ணே கலைமானே கன்னி மயில் என
கண்டேன் உன்னை நானே
போன்ற பாடல்கள் பச்சிளம் குழந்தைகள் முதல் வயோதிகப் பெரியவர்கள் வரை தன்வயப்படுத்தி, நித்திரையை அவர்கள் கண்வயப்படுத்தும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.
மனித வாழ்க்கையை நான்கே வரிகளில் கவிஞர் எவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் சொல்கிறார் பாருங்கள்.
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்.
உன்னதமான காதலைச் சொல்ல இதைவிடவும் வேறு வார்த்தைகள் இருக்கின்றனவோ?
சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
கேட்கும் போதெல்லாம், நம்மையும் உணர்ச்சிவசப்படச்செய்து, கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள், தன் கண்பட்டு விட்டதாலேயே தன் காதலனுக்குக் காயம் ஏற்பட்டுவிட்டதோ என்றெண்ணி, காதலி படும் பாட்டை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் வரிகள். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்!
கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்
என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்.
புண்பட்ட சேதியைக் கேட்டவுடன்
இந்தப் பெண் பட்ட பாட்டை யாரறிவார்?
சிரிப்பு ! – இது மனித இனத்திற்கு இறைவன் அளித்த சிறப்பு. குழந்தைகளின் சிரிப்பைக் காணக் காண இன்பம் கரைபுரளும். அதே சிரிப்பைக் குழந்தை குமரியானதும் சிரித்தால் சொல்வார்கள் ” பொண்ணு சிரிச்சா போச்சு, புகையிலை விரிஞ்சாப் போச்சு “என்று. விதியையும் விரட்டி அடிக்கும் மதியும் சக்தியும் சிரிப்பிற்கு உண்டு என்று சிரிப்பைப் பற்றிக் கவிஞர் சொல்கிறார்.
குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு
அதைக் குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு
பொறந்ததுக்குப் பரிசு இந்த சிரிப்பு அல்லவா!
இது பொண்ணுக்காக இறைவன் தந்த பரிசு அல்லவா!
வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன்
அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன்
குடும்பம் என்ற அழகான கூட்டில் பறவைகளின் இனிமையான இசை வெள்ளம். கணவன், பிள்ளை இருவரையும் குழந்தைகளாகப் பாவித்து மனைவி பாடும் அழகானதோர் கீதம் கவிஞரின் கவிதை வெள்ளத்தில்.
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது – இதில்
யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது.
பள்ளி, கல்லூரிகளில் நிகழும் பிரிவு உபசார விழாக்களில் இந்தப் பாடல் ஒலிக்காமல் இருக்குமோ?
“பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே”
“எந்த ஊரில் எந்த நாட்டில்
என்று காண்போமோ?
எந்த அழகை எந்த விழியில்
கொண்டு செல்வோமோ?”
இன்னும் எத்தனை எத்தனையோ….சொல்லிக் கொண்டே போகலாம்.
நமது வாழ்வில் ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் கவிஞரது பாடல்கள் நிச்சயம் நம் நினைவுகளில் நிழலாடிச் சென்றிருக்கும். காதல், நட்பு, சகோதர பாசம், குடும்பம், குழந்தைகள், துயரம், சோகம் என்று ஏதேனும் ஓர் சூழலில் நம்மைக் காந்தமாய் கவர்ந்திழுக்கும்.
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”
என்று தீர்க்கதரிசியைப் போல் கவிஞர் அன்று சொன்னது எவ்வளவு உண்மை.காலத்தால், மக்களின் இரசனையில், கற்பனை, எண்ணங்கள், என்று அனைத்திலும் எத்துணை பெரிய மாற்றம் ஏற்பட்ட போதும், அவர் மறைந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றளவும் நம்மிடையே தன் பாடல்களினால் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இன்னும், காலம் பல கடந்தாலும், நிலையாக நம் மனங்களில், இனிய கவிதைகளாய் வாழப் போகிறவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.