நான் அறிந்த சிலம்பு – 123
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 11: காடுகாண் காதை
மூவரும் மேற்செல்லும்போது, வழி நடந்த வருத்தத்தால் கவுந்தி அடிகளும் கண்ணகியும் வழிமருங்கு இருப்ப, கோவலன் அண்மையிலுள்ள ஒரு பொய்கைக்கு நீர் அருந்தச் செல்லுதல்.
குறைந்திடாது உயர்ந்த கொள்கையுடைய
கோவலன் கண்ணகி தம்முடன்
அன்றைய பகல் பொழுதில்
ஓர் அரிய ஊரில் தங்கி,
அடுத்த நாளில் மூவரும்
அவ்விடம் விட்டுப் புறப்பட்டு
மதுரை செல்லும் வழியில் சென்றனர்.
வழி நெடுக நடந்ததால்,
துன்பத்தாலும், தாகத்தாலும் வருந்திய
கருந்தடங்கண்ணி கண்ணகியும், கவுந்தியடிகளும்
வழியின் ஓரம் ஓய்வுக்காய் அமர்ந்தனர்.
கோவலன், தாம் நடந்து வந்த வழியின்
பக்கத்திலிருந்த இன்னுமொரு வழியில் சென்று
அங்குள்ள பொய்கையில் தண்ணீர்ப் பருகி,
பின் கவுந்தியடிகளுக்கும் கண்ணகிக்கும்
நீர் கொண்டுவரும் விருப்பம் கொண்டவனாய்ப்
பெரிய துறையை அடைந்தான்.
வனதேவதை வசந்தமாலையின் உருவில் தோன்றி, கோவலனிடம் முறையிடுதல்.
அப்போது,
முன்னர் மறையோன் உரைத்த
கானகத்தில் உறையும் தெய்வம்
கோவலன் முன்னே தோன்றியது.
மாதவியிடம் கொண்ட காதலால்,
அவள் தோழியையும் விரும்புவான் என்று கருதி,
அவன் முன்னே அத்தெய்வம்
வசந்தமாலை வடிவில் தோன்றியது.
பூங்கொடி ஒன்று நடுநடுங்கிக்
கீழே விழுந்தது போல
அவன் காலடியில் விழுந்து
கண்ணீர் உகுத்தது.
“நறுமணம் கொண்ட தாழை மடலில்
கோவலனுக்குச் செய்தி அனுப்பியபோது
நான் தவறாக ஒன்றும் எழுதிடவில்லை.
நீ பிழையான மொழிகளைக்
கோவலனிடம் கூறியிருக்கிறாய்;
அதனால்தான் கோவலன்
என்னைப் பிரிந்துசெல்லும்
கொடுமையினைச் செய்தான்”
என்று தம்மிடம் கூறிய மாதவி
வானளவு துயருற்று வருந்தியதாக
அத்தெய்வம் கூறியது.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 150 – 162
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html
படத்துக்கு நன்றி:
http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l21.htm