நான் அறிந்த சிலம்பு – 124
-மலர் சபா
மதுரைக்காண்டம் – 11: காடுகாண்காதை
தொடர்ந்து பேசலாயிற்று
அந்தக் கானகத் தெய்வம்.
“இங்ஙனம் சொன்னபின் மாதவி
மயங்கி விழுந்தாள்.
துறவோர், கற்றறிந்தோர்,
நன்மை தீமை பலவும் தெரிந்தோர்
அனைவரும் கணிகையர் என்றாலே
உள்ளத்தை வருத்திடும் நோய் என்று கருதி,
முகத்தைக் கூட நோக்காது விலகி விடுகின்றனர்.
இக்கணிகையர் வாழ்வு மிக இழிந்ததுதான்!
இவ்வாறெல்லாம் கூறிய மாதவி
தன் செவ்வரி படர்ந்த செழுமையான கண்களில்
வெண்முத்துக்களைப் போலக் கண்ணீர் சிந்தினாள்.
வெள்ளிய நிலாப்போலத் திகழும் முத்து வடத்தையும்
தன் கைகளாலேயே அறுத்து எறிந்தாள்.
ஒரு போதும் அவளைப் பிரிந்திடாத என் மீதும் சினமுற்று
என்னை விலகியிருக்கும்படிக் கூறினாள்.
வெயிலின் வெம்மை மிகுதலால் கானத்தில் செல்லுதல் அரிது என்று அண்மையிலுள்ள ஐயை கோட்டத்தை மூவரும் அடைதல்
வழிப்பட்டோர் மூலமாய்
நீங்கள் மதுரை மூதூர் நோக்கிச் சென்றிட்டதாக அறிந்து,
வணிகச் சாத்தோடு நான் இங்கே வந்தேன்.
தனிமையில் துயருற்றேன்.
இப்போது உம்மைக் கண்டேன்.
நன்மை தீமை பகுத்து அறிபவரே,
நீவிர் எமக்கு இடும் கட்டளை யாது?”
என்று வினவியது
வசந்தமாலை வடிவில் வந்த கானுறைத் தெய்வம்.
கோவலன் மந்திரத்தால் உண்மையை அறிய முயலுதல்
‘அறிவை மயக்கும் தெய்வம்
இக்கானகத்தில் உள்ளது’ என்று முன்பு
மறையோன் உரைத்த மொழி
நினைவுகூர்ந்த கோவலன்,
மாயம் நீக்கும் மந்திரத்தின் மூலம்,
கூந்தலை ஐந்தாகப் பிரித்துப் பின்னலிட்ட
இப்பெண்ணின் தன்மையை நான் அறிவேன் என்று எண்ணினான்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 180 – 194
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html