நான் அறிந்த சிலம்பு – 127
–மலர் சபா
மதுரைக் காண்டம் – 02: வேட்டுவ வரி
மறக்குடி மக்கள் குமரி ஒருத்திக்குக் கொற்றவையின் கோலம் புனைவித்து, வழிபடு பொருள்களுடன் ஐயையின் கோட்டம் செல்லுதல்
தம் பகைவர் தலையைத்
தாமே அறுத்தெறிய வேண்டும் என்று
எப்போதும் எண்ணுபவர்கள் மறவர் குடியினர்.
அப்பகைவர் எவரும் தம்மை வென்றிடாதபடி
மிக்க வீரம் கொண்ட அவர்
தொல்குடி மக்களாவர்.
அவர்கள் தம் குடியில் பிறந்த
சாலினியைக் கொற்றவையைப் போல் அலங்கரித்தனர்.
சிறிய வெள்ளிய பாம்பின் குட்டிபோல் இருந்த
பொன் கயிற்றால் அவள் குறுகிய கூந்தலைக் கட்டினர்.
முள்வேலியால் சூழப்பட்ட
அவர்கள் தோட்டத்தில் புகுந்து,
பயிர்களை அழித்த காட்டுப் பன்றியின்
வளைந்திருந்த கொம்பைப் பிடுங்கி
அவள் சடையில் இளம்பிறையாகச் சூடினர்.
அஞ்சுவது என்பதை அறியாத வலிமைமிக்க
புலியின் வாயைப் பிளந்து
அதன் வெண்பற்களை எடுத்து
வரிசையாகக் கோர்த்துத் தாலியாகக் கட்டினர்.
வரிகளும் புள்ளிகளும் நிறைந்து காணப்படும்
அதன் தோலை மேகலையாக அணிவித்தனர்.
வயிரம் பாய்ந்த மூங்கில் வில்லை
மிகவும் சிரமப்பட்டு வளைத்து நாண் ஏற்றி
அவள் கையில் கொடுத்தனர்.
முறுக்குடன் அமைந்த கொம்புகளையுடைய
கலைமான் ஊர்தியில் அவளை அமர்த்தினர்.
மதனப்பாவை, கிளி,
சிறு முடிகளையும் அழகிய சிறகையும்
உடைய காட்டுக்கோழி,
நீலநிறம் பொருந்திய மயில்,
பந்து, கழங்கு ஆகியவற்றை அவளுக்குத் தந்து
அவளைக் கொற்றவையாக வழிபட்டனர்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 20 – 35
http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html
படத்துக்கு நன்றி:
http://www.santabanta.com/photos/goddess-durga/9103043.htm