நான் அறிந்த சிலம்பு – 128
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 02: வேட்டுவ வரி
வண்ணக் குழம்பும் சுண்ணப் பொடியும்
மணம்வீசும் குளிர்ந்த சந்தனமும்
புழுக்கப்பட்ட தானியங்களுடன் சோறும்
பூக்களும் புகையும் மனம் கவரும் மணப்பொருட்களும்
தாங்கியே மறப் பணிப்பெண்கள் பின் தொடர்ந்து வர…
கால்கொட்டும் பறையும்
சூறை கொள்ளும்போது ஊதும் சின்னமும்
கொம்பும் புல்லாங்குழலும்
பெருமை வாய்ந்த மணியும் கூடியே ஒலித்திட...
இவற்றை அந்த அணங்கின் முன்னே நிறுத்த…
தான் அளித்த வெற்றிக்கு விலையாகிய
பலியை உண்ணும் பலிபீடத்தை முதலில் வணங்கி
விரைந்து செல்லும் கலைமானை ஊர்தியாக உடைய
கொற்றவையைக் கையால் தொழுது
வணங்கிப் போற்றினாள் சாலினி.
ஆவேசமுற்ற சாலினி கண்ணகியைப் புகழ்தல்
இணைந்து பொருந்திய மலர்போன்ற சிற்றடிகள் வருந்தித்
துன்பங்கள் பல அனுபவித்துத் தன் கணவனோடு தங்கியிருந்த
மணம் வீசும் கூந்தலையுடைய கண்ணகியைச் சுட்டிக் காட்டி,
“இப்பெண் கொங்கு நாட்டின் செல்வி;
குடமலை நாட்டினையாளும் செல்வி;
தென் தமிழ்நாட்டின் பாவை;
உலகத்தோர் செய்த தவத்தின் பயன்;
ஒப்பற்ற உயர்ந்த மாணிக்கம் போன்றவள்…”
தெய்வத்தன்மை அடைந்த சாலினி
கண்ணகியைப் பற்றி இங்ஙனம் கூறினாள்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 36 – 50
*http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html*
படத்துக்கு நன்றி:
http://tamilvamban.blogspot.in/2014/03/03.html