-மாதவ. பூவராக மூர்த்தி

இன்று ஆடிப்பெருக்கு. ஆடி மாதம் பதினெட்டாம்நாள். சென்னையில் இருக்கும் நான் மயிலாடுதுறையில் இருந்தேன். வாழ்வில் பின்னோக்கிச் சென்று பிள்ளைப் பருவத்தில் இருக்கும் காலப்பயணத்தைச் சாத்தியமாக்கிய என்மனதிற்கும் நினைவுகளுக்கும் நன்றி சொல்லத்தான் வேண்டும்.

aadiperukku1என் நினைவுகளைத் தூண்டிய சாதனம் என்வீட்டு வாசலில் வந்துவீழ்ந்த இந்து நாளிதழின் தமிழ் இணைப்பு ஆடிப்பெருக்குஸ்பெஷல். என்கைகளில் பிரித்து ஆடிப்பெருக்கு கட்டுரையைக் கண்கள் காணும்போது மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் கரைபுரண்டு ஆர்ப்பாட்டங்களுடன் பின்னோக்கிப் பறந்து மாயவரத்திற்குப் போய் என்னை இறக்கிவிட்டது.

என் சொந்தஊரான சீர்காழிக்கு அருகில் உள்ள மாதானம் முத்துமாரியம்மன் தீமிதித் திருவிழா (ஆடி கடைவெள்ளி அன்றுநடைபெறும்) பற்றிய குறிப்பு என் சிறுவயது நினைவுகளைத் தூண்டும் மற்றொரு சாதனமானது.

மேட்டூர் திறந்துவிட்டு இரண்டு மூன்று முறை புதுவெள்ளம் வந்தாலும் ஆடியில் பதினெட்டாம் பெருக்கிற்காகத் திறந்த நீர் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னாலே வந்து கரைததும்பி ஓடிக்கொண்டிருக்கும்; பள்ளிகளுக்குவிடுமுறை. அதற்கு முன்வரும் சனி,ஞாயிறு நாங்கள் எங்கள் சப்பரங்களைப் பரணிலிருந்து எடுத்துப்போனது வந்தது பார்த்துத் தயார்பண்ண ஆரம்பித்து விடுவோம்.

ரவி பேப்பர் மார்ட்டிலிருந்து கலர்தாள்வாங்கி,வீட்டில் வரும் ஹிண்டு அல்லது தினமணி பேப்பரைப் பக்கங்களில் ஒட்டி முன்கோபுரத்திலும் அதைஒட்டி அதன்மேல் பச்சை,மஞ்சள், நீலம்,சிவப்புத் தாள்களை வெட்டிப் பூக்களின் வடிவம், கோபுரவளைவுகள், தூண்கள் என எங்கள் கற்பனைச் சிறகுகளை விரித்து ஆர்வத்தோடு செய்த கலைப்படைப்புகளை ஒட்டித் தூரப்போய் நின்று அதன் அழகுபார்த்து வியந்துபோவோம்.

சின்னவயதில் நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நம்அளவில் நம் அன்றாட விளையாட்டுகளில் கலந்துபோகும் மாயம்தான் இந்தச் சப்பரம். நம் ஊரில் நமக்கு அருகில் இருக்கும் கோவில்களில் நடக்கும் விழாக்கள் நம்மனதில் பதிந்து நம்மையும் அதுபோலச் செய்யத் தூண்டும். கோவில் திருவிழாவில் தேர் ஒருநாள் காலை வலம்வரும். வடம் பிடித்து நிலையிலிருந்து புறப்பட்டு வீதிவலம் வரும்போதும் பார்த்தும் இழுத்தும் உடன்சென்றும் உள்ளிருக்கும் இறைஉருவை வணங்கியும் கழித்தநாட்கள். சப்பரம் என்பது தேரைப்போல மரத்தால் செய்யாமல் கம்பினால் வடிவமைத்துக் கோவில்கோபுரம் போல் தென்னங்கீற்றினால் அலங்கரித்து இரவுநேரம் வீதியுலாவரும். எங்கள் சப்பரம் அந்த வடிவத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

ஆடிப்பெருக்கு காலை காவிரியில் புனிதநீராடல் ஒரு பெரிய திருவிழா. அம்மாவும் பக்கத்துவீட்டு மாமி மகளும், ஆச்சியும் குளித்துவிட்டுக் காவிரி அம்மனுக்குப் பூஜை செய்துவிட்டு வருவார்கள்.

மனதை மயக்கும் அந்த மாலைநேரம்தான் நான் உங்களுடன் பதிவு செய்யவிரும்புவது. ஃபேர்அன்லவ்லி, டவ் போன்ற அழகு சாதனங்களில் தங்கள் முகத்தைக் கெடுத்துக்கொள்ளாத பெண்கள். கஸ்தூரி மஞ்சளும் கடலைமாவும் அவர்களின் முகத்தை மலரச்செய்யப் போதுமானவையாக இருந்தகாலம். முத்துப் பல்வரிசை முகிழ்க்கும் சிரிப்பும், கள்ளம் கபடமில்லாத மனமும் பருவத்துக்கனவுகள் நிறைந்திருக்கும் கண்களும், அவர்களுக்குக் கொடுக்கும் வனப்பை அதன் நிரந்தரத்தை இந்த முப்பது ரூபாய் கிரீம்களும், முன்னூறு ரூபாய் பேஸ்டுகளும் கொடுத்துவிடுமா என்ன?

மாலை நேரத்தில் காவேரிக்குப்போகும் ஏற்பாடுகளில் அவரவர்கள் மும்முரமாக இருக்கும் மதியம் ரொம்ப எனக்குப் பிடித்தது. நாங்கள் எங்கள் சப்பரத்துக்கு ஃபைனல் டச் கொடுத்துவிடுவோம். ஒருமுறை வாசலில் இறக்கி இழுத்துப் பார்ப்போம்.

முதல்நாள் இரவே பெண்கள் அரைத்த மருதாணி இட்டுக் கொள்வார்கள். எங்களுக்கும் அம்மா இட்டுவிடுவாள். விரல்களில் கொப்பிமாட்டி, உள்ளங்கையில் வட்டம் இட்டு எங்கள்கைகள் கட்டிப் போடப்படும். அக்காவுக்கும், தங்கைக்கும், சின்னஅத்தைக்கும், சித்திக்கும், பக்கத்துவீட்டு மாலாவுக்கும் கால்களில் பட்டைபோட்டுக் கால்விரல்களும் மருதாணிப் பச்சையால் மெருகேறும். காலைக் கண்விழித்தஉடன் காய்ந்துபோன மருதாணி பிய்த்து எடுத்துக் கிணற்றுநீரில் கழுவியவுடன் பச்சை சிவப்பாகும். தோலின் நிறத்தில் இந்தச்சிவப்பு ஒரு அழகை உண்டாக்கும்.

அம்மா காலைச்சாப்பாடு முடிந்தகையோடு காவேரிக்கு எடுத்துச்செல்லும் சித்ரான்னங்களைத் தயார்செய்யத் துவங்கிவிடுவாள். மற்றவர்கள் அதற்கு உதவிசெய்வார்கள். தெருவே பரபரப்பாகும். பாவாடைத் தாவணிகள் சரசரக்கக் கொலுசின் சிலுங்களுடன் எலுமிச்சம்பழமோ,தேங்காயோ கறிவேப்பிலையோ கேட்கவரும் பெண்களின்குரலில் ஒருஆர்வம் வெளிப்படும்.

மூன்று மணிக்குப் பின்னல்போடும் வேளைகளில் பாட்டியும் அத்தையும் மும்முரமாகி விடுவார்கள். பட்டுக்குஞ்சலம், ராக்கோடி, நெத்திச்சுட்டி எனத் தங்களை இன்னும் அழகாக்கிக் கொள்ளும் அவர்கள் மாயவித்தைக்கு எல்லையுண்டா?

தோடும் ஜிமிக்கியும், கைவளையல்குலுங்கும்ஓசை. பாவாடைத் தாவணியில்முந்தானையை ஒருமுறை வலதுகையால்இழுத்துப் பிடித்துகூடத்துக் கண்ணாடியில் கே.ஆர்விஜயாவும், பத்மினியும், தேவிகாவும் வந்துபோவார்கள்.

டிபன்கேரியரிலும் எவர்சில்வர் தூக்கிலும் பார்சல் செய்துவிட்டு அம்மா முகம் கழுவப்போவாள். வாழை இலையைக் கொல்லையிலிருந்து பறித்து அப்பா சின்னஏடுகளாக வெட்டி அதை அழகாகச் சுருட்டி வாழைநாரால் கட்டிவைப்பார்.

ஒரு நாலரைமணிக்குக் கொஞ்சம் வெயில் தாழ்ந்தவுடன் காவிரிநோக்கி எங்கள்பயணம் தொடங்கும். தெருவும் ஊரும் காவிரியில் பலதுறைகளில் வந்துபடரும். வாழைப் பட்டையில் விளக்கேற்றிக் காவிரியின் போக்கில் விடும்போது அவை மிதந்துபோகும் அழகும், சின்னச் சுழலில் சுற்றும் வசீகரமும் இன்னும் என்மனதில்!

படித்துறையில் காலை நனைக்கும் பெண்களின் அழகு அந்தப் பொன்னந்தி மாலையில் மனதிற்குகந்த காட்சி. மருதாணி அலங்கரிக்கும் அந்தச் சிவப்பு, கொலுசின்வெள்ளை, பாவாடையின் நனைந்த பட்டுச்சரிகை மஞ்சள்,சிவப்பு, பச்சைஎனக் கண்ணைப்பறிக்கும் பாவாடை, பஃப் வைத்தரவிக்கை, உச்சி வகிடெடுத்துக் குனியும் தலையில் சரியும் நெத்திச்சூடி, நீரில் நனைத்த கையில் இன்னும் சிவக்கும் மருதாணிக் கோலம் . அழகேஅழகுதேவதை!

தேவதையின் அழகை எப்படிவர்ணிப்பேன்..? அரைத்த மஞ்சள் மிளிரும் முகம், பிடித்த மை அப்பிய கண்கள்; அது இமை தாண்டி ஈசிய அழகு. அம்மாவின் தலைமயிரைப் பற்றியும், டீச்சரின் தலைமுடியைப் பற்றியும் கவலைப்படாத பையன்கள் நாங்கள். இந்து லேகா ப்ருங்கா இல்லாமல் செம்பருத்தி, சீகைக்காய் போட்டு வளர்ந்த கூந்தல். வீட்டில் பறித்து அரைத்த மருதாணி, பனகல் பார்க்கில் ஸ்டூலில் உட்கார்ந்துபோடும் கோன் அல்ல. பருவத்துக்குக்கேற்பப் பூக்கும் தோட்டத்துப் பூக்களில் தொடுத்தசரம் தலையில். பார்த்தால் பளிச்சிடும் குங்குமம் நெற்றியில். கடைவாயில் புன்சிரிப்பு, கருவிழியில் ஒரு நெருக்கம் உணர்த்தும் “ஏதிலார் போலப் பொதுநோக்கு”ப் பார்வை!

எங்கள் சப்பரம் இழுக்கப்பட்டுக் கூட்டம் குரலெழுப்பிக் காவிரிக்கரை kalantha sadamவந்தவுடன் அம்மா எல்லாரையும் அழைத்துக் கையில் வாழை இலை தருவாள். பச்சை இலையில் மஞ்சள் நிறத்தில் எலுமிச்சைசாதம், வெள்ளை நிறத்தில் கறிவேப்பிலையும் சிவப்பு மிளகாயும் முந்திரியும் கடலையும் விரவிக் கிடக்கும் தேங்காய்ச்சாதம், பொன்னிறத்தில் புளிசாதம், சிவப்பு வட்டமாய் வாழைக்காய் வறுவல்,வெள்ளை நிறத்தில் புள்ளிகள் இல்லாமல் போட்ட நெளிக்கோலமாய்க் காட்சியளிக்கும் கருவடாம். கல்கண்டுசாதம், வெண்ணை உருண்டையாய்க் கடைசியில் இலையில் விழும் தயிர்சாதம். அதற்கு உறுதுணையாய் மோர்மிளகாய், மாங்காய் ஊறுகாய் எனச் சத்தமும் சந்தோஷமுமாய் தரையெல்லாம், படியெல்லாம் இறைத்த பருக்கைகள். தரையில் காக்கைகளும் மணலில் எறும்பும் கொத்தியும் பற்றியும் இருக்கும் நேர்த்தி! நீரில் மீன்கள் துள்ளித் திரிந்து கொத்திச்செல்லும் அழகும், அவைகளின் மினுமினுப்பும் இன்னும் என்மனதில் மின்னலடிக்கிறது!

எல்லோரும் சின்னப்பெண்களும் உண்டவாய்க்கு வெற்றிலை தரிப்பார்கள். இதழ்சிவக்கும் சிரிப்பழகு எங்கும் நிறைந்திருக்கும். ஆடிப்பெருக்கெடுத்து எங்களை வாழவைக்கும் எங்கள் பொன்னிக்கு நாங்கள் செய்யும் நன்றி, தொழுதல்தான் இந்தப் பதினெட்டாம் பெருக்கு. கல்கி பதினெட்டாம் பெருக்கைப் பொன்னியின் செல்வனில் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவார். நான் என் கண்முன் ஹிண்டு பேப்பர் கொண்டுவந்த கட்டுரைக் காட்சிகள் மனதில் விரிந்த காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்; இல்லை நானும் ஒருமுறை அங்கேவாழ்கிறேன். கையலம்பியபின் காவிரி நீரின் குளிர்ச்சியும், எண்ணெய்ப் பிசுக்கும் இன்னும் என் உள்ளங்கையில். நடந்தாய் வாழி காவேரி!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *