— மாதவ. பூவராக மூர்த்தி.

ரொம்ப நாளாக எனக்கு சைக்கிள் பற்றி எழுதவேண்டும் என்று ஆசை. சைக்கிள் ஒரு உன்னதமான வாகனம். லைஃப் சைக்கிளில் சைக்கிள் பயணம் ஏதேனும் ஒரு முறையாவது நம் எல்லோருக்கும் வாய்த்திருக்கும்.   நீங்கள் முதலில் சைக்கிளில் சென்றது நினைவிருக்கிறதா?

எனக்கு இருக்கிறது. அப்பா ஒரு சைக்கிள் வைத்திருந்தார். மூன்று அல்லது நான்கு வயதிருக்கும். என்னை முன்பகுதியில் பார் மீது உட்காரவைத்து கால்களை எடுத்து முன் பக்கம் மட்கார்ட் மீது வைத்துக்கொள்ளச் செய்து கையை ஹேண்டில் பார்மீது வைத்து விட்டார். நான் கெட்டியாகப் பிடித்து கொண்டேன். அப்பா ஸ்டாண்டு எடுக்க சைக்கிள் குலுங்கி நின்றது. பெடல் மீது அப்பா கால் வைத்து அழுத்த வேகம் பிடித்தது. என் முகத்தில் காற்று படர்ந்தது. வேகம் எனக்குப் பிடித்தது.

எதிரிலும் பக்கத்திலும் நிறைய சைக்கிள்களும் வண்டிகளும் பறந்தன. காவிரிக்கரையில் சின்ன மார்க்கெட்டில் வண்டி நின்றது. என்னை இறக்கி விட்டார். காய்கறி வாங்கினோம். தள்ளிக்கொண்டு போனார். நானும் கூடவே நடந்து போனேன். ஹோட்டலில் போய் இட்லி சாப்பிட்டு ஒரு கடையில் சைக்கிளை நிறுத்தினார். வாடகை சைக்கிள் நிலையம் என்று போர்டு போட்டிருந்தது. ஒரு பையன் வந்து ஒரு பம்பு கொண்டு வந்து முன் பின் சக்கரங்களில் காற்று அடித்தான். மறுபடியும் வீடு வரை ஒரு ஜாலியான பயணம். உட்காரும் இடம்தான் வசதி யாக இல்லை. அதன் பிறகு பலமுறை எனக்கு இது கிடைத்தது. ஒரு சில முறை மறதியாக காலை நீட்டி சக்கரத்தில் மாட்டியதும் உண்டு.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பின்னால் ஸ்டாண்டில் உட்கார ஆரம்பித்தேன். இது வசதியாக இருந்தது. இப்போது என் தங்கை சந்திரா பாரில் உட்கார்ந்திருந்தாள். ஆனால் பள்ளிக் கூடத்திற்கு நடந்து தான் போக வேண்டும். எப்போதாவது திரும்பும்போது மாமாவோ அப்பாவோ வழியில் வந்தால் ஏற்றிக் கொண்டு வருவார்கள்.

ஹைஸ்கூல் படிக்க ஆரம்பித்தபோது வகுப்பு நண்பர்கள் சைக்கிள் விட கற்றுக் கொண்டுவிட்டார்கள். வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும்  தெருக்களில் மிக வேகமாக சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்வார்கள். எனக்கும் சைக்கிள் விட ஆசை. அப்பாவிடம் கேட்க பயம். அம்மாவிடம் காசு கேட்டு நண்பன் சேகருடன் வாடகை சைக்கிள் தரும் ராமன் கடைக்குப் போனோம். அவன் எங்களை நம்பித்தரத தயாராயில்லை. சின்னப் பாட்டியை சிபாரிசுக்கு அழைத்துப் போனேன். அவர் வார்த்தைக்கு நல்ல மதிப்பு. சின்ன சைக்கிள் கைக்கு வந்தது.

சேகர் ராஜாந்தோட்டத்துக்கு போகலாம் என்று சைக்கிளில் ஏறி மிதித்தான். நான் அவன் பின்னால் ஒடினேன். அதில் ஒரு பத்து நிமிடம் போய்விட்டது. அங்கு போனபின் எப்படி ஓட்ட வேண்டும் தெரியுமா என்று எனக்குக் காட்டுவதற்காக ஓர் ஐந்து நிமிடம் அவன் ஓட்டினான். அப்பறம் என்னை சீட்டில் உட்கார வைத்து ஹேண்டில் பாரை கெட்டியாகப் பிடித்துக் கொள் என்றான். காலால் பெடலை அழுத்து என்றான். ஒரு காலால் அதை வேகமாக மிதித்தேன். அது கீழே போய்விட்டது. காலுக்கு எதுவும் தட்டுப் படவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. அவன் இப்ப இந்தக் காலால் மிதி என்றான். மிதித்தேன். அதுவும் கீழே போனது. நல்ல வேளை இந்த பக்கம் பெடல் காலுக்குச் சிக்கியது. மிதித்தேன். இந்த மிதிகளுக்குகாக என் முதுகு ஏகத்துக்கு வளைந்தது. சேகர் நடுமுதுகில் ஒரு குத்து விட்டான். நேரா உட்கார்ந்து வளைக்காம நேர பாத்திண்டு மிதி என்றான். வளைந்து வளைந்து சைக்கிள் நகர்ந்தது. அவனும் கூட ஓடி வந்தான். “இந்த கால்”, “அந்த கால்” , “ஹாண்டில் பாரை வளைக்காதே” என்று சொல்லிக்கொண்டே வந்தவன் பேச்சு நின்றுவிட்டது. சைக்கிள் கட்டுப்பாடில்லாமல் மிக வேகமாகப் போய்க்கொண்டிருந்தது.

“அப்படியே திருப்பு”, என்று அவன் குரல் தொலைவில் கேட்டது. அப்போதுதான் நான் தனித்து விடப்பட்டது அறிந்தேன். சந்தோஷமும் பயமும் என்னை ஆட்கொண்டது. நான் சைக்கிள் விட கற்றுக் கொண்டுவிட்டேன் என்று மனம் மகிழ்ந்தது. எல்லாம் ஒரு கணம்தான் அவனைத்திரும்பிப் பார்த்தேன். அடுத்த நொடி நான் தரையைத்தொட்டேன். சைக்கிள் என் மேல் விழுந்தது. பயம் சூழ்ந்து கொண்டது அம்மா என்று அலறினேன். சேகர் சிரித்து கொண்டே ஓடி வந்து என்னை தூக்கி நிறுத்தினான். விழுந்து எழுந்து நான்கு ஞாயிற்றுக் கிழமைக்குள் நன்றாக சைக்கிள் விடக் கற்றுக் கொண்டு விட்டேன்.

என் உயரம் எனக்கு ஒரு சவால் விட்டது. 22 இன்ச் சைக்கிள்கள் தான் பெரும்பாலும் எல்லோரும் வைத்திருப்பார்கள். அதில் என்னால் ஏற முடியாது. குரங்கு பெடல் போட்டுக் கொண்டுதான் போகவேண்டும். சைக்கிள் நன்றாக விட வந்த போதும் ஏறுவதும் இறங்குவதும் சீராக வரவில்லை. ஒரு கல் அல்லது மேடையின் அருகில் சைக்கிளை வைத்து சைக்கிளில் ஏறி  ஒரு உதை விட்டு புறப்படுவேன். அதே போல இறங்குவதும் மேடைக்கருகில் அல்லது மின்சார அல்லது தந்திக்கம்பங்களைக் கட்டிக்கொண்டுதான்.

வீட்டுக்கு யாரவது சைக்கிளில் வந்தால் அவர் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் மாமா கொஞ்சம் சாவி கொடுங்களேன் என்று வாங்கி ஒரு ரவுண்டு சைக்கிள் விடுவதில் ஒரு தனி சுகம் உண்டு.

எஸ்.எஸ்.எல்.சி படிக்கும் போது கீழையூர் தியாகராஜனுக்கு அவன் அப்பா ஒரு குட்டி சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தார். அவனை நண்பனாக்கிக் கொண்டு அவனிடம் தினமும் ஒரு ரவுண்டு சைக்கிள் விடுவேன். எனக்கென்று ஒரு சைக்கிள் வாங்கவேண்டும் என்று ஒரு கனவு உண்டு.

என் சித்தப்பா கிராமத்தில் ஒரு சைக்கிள் வைத்திருப்பார். அதை தினமும் துடைத்து வைப்பார். ஆயில் கேனில் தேங்காய் எண்ணையும் மண்ணெண்யும் கலந்து போட்டு பெடல் மற்றும் சக்கரங்களில் எண்ணெய் விடுவார். ஸ்டாண்டு போட்டு கையால் வேகமாக பெடலைச் சுற்றுவார் டைனமோ ‘விர்’ என்று சத்தம் போட்டபடி சுழலும். முன் பக்கம் லைட்டின் முன் கை வைத்துப் பார்ப்பார். வீல் நடுவில் குஞ்சலம் கட்டிவைப்பார். மட்கார்டின் அடியில் சைக்கிள் கம்பெனியின் பெயர்போட்ட ரப்பர் ஷீட்டை அடிக்கடி மாற்றுவார். ஹேண்டில் பாருக்கு உறை போட்டி வைப்பார். டைனமோ விளக்கின் மேல் மஞ்சள் துணி கட்டி வைப்பார். கேரியரில் இடது புறம் ஒரு பெட்டியை இணைத்திருப்பார். அவர் சைக்கிள் ஓட்டி வருவதே அழகுதான்.
IMG_0650
பி.யூ.சி சேர்ந்தவுடன் கொஞ்ச நாளைக்கு காலேஜூக்குப் பஸ்ஸில் போய்வந்தேன். ஒவ்வொருவராக சைக்கிள் வாங்கி அதில் போக ஆரம்ப்பித்தார்கள். சேகர், ரமேஷ், ஹரி, எல்லாரும் வாங்கி விட்டார்கள். ஹெர்குலஸ், அட்லஸ், எல்லாம் இருக்கும். எனக்கு ராலே சைக்கிள் மீது ஒரு காதல். அதிலும் பச்சை ராலே. அப்பாவிடம் அடி போட்டேன். பாவம் அவர் நிலைமை எனக்கும் தெரிந்ததே. சாதாரண சைக்கிள் வாங்கவே அவர் முக்க வேண்டும். அதுவும் பச்சை ராலே. என் அதிருஷ்டம் அப்பாவுக்கு ஏதோ போனஸ் வந்தது போல. கொடுக்க வேண்டிய கடனை அப்பறம் கொடுக்கலாம் என தீர்மானித்து ஜெகந்நாதன் கடையில் நின்றோம். என்னோடு ரகோத்தமன், ஸ்வாமி.  ரகோத்தமன் கருப்பு ராலே, ஸ்வாமி ஹெர்குலஸ் நான் எனக்குப் பிடித்த பச்சை ராலே. வாங்கி வந்து அனுமார் கோவிலில் பூஜை போட்டோம். கடைக்காரர் “ஒரு மாசம் ரொம்ப ஸ்பீடு வேண்டாம், ரீ பிட்டிங் பண்ணிண பிறகு வேகமாக போகலாம்” என்றார். சரி சரி என்று தலையாட்டினோம்.

முதல் நாள் காலேஜிக்கு சைக்கிளில் ஒவ்வொருவராக மார்கழி நோண்புக்கு ஆண்டாள் கூப்பிடுகிறமாதிரி வீட்டின் வாசலில் முன் நின்று பெல் அடித்த போது எங்கள் முகத்தில் பெருமிதம் சொல்லி முடியாது. பஸ்ஸில் போன தூரம் சைக்கிளில் போனபோது அதிகமாக உணர்ந்தோம்.

IMG_0651ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு நாள் வீடு திரும்பும் போது யார் சைக்கிள் வேகமாகப் போகும் என்று போட்டி. போட்டியின் முடிவு என் சைக்கிளில் பெடல் மட்டும் சுற்றுகிறது. சக்கரம் சுற்றவில்லை. மெதுவாக தள்ளிக் கொண்டு அப்பா ஆபீஸில் நிறுத்தி மெதுவாக விபரம் சொன்னேன்.

திட்டிவிட்டு ஜெகந்நாதன் கடைக்கு அழைத்து வந்தார். அவர் ஒரு மிதி மிதித்து விட்டு ரேஸ் விட்டிருக்கு என்றார். அப்பா என்னைப் பார்த்தார். நான் வெளியே பார்த்தேன். அவர் எதையோ பிரித்து மாட்டி சரி பண்ணிக் கொடுத்தார். சைக்கிள் ஒரு அங்கமாகிவிட்டது.  காலேஜ் போக, கடைத்தெருவுக்கு சாமான் வாங்க, குளிக்க காவேரிக்குப் போக. கடைகுட்டித் தங்கை ஹேமலதாவை சைக்கிளில் உட்காரவைத்து காவிரிக்கு அழைத்துப் போவதில் அவளுக்குத் தனி மகிழ்ச்சி.

சைக்கிளின் பயனை நாம் முற்றிலுமாக மறந்து விட்டோம். அது தூரத்தைக் கடக்கும் ஒரு வாகனமாக மட்டும் இல்லாமல் ஒரு  உடற்பயிற்சியாகவும் இருந்து வந்தது. பராமரிப்பு செலவும் குறைவு. சுற்றுப் புறச் சூழலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும். இன்று அவ்வளவாக சாலையில் சைக்கிள்கள் உருளுவதில்லை. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் வாகனமாக அது நம்மிடையே ஒரு அடையாளத்தைப் பெற்றுள்ளது.

cycleரொம்ப வருஷம் என்னோடு இருந்த அந்த  பச்சை ராலே சைக்கிளை ஒரு நாள் அப்பா அரிசி வாங்கி வர ஒரு வீட்டின் வாசலில் நிறுத்தி விட்டு உள்ளே போய் வர யாரோ திருடிவிட்டார்கள். அப்பா ரொம்ப வருத்தப் பட்டார். நான் சமாதானம் சொன்னேன். எனக்கு சைக்கிள் தொலைந்த போன வருத்தத்தைவிட அதை நான் தொலைக்க வில்லை என்ற சந்தோஷம்தான் அந்த நாட்களில் மிகுந்திருந்தது.

எனக்கு என் சைக்கிள் கொடுத்த சந்தோஷம் என் மகனுக்கு நான் வாங்கிக் கொடுத்த ஹோண்டா ஷைன் கொடுத்ததாக அவன் சொல்ல வில்லை. ஒரு வேளை அவன் மகனுக்கு அதைவிட உயர்ந்த வாகனம் வாங்கி கொடுக்கும் போது நினைத்துக் கொள்வானோ என்னவோ.

வாரத்துக்கு ஒரு முறையாவது சைக்கிள் ஓட்டுங்கள்.  நல்ல சாலைகளும் சைக்கிளும் மகிழ்வடையும்.

Raleigh, with drum brakes, hub dynamo and 3 speed gear
படம் உதவிக்கு நன்றி: http://www.team-bhp.com/forum/pre-war/75559-vintage-classic-bicycles-india.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *