நான் அறிந்த சிலம்பு – 132
மலர் சபா
மதுரைக் காண்டம் – 02. வேட்டுவ வரி
கூத்து உள்படுதல்
அழகிய பொன்னால் செய்த பரல்களையுடைய
சிலம்பும் வளையும் மேகலையும் ஒலித்து நிற்க
வஞ்சம் புரிகின்ற வாள்தொழில் செய்யும்
அசுரர்கள் அழியும் வண்ணம்
கொற்றவையாகிய நீ
மரக்கால் மீது நின்று
கூத்தாடினாய் போலும்!
அவ்வாறு அசுரர்களை அழிக்க
மரக்கால் மீது நின்று
நீ வாள் கொண்டு ஆடும் வேளையில்
உன்னுடைய காயாம்பூ மேனியைப் போற்றித்
தேவர்கள் தம் கைகளால் சொரியும் மலர்கள்
மழை போல் காணப்படும் போலும்!
வெட்சி
பகைவரும் அச்சப்படும் சிற்றூர் ஒன்றிலுள்ள
ஒப்பற்ற வீரன் ஒருவன்
ஆநிரை கவரச் செல்லும் உரிய காலைப் பொழுதில்
அப்போர்க்கு வெட்சி மாலை சூடுவதற்கு
வெள்ளிய வாள் ஏந்திய
கொற்றவையாகிய உழத்தியின் துணை
வேண்டும் போலும்!
அவ்வாறு வெள்ளிய வாள் ஏந்தி
கொற்றவையாகிய உழத்தி வரும் போது,
பகைவர் ஊரைச் சேர்ந்த காட்டில் உள்ள
கருங்குருவி ஒன்று
அவர்கள் பின்னால் வந்து
பின்னர் வரக்கூடிய கேட்டினை
முன்னரே அறிவிக்கும் போலும்!
வெட்சிப் புறநடை
கள் விற்பவள் பழங்கடன் கொடுக்காதவனுக்குக்
கள் கொடுக்க மறுக்க
அதனைப் பொறுக்காத வீரன்
வில்லினை ஏந்தி,
பறவை பின்னால் வர
ஆநிரை கவர எண்ணிச் செல்வான்.
அங்ஙனம் பறவை பின் தொடரச்
செல்லும் வேளையில்,
சிங்கக் கொடியைக் கையில் கொண்டு
கொற்றவையும் முன் செல்வாள் போலும்!