நான் அறிந்த சிலம்பு – 134
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 02. வேட்டுவ வரி
துறைப்பாட்டு மடை
அவிப்பலி
கதிரவனின் வெப்பம் உயிர்களை
வருத்தாத வண்ணம்
அவனுடனேயே வானில் சுழன்று திரியும்
முனிவர்கள் அமரர்கள் ஆகியோருடைய
துன்பம் தீரும்வண்ணம் அருள்புரியும்படி
உன் திருவடிகள் இரண்டையும் வணங்கிநின்றோம்.
பகைவர்களை வெற்றிகொள்ளும்
வீர மறவர்களாகிய நாங்கள்
எங்களது வெற்றிக்கு விலையாக
எம்கழுத்தில் இருந்து வழியும்
இரத்தத்தைத் தானமாகத் தருவதாக
முன்பு சூளுரைத்தோமே…
அதை இப்போதுதருகிறோம்.
ஏற்றுக் கொள்வாயாக!
அழகிய முடிசூடிய தேவர்கள்
தம் அரசனாகிய இந்திரனுடன்
வந்து வணங்குகின்ற
நீலநிறம் உடைய
உன் திருவடிகளைக் கண்டு வணங்கிநின்றோம்.
திரண்ட பசுக்கூட்டங்களைக் கவர்ந்துவந்த
மறவர்களாகிய நாங்கள்
எம் வெற்றிக்கு விலையாக
நிணத்துடன் கலந்து சிந்துகின்ற
குருதிப் பலியைத் தந்தோம்.
ஏற்றுக் கொள்வாயாக!
துடியுடன் பறையும் கொம்பும் சேர்த்து,
செவிகள் பிளந்து செவிடாகும் வண்ணம்
உரக்க ஒலிக்கச் செய்பவர்கள் மறவர்கள்.
நடு இரவில் எதிரில் வருபவர்களைத்
தாக்கிக் கொல்கின்ற புலிபோல் வலிமையுடைய
மறவர்களாகிய நாங்கள்
குமரியாகிய நின்திருவடிகள் வணங்கிநின்றோம்.
அங்ஙனம் யாம் பெற்ற வெற்றிக்கு
ஈடாகத் தரும் நேர்த்திக்கடனே
எம்கழுத்தில் இருந்து யாம் சிந்துகின்ற குருதியாகும்
ஏற்றுக் கொள்வாயாக!
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் பாடல்கள் இங்கே: 17 – 19
http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html
படத்துக்கு நன்றி:
http://www.maalaimalar.com/2012/11/21143028/saptha-kannigal-worship-benefi.html