பெரியபுராணம் காட்டுகிற வேடர் நெறி – வேட்டை அறம்

0

சொ.வினைதீர்த்தான்

ஒரு பதிவுக்காகப் பெரியபுராணத்தில் கண்ணப்ப நாயனார் சரித்திரத்திலுள்ள பாடல்களைப் படித்தேன். கீழ்க்கண்ட பாடல் கவர்ந்தது. நம் முன்னோர் அறம் வியக்கவைத்தது.

download
திண்ணன் என்று பெயரிடப்பட்ட வேடனாகிய கண்ணப்பர் தக்க பருவம் வந்ததும் வேடர்களுடன் முதல்முதலாக வேட்டைக்குச் செல்கிறார். மிருகங்களை வேட்டையாடுகிறார்கள். கொடிய மிருகங்களை எதிராக ஓடிச் சென்று எதிர்த்துக் கொலைசெய்கின்ற வேடர்கள் (கொடியனவெதிர் முடிகியுறு கொலைபுரி சிலை மறவோர்) வேட்டை நெறி முறைகளைக் கடைப்பிடிதனராம். 1.உடுக்கை போன்ற கால்களையும் மடிந்த மெல்லிய காதுகளையும் உடைய யானைக் கன்றுகள் மேல் வேட்டையைத் தொடர மாட்டார்களாம். 2.ஓசைபட ஓடிக் குதிதோடும் சிறு விலங்குக் குட்டிகளைக் கொல்லமாட்டார்களாம். 3.கருவுற்றதால் வயிறு பெருத்து ஓடமுடியாமல் தள்ளாடிவரும் பெண் விலங்குகளுக்குத் துன்பம் செய்யமாட்டார்களாம்.

துடியடியன மடிசெவியன துறுகயமுனி தொடரார்;
வெடிபடவிரி சிறுகுருளைகண் மிசைபடுகொலை
விரவார்;
அடிதளர்வுறு கருவுடையன வணைவுறுபிணை
யலையார்;
கொடியனவெதிர் முடுகியுமுறு கொலைபுரிசிலை
மறவோர்.

கல்வியறிவு இல்லாத கொடிய வேட்டையையே தொழிலாகக்கொண்ட வேடர்களிடம் இருந்த தொழில் அறம் வியக்கவைக்கிறது. கன்றுகள், குட்டிகள், கருவுற்றத் தளர்ந்த பெண்ணின விலங்குகள் வேட்டையாடப்படவில்லை. வேடர்களிடமே விலங்குகள் பால் அறம் பேணப்பட்டபோது அரசர்களிடம் மனிதர்கள் பால் எத்தகைய போர் அறம் இருந்திருக்கும் என்பதை உய்த்து உணரலாம். இன்று காஸா பகுதியில் பிள்ளைகள் குறிவைத்துக் கொல்லப்படுகிறபோதும் நேற்று யாழ்ப்பாணத்தில் குழந்தைகளும் பெண்களும் சீரழித்துக் கொல்லப்பட்டதையும் கண்டு வருந்திய நாம் அன்றைய வேட்டை அறத்தையும் போர் அறத்தையும் போற்றாதிருக்க இயலாது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *