வருக வருக வருகவே!
இசைக்கவி ரமணன்
வருக வருக வருகவே!
[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B5/[/mixcloud]
அலைமகளே! கலைமகளே! மலைமகளே!
வாசல் திறந்து வைத்தோம், எங்கள்
வாழ்வை மலராய் அளித்தோம்! (வருக)
வறுமை நீங்கிட வேண்டும், மனது
வள்ளலாய் மாண்புற வேண்டும்
பொறுமை துணிவு உறுதி அழகு
பூரண மாகிட வேண்டும்
அகமும் புறமும் திருவே மலரும்
ஆனந்தம் ஒங்கிட வேண்டும்! (அலைமகளே)
அறிவில் ஒளியுற வேண்டும், அதனால்
அகிலம் பயனுற வேண்டும்
செறிவு திறமை தெளிவு கலைகள்
செம்மையாய்த் திகழ்ந்திட வேண்டும்
மனமெனும் மலரில் நினைவாய் அமர்ந்து
தினமெனை மீட்ட வேண்டும்! (கலைமகளே)
தடைகள் தகர்ந்திட வேண்டும், நீ எந்தத்
தருணமும் காத்திட வேண்டும்
கடமை வீரம் கருணை கவிதை
காலமும் தொடர்ந்திட வேண்டும்
வெளியிலும் உள்ளும் எதிரிகள் இல்லா
வெற்றியே நீ தர வேண்டும்! (மலைமகளே)
அண்டபகிரண்டம் பந்து விளையாடும் அன்னை சக்தி வருக! எங்கள்
அகமும்புறமும்பல சுகமும்தினம்தந்து மகிழும் தேவி வருக!
கண்டதுண்டமாய் கவலை வீழ்த்திடும் காளி நேரில் வருக! எங்கள்
கலியை நீக்கிடும் கருணைத் தாயகம் ராஜேஸ்வரி வருக! ராஜ
ராஜேஸ்வரி வருக!
08.08.2008/காலை 8.40/நவதுர்கா சந்நிதி, ஜாகேஷ்வர்
அருமையான இசையுடன் ஒரு அருமையான கவிதை –
இசைக்கவிக்கும் வல்லமை இதழுக்கும் பாராட்டுகள் !