-மாதவ. பூவராக மூர்த்தி

navratri-dollsசொன்னால் நம்ப மாட்டீர்கள். நீங்கள் இப்படி ஒரு விஷயத்தை என்னிடம் சொன்னால் நான் கூட நம்ப மாட்டேன்.

என் பெண், அம்மாவுக்கு முடியவில்லையென்றால் என்ன? நான் கொலு வைக்கிறேன் என்று அமாவாசை அன்று ஆபீஸிலிருந்து லேட்டாக வந்து நான் தூங்கப் போனவுடன் என் புது வேஷ்டியைக் குட்டி மர பீரோ ஸ்டூல் எல்லாம் வைத்து என்னைத் தொந்தரவு செய்யாமல் பரணிலிருந்து கொலு பொம்மைகளை எடுத்து ஐந்து படி கொலு வைத்தாள்.

காலை எழுந்த நான் பிரமித்து என் மோட்டோ ஜீயில் போட்டோ எடுத்து வாட் சாப்பில் போட்டு எல்லாரையும் கொலுவுக்கு அழைத்து விட்டேன். என் மகள் வேலைக்குப் போவதால் காலை ஆபீஸ் போவதற்கு முன் விளக்கேத்தி வாழைப்பழமோ ஆப்பிளோ சாத்துக்குடியோ நைவேத்தியம் பண்ணிவிட்டு அவசரமாக ஓடி விடுவாள்.

என் மனைவி வருகிறவர்களுக்கு மூன்று நாளாக மில்க் பிஸ்கட், மேரி பிஸ்கட் அல்லது குட் டே பிஸ்கட் கொடுத்துக் கொண்டிருந்தாள். இருபது நாட்களுக்கு முன் கடைக்குப் போகும்போது கீழே விழுந்து ஹேர் லைன் கிராக் என்று மாவுகட்டுப் போட்டு சுழலும் நாற்காலியில் வீட்டைச் சுற்றி வருவதால் கொலுவும் வந்தவர்களும் அவளின் பிரசாதங்களை அன்போடு ஏற்றுக் கொண்டார்கள். நாங்கள் மட்டும் குழந்தைகளின் தயவால் வகை வகையாகச் சுண்டல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்

நவராத்திரியில் தினமும் சாயங்காலம் என் மச்சினன் குழந்தைகள் புடவை கட்டிக்கொண்டு பிளாட்டில் எல்லா வீடுகளுக்கும் குங்குமச் சிமிழும் ஒரு பையும் எடுத்துக் கொண்டு “குறையொன்றும் இல்லை” பாட்டும் “கண்ணுக்குள் பொத்தி வைத்தேன் என் கண்ணனையும்” பாடி வகை வகையாய்ச் சுண்டல் எடுத்து வர நான் அளவு தெரியாமல் சாப்பிட்டுத் தொலைத்தேன்.

நேற்று இரவு எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்க எனக்கு வயிறு கொஞ்சம் கடமுட என்றது. எழுந்து பாத்ரூம் போகலாம் என்று பெட்ரூம் கதவைத் திறக்க முயன்ற போது ஹாலில் பேச்சுச் சப்தம் கேட்டது.

நான் முதலின் என் பெண் பூர்வஜாதான் டி.வி ஆஃப் பண்ணாமல் வந்து விட்டாள் என்று நினைத்தேன். பாட்டு, வடிவேலு விவேக் குரல் போல இல்லை. உற்றுக் கவனித்தேன்; லேசாக கதவைத் திறந்து பார்த்தேன். திகைத்துப் போனேன். மறுபடியும் சொல்கிறேன். நான் கேட்டதையும் பார்த்ததையும் சொன்னால் நீங்கள் நம்பப் போவதில்லை. இருந்தாலும் உங்களுக்கு இப்படி ஏதாவது ஒன்று நடக்கும்போது நான் சொன்னதும் நடந்திருக்கக் கூடும் என்று நீங்கள் நம்புவீர்கள் என்று நம்பிக்கை எனக்கிருக்கிறது.

படியில் வரிசையாக அடுக்கி வைத்திருந்த பொம்மைகள் மிஸ் இல்லாத பள்ளிக் குழந்தைகள் போல இடம் மாறி திரும்பி ஒன்றோடு ஒன்று பேசிக்கொண்டிருந்தது. என் வயிறு உபாதை மாயமாய் மறைந்தது.

இடுக்கு வழியாகப் பார்த்தேன். என்ன ஸ்வாரஸ்யமான வம்பு. அவைகளுக்குத்தான் எத்தனை மனக் கிலேசங்கள், பொறாமைகள், குறைகள். எப்போது பேச ஆரம்பித்ததோ எனக்குத் தெரியாது. நான் பார்க்கும்போது அது ஒரு சுவாரஸ்யமான பகுதியில் இருந்தது.

மேல் படியில் இருந்த மரப்பாச்சி பொம்மைகள் குரல் கரகரப்போடு அதற்கு முன்னால் இருந்த மஹாலஷ்மியிடம் தம் குறையைச் சொல்லிக்கொண்டிருந்தன. ”உங்களுக்கு என்ன? பொம்மை செய்யும் போதே வர்ணம் அடித்துப் புடவை…அதில் ஜரிகை. உங்க வீட்டுக் காரருக்குப் பட்டு பீதாம்பரம் எல்லாம் இருக்கிறது. என்னையும் என் வீட்டுக்காரரையும் பாருங்கள். ஒரே பச்சை நிறத்துணி நாலு வருஷமாய்.

அம்மாவும் பொண்ணும் கடைக்குப் போகும் போதெல்லாம் துணி வாங்க முடிகிறது. எங்களுக்கு ஏன் ஒரு சூடிதார் ஜீன்ஸ் வாங்கி போடக்கூடாது?”

அவைகளின் ஆதங்கம் நியாயமானதுதான் எனக்கே அந்த மாதிரி ஒரு எண்ணம் உண்டு இவர்கள் மேல்.

“இதையெல்லாம் பெரிது படுத்தாதே! அவர்கள் நம்மைப் பொம்மைகளாக நினைக்கிறார்கள்.” என்று விஷ்ணு சமாதானம் சொன்னார். “என்னை மேல் படியில் வைத்திருக்கிறார்கள். இருந்து என்ன? ஒரு விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கிறார்களா? இல்லை ஒரு எம்.எஸ் பாடியதையாவது போடுகிறார்களா? அதுவும் இல்லை. பக்கத்தில் டி.வியைப் பெரியதாக வைத்து விடுகிறார்கள். அடுத்த படியில் இருந்த தசாவதார பொம்மைகள் மெதுவாக ஆரம்பித்தன. தசாவதாரம் வரிசையாக வைத்திருக்கிறார்கள். ஆனால் மூன்று வருடங்களுக்கு முன் புதிதாக செட்டை வாங்கி வைத்திருக்கிறார்கள். இந்தப் பெண் பூர்வஜா பொம்மை அடுக்கும்போது வாமனாவதாரத்தைக் கீழே போட்டு உடைத்து விட்டாள். பழைய பொம்மை; இந்த அம்மாள் கல்யாணம் பண்ணின புதிதில் வாங்கின தசாவதார செட்டில் சேதாரம் போக மீந்திருந்த எங்களை விடச் சின்ன வாமனரை எங்கள் பக்கத்தில் நிற்க வைத்துவிட்டார்கள். எங்கள் உயரத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் குறுகி நிற்கிறார் என்றது ராமர் பொம்மை.

மூன்றாம் படியில் இருந்த அஷ்ட லக்ஷ்மிகள் போன வருடம் வந்தவர்கள். ஜொலித்தார்கள். மேல் படியில் இருந்த லக்ஷ்மி ஸரஸ்வதி இந்த அஷ்ட லக்ஷ்மிகள் ரொம்பத் திமிராக நம்மிடம் பேசாமல் அவர்களுக்குள் மட்டும் பேசிக்கொள்கிறார்கள். இன்னும் இரண்டு வருஷம் போனால் நம் கதிதான் இவர்களுக்கு என்று தங்கள் வருத்தத்தைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

நாலாவது படியில் இருந்த சிவன் பார்வதி பேச வேண்டாம் என்று இருந்தேன். என் வாயைக் கிளப்பி விட்டீர்கள். அடி முடி காண முடியாத விஷ்ணுவை மேல் படியில் வைத்துவிட்டு இவர்கள் ஹரி தாசர்களாம் (விஷ்ணுவை ஸ்மரிக்கிறவர்கள்) அதனால் என்னை ஒரு படி இறக்கி என்னை நாலாவது படியில் வைத்து என் குடும்பத்தையும் வைத்து என்னை அவமதிக்கிறார்கள்.

“என்ன செட்டியாரே உங்க வியாபாரம் எப்படி? என்று மேற்படியில் இருந்த மரப்பாச்சி உரக்கக் கேட்டது. செட்டியார் மெதுவாகத் திரும்பி இந்தக் கிண்டல் தானே வேண்டாம். என்னை இங்கு உட்கார வைத்து ஒரு பண்டம் கூட விற்பதற்கு இல்லை. இவர்கள் ஃப்லிப்கார்டில் எல்லாம் வாங்குவதால் ஆன் லைன் டிரேடிங்க் காலமாகப் போகிவிட்டது.

ராகவேந்திர சுவாமிகள் மௌனமாகவே இருந்தார். இதற்குள் இந்த மரப்பாச்சி வந்தவர்களையும் விட்டு வைக்கவில்லை. நேத்திக்கு வந்த 43 பிளாட் நம்பர் மாமி ஸ்ருதி சேராம ஶ்ரீமன் நாராயண பாடினாள். விஷ்ணு கண்ணை மூடிக்கொண்டு விட்டார்.

இன்னும் ரெண்டு மாமிகள் வந்து உட்கார்ந்து பாட்டுப் பாடாமல் ஜெயலலிதாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிக் கொஞ்சமும் ஈடுபாடு இல்லாமல் கொலு வைப்பதைவிட நம்மைக் கொலுப் பெட்டியிலே வைத்து இருக்கலாம். டி வி யில் சிந்துஜா நவராத்திரி பற்றிப் பேசுவது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. அவள் கழுத்தை நெரித்து இவர்கள் சிரிப்பொலி வைக்கும்போது அப்படிப் பற்றிக் கொண்டு வருகிறது. என்ன பண்ணுவது நாம் பொம்மைகளாகப் போய்விட்டோம்.

சரி சரி யாராவது வந்துவிடப் போகிறார்கள் பேசாமல் பொம்மையாக மாறி விடுங்கள் என்று மஹாவிஷ்ணு சொன்னவுடன் மாயமாய் எல்லாம் பூர்வஜா (என் மகள்) வைத்த மாதிரியே இருக்கிறார்கள்.

நான் வெளியே வந்து பாத்ரூம் போய்விட்டுக் கொலு அருகில் போய் நின்றேன். எல்லாம் பொம்மைகளாகத்தான் இருந்தன. எனக்குத்தான் பிரமையா?

உள்ளே போய்ப் படுத்தேன். நாளை முதல் பக்தியுடன் மாலை சுண்டல் செய்யச் சொல்ல வேண்டும். கம்ப்யூட்டரில் எம்.எஸ் அம்மா பாட்டுப் போட வேண்டும். சாயங்காலம் கொஞ்ச நேரமாவது டி வியில் சினிமா சம்பந்தமாகப் போடக்கூடாது என்று முடிவு செய்தேன். எப்போது தூங்கினேன் என்று தெரியாது.

“என்ன எழுந்திருக்கிறேளா…? பால் வாங்கிண்டு வரணும்…காலங்காத்தால அப்படி என்ன குறட்டை விட்டுண்டு தூக்கம்?” என்றாள். எழுந்தேன் வந்து ஹாலில் பார்த்தால் எல்லா பொம்மைகளும் ஒன்றுமே நடக்காதது மாதிரி உட்கார்ந்திருக்கின்றன.

நான் நேற்று இரவு கேட்டதும் பார்த்ததும் உண்மையா பொய்யா சொல்லுங்களேன்?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *