கே. ரவி

“அப்ப, கணம் என்பது ஒரு நிமிடத்தை விடக் குறைவான நேர அளவா?” சிகாமணி கொட்டாவி விட்டுக் கொண்டே கேட்டதும் தலையில் அடித்துக் கொள்கிறேன். தலைதானே சிகாமணியின் தலைமைச் செயலகம்!

கிழிஞ்சுது கிருஷ்ணாவதாரம். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு விஷயத்தைக் கோட்டை விட்டுவிட்டாயே, சிகாமணி! கணம் என்பது ஓர் அளவவே இல்லை. அது ஒரு புள்ளி. கணிதத்தில் புள்ளிக்கு எப்படிச் சுற்றளவு, ஆரம் எதுவும் கிடையாதோ, அப்படித்தான் கணமும். இடத்துக்குப் புள்ளி எப்படியோ, காலத்துக்குக் கணம் அப்படி. ஆனால், சாதாரண அளவுகோல்களுக்குச் சிக்காத புள்ளியும், கணமும் ‘நுட்ப உடல்’ என்று மேலே நான் குறிப்பிட்ட சாதனத்துக்கு வெகு சுலபமாக அகப்பட்டு விடுகின்றன. நுட்பத்தின் பரிமாணங்களே வேறு.

கவிதை ஜனிக்கும் கணங்களில், நான் வேறு வேறு பரிமாணங்களில் நுட்பமாக அனுபவம் பெற நேரிடுகிறது. நுட்பமாக என்றால்…? இதை எப்படி உரைநடையில் சொல்லி விளங்க வைக்க முடியும்? அதனால்தான், கவிதையிலேயே சொல்ல முற்பட்டேன்:

பாடலைக் கேட்க : https://soundcloud.com/vallamai/sets/www-vallamai-com

முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது வேதாளம்

கருவத் திற்கோர் உருவம் அளித்துக்

கருவுக் குள்ளே வைத்து வளர்த்திவ்

வுலகுக் கென்னை அழைத்தாலும்

கால்கள் கைகள் விழிகள் எனக்

காவல் அமைத்துக் கொடுத்தாலும்

காதல் நட்பு சுற்றமெனப்

பாடல் நூறு படித்தாலும்

முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது வேதாளம்

ஓலமெழுப்பும் கடலோரத்தில்

ஒற்றை மரத்தின் வெற்று நிழலில்

உடைந்த நிலவை உரசிப் போகும்

கருமேகக் காட்சிகளில்

மழை ஓய்ந்த மாலைப் பொழுதில்

மல்லாந்த படித்துடிக்கும்

பூச்சிகளின் உயிர்ப் போராட்டங்களில்

பேச்சிழக்க வைத்துவிடும்

பெருவெளியின் ஒருநினைப்பில்

அட

அனுபவத்திற் குள்ளேயும் ஓர் அதல பாதாளம் – என

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது வேதாளம்

வானப் பரப்பை வாரிச் சுருட்டி

வார்த்தைக ளுக்குள் ளேவைத் துருட்டிக்

கணமென் றிங்கோர் அணுவைப் பிளந்து

கனவுப் பொருளாய் மாறி நுழைந்து

யார்யார் தலையோ சிதறி வெடிக்கக்

கதைகள் நூறு சொல்லி முடிக்க

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது வேதாளம் – அட

அனுபவத்திற் குள்ளேயும் ஓர் அதல பாதாளம்

“புரிந்து விட்டது!” குதிக்கிறான் சிகாமணி, ‘யுரேகா’ என்று கத்திக் கொண்டே ஓடிய ஆர்க்கிமிடீஸைப் போல, ஆனால், நல்ல வேளை, நிர்வாணமாக இல்லை.

அவன் சொல்கிறான்: “வாத்யாரே. புரிந்து விட்டது. கம்ப்யூட்டர், அதாம்பா, கணினி. அதற்கு ஹார்ட் வேர், ஸாஃப்ட் வேர் என்று இரண்டு உறுப்புகள் உண்டென்கிறோமே, அதாவது, புலன்களால் கண்டு, தீண்டி அறியப்படும் திண்பொருள், புலன்களுக்கு அகப்படாத மென்பொருள்! அது போல் நமக்குத் திட்ப உடல், நுட்ப உடல் என இரண்டு உடல்கள் உண்டென்கிறாய். அவ்வளவுதானே?”

எவ்வளவு அனாயசமாகச் சொல்லி விட்டான். இதை விளக்கத்தான் நான் இவ்வளவு நேரம் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். புத்தி சிகாமணி புத்திசாலிதான்! அவன் வேறு எப்படி இருக்க முடியும்!

திண்பொருள், மென்பொருள். அடேடே! சரிதான் என்று தோன்றுகிறது.

கண் என்பது திண்பொருள், பார்வையோ மென்பொருள். கண்ணிருந்தும் பார்வை இல்லாதவர்கள் உண்டே.

கவிதை திண்பொருள், அதன் கற்பனை அல்லது ப்ரதீபா மென்பொருள்.

உடல், அதாவது ஸ்தூலமாகிய திட்ப உடல் திண்பொருள், அதையியக்கும் சக்தி அல்லது மனம் என்று சில சமயம் குறிக்கப்படும் சாதனமாகிய நுட்பவுடல், மென்பொருள். நுட்பவுடலும் மனமும் ஒன்றா, வேறுவேறா என்ற விவாதத்தை இங்கே ஆரம்பிக்க வேண்டாம். அதைப் பிறகு வைத்துக் கொள்வோம்.

மேலே உள்ள கவிதை என்ன சொல்கிறது?

‘கணம்’ என்பது காலத்தின் அணு. அதைப் பிளக்க முடியும். அதற்குள் கனவாக மாறித்தான் நுழைய முடியும். இதையெல்லாம் விளக்க முடியுமா?

அது போகட்டும். மேலே உள்ள கவிதை 1980-ல் வந்தது. அப்போது எனக்கு வயது 27. அந்த வயதில் வரவேண்டிய கவிதையா இது! எவ்வளவுதான் கை, கால் அமைத்துக் கொடுத்தாலும், உலகம் என்ற பொம்மையை, பொம்மலாட்டத்தைக் காட்டிச் சமாதானம் செய்தாலும், வேதாளம், மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொள்கிறதாமே! எப்படி? எது வேதாளம்? எது முருங்கை மரம்? விக்கிரமாதித்தன் உண்டா? எப்படி அலைஅலையாய்க் கேள்விகளை எழுப்புகிறது இந்தக் கவிதை!

போதும் இதற்கு மேல் நானே என் கவிதைக்கு பாஷ்யம், வியாக்யானம் எல்லாம் எழுதக் கூடாது, உஷ்!

எனக்கு மேற்சொன்ன கவிதையின் அர்த்தத்தில் உள்ள நாட்டத்தை விட, அதில் வரும் ‘மழை ஓய்ந்த மாலைப் பொழுதில்’ என்ற வரியை, ‘மழைய்ய் ஓய்ய்ந்த மாலைப் பொழுதில்’ என்று வாசகர்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைதான் அதிகம்!

மொத்தத்தில் அவரவர்க்கு எதில் விருப்பம் அதிகமோ அதில்தான் நாட்டம் செல்லும். இயற்கைதானே! இசைக் கச்சேரியில், தனக்குத் தெரிந்த ஒரு பாடலைப் பாடகர் பாடும் பொழுது, ரசிகரின் கவனம் அதிகம் ஈர்க்கப்படுவதை அன்றாடம் பார்க்கிறோமே.

நான் எழுதிய நூல்களை எல்லாம் எனக்குத் தெரிந்தவர்களுக்கு, அதாவது, அவர்களுக்கு என்னைத் தெரிந்திருக்கா விட்டாலும், நூல்கள் பயிலும் நாட்டம் உள்ளவர்கள் அவர்கள் என்று நான் தேர்வு செய்தவர்களுக்கு, அனுப்புவது வழக்கம். காசு கொடுத்துக் கடையில் என் நூல்களை யார் கேட்டு வாங்கிப் படிக்கப் போகிறார்கள் என்று என் நூல்களை எந்தக் கடையிலும் விற்பனைக்காக நான் வைத்ததே இல்லை. நம் வாசகர்கள் மீது எனக்கு அப்படியொரு நம்பிக்கை!

அப்படி நான் அனுப்பிய நூல்களை முழுதும் படித்து, உடல் முடியாத நிலையிலும் எனக்குக் கடிதங்கள் எழுதிய சில பெரியவர்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். உடனே நினைவுக்கு வருபவர், மிகச் சமீபத்தில் அமரரான அருட்செல்வர், தொழிலதிபர், பொள்ளாச்சி நா.மகாலிங்கம். அவர் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக நடத்திவரும் வள்ளலார்-காந்தி விழாவன்று விழாமேடையிலேயே, விழா நடக்கும் போதே, காந்தி ஜெயந்தியான அக்தோபர் 2-ஆம் தேதி அவருடை ய உயிர் பிரிந்த செய்தி, அவருக்கு அந்தப் பெரிய மஹான்கள் இருவரிடத்திலும் இருந்த பக்திக்குச் சான்றாகிறது.

apm1971 அல்லது 72 என்று நினைக்கிறேன், பொள்ளாச்சியில் அருட்செல்வர் ஒரு திருமண மண்டபம் திறந்த போது அவர் அழைப்பை ஏற்று நான் அந்த விழாவில் கலந்து கொள்ளப் பொள்ளாச்சி சென்றிருந்தேன். அங்கே சென்ற பிறகு எனக்கு உடல்நலக் குறைவால் காய்ச்சல் ஏற்பட்டது. அதை அறிந்த மகாலிங்கம் அவர்கள், சென்னைக்குப் புகைவண்டியில் போக வேண்டாம் என்று என்னைத் தடுத்துத் தன்னுடனே தன் காரில் சென்னைக்கு அழைத்து வந்த அன்பை என்னென்பது! அன்று ஓரிரவு முழுவதும் காரில் அவர், எழுத்தாளர் திரு.பகீரதன், நான் ஆகிய மூவரும் இலக்கியம், ஆன்மிகம் என்று ஓயாமல் பல செய்திகள் பேசிக் கொண்டே வந்ததை மறக்க முடியாது. வரும்வழியில் ஏதோ ஓர் ஊரில் சக்தி சுகர்ஸ் ஓய்வு விடுதியில் தங்கிவிட்டு, காலையில் புறப்பட்டதும், வண்டியை திசைத்திருப்பிப் பாண்டிச்சேரி நோக்கி விடச்சொன்னார். பகீரதன் ஏனென்று கேட்டதும், ரவிக்கு நான் சித்தி வளாகத்தைக் காட வேண்டும் என்று சொல்லி என்னை அங்கே அழைத்துச் சென்று, வள்ளலார் ஜோதியில் கலந்து மறைந்த அறையை தரிசிக்க வைத்து, அதன்பிறகு பாண்டிச்சேரியில் அரவிந்தர் ஆசிரமத்துக்கும் அழைத்துச் சென்று, மாலையில் சென்னைக்குக் கொண்டுவந்த சேர்த்த அவருடைய அன்புள்ளத்தை என்னென்று சொல்ல!

2-682b796ae3

நான் எழுதிய சில நூல்களை 2007-ல் அருட்செல்வருக்கு அனுப்பினேன். சில நாட்களிலேயே அவரிடம் இருந்து ஒரு நீண்ட கடிதம் வந்தது. அதில் என் கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, ‘உன்னோடு நான்’ என்ற என் கவிதைத் தொகுப்பில் இருந்து, அவர் மனத்தைத் தொட்ட ஒரு கவிதையைக் குறிப்பாகப் பாராட்டி எழுதியிருந்தார். அது எண்சீர் விருத்தங்கள் பத்து அடங்கிய நீண்ட கவிதை. அதன் முதல் விருத்தத்தை மட்டும் இங்கே தருகிறேன். அதன் முதல்வரியே அருட்செல்வரை ஈர்த்திருக்கும்:

நாதமய மானஅருட் சோதி யேவுன்

நாடகத்தில் என்வேடம் என்ன அப்பா

போதுமினி பொய்மாயப் பூட கங்கள்

போட்டுடைக்க வேண்டும்நீ உண்மை யெல்லாம்

வேதனையின் வெறியாட்டம் ஓய்ந்து போக

வேதவொலி கேட்கட்டும் விரைந்து சொல்க

சாதகங்கள் வெற்றிபெறக் கூடு மென்றால்

சத்யயுகம் மலரட்டும் தேவ தேவா

‘அருட்பெருஞ் சோதி’ என்ற மந்திரத்திலேயே சதா லயித்திருந்த அந்த நல்ல உள்ளத்தை, ‘அருட்சோதியே’ என்ற விளியுடன் தொடங்கிய கவிதை ஈர்த்தது இயற்கைதானே! அந்தப் பத்து விருத்தங்களில் ஒன்றைக் குறிப்பிட்டு அவர் நிறைவாக எழுதியிருந்த வரிகள் என்னை நெகிழ வைத்தன:

அந்தத்தை எண்ணிநான் அஞ்ச வில்லை

அந்தாதிப் பாட்டொன்றும் புதிய தில்லை

வந்தவரைக் கடைசிவரை வாழ வைக்கும்

வையகமாய் சத்யயுகம் மலர வேண்டும்

எனும் கவிதை வரிகள், உங்கள் கவிதைத் தொகுப்பெனும் குன்றின் உச்சியில் படர்ந்துள்ள கதிரவனின் ஒளி போன்று அமைந்துள்ளதை அகம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

அந்தத்தை எண்ணி அஞ்சாமல், தம் இறுதி மூச்சு வரை, நல்ல விஷயங்கள் பற்றிப் பல இதழ்களில் எழுதிக் கொண்டும், பல நல்ல பணிகள் ஆற்றிக் கொண்டும், 90 வயதுக்கு மேல் வாழ்ந்த அருட்செல்வரின் நினைவைப் போற்றுகிறேன்.

என் நூல்களை அனுப்பியதுமே படித்து விட்டுத் தம் கருத்துகளைக் கடிதங்களாக எனக்கு அனுப்பிய சான்றோர்avr பெருமக்கள் பலரில், இன்னொரு கிழவரை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர் சாதாரணக் கிழவர் இல்லை. சாமான்ய மக்களுக்கும் நீதிதேவதைக் கோயிலின் ஆலயக் கதவுகளைத் திறந்து விட்ட நீதிக்கிழார்; உச்சநீதிமன்ற நீதியரசராக இருந்த போது பல புரட்சித் தீர்ப்புகள் மூலம் நீதித்துறைக்கே புதுப்பொலிவும், உந்துசக்தியும் தந்தவர்; நூறு வயதை நெருங்கிய முதுமையிலும் கூர்மையாகச் சிந்திக்கும் ஆற்றல் சற்றும் குறைவு படாமல் இன்னும் பத்திரிகைகளில் தம் நெஞ்சுக்குச் சரியென்று படும் கருத்துகளை எழுதி வரும் இளைஞர், நீதியரசர் திரு.வி.ஆர்.கிருஷ்ணய்யர்.

நான் எழுதிய “Law, Logic and Liberty ” என்ற சட்டத் திறனாய்வு நூலைப் படித்துவிட்டு, 2000-ஆம் ஆண்டில் அவர் எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார்.

என் மேஜை மீது இந்த நூல் ஒரு குறிப்புநூலாக இருக்கும் (“It will be a reference book on my table”)

1-6950a51e1c

இப்படி அவரே தீர்ப்பு வழங்கிய பிறகு வேறு யாரிடம் சென்று நான் சான்றிதழ் பெற வேண்டும்?

“கடிதம் எழுதும் வழக்கமில்லை கவிதை எழுத முடியும்” என்று சற்றே கர்வம் தொனிக்கப் பாடிய நான் எழுதிய நூல்களைப் படித்துவிட்டு எத்தனைப் பெருமக்கள் எனக்குக் கடிதங்கள் எழுதித் தங்கள் மேலான கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்! இன்னும் பல பெரியவர்கள்! அவர்களைப் பற்றியும் எழுதுகிறேன்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *