கே.ரவி

என் நூல்களை அனுப்பியதுமே படித்து விட்டுத் தம் கருத்துகளைக் கடிதங்களாக எனக்கு அனுப்பிய சான்றோர் பெருமக்களில், லலிதா பாரதி அம்மையாரையும், நான் பெரிதும் மதிக்கும் இலக்கியப் படைப்பாளர்களான அமரர் தொ.மு.சி.ரகுநாதனையும், அமரர் தி.க.சிவசங்கரனையும், பாரதி கலைக் கழக நிறுவனர் பாரதி சுராஜ் அவர்களையும், முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்களையும், டாக்டர் பிரேமா நந்தகுமார் அவர்களையும், குறிப்பிடாமல் இருக்க முடியாது.

லலிதா பாரதி அம்மையாரின் வாழ்த்தை அவருடைய தாத்தாவின் வாழ்த்தாகவே, அதாவது, என்றைக்குமே இளமையாகவே நம் நெஞ்செல்லாம் நிறைந்துவிட்ட பாரதியின் வாழ்த்தாகவே எண்ணிப் பரவசப் பட்டேன்.

பாட்டினிலே சொல்வது பராசக்தி சொல் என்றால் ஏட்டினிலே சொல்வது எழுத்தாளன் கவிஞன் ரவியின் சொல் அல்லவா? …………… உங்கள் மனத்தில் பாரதியின் கவிதைகள் ஆழ்ந்த சிந்தனைகளைத் தோற்றுவித்து, கருத்து அலைகளோடு மோதி ஒரு வியப்பான, நயமான விமரிசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது….. வாழ்க உங்கள் பாரதி பக்தி.

தம்மால் நடமாட முடிந்த வரை வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் பாரதி திருவிழாவில் தவறாமல் கலந்து கொண்ட அந்த அம்மையாரின் உள்ளூக்கம் வியக்கத் தக்கது. அவர் கவிஞர் வாலிக்கு பாரதி விருது வழங்கிய புகைப்படத்தில்தான் அவர் முகத்தில் எத்தனைப் பொலிவு, கம்பீரம்!

as1

as2தொ.மு.சி.ரகுநாதன் அவர்களுடைய கடிதம் படித்துக் கண்கலங்கினேன்:

நூலைப் படித்து முடித்து விட்டேன். என்றாலும் …. Arthritis நோயினால் வலது கையும், விரல்களும் பாதிக்கப்பட்டு, கடிதம் எழுதுவது கூடச் சிரமமாகி, என் எழுத்துப் பணியே முடங்கிவிட்ட நிலையில், தங்கள் நூலைப் பற்றிச் சற்று விரிவான கருத்துரை கூற இயலாமைக்கு வருந்துகிறேன்………. தங்கள் பாரதி ஆய்வுப்பணி தொடர என் இதயம் நிறைந்த வாழ்த்துகள்.

தி.க.சி.யின் இரண்டு கடிதங்கள் என் கோப்பில் பாதுகாக்கப்பட்டுள்ள பொக்கிஷங்கள். முதல் கடிதம், “நமக்குத் தொழில் கவிதை” என்ற என் நூலைப் படித்துவிட்டு, 1997-ல் அவர் கைப்பட எழுதிய கடிதம். 73 வயதில் கண்புரை நோயின் தொல்லைக்கிடையே நூலைப் படித்து முடித்த செய்தியைச் சொல்லிவிட்டு அவர் எழுதியிருந்த வரிகள் மறக்க முடியாதவை:

சொல்புதிது; பொருள் புதிது; சுவை புதிது என்ற பாரதியின் திறனாய்வு இலக்கணம், இந்நூலுக்குப் பொருந்துகிறது. அதுவேas3 – கருத்து வேற்றுமைக் கிடையிலும் – இந்நூலின் சிறப்பு. இந்நூல் பரவலாகப் படிக்கப்பெற வேண்டும்; விவாதிக்கப் பெற வேண்டும் என்பது என் அவா. இந்த விவாதத்தில், நா.சீ.வரதராஜன், சுராஜ் போன்ற என் நண்பர்களோடு, வல்லிக்கண்ணன், ச.செந்தில்நாதன், திருப்பூர் கிருஷ்ணன், இன்குலாப், அப்துல் ரகுமான், பழமலய், ஈரோடு தமிழன்பன் முதலிய படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் பங்கேற்க வேண்டும் என்பது என் விழைவு. வாஸந்தி, ராஜம் கிருஷ்ணன், ப.சிவகாமி, திலகவதி முதலியோரும் பங்கேற்றால் நல்லது. குறைந்த பட்சம், ‘இலக்கியச் சிந்தனை’க் கூட்டத்திலாவது, இந்நூல் ஆராயப்பெற வேண்டும்; முயல்க! வெல்க! …….

இரண்டாவது கடிதம், சில ஆண்டுகள் கழித்து, ‘மின்னற் சுவை’ என்ற என் நூல் கிடைக்கப் பெற்றவுடன் அவர் எழுதியது. “மகாகவி பாரதி பக்தர்/பித்தர்” என்று என்னை விளித்துவிட்டுக் கண்புரை நோயின் கடுமையாலும், இதயநோயின் காரணமாகவும் தாம் உடல்நலம் குன்றியிருந்த வேதனைச் செய்தியைச் சொல்லி, “பாரதி பாதையில் புதுயுகம் படைப்போம்” என்ற நல்வாக்குடன் கடிதத்தை நிறைவு செய்திருந்தார்.

தி.க.சி. விழைந்த வண்ணம் என் நூல்கள் அவர் குறிப்பிட்ட பெருமக்களால் அவருடைய ஆயுட்காலத்தில் ஆய்வு செய்யப்படவில்லை. அனால், அதற்கான வாய்ப்பு இப்பொழுது, ஒரு மாமாங்கக் காலத்துக்குப் பிறகு உருவாகியிருக்கிறது. ஆம், அடுத்த ஆண்டு, 2015, பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதியன்று சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் என் நூல்கள் குறித்த முழுநாள் கருத்தரங்கம் ஒன்றை, திரு.பி.எஸ்.ராகவன், முனைவர் ஒளவை நடராஜன் போன்ற பல நல்ல பெருமக்கள் துணையுடனும், வழிகாட்டுதலோடும் நடத்தப் பாலக்காடு பேராசிரியர் திரு.கே.ஏ.ராஜாராம், முனைவர் அ.அறிவுநம்பி, முனைவர் உலகநாயகி பழனி ஆகியோர் பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

as4இந்தியாவைப் பொறுத்தவரை, இலக்கியத் திறனாய்வின் முன்னோடி என்று கருதப்படுபவர் கே.ஆர்.சீனிவாச ஐயங்கார். அவருடைய மகளும், மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளரும் ஆன முனைவர் பிரேமா நந்தகுமார் என் நூல்களைப் படித்துவிட்டு ஒரு நல்ல திறனாய்வுக் கடிதமே வரைந்திருந்தார். என் நூல்கள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு அதில் தம்மைக் கவர்ந்த அம்சங்களையெல்லாம் எடுத்துக்காட்டும் போக்கில், என் இனிய நண்பர் கவிமாமணி மீ.விஸ்வநாதனின் அற்புதமான இரண்டு வரிகளை நான் ஒரு கட்டுரையில் எடுத்தாண்டிருந்ததை உன்னிப்பாகக் கவனித்து, அந்த வரிகளை மனம்திறந்து பாராட்டியிருந்தார். அந்த வரிகள்:

குருவை எண்ணிக் கோலம் போட்டால்

திருவே வீட்டில் திருவிளக் கேற்றுவாள்

என் கவிதைத் தொகுப்பில் உள்ள ‘குருமந்திரம்’ என்ற நூறு பாடல்களை மறக்காமல் குறிப்பிட்டிருந்தார். குருபக்தி எந்த அளவு டாக்டர் பிரேமா நந்தகுமாரின் இதயத்தை ஆட்கொண்டுள்ளது என்பதை உணர முடிகிறதே!

கவிதை விமர்சனத்தில் மிகக் கறார் பேர்வழியான பாரதி சுராஜ், என்னுடைய கவிதைத் தொகுப்பை ‘இன்னொருas5 கீதாஞ்சலி’ என்று எழுதியிருந்ததை முன்பே சொல்லிவிட்டேன். அவர், ‘முரண்பாடுகளும் முண்டாசுக் கவிஞனும்’ என்ற என் கட்டுரையைப் படித்து விட்டு ஒரு நீண்ட விமர்சனக் கடிதம் எழுதியிருந்தார். நான் நல்ல நூலாசிரியனாக உருவாகி வருவது பற்றி மகிழ்ச்சி தெரிவித்து விட்டு நிறைவாக இப்படி எழுதியிருந்தார்:

இந்தப் பேனா இனி ஓயாமல் எழுதிக் கொண்டேயிருக்க வாழ்த்துகிறேன்

அவர் வாழ்த்துப் பாதி பலித்தது. ஆம் அதன் பிறகு நான் நிறையவே எழுதிக் கொண்டிருக்கிறேன். அதுவும் ஓயாமல். அதாவது, என் வக்கீல் பணியில் இருந்து ஓய்வு பெறாமலேயே, எழுதிக் கொண்டிருக்கிறேன். ஏன் பாதிதான் பலித்தது என்று சொன்னேன் தெரியுமா? இப்பொழுதெல்லாம் நான் பேனாவால் எழுதுவதே இல்லை. எல்லாவற்றையும் நேரடியாகக் கணினியில் மின்னச்சு செய்து விடுகிறேன், இதோ, இப்பொழுது இந்தக் கட்டுரை உட்பட! பாரதியின் “எழுதுகோல் தெய்வம்” இனி என்னாகும்? அந்தத் தெய்வத்தின் கல்கி அவதாரம்தான் கணினி என்று சிகாமணி முணுமுணுக்கிறான். எப்படியோ!

as6போற்றுதலுக்குரிய பேராசிரியர் முனைவர் தெ.ஞானசுந்தரம், ‘மின்னற்சுவை’ என்ற என் நூலைப் படித்துவிட்டு மிக நல்லதோர் ஆய்வுக் கடிதம் எழுதியிருந்தார். அவர் கம்பராமாயணத்தில் ஆழ்ந்த புலமையுடையவர் என்பதை நாடறியும். கம்பன் என்றதும் நீதிபதி மகராஜனும், நீதிபதி இஸ்மாயிலும் நினைவுக்கு வருவது இயல்பே. தெ.ஞா. அவர்கள் தம் கடிதத்தில், என் நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையையும் பற்றி விரிவாகத் தம்முடைய பாராட்டைச் சொல்லிவிட்டு, என் நூலைப் படித்த போது சில இடங்களில் நீதிபதி மகராஜன் பேசுவது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று என்று குறிப்பிட்டுவிட்டுப் பின்வருமாறு அக்கடிதத்தை முடித்திருந்தார்:

நீதித்துறை தமிழுக்குக் குறிப்பிடத்தக்க தொண்டாற்றியுள்ளது. அம்மரபு தங்களால் மேலும் தொடரப் படுகிறது.

இதையெல்லாம் நான் இங்கே குறிப்பிட மூன்று காரணங்கள் உண்டு.

எந்த நூலை யார் படித்தாலும் தமக்கென உள்ள தனிப்பார்வையோடுதான் அந்த நூலின் உள்ளடக்கத்தை அணுகுகிறார்கள் என்ற இயல்பான உண்மையையும், அதே நேரத்தில் தம் கருத்துக்கு உட்படாத அல்லது உடன்படாத கருத்தானாலும், அதைக் கருதிப் பார்த்துப் பாராட்டும் பண்பு மேலே நான் குறிப்பிட்ட பெரியவர்களிடம், அவர்களைப் போன்ற உண்மையான இலக்கிய ஆய்வாளர்களிடம் உண்டு என்பதை நான் உணர்ந்து கொண்டதையும் இங்கே பதிவு செய்ய விரும்பியது முதற் காரணம்.

மாங்கு மாங்கென்று கைவலிக்க நான் எழுதிய நூல்களை யாருமே படிப்பதில்லையோ என்று நான் சிலசமயம் உள்ளுக்குள் குறைபட்டுக் கொண்டது தவறு என்று, இக்கடிதங்களை இப்பொழுது மறுவாசிப்புச் செய்த போது, நான் உணர்ந்து கொண்டதைப் பதிவு செய்ய விரும்பியது இரண்டாவது காரணம்.

தெரிந்தோ, தெரியாமலோ சுயசரிதை போல நான் எழுதத் தொடங்கிவிட்ட இந்தச் சுயபுராணத் தொடரில் என்னைப் பற்றிச் சற்றேனும் புகழுரையாகச் சொல்லிக் கொள்ள என் நூல்களையும், இந்தக் கடிதங்களையும் விட்டால் வேறு சான்றுகள் எதுவுமில்லை என்ற அப்பட்டமான உண்மையை ஒப்புதல் வாக்குமூலமாகப் பதிவு செய்ய நினைத்தது மூன்றாவது காரணம்.

ஆனாலும் எனக்கொரு குறை. 1962-63-ல், நான் சரிவரத் தமிழ் பயில்வதற்க முன்பே, அப்போது ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளன்று ஆசிரியர் தின வாழ்த்தாக அவருக்கு எழுதி அனுப்பியிருந்த ஆங்கிலக் கவிதையும், அதைப் படித்துவிட்டுப் பாராட்டி அவரிடம் இருந்து வந்த கடிதமும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை, நினைவிலும் இல்லை.

இவ்வளவு பாராட்டுகளையும் இத்தனைப் பெரிய மனிதர்களிடம் பெற்ற பின்னும், அதை உள்வாங்கிக் கொள்ளாமல், இன்னும் நான் என்ன எழுத வேண்டுமோ அதை எழுதிவிடவில்லை என்ற தாகத்தோடு தவித்துக் கொண்டிருப்பதைத்தான் “முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது வேதாளம்” என்ற கவிதையில் சொல்ல முயல்கிறேனோ? என்ன முயலோ அது! புயல் வரும் என்பதை முயல் வரும் என்பதுபோல் புரிந்து கொண்டு, ஆறு வயதில் குழந்தை ஷோபனா காத்திருந்ததைப் போல, நான் இந்த அறுபது வயதிலும், ஏதோ முயல் வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேனோ! புயலா, முயலா? விடிந்தால் தெரியும் கதை!

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *