மௌனத்தின் அர்த்தங்கள்.

1

ஷைலஜா

கிருஷ்ணராஜபுரம் நெருங்க நெருங்க எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது.  சின்ன உதறலுடன் டாய்லெட் பக்கம் நழுவினேன். ரயில் அந்த ஸ்டெஷனை விட்டுப்புறப்படுகிறவரை டாய்லட் கண்ணாடியில் வழுக்கைத் தலையை விரல்களால் வாரிக்கொண்டு, பல் வரிசையை அழகு பார்த்துக் கொண்டு , அழகு காட்டிக் கொண்டு என்னவோ செய்து கொண்டு, இருந்தேன். ‘அம்மாடா தப்பினோம்’ என்று வெளியே வந்தால்….

“ஹலோ ஸார்!” ரதனசாமி நிற்கிறார்! அசடு வழிந்தது எனக்கு. யாரிடமிருந்து தப்ப வேண்டும் என்று நினைத்தேனோ அவரிடமே மாட்டிக்கொண்டுவிட்டேன். “ஸார்! வண்டி இன்னிக்கு மூணு நிமிஷம் லேட். நல்ல காலம் முப்பது நிமிஷம் லேட்டாக்காமல் விட்டானே! அது கூடப் பெரிதில்லை வண்டி தண்டவாளத்து மேல போகிற வரை புண்ணியம். அதெல்லாம் லால்பகதூரோட போச்சு. என்னைக்கேட்டால் இந்த ரயில்வே போர்டு, ரயில்வே மந்திரி எல்லாமே…..” .  ரத்னசாமி ஆரம்பித்து விட்டார். இனிமேல் சிடி ஸ்டேஷன் போகிற வரைக்கும் மனுஷர் நிறுத்த மாட்டார். பேச்சு பேச்சு வாய் ஓயாமல் பேச்சு.

“கையில என்ன டெக்கான் ஹெரால்டா?கர்னாடகாவின் ஒரே நம்பத் தகுந்த ஆங்கில நாளிதழ் இதான் என்ன சொல்றீங்க?”

“ஆமா படிங்கோ” என் பேப்பரை நீட்டினேன். ஆளை விட்டால் போதும் என்ற நினைப்புடன்.

“நோ ஸார் பேப்பரை எவன் படிப்பான்? நான் பேப்பர் படிக்கறதை நிறுத்திப் பல வருஷம் ஆச்சு. மௌனமா பேப்பர் படிக்கறது என்கிறது கொடிய தண்டனைன்னு நினைக்கிறேன்! வாய் விட்டுப் பேசினாலே உலக விஷயம் எல்லாம் வெளில வந்துடுமே என்ன சொல்றீங்க?” நான் ஒன்றும் சொல்லவில்லை.

“கட்லேக்காய் கட்லேக்காய்” என்ற வியாபாரக் குரல் ரத்னசாமியின் காதருகே வரவும், கடலைக் கூடையை சுமந்து வந்த இளைஞனை ஏறிட்டார். பிறகு,”தமிழ் தான நீ? மூஞ்சிசிலயே தெரியுதே அது? எங்களைப் போல கர்னாடகாவிற்கு பொழைக்க வந்தவனாக்கும்?சரி சரி….கடலை அஞ்சு ரூபாக்குக் கொடு” என்று வாங்கிக் கொண்டு பொட்டலத்தைப் பிரித்தவர், “முன்னெல்லாம் அம்பது பைசாக்கு கிடச்ச கடலை இப்போ அஞ்சுரூபா பாருங்க சார்!” என்றார்.

நாலு கடலை மணிகளை எடுத்த தன் கையில் வைத்துக்கொண்டு பொட்டலத்தை அப்படியே என்னிடம் நீட்டினார்.

“எடுத்துக்குங்க..மல்லாட்டைன்னு சொல்லுவாங்க சௌத் ஆர்காட்ல , அதாவது  நம்மூர்ல. இங்க பெங்களூர்ல கடலக்காய்! கடவுள் மாதிரி உருவம் ஒன்று பெயர்கள் பல பெயர்கள் ஹஹ்ஹா!” தனக்குத் தானே ரசித்து சிரித்துக் கொண்டார்.

எனக்குத் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது. இனிமேல் இந்த பங்கார்பேட் பாசஞ்சரில் பயணமே செய்யக் கூடாது என்கிற முடிவுக்கு வந்தேன்.  ஒருமாதமா இரண்டு மாதமா ஒன்பது மாதமாய் இந்த ரத்னசாமியுடன் இதே தொல்லை. தினமும் பெஙகளூர் சிடி ரயில் நிலையத்திலிருந்து பங்கார்பேட் பாசஞ்சரில் ஏறி ஒருமணி நேரப் பயணத்தில் அந்த ஊருக்குப் போய் அலுவலகப் பணி முடித்து பெங்களூர் திரும்பும் போது சரியாய் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்தில் ரத்னசாமியும் நான் இருக்கும் பெட்டியாகப் பார்த்து ஏறி விடுவது வழக்கமாகி விட்டது. பதினைந்து நிமிடங்கள்- சிடி ரயில் நிலையம் -வருகிறவரை பேசிப் பேசியே அறுத்துவிடுவார்.

“என்ன சார் டல் ஆகிட்டீங்க? “

“ஒண்ணுமில்ல லேசாத் தலைவலி” என்று ஜன்னல் பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். ரயிலை வேறு கிராசிங் என்று நட்ட நடு வழியில் நிறுத்தி விட்டார்கள். இன்றைக்கு பதினைந்து நிமிஷம் லேட் என்பது முப்பது நிமிஷமாகவும் ஆகலாம்.

“தலை வலிக்கு நான் ஒரு வைத்தியம் சொல்றேன் கேளுங்கோ…மிளகு இருக்கோல்லியோ அதை எடுத்து,லேசா அதை..” அவர் என்னவோ சொல்லிக் கொண்டிருக்க நான் ஜன்னலுக்கு வெளியே கண்ணோடு மனத்தையும் செலுத்த ஆரம்பித்தேன். தலை மட்டும் ஒப்புக்கு ஆடிக் கொண்டிருந்தது. ரயில் மறுபடி ஓட ஆரம்பித்தது.

“பெங்களூர் கண்டோன்மெண்ட் வந்தாச்சு அடுத்து சிடி ஸ்டேஷன் தான்” வீறிட்டார் திடீரென.

பிறகு என்னிடம்” தினம் பங்கார்பேட் பயணம் பண்றது சிரமமாயில்லையோ ஸார்? ஆங் ,,,ஆனா அதான் சொன்னேளே அன்னிக்கே இன்னும் ஒரே ஒரு வருஷம் தான் அப்றம் ரிடையர் ஆகிடுவேன்னு.  மேலும் சொந்த வீடு பெங்களூர்ல கட்டிண்டதும் இப்படி திடீர்னு பாங்குல வேலை மாத்திட்டான்னும் சொன்னீங்க. நினைவுக்கு வந்துட்டது இப்போ.  என்னவோ போங்க வயசு எனக்கு அம்பதுதான் ஆறது ஆனா வர வர அசாத்திய ஞாபகமறதி. எங்கப்பா மைசூர்ல எழுபத்திஎட்டுவயசுக்கு கிண்ணுனு இருக்கார். சாம்ராஜ் உடையார்கிட்ட சின்னவயசுல வேலைபார்த்தப்பொ ந்டந்ததையெல்லாம் மறக்காம் சொல்வார்….” .சிடி ஸ்டேஷன் வருகிறவரை தன் அப்பாவின் பெருமையை அளந்து கொண்டே வந்தார்.

அப்பாடா பெங்களூர் சிடி ஸ்டேஷன் வந்துவிட்டது. நான் வேகமாய் இறங்க கதவருகில் வந்தவர்,”பாத்து ஸார்…. வண்டி இன்னும் நிக்கவே இல்லை…. நிதானமாய் இறங்கணும் ..ஒருதடவை இப்படித்தான் என் மச்சினன அனுமந்து…..”  ரத்னசாமியை அப்படியே வெட்டிக் கொண்டு கூட்டத்தில் கலந்துவிட்டேன்.சப்வேயில் நடந்து எதிரே ஃப்ளை ஓவரில் வேகமாய் நடந்து எனது பஸ்ஸிற்காக மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் காத்திருக்கையில் அங்கும் வந்துவிட்டார்.

“ஸார்! உங்க ஏரியா ஜெய்நகர் ஒன்பதாவது ப்ளாக்தானே அதுக்கு 18ஆம் நம்பர் பஸ் தானே? ” வெறுப்பை வெளிக் காட்டாமல் தலை ஆட்டினேன். “அங்க பாருங்க வந்திட்டுருக்கு! எனக்கு ராம்மூர்த்தி நகர் போகணும் அங்க வாஸ்து சாஸ்திரம் சொல்ல என்னை அழைச்சிருக்கார் மிஸ்டர் பூவராகவன்னு ஒருத்தர். என்ன பண்றது சிட் ஃப்ண்ட் கம்பெனியை இழுத்து மூடினதும் எனக்கும் வேலை போயி இப்படி வாஸ்துல தான் பிழைப்பே நடக்கறது. இன்ஃபாக்ட் வாஸ்து சாஸ்திரத்துல என் அண்ணன் கில்லாடி. பேரு வாசுதேவன்.சென்னைல வியாசர்பாடில இருக்கான் . வாஸ்து தேவன்னு தான் அவனை எல்லாரும் சொல்வா…..” ரத்னசாமி சொல்லிக்கொண்டே இருக்க.நல்லவேளை பஸ் வந்து விட்டது.  வாழ்க பதினெட்டு எனக் கூவிக் கொண்டே பஸ்ஸிலேறிக் கொண்டு விட்டேன்.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. காலை எழுந்ததுமே என் மனைவி,” இன்னிக்கு நீங்க கிருஷ்ணராஜபுரம் போயி நம்ம ரேகாக்கு தரகர் சொன்ன வரனை நேர்ல போய்ப் பார்த்துவாங்க” என்றாள்.தலையாட்டினேன். “பையனை மட்டும் பார்த்துட்டு வந்துடாதீஙக் வீடு வாசல் அங்கே இருக்கிற சூழ்நிலை பையனோட அம்மா அப்பா கூடப் பொறந்தவங்க எல்லாரும் எப்படீன்னும் நோட்டமிட்டு வாங்க..”

“சரிடி எனக்கு எல்லாம் தெரியும்”

“என்ன தெரியும்? யார் எது சொன்னாலும் ஒரு வார்த்தை பேசாமல் தலையாட்டத் தெரியும் குரும்பாடு மாதிரி”

கருமம்! கருமம்! ரத்னசாமிக்கு நான் தலையாட்டுவது இவளுக்கு எப்படித் தெரியும்? கிருஷ்ணராஜபுரத்திற்கு ஆட்டோவில் வந்து சேர்ந்தேன். மனைவி சொன்ன விலாசத்தில் தெரு முனையிலேயே இறங்கி நடக்க ஆரம்பித்தேன். “ஹலோ! ரயில் சிநேகிதரே வாரும் வாரும்! எங்க இத்தனை தூரம் அதுவும் ஞாயித்துக் கிழமைல? ஹார்ட்டி வெல்கம் டு கிருஷ்ணராஜபுரம் ஸார்! இது என் ஹோம் டவுன்!”

பின் பக்கமிருந்து குரல் கொடுத்த படி ரத்னசாமி ஓடிவந்து எனக்கு முன்வந்து கைகுவித்து நின்றார். வாயெல்லாம் சிரிப்பு! நான் கடுப்பை மறைத்தபடி,” ஹிஹி..இங்க ஒருத்தரைப்பார்க்கவந்தேன் அர்ஜண்டா போயிட்டுருக்கேன்” என்று ஓரடி எடுத்துவைத்தவனை குறுக்கே வந்து தடுத்தார். ,” மூச் விடக்கூடாது…என்னோட பேட்டை இது. இங்க நுழைந்தவர்களை என் வீட்டுக்கு அழைக்காமல் நான் விடமாட்டேன். …” .

“ர.. ரத்னசாமி?” குழுப்பமாய் இழுத்தேன். “பேசப்படாது வாங்கோ” கையைப் பிடித்துக் கொண்டார். வேறு வழியின்றி அவரைத் தொடர்ந்தேன். குரும்பாடு தானோ நான்? இருக்கட்டும் இருக்கட்டும் இன்றோடு இந்த ரத்னசாமிக்கு முழுக்கு போட்டுவிட வேண்டியதுதான். நடுத்தெருவில் எதற்கு ரசாபாசம்?சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்போம் என்று முடிவு செய்து கொண்டேன்.

ரத்னசாமி வழியெல்லாம் பேசிக் கொண்டே வந்தார். தெருவைப் பற்றி தார் சாலையைப் பற்றி லாந்தல் கம்பத்தைப் பற்றி கம்பத்தில் கட்டி இருந்த பசு மாட்டைப் பற்றி….

“இதான் ஸார் என் வசந்த மாளிகை வாங்கோ உள்ள வாங்கோ” .உள்ளே அழைத்துப் போனவர் கூடத்தில் நாற்காலியைத் தட்டிப் போட்டார். பரபர வென் உள்ளே போனவர் ஐந்து நிமிடத்தில் காபி டம்ப்ளருடன் வந்து விட்டார்.

“சார்! இந்தக் காபியை குடிங்கோ…இதைக் குடிச்சா ஜன்மத்துக்கும் மறக்க மாட்டீங்கோ.. ஒரு தடவை இப்படித்தான் ஜான்சன்னு ஒருத்தர்-என்-பேனாநண்பர்- இங்கிலாந்துலேந்து இங்க வந்தவர் இந்தக் காபியைக் குடிச்சிக் குடிச்சி பைத்தியமே பிடிச்சிட்டதுன்னா பாத்துக்குங்களேன்” .”அப்போ எனக்கும் பைத்தியம் பிடிக்கணுமா ரத்னசாமீ?” சீறினேன் நான்.

“ஸார்! என்ன திடீர்னு இப்படி..என்ன ஆச்சு ஸார்? பதட்டமுடன் ரத்னசாமி கேட்க நான் கோபமாய் அந்த காபி டம்ளரை சமையலறை நோக்கி வீசி எறிந்தேன் என்னை மீறி வந்த கோபத்தில். அப்போது அவர் மனைவி போலிருக்கிறது நாற்பத்திஏழு வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி சமையற் கட்டு வாசலுக்கு பதறிப் போய் வந்து நின்றாள். அவளைக க்ண்டதும் ரத்னசாமி,”நீ ஏன் வந்தே போ போ ” என்று விரட்டினார் பதிலுக்கு அவள்,”பே பேபே..” என்று விழித்தாள்.

” போயேன் உள்ள..சாரெல்லாம் நமம் வீட்டுக்கு வரக் கூடியவர் இல்ல நான் ரொம்பக் கேட்டுட்டு வந்திருக்கார் அவர் முன்னாடி உன் ஊமை வாயை திறக்காதே போ” என்றார் ரத்னசாமி எரிச்சலுடன். தலையில் அடித்த மாதிரி இருந்தது எனக்கு. “ரத்னசாமீ?’ என்கிறேன் திடுக்கிட்ட குரலில். அவர் குரலைத் தழைத்து,”ஸார்! மன்னிச்சிடுங்க..வீட்ல நான் சுவரோட தான் பேசணும்…குழந்தை குட்டியும் கிடையாது.. பத்து வருஷம் முன்னாடி எனக்கு சிட் ஃப்ண்ட் கம்பெனியில திடீர்னு வேலைபோன சேதிகேட்ட அதிர்ச்சில மனைவிக்கும் வாய் ஊமையாகிட்டது…….” என்று தயக்கமாய் சொல்லி முடித்தார். மேற் கொண்டு அங்கே மௌனம் தான் பேசினாலும் அவரிடமிருந்து நான் தப்பித்துச் செல்ல நினைத்து நகரவில்லை இல்லை இல்லை நகர முடியவில்லை.

 

படத்திற்கு நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மௌனத்தின் அர்த்தங்கள்.

  1. ‘ரத்னசாமி வழியெல்லாம் பேசிக் கொண்டே வந்தார். தெருவைப் பற்றி தார் சாலையைப் பற்றி லாந்தல் கம்பத்தைப் பற்றி கம்பத்தில் கட்டி இருந்த பசு மாட்டைப் பற்றி….’
    =. பரவாயில்லை. போய்ட்டுப்போகட்டும்…அவர் சுவத்துடன் பேசறமாதிரி திண்டாடறவாளை அனுசரிக்கிறேளே, அது தான் மனிதநேயம்: பார்ட் 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *