சு.கோதண்டராமன்.

தஸ்யுக்கள்

 

rig veda enemy

 

ராட்சசரைப் போலவே தேவர்களால் அழிக்கப்படத்தக்க வேறு ஒரு கூட்டம் உண்டு. இவர்கள் தஸ்யு என்று அழைக்கப்படுகிறார்கள். தஸ்யு என்ற சொல் எதிரி எனப் பொருள் படும்.

யக்ஞம், பிரார்த்தனை, விரதம் இவற்றை அனுசரிக்காமல் இருப்பதில் இவர்கள் ராட்சசர்களைப் போன்றவர்கள் என்றாலும் தஸ்யுக்களுக்கும் ராட்சசர்களுக்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு.

ராட்சசர்கள் இறை வழிபாட்டைத் தடுக்கும் தீய பண்புகள் என்று அறிந்தோம். ஆனால் தஸ்யுக்கள், மற்றவர்களின் இறை வழிபாட்டிற்கு இடையூறு செய்வது இல்லை.

ரிக் வேதத்தில் எந்த ராட்சசரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சில தஸ்யுக்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. – நமூசி, துனி, சும்ரி, சுஷ்ணன், சம்பரன், கௌலிதரன், வர்சின், அஹிசுவன், பிப்ரு, அனர்சனி, வ்ருஷசிப்ர. இவர்களை இந்திரன், அச்வினிகள், அக்னி, சோமன், மருத்துகள் ஆகியோர் அழித்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

ராட்சசர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள், எங்கிருந்தும் வருவார்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தஸ்யுக்கள் குறிப்பிட்ட இடத்தில், வலுவான நகரங்களில் அல்லது கோட்டைகளில் வசிப்பவர்களாகக் கூறப்படுகிறார்கள். அவர்கள் வசம் 100 கோட்டைகள் இருந்ததும் கூறப்பட்டுள்ளது.

தஸ்யுக்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக ரிஷிகள் தங்களை ஆர்யர்கள் (உயர்ந்தவர்கள்) என்று கூறிக் கொள்கிறார்கள்.

தஸ்யுக்களைப் பற்றி ரிக் வேதம் கூறும் விவரங்களைப் பார்ப்போம்.

1. அநாஸ (மூக்கில்லாதவர்கள்),
2. க்ரதின், (உளறுபவர்கள்), ம்ருத்ரவாச (இகழ்ச்சியாகப் பேசுபவர்கள்),
3. அயக்ஞா (யக்ஞம் செய்யாதவர்கள்), அன்யவ்ரதர்கள் (வேறு வகையான விரதம் கடைப்பிடிப்பவர்கள்), மாயையால் விண்ணை அடையும் செல்லும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள் (8.14.14)
4. ஆரியர்களின் எதிரிகளாகச் சிச்ன தேவர்கள் என்போர் இரு இடங்களில் கூறப்பட்டுள்ளனர் (7.21.5, 10.99.3).  சிச்ன என்பது குறி எனப் பொருள்படும்.
5. தஸ்யு (எதிரி) என்ற சொல்லும் தாஸ (அடிமை) என்ற சொல்லும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலே கண்ட குறிப்புகளைக் கொண்டு மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் முடிவு கட்டியது பின் வருமாறு.
ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபோது வட இந்தியாவில் வசித்தவர்கள் தஸ்யுக்கள்.

1. நீண்ட மூக்கு உடைய ஆரியர்களைப் போல அல்லாமல் இவர்கள் சப்பை மூக்கு உடையவர்களாக இருந்ததால் அநாஸ எனப்பட்டார்கள்.
2. ஆரியர்களுக்குப் புரியாத வேறு மொழி பேசியதால் உளறுபவர்கள், இகழ்ச்சியாகப் பேசுபவர்கள் என வர்ணிக்கப்பட்டனர்.
3. யக்ஞம் அல்லாத வேறு வகையான வழிபாட்டு முறை உடையவர்கள்.
4. சிச்னத்தை (சிவலிங்கத்தை) வழிபட்டவர்கள்.
5. இரு இனத்தாருக்கும் இடையே தொடர்ந்து போர் நடைபெற்றது. போரில் தோற்றவர்களை அடிமைப்படுத்தினார்கள் ஆரியர்கள். இறுதியில் திராவிடர்கள் தோற்று வட இந்தியாவை விட்டே விலகித் தென்னிந்தியாவில் குடியேறினார்கள். அவர்கள் திராவிடர்கள்.
6. தாசர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த தண்ணீரை ஆரியர்களுக்காக இந்திரன் விடுவித்தான் (5.30.5) என்பதிலிருந்து நீர் வரும் பாதையில் மேல் மட்டத்தில் உள்ள அண்டை நாட்டுக்காரர்களாக இருக்கலாம் என்றும் அவர்களுக்கிடையே நதி நீர்ப் பங்கீடு பற்றிய தகராறு (தற்போதைய தமிழ்நாடு கர்நாடகக் காவிரி நீர்ப் பிரச்சினை போல) இருந்திருக்கலாம் என்றும் சந்தேகம் வருகிறது.

மேலை நாட்டவர் கண்ணில் படாத அல்லது அவர்கள் சொல்ல விரும்பாத விஷயங்கள் வேதத்திலும் உண்டு, நமது பொது அறிவிலும் உண்டு.

1. தஸ்யுக்களாகக் கருதப்படும் தென்னாட்டவர்களுக்கும், ஆரியர்களாகக் கருதப்படும் வடநாட்டவர்களுக்கும் மூக்கு விஷயத்தில் வேறுபாடு இல்லை. எப்படிப் பார்த்தாலும் மூக்கில்லாதவர்கள், சப்பை மூக்கு உடையவர்கள் என்ற சொல்லுக்குத் தென்னாட்டவர் உரியவர்கள் அல்லர் என்று அரவிந்த கோஷ் கூறுகிறார்.
2. ஆரியர்களும் தாசர்களும் வேறு வேறு மொழி பேசுபவர்கள் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. உளறுபவர்கள், இகழ்ச்சியாகப் பேசுபவர்கள் என்பதற்கு வேற்று மொழியாளர் எனப் பொருள் கொள்வது பொருத்தமாக இல்லை. ஆரியர்களும் தாசர்களும் சேர்ந்து ஒரே சமூகமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதால் அவர்களிடையே மொழி வேறுபாடு இருந்திருக்க வாய்ப்பில்லை.
3. வேதமே பல வகையான வழிபாட்டு முறைகளை ஏற்றுக் கொண்டிருப்பதை யக்ஞம் என்ற தலைப்பில் காணப் போகிறோம். எனவே வழிபாட்டுமுறை மாறுபட்டிருப்பதன் காரணமாகப் பகைமை ஏற்பட்டிருக்காது. மேலும், எந்தத் தேவருடைய வழிபாடும் இல்லாத இடத்திலும் அச்வின்களின் வழிபாடு நடைபெறுகிறது (8.10.4) என்பதிலிருந்தும், தாசர்கள் தந்த உணவை அச்வின்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்(8.5.31) என்பதனாலும் வழிபாட்டு முறையில் தாசர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் அல்லர் என்பது தெரிகிறது.
4. ஆரிய திராவிடப் பிரச்சினைகள் தோன்றாத காலத்தில் எழுதப்பட்ட சாயணர் உரையில் சிச்ன தேவர் என்பதற்கு லிங்க வழிபாடு செய்பவர் என்ற பொருள் காணப்படவில்லை. மாறாக, புலன் நுகர்ச்சியில் அளவு கடந்த நாட்டம் உடையவர் என்றே காணப்படுகிறது. சிச்னத்தைச் சிவலிங்கமாகக் கருதியது ஆங்கிலேயரின் விஷமத்தனமான வேலையே.
5. ஆரியர்களும் தஸ்யுக்களும் நிரந்தரப் பகைவர்கள் அல்லர். ஒரு மந்திரத்தில் (8.46.32 ) வச அச்வ்ய என்ற ரிஷி, தான் பல்பூத மற்றும் தருக்ஷ என்ற தாசர்களிடமிருந்து 100 பசுக்களைப் பரிசாகப் பெற்றதைக் கூறுகிறார். செல்வந்தனான ருசம பவிரு என்பவரிடத்தில் ஆரியர்களும் தாசர்களும் தானம் பெறக் குழுமினர் என மற்றொரு மந்திரம் (8.51.9) கூறுகிறது. இதிலிருந்து ஆரியர்களும் தாசர்களும் ஒரே சமூகத்தில் ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள் தான் என்பது உறுதியாகிறது.
6. வேதம் இயற்றப்பட்ட இடமாகக் கருதப்படும் சிந்து கங்கைச் சமவெளியில் மழைக்கோ ஆற்று நீருக்கோ பஞ்சம் இல்லை. எனவே அணை கட்டித் தண்ணீரைத் தேக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் அடுத்தவருக்குத் தண்ணீர் போகாமல் தடுக்கக் கூடிய அணை கட்டும் தொழில் நுட்பமும் அவர்களிடத்தில் இருந்ததற்கு ஆதாரம் இல்லை. எனவே ஆப: (தண்ணீர்) என்ற சொல் வேறு பொருளைக் குறிப்பதாக இருக்க வேண்டும்.

மேலும், பிரார்த்தனைகள் மூலம் மலைகளைப் பிளந்து தஸ்யுவால் மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை மீட்டனர் என்றும், தர்மத்தை மனதில் கொண்டு தஸ்யுவைக் கொன்றார்கள் என்றும் கூறப்படுவதால் தஸ்யு என்பது ஒரு உண்மையான பகைவனைக் குறிப்பிடாமல், வேறு ஒரு மறை பொருளைக் குறிப்பிடுவதை அறிகிறோம். ரிக் வேதத்தில் கிடைக்கின்ற தரவுகளைக் கொண்டு, அந்த மறைபொருளை அறிய முயல்வோம்- அடுத்த கட்டுரையில்.

படம் உதவிக்கு நன்றி: http://www.harekrsna.com/sun/features/09-13/dasarajna5.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *