சொறிபிடித்த தெருநாயின் சிறுகதைகள்:

 சொர்க்கம் வேண்டாம்!

ஒரு அரிசோனன்

 நான்தான் உங்களுக்கு முன்னமேயே அறிமுகமான சொறிபிடித்த தெருநாய்!  நான் ஒரு கதை சொல்லி அது வெளிவந்தாலும் வெளிவந்தது, நான் மிகவும் பெரிய ஆள் –இல்லையில்லை, பெரிய நாய் ஆகிவிட்டேன்!  இப்பொழுது எனக்குச் சாப்பாட்டுக்குக் குறைவே இல்லை! கதை சொல்லும் நாய் என்று  ஒவ்வொரு தாய்மாரும், தந்தைமாரும் எனக்குக் கொஞ்சம் சாப்பாடு போடுகிறார்கள்!  என் எடைகூட ஏறிவிட்டது.  சொறிகூட கொஞ்சம் குறைந்துவிட்டது.  என்னைப் புகைப்படம் வேறு எடுத்து ஒரு அம்மையார் முகநூலில் போட்டிருக்கிறார் என்றால்  பாருங்களேன்! என் நிறம்கூட கொஞ்சம் மேருகேறியிருக்கிருக்கிறது.

therunaai

நன்கு உணவு கிடைப்பதால் தெருவெங்கும் சுற்றி அலைந்த களைப்பு தீர,  என்னால் சிறிது தூங்கி, சிந்திக்கக்கூட முடிகிறது.  அப்படிச் சிந்தித்தபோது என் முன்னோர் நாய் மேற்கொண்டு சொன்ன ஒரு கதை நினைவுக்கு வந்தது.  அதை நான் சொல்லுகிறேன், கேளுங்களேன்!

.பஞ்சபாண்டவர்கள், பாஞ்சாலியுடன் எப்படி சொர்க்கத்திற்குச் சென்றார்கள், கடைசியில் தர்மபுத்திரரும், என் முன்னோர் நாயும்தானே மிஞ்சினார்கள் தர்மபுத்திரர் தேவேந்திரனின் இரத்தத்தில் செல்ல முடிவு செய்து அதில் ஏறிக்கொண்டார்.  இரதமும் சொர்க்கம் சென்றது என்று முன்பே சொல்லி இருக்கிறேன்.  அதற்குப் பின்னால் என்ன ஆயிற்று என்று இப்பொழுது சொல்கிறேன்

சொர்க்கம் நெருங்க நெருங்க தர்மபுத்திரருக்கு ஒரே உற்சாகம்.  தன் தம்பிகளையும், பாஞ்சாலியையும் அங்கு சந்திக்கப் போகிறோம் என்று மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி, அவர்களுடன் என்ன பேசவேண்டும், தங்களைத் தொடர்ந்துவந்த என் முன்னோர் நாய் தனது தந்தையான எமதர்மன்தான் என்று அவர்களிடம் சொல்லி, அவர்கள் முகம் எப்படி மாறப் போகிறது என்பதைக் காணவேண்டும் என்று பலவிதமான எண்ண அலைகளில் மூழ்கினார்.

மேலும், சொர்க்கம் எப்படி இருக்கும், அது பூவுலகம் மாதிரி இருக்குமா, கதைகளில் வர்ணித்தவண்ணம் இருக்குமா, அல்லது எதிரே பார்க்காதவகையில் தன்னை வியப்பில் ஆழ்த்துமா என்று சிந்தித்துத் தனது மனதில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தார், எதற்குமே பரபரப்பு அடையாத தர்மபுத்திரர்.

கடைசியில் சொர்க்கமும் வந்து சேர்ந்தது.  சொர்க்க வாசல் கதவும் திறந்தது.VLUU L200  / Samsung L200

அங்கு கண்ட காட்சி தர்மபுத்திரரைத் திகைக்க வைத்தது.

துரியன் விதம்விதமான, இதுவரை அவர் பார்த்தே இராத, கண்ணைப்பறிக்கும் புத்தாடையை அணிந்திருந்தான்.  ஆடையில் முத்தும், மணியும், மரகதமும், வைரமும், வைடுரியமும், பதிக்கப்பட்டு, தங்க இழைகளும் ஊடாடப்பட்டு இருந்ததால், அவனை ஒரும் ஒளிரும் தெய்வமாகவே காட்டியது.

தர்மபுத்திரரால் தனது கண்களையே நம்பமுடியவில்லை.

எனவே, கண்களைக் கசக்கிவிட்டுக்கொண்டு மீண்டும் பார்த்தார்.  அங்கு அழகிய, பொன்னாலான அரியணையில் அமர்ந்திருந்தான் துரியனேதான்.  அவனுக்கு அடுத்த அரியணையில், அட்டணக்கால் போட்டு அமர்ந்து, அட்டகாசமாய்ச் சிரித்துக்கொண்டு இருந்ததும் அவனது இளையோன் துச்சாதனன்தான்.  அடிக்கடி மீசையைவேறு நீவி விட்டுக்கொண்டிருந்தான்.

தருமரை இருவரும் கண்டுகொள்ளவே இல்லை.  தங்கள் பேச்சே அவர்களுக்குப் பெரிதாக இருந்தது.

தர்மருக்குத் தலை சுற்றியது.

“அதர்மிகளான, அதர்மத்திற்கே ஆசான்களான, அதற்கு இலக்கணம் வகுத்த இவர்கள் சொர்க்கத்தில் நுழைந்தவுடனே கண்ணில் தென்படுகிரார்களே!” என்று கவலையுற்றார்.

“ஒருவேளை இது நரகமோ?  நரகமே இப்படி இருந்தால், சொர்க்கம் எப்படிச் சிறப்பாக இருக்கும்!” என்று எண்ணிப்பார்த்து அவர் மனம் வியப்படைந்தது.

“சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லாமல் தேவேந்திரன் தன்னை எதற்கு நரகத்திற்கு அழைத்துவந்திருக்கிறார்?” என்று எண்ணிய தருமர், “விண்ணவர் கோனே!  இது எந்த இடம், சொர்க்கமா, நரகமா?” என்று வினவினார்.

அவரை வியப்புடன் நோக்கிய தேவேந்திரர், “தருமபுத்திரா!  ஏன் இந்தக் கேள்வி?  நரகத்தின் நாயகன் உனது தந்தையான எமதருமன்தான்!  எமக்கு அங்கு செல்ல அனுமதி இல்லை.  அளப்பிலா இன்பத்தையே நல்கும் எனது சொர்க்கத்தை விடுத்து, உன்னை நரகத்திற்கு ஏன் அழைத்துவரப் போகிறேன்?” என்று சிறிது சினங்கலந்த குரலில் கேட்டார்.

“துரியனும், அவனது இளையோனும் இங்கு இருக்கிறார்களே, தேவேந்திரரே!”

“அவர்கள் போரிட்டு மடிந்தார்கள் அல்லவா!  எனவே அவர்களுக்கு வீரசொர்க்கம் கிடைத்திருக்கிறது!” என்ற விடை வந்தது.

“இருப்பினும்…” என்று இழுத்தார் தர்மர்.

ஏன் என்பதுபோல் புருவத்தை உயர்த்தினார் தேவேந்திரன்.

“அவர்கள் முறையற்ற விதத்தில் போர்செய்தார்களே!”

“அவர்கள் அடைந்தது மரணம் வீர மரணம்தானே!  அதற்குரிய நற்பலன் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது!”

வாயை மூடிக்கொண்டார் தருமபுத்திரர்.

திருதராடிரனின் மைந்தர்களான கௌரவர்கள் நூறு பேரும் சொர்க்கத்தில், சுகத்தை அனுபத்துக்கொண்டு, ஆனந்தம் காண்பது அவருக்குக் குழப்பமாகவே இருந்தது.  சகுனிகூட அங்கு காணப்பட்டான்.  ஆயினும் கர்ணன் அங்கு காணப்படவில்லை.

எனவே, தேவேந்திரனிடம் வினவினார் தர்மர்.  “விண்ணவர் கோனே!  வீரமரணம் அடைந்தவர்கள் என்று சொல்லப்பட்ட கௌரவர்கள் அனைவரையும் இங்கு காண்கிறேன்.  ஆயினும், அவர்கள் பக்கம் கடைசிவரை நின்ற — வீரத்தில் நிகரற்ற என் தமையன் — கதிரவனின் மகனான கர்ணன் இங்கு இல்லையே, ஏன்?”

“அவன் கௌரவர்களைப் போன்று ஒரு கொள்கைக்காக, சத்திரிய நெறிக்காகவா போரிட்டு மடிந்தான்?  அருச்சுனன் மேல்கொண்ட வெறுப்பினால் எண்ணற்ற தவறுகளை, அறமில்லாச் செயல்களை அல்லவா செய்தான்! அவன் கொடுத்த தைரியத்தில்தானே துரியன் அடாத செய்கைகளைச் செய்ய முனைந்தான்!  அதுமட்டுமா!  தீயில் உதித்த பாஞ்சாலியை வேசி என்றும், அவள் துகிலை உரியவேண்டும் என்று துரியனைத் தூண்டியதும், துரியனை தீநெறிக்குச் செல்ல வழிவகுத்ததும் அவன்தானே! தவறு செய்பவனைவிட தவறு செய்யத் தூண்டியவனுக்குத்தான் தண்டனை அதிகம்!”  தேவேந்திரரிடமிருந்து வெடித்துச் சிதறின சொற்கள்.

“என் இளையோர்களான பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், எங்கள் மனைவியான பாஞ்சாலி – இவர்கள் எங்கே?  அவர்களை நான் பார்க்கவேண்டும்!”  தருமரின் குரலில் இருந்த அழுத்தம் தேவேந்திரரையே ஒருகணம் அதிரச் செய்தது.

தருமரை ஏறஇறங்கப் பார்த்துக்கொண்டே, “அவர்கள் இங்கு இல்லை!” என்று மெதுவாகக் கூறினார் தேவேந்திரர்.

“இல்லையா?  பின் எங்கே?”  தருமர் குரலில் சிறிது உஷ்ணம் இருந்தது.  “எனக்கு உடனே தெரிந்தாகவேண்டும்!”

“அவர்களுக்கு இப்போது இங்கு இடமில்லை, தர்மா!  உனக்குத்தான் இங்கு முழு இடம்!  இங்கு இருக்கும் எல்லா சுகபோகங்களையும் நீ அனுபவித்துக்கொண்டு காலங்காலமாக இங்கு இருக்கத் தடையில்லை!”

“மழுப்பல் வேண்டாம், விண்ணவர் கோனே!  அவர்கள் எங்கே என்று எனக்குத் தெரிந்தாகவேண்டும்!”

தருமரின் கோபம் தேவேந்திரரையே திணற அடித்தது.

மென்று விழுங்கிக்கொண்டு, “அவர்கள் நரகத்தில் இருக்கிறார்கள்.  உன்னை அங்கு அழைத்துச்செல்ல எனக்கு அனுமதி இல்லை.” என்ற தேவேந்திரர் தலையைக் குனிந்துகொண்டார்.

“அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை, விண்ணவர் கோனே!  நான் நரகத்தின் நாயகரான எமதர்மராஜனின் மகன்.  நீங்கள் சொல்லும் சமாதானத்தில் —  துரியனும் அவன் உடன்பிறப்புகளும் வீரமரணம் அடைந்ததால் வீரசொர்க்கம் அடையத் தக்கவர்கள், ஆனால் வீரத்தின் விளைநிலமான என் உடன்பிறப்புகள், மாவீரன் சாத்தகி முதலானோருக்கு வீரசொர்க்கம் இல்லை என்பதில் –- எனக்குச் சற்றும் உடன்பாடு இல்லை.

“போர் முடிந்ததும் என் அன்னை குந்தி தேவியார் என்னைக் கர்ணனுக்கும் நீத்தார் சடங்கு செய்யச்சொல்லி, அவன் எனக்குத் தமையன் என்பாதை விளக்கினார்.  என் நண்பர்கள், உடன்பிறப்புகள் இல்லாத சொர்க்கம் எனக்குத் தேவை இல்லை.  இது அறநெறி கொண்டு ஒழுகுவோர் ஏகும் சொர்க்கபுரி அல்ல.  என்னைபொருத்தவரை இது நரகமே. என் உடன்பிறப்புகளும், மனைவியும் இல்லாத இந்த சொர்க்கம் எனக்கு வேண்டவே வேண்டாம்.  அவர்கள் இருக்குமிடத்தைச் சொல்லி, அங்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்!  நான் இதுவரை பின்பற்றிய என் அறநெறியின்மீது ஆணை! என்னை யார் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல இயலுமோ, அவரை உடனே இங்கு தருவழையுங்கள்!”

தருமரின் தாங்கொணாச் சினம் தேவேந்திரரையே நடுங்க வைத்தது.

dharmar in hell hell 1

அவர் ஒரு எமதூதனை சொர்க்கத்தின் வாசலுக்கு வரவழைத்து, தருமபுத்திரரை அவனுடன் அனுப்பி வைத்தார்.

கல்லும், முள்ளும் நிறைந்த பாதையில் அவனுடன் நடந்து சென்றார் தருமர்.

இருண்ட ஒரு நிலப்பரப்பை அவர்கள் அடைந்தனர்.

அங்கு கை, கால்கள் துண்டிக்கப்பட்ட, தலையில்லாத முண்டங்களும், அவற்றிலிருந்து பெருகி ஓடும் குருதி ஆறும் நிரம்பி இருந்தன. சித்திரவதைப்படும் ஜென்மங்களின் கூக்குரல் ஒலி காதுகளைக் கிழித்தது.  நிண நாற்றமும், முடை நாற்றமும் மூச்சை முட்டியது.  உயிருடன் இருக்கும் ஆடையற்ற மனிதர்களை — அவர்கள் கதறக் கத –, கூரிய பற்கள் உடைய — மனதினால் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்குப் பயங்கரமான, கொள்ளிக்கண்களை உடைய பிராணிகள் கடித்துத் தின்றுகொண்டு இருந்தன.  கழுகுகளும், கோட்டங்களும், நரிகளும், ஓநாய்களும் இடும் ஓலம் அந்த இடமெல்லாம் எதிரொலித்தது.

விசித்திரமான உடலையும், இறக்கைகளையும், ஒளிரும் எலும்புக்கூடுகள் ஆங்காங்கே தெரியும் உடலும் உள்ள ஜந்துகள் விர்,விர்ரென்று அங்குமிங்கும் இதயத்தை நடுங்கவைக்கும் ஒலிகளை எழுப்பிக்கொண்டு பறந்தன.  அவை அருகில் வரும்போது பிணவாடை வீசி, வயிற்றைப் புரட்டியது.

வெப்பக்காற்றினால் உடலெங்கும் வேர்வை பெருகியது.

hell 2

“அண்ணா, அண்ணா!” என்றும், “தம்பி, தம்பி!” என்றும், “,ஐயனே, அறநெறியின் குலக்கொழுந்தே என்னவரே!!” என்றும் அவருக்கு மிகவும் பழக்கமான குரலில் பரிதாபமான ஓலங்கள் கேட்டான்.

“யார்?”  அவரையும் அறியாமல் தருமரின் வாய் ஒலி எழுப்பியது.

“நான்தான் அண்ணா பீமன்!”

“நான் அருச்சுனன்!”

“நான் நகுலன், இவன் சகாதேவன்!”

“ஐயனே, நான்தான் உங்கள் பாஞ்சாலி!”

“யுதிட்டிரா, நான்தான் கர்ணன்!”

குரல்கள் சேர்ந்து ஒலித்தன.

தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டார் தருமர்.

மெல்ல எழுந்து, “எங்கே இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

hell 3

ஒருவர் பின் ஒருவராக, அங்கு சிதறிக்கிடக்கும் பிணக் குவியல்களுக்கு நடுவிலிருந்து மெல்ல எழ ஆரம்பித்தனர் அறுவர்.  அங்கு சிந்திக் கிடக்கும் செங்குருதிச் சகதியில் பலமுறை வழுக்கி விழுந்து, எழுந்து நின்றனர்.

அவர்களைக் கண்டு திகைத்து நின்றுவிட்டார் தருமர்.

தான் அவர்களை முன்பு பார்த்தபோது இருந்த அழகு எங்கே, கம்பீரம் எங்கே, வீரம் எங்கே?  எலும்புக்கூட்டுக்குத் தோலைப் போர்த்தியது போல இருக்கும் இவர்களா தமது உடன்பிறப்புகள்?  அழகுக்கே இலக்கணமான பாஞ்சாலியா இவள்?  ஒரு தடவை கண்டாலே வாழ்நாள் முழுதும் கிறங்கவைக்கும் அழகுடைத்த இவளா இப்படி அவலட்சணமாக, ஒருமுறை பார்த்தாலே முகத்தைத் திருப்பிக்கொள்ளும் அளவுக்குக் கோரமாகக் காட்ச் அளிக்கிறாள்!

இது நிஜமா, அல்லது தனது மனமே நரகத்தின் குழப்பத்தால் சித்துவிளையாட்டு விளையாடுகிறதா?

தன்னுடன் வந்த எமதூதனைப்பார்த்து புருவத்தை உயர்த்தினார்.

“தர்மப் பிரபுவே!  இவர்கள் உங்கள் அண்ணன், தம்பிகள், மனையாட்டிதான்!” என்று பணிவாகப் பதில் வந்தது.

கல்லாய்ச் சமைந்து நின்றுவிட்டார் அவர்.

“ஏன்?” பெரிதாக வெடித்தது அவர் குரல்.

“இந்த அநீதியை நான் பொறுக்கமாட்டேன்.  நான் இதுவரை பின்பற்றிய அறநெறி உண்மை என்றால் – நல்லோர்கள் நற்கதி அடைவார்கள் என்பது உண்மை என்றால் – இங்கு இவர்கள் இப்படிப்பட்ட கொடிய நரகத்தில் உழலுவது அறநெறியே அல்ல!  என் வாழ்நாளில் நான் கடைப்பிடித்த தருமத்தின் மீது ஆணையிடுகிறேன்!  இந்த அநீதியைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி – எந்தக் கடவுளர்களாக இருந்தாலும் சரி – அவர்களுக்கு எமதர்மராஜனின் மகனான நான் ஒரு சாபத்தை…..”

அவரது வாயைப் பொத்தியது ஒரு கரம்.

yudhisthira_passes_the_test

தருமர் தலையைத் திரும்பிப் பார்த்தால்….

தேவேந்திரர் நின்றுகொண்டிருந்தார்.  அதுமட்டுமா?  தருமரின் தந்தை எமதர்மராஜன், சிவன், பிரம்மா, விஷ்ணு, மாருத், அஸ்வினி தேவதைகள், இன்னும் பல தேவர்களும், கடவுளர்களும் நின்றுகொண்டிருந்தார்கள்.  கொடிய நரகம் மறைந்து, இனிய சொர்க்கம் தோன்றியது.

“அறநெறியின் உறைவிடமான நீ இப்படிக் கோபம் கொண்டு சபித்தால், சொர்க்கம், நரகம் எல்லாம் அழிந்துபோய்விடும்.  மாந்தர்களின் அதர்மத்தைக் கட்டுப்படுத்த இயலாது போகும்.” என்று திருவாய் மலர்ந்து அருளினார் இறைவனான உருத்திரன்.  எமதர்மனை அவர் பொருட்செறிவுடன் பார்த்தவுடன், அவர் பேச ஆரம்பித்தார்.

“மகனே தர்மா!  நீ இதுவரை கண்டது ஒரு மாயத் தோற்றமே!  உன் உடன்பிறப்புகளோ, மனைவியோ, உனக்காக அறத்தை நிலைநிறுத்தப் போரிட்ட எவருமோ நரகத்தில் இல்லை.  அவர்கள் சொர்க்கத்தில் இருக்கிறார்கள்.”

“பின் ஏன் தந்தையே, எனக்கு இப்படிப்பட்ட மாயத்தோற்றம் காண்பிக்கப்பட்டது?”

“உனது ஆசானான துரோனாச்சரியாரை வீழ்த்த, நீ ஒரு பொய்த்தோற்றத்தைக் கற்பித்து மயங்கி நிற்கச் செய்தாய் அல்லவா!  அந்தப் பொய்த்தோற்றத்தை உருவாக்கியதற்காகவே உனக்கு முதலில் நரக வேதனையும், உன் உடன்பிறப்புகள், மனைவி, உற்றார்கள் நரகத்தில் உழளுவதுபோன்றதுமான ஒரு பொய்த்தோற்றம் காண்பிக்கப்பட்டது.

“உன் உடன்பிறப்புகளும் அறநெறியை நிலைநிறுத்த, போர்நெறியை மீறினர்.  பாஞ்சாலியின் சபதத்தினால் பீமன் போர்நெறியை மீறி, துரியனின் தொடையைப் பிளந்து கொள்ள நேரிட்டது. எனவே சிறிது நேரம் அவர்களும் நரகத்தில் உழல நேரிட்டது.  இனி அவர்கள் சொர்கத்தில்தான் காலம் கழிப்பார்கள்.  வீர மரணம் அடைந்ததால் கௌரவர்கள் முதலில் சிலகாலம் சொர்க்கத்தில் இருந்துவிட்டுப் பின்னர் அவர்களின் தீச்செயல்களுக்காகக் கடும் நரகத்தில் நீண்டகாலம் வாடுவார்கள்.  .

“ஒருவர் அதிகமாய்ச் செய்த நற்செயலுக்கோ, அல்லது தீச்செயலுக்கோ உள்ள பயனை அவர்கள் பிற்காலத்திலேதான் அனுபவிப்பார்கள்.  அறத்தை அதிகமாகச் செய்பவர்கள் வெய்யிலுக்குப்பின் நிழல் போல துன்பத்திற்குப்பின் நல்லின்பத்தையும், தீச்செயலுக்குத் துணைபோகிறவர்கள், தாம் செய்த சில நற்செயலுக்காக சிறிதுகாலம் இன்பம் துய்த்துவிட்டுப் பிறகு கொடுமையான நரகத்திலும் உழல்வார்கள். இதுவே அறநெறியின் விதியாகும்.

“செல், மகனே, செல்!  சொர்க்கத்தில் உன்னை எதிர்நோக்குபவர்களுடன் இனிதுவாழச் செல்!” என்று ஆசி நல்கினார்.  இனிய இசை முழங்கியது…

…”சனியனே!  நடு ராத்திரியில் ஏன் ஊளையிடுகிறாய்?”  என்ற ஆதட்டலைத் தொடர்ந்து ஒரு கல் என் மீது விழுந்தது.  துடித்து எழுந்தேன் நான்.

போதும் சாமி, போதும்.  உங்களுக்கு சொர்க்கத்தைப்பற்றி கதை சொல்லிச் சொல்லி, கல்லெறி வாங்க முடியாது சாமி!  நான் கதை சொல்வது சிலர் காதில் ஊளையாகக் கேட்டால் அதற்கு நான் என்ன சாமி செய்ய முடியும்?  நான் இனி தூங்கினால் போலத்தான்!  ஆளை —  இல்லையில்லை, இந்த நாயை விடுங்கள் சாமி!  நான் என் பிழைப்பை பார்க்கப் போகிறேன்!”

**************************************

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *