கோவை இலக்கியச் சந்திப்பு 48

0

சுப்ரபாரதி மணியன்

அ.முத்துலிங்கம் குறித்த இரு நூல்கள் வெளியீடு

—————————————-

30/11/14 ஞாயிறு காலை 10 மணி : நரசிம்ம நாயுடு மேல்நிலைப்பள்ளி, மரக்கடை, கோவையில்

சுப்ரபாரதிமணியன் தொகுத்த அ.முத்துலிங்கம் குறித்த இரு நூல்கள் வெளியீடு நடைபெற்றது. சுப்ரபாரதிமணியன் 2 நூல்களை வெளியிட ஈரோடு சந்திரு, கோவை நித்திலன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

சுப்ரபாரதிமணியன் : “ எல்லோருக்கும் இது வாய்க்காது. முத்துலிங்கத்திற்கு கிடைத்திருக்கும் இந்த ரச வாத வித்தை தமிழுக்கு பெரிய கொடை.

இலங்கைக்காரர் என்றால் ஈழ தேசிய இனச் சிக்கல் சம்பந்தமாக விசயங்கள் இல்லாமல் இருக்க முடியாது. இதில் உள்ள பல கட்டுரைகளில் இலங்கை இனக் கலவரச் சம்பந்தங்கள் உள்ளன.அகதிகளின் அவலம் இருக்கிறது. தனி ஈழம் தாகம் தென்படுகிறது. இவற்றியெல்லாம் ஒரு எழுத்தாளன் பதிவு செய்யும் பக்குவம் தெரிகிறது. அரசியல் சார்ந்தோர் அவற்றை சொல்வதைக் காட்டிலும் எழுத்து ரசனையில் நல்ல பதிவாகி விடுகிறது. வேலை சூழலில் பல துரோகங்கள், சாப்பாடு தூக்கி மனிதர்களுடனான உறவும் சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்க நியமனம் போது ஒரு சாவோடு அதை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.. நிலத்தில் கிடைக்கும் வைரம் பெண்களின் கண்களில் மின்னுகிறது. மேசன் சங்கத்து அனுபவங்கள் போல நண்பர்களின் கட்டாயத்தால் சில இடங்களில் உறுப்பினராக இருக்க வேண்டியிருக்கிறது. சூடான் விருந்தில் வாயின் உட்சபட்ச பயன்பாடு சொல்லப்படுகிறது. பெசவரின் பூங்கொத்துப் பெண்கள் சுவராஸ்யமானவர்கள். பாக்கிஸ்தானின் ஜகஜாலக்கில்லாடி கள்ளன்கள் கலை உச்சத்தில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்போது அமுலில் இருக்கும் மின்வெட்டைக் கவனிக்கிற போது எங்கோ மின் திருட்டு நடந்திருக்கிறது என்பதும் தெரிகிறது. சோமாலியா அனுபவங்கள் பற்றி சொல்லும் போது இந்த மின் திருட்டு பற்றி எழுதுகிறார்.புத்தாண்டு கொண்டாட்டங்கள், குதிரைப்பயணம், சைக்கிள் ஓட்டுதல், விமான நிலையத்தில் செருப்பு கழற்றும் சடங்குகள், முடித்திருத்தும் அனுபவங்கள், ஞாபக மறதி என்று சுவாரஸ்யமான நிறைய விசயங்கள். இவற்றில் நீங்கள் ஏதாவது உண்மையைக் கண்டு பிடித்தால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன். அது தற்செயலானது என்று முத்துலிங்கம் தரும் வாக்குமூலத்தைப் புறம் தள்ளி விட்டு அவரை முன்னிலைப் படுத்திதான் இந்த நாவலைத் தொடர முடிவதற்குக் காரணமாக தன்னிலையாகச் சொல்லப்படுவதை முக்கிய காரணமாகக் கொள்ளலாம். படைப்பாளன் ரொம்பவும் தன்னை மறைத்துக் கொள்ளவும் முடியாது. மறைத்துக் கொண்டாலும் அவன் வெளிப்படும் தருணங்களைச் சுலபமாகக் கண்டு கொள்ளலாம். இதிலும் முத்துலிங்கம் அவர்களைச் சுலபமாகக் கண்டு கொள்ள முடிகிறது. இதில் வருகிற இந்தியப் பெண்களோ, ஆப்பிரிக்கப் பெண்களோ, நைரோபிப் பெண்ணோ அனுதாபத்துடனும் எந்த வகையிலும் கிண்டலுக்கு ஆளாகாமலும் சரியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான எள்ளல் தொனி ஒரு பிசகு அதிகமாகிப்போனாலும் கொச்சையாகிவிடும். அது எங்கும் நிகழவில்லை.” பெண் படைக்கப்படுவது ஆயுள் முழுவதும் உறிஞ்சப்படுவதற்கு. அவளுக்கு ஓய்வு நாள் என்பது இன்னும் குறிப்பிடப்படவில்லை” என்று ஒரு இடத்தில் எழுதுகிறார். பல இடங்களில் இது போன்ற சித்தரிப்புகள், வார்த்தைகள் பெண்ணகளை மேன்மைப்படுத்துகின்றன.இப்போது அவரின் உற்சாகமான எழுத்திற்கு இடைஞ்சலாக ஞாபக மறதி வந்திருக்கலாம். முதுமையில் ஒவ்வொவொரு நாளும் உயிர் தப்புவதுதான் நாட்களைக் கடத்துவது என்றாகி விடுவதை இறுதியில் குறிப்பிடுகிறார்.எழுத்தாளர்களுக்கோ, இந்த நாட்களைக் கடத்துவது என்பது இல்லாமல் ஆயுள் போதாமைதான் கணக்கில் வரும். .கலை இலக்கிய விசயங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடலின் உபாதை மீறி இயங்க இயங்க படைப்பூக்கம் ஒரு உந்து சக்தியாக கூடவே இருந்து கொண்டிருக்கும் என்று தோன்றுகிறது “ என்றார்.

1. அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் (நற்றிணை பதிப்பகம்,சென்னை ரூ90 ) அ. முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள்
2. தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை – அ.முத்துலிங்கம் பேட்டிகள் , கவின்கலை பதிப்பகம் சென்னை ரூ120)
*********************************************************************************

1.அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்

தொகுப்பு: சுப்ரபாரதிமணியன்
அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள் தொகுப்பு
( எஸ்.இராமகிருஷ்ணன், சுப்ரபாரதிமணியன்,உமாசக்தி, வெங்கட்சாமிநாதன், ஜெயமோகன், பராசக்தி சுந்தரலிங்கம், தமிழ்மகன், நாஞ்சில்நாடன், பாவண்ணன், மு.இராமநாதன், இல.சைலபதி, மதுமிதா, காயத்ரி சித்தார்த், எஸ். செந்தில்குமார் ஆகியோரின் கட்டுரைகள் ) (ரூ 90,( நற்றிணை பதிப்பகம், சென்னை 28482818, 9486177208 )

2. தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை

ஜெயமோகன், மதுமிதா, கடற்கரய், காலம், கிருஷ்ணா டாவின்சி,ராம்பிரஷன், மதுரபாரதி ஆகியோர் முத்துலிங்கத்திடம் எடுத்த நேர்காணல்கள்
(அ.முத்துலிங்கம் பேட்டிகள் , கவின்கலை பதிப்பகம் சென்னை ரூ120)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *