விழிவேண்டல் பதிகம்
என்னை சபரிமலைக்கு வழிநடத்திச் செல்லும் என் குருநாதரின் விழியொளி மங்கிய போது அவருக்கு விழியொளி வேண்டிப் பாடிய பதிகம் இது.
சு.ரவி
விழிவேண்டல் பதிகம்
கண்ணான தெய்வமே கருணா விலாஸமே
கானகத் துறையும் அழகே!
காரிருள் போக்கிடும் பேரருட் சோதியே
கதிராய் விரிந்த பரமே!
எண்ணாத நெஞ்சையும் எதிர்வந்து ஆட்கொளும்
எளிமை பொதிந்த தயையே
எகாந்த வாஸியே, எழைபங்காளனே
ஏதிலார்க் குற்ற துணையே!
பண்ணோடியைந்த கவி பரவுபாவலர் நெஞ்சில்
பரவசத் தீப்பிழம்பே!
பற்றற்று நின்பாதம் பற்றுவைத் தார்க்கருளும்
பந்தளத் தீங்கரும்பே!
கண்ணுதற் பெருமானும் கருநிறத் திருமாலும்
காதலுற் றருள் பாலனே!
கற்பித்த குருநாதன் குறைதீர்த்த தெய்வமே
கண்திறந் தருளுவாயே!
கார்த்திகைத் திங்கள் தோன்றக்
காத்திருந்தாற் போல் அன்றே
ஆர்த்திடும் உவகை கொண்டுன்
அடியவர் மாலை சூடும்
நேர்த்தியைக் கண்டு விம்மி
நேத்திரம் நெகிழ வேண்டும்
சீர்த்தியே சிவனார் பெற்ற
செல்வமே விழிகள் தாராய்! (1)
ஐயனே உன்னை நெஞ்சில்
அனுதினம் பூஜை செய்து
மெய்த்தவக் கோலம் கொண்டு
மண்டல நோன்பும் காத்து
நெய்யினைத் தெங்கில் வார்க்கும்
நிகரிலாக் காட்சி காண
மைம்முகிற் கொண்டல் மேவும்
மைந்தனே விழிகள் தாராய்! (2)
ஆரியங் காவில் உன்னை
ஐயனாய்க் காணவேண்டும்
கூரிய வாளோ(டு) அச்சங்
கோவிலில் கோனாம் கோலம்
நேரிலே காண வேண்டும்
நெஞ்செலாம் நெகிழ வேண்டும்
சூரியச் சுடரை ஏற்றும்
சுந்தரா விழிகள் தாராய்!! (3)
அழகினை அமுதில் தோய்த்து
அம்புலி ஒளியைச் சேர்த்து
மழலையாய்த் தவழும் செல்வ
மணிகண்ட னே!குளத்துப்
புழையினில் குழந்தை யே!என்
புன்னகை அரும்பே உன்னைத்
தொழுது நான் காண வேண்டும்
துணைவிழி இரண்டும் தாராய்! (4)
கருமேனி அண்ணல் தோழன்
கங்கையின் குகனைப் போல
எருமேவி கோட்டை ஆண்டுன்
எல்லையைக் காக்கும் வாவர்
திருவாயில் தொடங்கி பக்தர்
திந்தகத் தோமென் றாடி
வருகின்ற காட்சி காண
வளரொளி நயனம் தாராய்! (5)
படிகநீர் அழுதை ஆடிப்
பையவே பக்தர் கூட்டம்
நெடிதுயர் மலைகள் தாண்டி
நெருங்கிய காட்டின் ஊடே
முடிசுமந் துன்பேர் கூவி
முனைப்புடன் ஏகும் காட்சி
அடியவன் காண வேண்டும்
ஐயனே விழிகள் தாராய்! (6)
சம்புவும் மாலும் ஈந்த
சத்தியச் சுடரே! சீற்ற
வெம்புலி இவரும் வல்வில்
வீரமே! வேந்தே! வானில்
உம்பரின் உடுக்கள் நாண
உனதடி யார்கள் ஏற்றும்
பம்பையின் தீபம் காணப்
பழுதிலா விழிகள் தாராய்! (7)
கரிமுகக் கடவுள் கோவில்
கடந்துசெங் குத்தாய்ச் செல்லும்
சரிவிலே ஏறிச் சென்று
சபரியின் பீடம் கண்டு
சரத்தினை ஆலில் தைத்து
சன்னதி நோக்கி அன்பர்
விரையுமக் காட்சி காண
விழிகளில் ஒளியைத் தாராய்! (8)
இருமுடி தலையில் ஏந்தி
இணையடி நினைவில் மாந்தி,
பரவசத் தோடே பதினெண்
படிகளில் பணிவாய் ஏறி
தரிசனம் கண்டு கண்ணீர்
தாரையாய்ப் பெருக வேண்டும்!
ஹரிஹர சுதனாம் எங்கள்
ஐயனே விழிகள் தாராய்! (9)
ஐயனே உந்தன் மேனி
அடியவன் சுமந்து வந்த
நெய்யிலே நனையக் கண்டு
நெக்குநெக் குருக வேண்டும்!
மெய்யெலாம் அணிகள் பூண்ட
மின்னலே! மகர ஜோதித்
தெய்வமே நின்னைக் காணத்
தேசுறு விழிகள் தாராய்! (10)
-சு.ரவி
விழிவேண்டல் பதிகம்
கண்ணான தெய்வமே கருணா விலாஸமே
கானகத் துறையும் அழகே!
காரிருள் போக்கிடும் பேரருட் சோதியே
கதிராய் விரிந்த பரமே!
எண்ணாத நெஞ்சையும் எதிர்வந்து ஆட்கொளும்
எளிமை பொதிந்த தயையே
எகாந்த வாஸியே, எழைபங்காளனே
ஏதிலார்க் குற்ற துணையே!
பண்ணோடியைந்த கவி பரவுபாவலர் நெஞ்சில்
பரவசத் தீப்பிழம்பே!
பற்றற்று நின்பாதம் பற்றுவைத் தார்க்கருளும்
பந்தளத் தீங்கரும்பே!
கண்ணுதற் பெருமானும் கருநிறத் திருமாலும்
காதலுற் றருள் பாலனே!
கற்பித்த குருநாதன் குறைதீர்த்த தெய்வமே
கண்திறந் தருளுவாயே!
கார்த்திகைத் திங்கள் தோன்றக்
காத்திருந்தாற் போல் அன்றே
ஆர்த்திடும் உவகை கொண்டுன்
அடியவர் மாலை சூடும்
நேர்த்தியைக் கண்டு விம்மி
நேத்திரம் நெகிழ வேண்டும்
சீர்த்தியே சிவனார் பெற்ற
செல்வமே விழிகள் தாராய்! (1)
ஐயனே உன்னை நெஞ்சில்
அனுதினம் பூஜை செய்து
மெய்த்தவக் கோலம் கொண்டு
மண்டல நோன்பும் காத்து
நெய்யினைத் தெங்கில் வார்க்கும்
நிகரிலாக் காட்சி காண
மைம்முகிற் கொண்டல் மேவும்
மைந்தனே விழிகள் தாராய்! (2)
ஆரியங் காவில் உன்னை
ஐயனாய்க் காணவேண்டும்
கூரிய வாளோ(டு) அச்சங்
கோவிலில் கோனாம் கோலம்
நேரிலே காண வேண்டும்
நெஞ்செலாம் நெகிழ வேண்டும்
சூரியச் சுடரை ஏற்றும்
சுந்தரா விழிகள் தாராய்!! (3)
அழகினை அமுதில் தோய்த்து
அம்புலி ஒளியைச் சேர்த்து
மழலையாய்த் தவழும் செல்வ
மணிகண்ட னே!குளத்துப்
புழையினில் குழந்தை யே!என்
புன்னகை அரும்பே உன்னைத்
தொழுது நான் காண வேண்டும்
துணைவிழி இரண்டும் தாராய்! (4)
கருமேனி அண்ணல் தோழன்
கங்கையின் குகனைப் போல
எருமேவி கோட்டை ஆண்டுன்
எல்லையைக் காக்கும் வாவர்
திருவாயில் தொடங்கி பக்தர்
திந்தகத் தோமென் றாடி
வருகின்ற காட்சி காண
வளரொளி நயனம் தாராய்! (5)
படிகநீர் அழுதை ஆடிப்
பையவே பக்தர் கூட்டம்
நெடிதுயர் மலைகள் தாண்டி
நெருங்கிய காட்டின் ஊடே
முடிசுமந் துன்பேர் கூவி
முனைப்புடன் ஏகும் காட்சி
அடியவன் காண வேண்டும்
ஐயனே விழிகள் தாராய்! (6)
சம்புவும் மாலும் ஈந்த
சத்தியச் சுடரே! சீற்ற
வெம்புலி இவரும் வல்வில்
வீரமே! வேந்தே! வானில்
உம்பரின் உடுக்கள் நாண
உனதடி யார்கள் ஏற்றும்
பம்பையின் தீபம் காணப்
பழுதிலா விழிகள் தாராய்! (7)
கரிமுகக் கடவுள் கோவில்
கடந்துசெங் குத்தாய்ச் செல்லும்
சரிவிலே ஏறிச் சென்று
சபரியின் பீடம் கண்டு
சரத்தினை ஆலில் தைத்து
சன்னதி நோக்கி அன்பர்
விரையுமக் காட்சி காண
விழிகளில் ஒளியைத் தாராய்! (8)
இருமுடி தலையில் ஏந்தி
இணையடி நினைவில் மாந்தி,
பரவசத் தோடே பதினெண்
படிகளில் பணிவாய் ஏறி
தரிசனம் கண்டு கண்ணீர்
தாரையாய்ப் பெருக வேண்டும்!
ஹரிஹர சுதனாம் எங்கள்
ஐயனே விழிகள் தாராய்! (9)
ஐயனே உந்தன் மேனி
அடியவன் சுமந்து வந்த
நெய்யிலே நனையக் கண்டு
நெக்குநெக் குருக வேண்டும்!
மெய்யெலாம் அணிகள் பூண்ட
மின்னலே! மகர ஜோதித்
தெய்வமே நின்னைக் காணத்
தேசுறு விழிகள் தாராய்! (10)
-சு.ரவி