தஞ்சை வெ. கோபாலன்                    

தஞ்சாவூரை அடுத்த கண்டியூரிலிருந்து கல்லணை செல்லும் பாதையில் அமைந்துள்ள சிற்றூர் திருப்பூந்துருத்தி. இங்கு வரும் பிப்ரவரி 24ஆம் தேதி நாராயண தீர்த்தர் ஆராதனை நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து தினமும் இசை நிகழ்ச்சிகளும், உபன்யாசங்களும், வேத பாராயணங்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன. விழா 26ஆம் தேதி நிறைவு பெறுகிறது என்று ஸ்ரீநாராயண தீர்த்த ஸ்வாமிகள் ஆராதனை விழா குழுவினர் தெரிவிக்கின்றனர். ஆராதனை நடைபெறும் காலங்களில் குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகள் சமாதியில் அபிஷேக அலங்கார அர்ச்சனை முதலானவைகள் சிறப்பாக நடைபெறும். யார் இந்த நாராயண தீர்த்தர்?

ஆந்திர நாட்டில் பிறந்து அங்கு அருந்தவங்கள் புரிந்து ஆயர்குலக் கோமான் ஸ்ரீகண்ண பிரானின் லீலைகளால் கவரப்பட்டு, பக்தி வெள்ளத்தில் திளைத்து அங்கிருந்து புறப்பட்டு தேசாந்தரம் வந்து தமிழ்நாட்டில் வரகூர் எனும் புண்ணிய க்ஷேத்திரத்தில் வந்து தங்கி, அங்கு கோயில் கொண்டுள்ள வெங்கடேச பெருமாளின் அருளால் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி எனும் அற்புதமான இசை வடிவத்தை உருவாக்கித் தந்து, அத்துடன் சாண்டில்ய பக்தி ஸூத்ர வியாக்யானம், ஹரி பக்தி ஸுதார்ணவம், பாரிஜாதபஹரணம் போன்ற பல நூல்களை இயற்றியவர் இவர். நீண்ட நாட்கள் வரகூரில் தங்கிய பிறகு அங்கிருந்து புறப்பட்டு தன்னுடைய வாழ்வின் கடைசி கட்டத்தில் திருப்பூந்துருத்தி தலத்துக்கு வந்து சிலகாலம் வாழ்ந்தபின் அங்கேயே ஜீவசமாதி அடைந்தவர் நாராயண தீர்த்தர்.

narayana-theerthar-2இவருடைய இயற்பெயர் தள்ளவஜுல கோவிந்த சாஸ்த்ருலு என்பது. 1650ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1745இல் ஜீவசமாதியடைந்தார். ஆந்திர பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்தில் மங்களகிரிக்கருகில் பிறந்தவர். இவர் பிறந்த ஆண்டு நிச்சயமாக கணிக்கப்படவில்லை யென்றாலும், தஞ்சை சரஸ்வதி மகால் நூலக பண்டிதர்கள் இவர் பிறந்த வருஷத்தை 1650 என்று கணித்திருக்கிறார்கள். 1745இல் இவர் ஜீவசமாதி அடைந்த போது 95 ஆண்டுகள் வயதாகியிருக்க வேண்டும். மிக இளம் வயதிலேயே இசையை நன்கு பயின்றதோடு, புராணங்களிலும் ஆர்வம் கொண்டு படித்திருக்கிறார். வடமொழி இலக்கியங்களில் தீவிரமாகப் பயிற்ச்சி பெற்று அவற்றில் தேர்ந்து விளங்கினார். இளம் வயதில் இவருக்கு துறவறத்தில் பற்று மிகுந்து தன் வாழ்வை சமயம் சார்ந்த பணிகளுக்கென்று அர்ப்பணித்துக் கொண்டார்.

இசைக் கலையில் தேர்ந்தவராக மட்டுமல்லாமல் நடனக் கலையிலும் இவர் தேர்ச்சி பெற்றிருந்தார். இவருடைய சங்கீத படைப்புக்களில் 34க்கும் மேற்பட்ட ராகங்களைக் கையாண்டிருக்கிறார். தாள வகைகளிலும் இவர் திரிபுட, ஆதி, ரூபகம், சாபு, ஜம்ப, மத்ய, விளம்ப, ஏக, அட தாளங்களைக் கையாண்டிருக்கிறார். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் நாட்டியத்தில் பயன்படுத்தி ஆடும் வகையில் இயற்றப்பட்டிருப்பதை உணர முடிகிறது. இவர் இயற்றிய நூல்கள் பதினைந்துக்கும் மேற்பட்டவை. இவைகளில் சில காசி இந்து சர்வகலாசாலையில் கிடைக்கின்றன. பாரிஜாதபஹரணம் எனும் நூல் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் கிடைக்கிறது.

ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி என்பது இவருடைய சிறப்பான படைப்பாக விளங்குகிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகளை விளக்கும் இந்த நூல் வடமொழியில் இயற்றப் பட்டிருக்கிறது. யமுனை நதிக்கரையில் கோபியர்களுடன் ஓடி விளையாடித் திரிந்த பால கிருஷ்ண லீலைகளை விளக்கும் வகையில் அமைந்த இந்த பாடல்கள் ருக்மணி கல்யாணம் வரையில் சொல்லப்பட்டிருக்கிறது. தரங்கம் எனும் சொல்லுக்கு அலைகள் என்பது பொருள். கடல் அலைகளைப் போல மேலே மேலே வந்து மோதும் இசை தாளக் கட்டில் இவரது தரங்கிணி அமைந்திருப்பதால் இந்தப் பெயர் பெற்றது. மிக எளிமையான அழகான வரிகளைக் கொண்டது இந்த தரங்கிணி. ஜெயதேவரின் அஷ்டபதி இவருக்கு உந்துதலாக இருந்திருக்கலாம்.

இவர் வாழ்ந்த ஊரைச் சுற்றியுள்ள நடுக்காவேரி, வரகூர், திருப்பூந்துருத்தி ஆகிய இடங்களில் ஆற்றங்கரை தோப்புகளும், துறவுகளும் இவருடைய கவிதா சக்தியை ஊக்குவித்திருக்க வேண்டும். இவர் இப்படி இசையும், இறை பக்தியுமாக இருந்த நிலையில் இவருக்குத் தீராத வயிற்று நோய் வந்து துன்பப்படுத்தியது. தன் நோய் தீர ஏழுமலையான் அருள் நாடி அங்கு செல்ல உடலில் வலிமை தர வேண்டி இறைவனிடம் முறையிடலானார். அப்போது எழுந்த ஒரு தெய்வீக ஒலி இவர் கண்களுக்குத் தென்படும் ஒரு பன்றியைப் பின் தொடர்ந்து, அது எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் செல்லப் பணித்தது. அப்படி அவர் கண்ணில் பட்ட ஒரு பன்றியை இவர் பின் தொடர அது பூபதிராஜபுரம் எனும் ஊரைச் சென்றடைந்தது. அந்த ஊர்தான் இப்போது வரகூர் எனப்படும் தலம். இவரைப் பற்றி அறிந்திருந்த வரகூர் மக்கள் இவர் தங்கள் ஊருக்கு வருவதையறிந்து மகிழ்ச்சியடைந்தனர். இவருடைய வரவுக்குப் பின் அவ்வூர் மக்கள் இவரது வழிகாட்டுதலோடு அங்கு வெங்கடேசப் பெருமானுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவித்தார். பின்னர் இவர் குடமுருட்டி ஆற்றின் கரையில் தன் வாழ்வைக் கழிக்கத் தொடங்கினார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *