பதினெண் கீழ்க்கணக்குநூல்களில் சமயங்களும், புத்திலக்கிய வளர்ச்சிநிலைகளும்

0

— முனைவர் மு.பழனியப்பன்.

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

 

 

 

படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் பின்புலம் என்பது இன்றியமையாதது. ஒரு படைப்பு எழுவதற்கும், படைப்பாளன் எழுதுவதற்கும் ஒரு மன எழுச்சி ஏற்பட வேண்டும். இந்த மன எழுச்சி படைப்பெழுச்சியாக மாறி, தக்கதொரு வடிவம் கொண்டு வாசகத் தளத்திற்கு முழுமையான படைப்பாக வந்து சேர்கின்றது. ஒரு படைப்பு முழுமையான படைப்பாக, வெற்றிகரமான படைப்பாக அமைய அதன் வடிவம், அதன் கருத்து, நடை, அதன் பொதுமைத்தன்மை, அதன் பன்முகத்தன்மை, இலக்கியத் தன்மை போன்ற பல நிலைகள் காரணங்களாக அமைகின்றன. இக்காரணங்கள் வலுப்பெற்று வெற்றிகரமான படைப்பாக மிளர்ந்த ஒன்று காலாகாலத்திற்கும் அழியாமல் சமுதாயத்தின் முன்னோடி இலக்கியமாகக் கருதப்பட்டு நிலைப்படுகின்றது. அவ்வகையில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய கால இலக்கியங்களாக இருந்தாலும் அவை தன் காலச் சூழலில் நின்றுகொண்டு, இன்றைய சமுதாயத்தின் நெறிகாட்டு இலக்கியங்களாக முன்னோடி இலக்கியங்களாக அமைந்து சிறக்கின்றன. அவற்றின் நீதி சொல்லும் பாங்கு புதிய இலக்கிய வகை உருவாகக் காரணமாகியது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுதப்பட்ட ஆசிரியர் அவர்சார்ந்த சமயம் ஆகியவற்றின் காரணமாக சமயப் பின்புலத்தையும் பெற்றமைகின்றன. இப்பின்புலம் அக்கால நிலையில் சமயங்கள் பெற்றிருந்த ஏற்றத்தைக் காட்டுவனவாக உள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அவற்றின் கடவுள் வாழ்த்துகளை அடிப்படையாகக் கொண்டு பகுக்கும்போது அவைதிக சமயங்கள், வைதிக சமயங்கள் என்ற இருநிலைப் பகுப்பினை உணரமுடிகின்றது. இவைதவிர சமயப்பொதுமை என்ற நிலையையும் பதினெண் கீழ்க்கணக்கு நூல் பரப்பில் காணமுடிகின்றது.

அவைதிக சமயங்களாகக் கொள்ளத்தக்கன சமணம், பௌத்தம் ஆகியனவாகும். இவற்றில் ப சமணம் சார்ந்த கடவுள் வாழ்த்துக்களைப் பெற்ற பதினெண் கீழ்;க்கணக்கு நூல்களாக, நாலடியார், பழமொழி, ஏலாதி, சிறுபஞ்சமூலம், திணைமாலை நூற்றைம்பது ஆகிய நூல்கள் அமைகின்றன. பௌத்த சமயம் சார்ந்த கடவுள் வாழ்த்துகள் எதுவும் எந்நூலுக்கும் அமையவில்லை. இதன் காரணமாகப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் காலத்தில் பௌத்தச் செல்வாக்கு குறைந்தே இருந்துள்ளது என்பதை உணரமுடிகின்றது.

வைதீக சமயங்கள் என்ற நிலையில் சைவம் வைணவம் ஆகியன அமைகின்றன. சைவம் சார்ந்தனவாக ஆசாரக் கோவை, ஐந்திணை எழுபது, இன்னிலை ஆகிய நூல்கள் அமைகின்றன. திருமால் பற்றிய கடவுள் வாழ்த்துகளை உடைய நூல்களாக நான்மணிக்கடிகை, திரிகடுகம், கார் நாற்பது ஆகியன அமைகின்றன. சிவன், திருமால் இருவரையும் பாடுவனவாக இனியவை நாற்பது, இன்னா நாற்பது ஆகியன அமைகின்றன. திருக்குறள் சமணப் பொதுமை வாய்ந்ததாக அமைகின்றது. ஆசாரக் கோவை வேதநெறி சார்ந்ததாக அமைகின்றது. மீதம் ஐந்து நூல்கள் சமயச் சார்பினை அறியா நிலையில் உள்ளன.

அவைதீக சமயங்கள்
அவைதீகம் என்றால் வேதநெறியை ஏற்காதது என்று பொருள்படும். வேதங்கள் சொல்லிய முறைக்கு முன்னான சமயங்கள், அல்லது வேதநெறிப்பாடாத சமயங்கள் அவைதீக சமயங்கள் எனப்படுகின்றன. இவ்வகையில் சமணமும், பௌத்தமும் அவைதீக சமயங்கள் ஆகின்றன. அதாவது ஆரியர் வருகைக்குப் பின்பு ஏற்படுத்தப்பட்ட வேத நெறி சார்ந்த சமயங்களை வைதீக சமயங்கள் என்றும், அதற்கு முன்னான முரணான சமயங்களை அவைதீக சமயங்கள் என்றும் பிரிப்பது சமயப் பாகுபாடாகும்.

சமணம்
சமண சமயத்தாக்கம் அதிகமாக இருந்த காலமாக பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் காலம் அமைகின்றது. இதற்குப் பின் வந்த களப்பிரர் காலத்திலும் சமண சமயத்தின் ஆளுமை இருந்தமையை இலக்கிய வரலாறுகள் உணர்த்துகின்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காணப்படும் சமண சமய கடவுள் வாழ்த்துகள் சமயம் பற்றி அறிய முக்கிய சான்றாதாரங்களாக உள்ளன.

நாலடியார் சமண சமயம் சார்ந்த பலரால் எழுதப் பெற்றது. இதன் கடவுள் வாழ்த்துப்பகுதியில், இடம்பெறும் பாடல் பின்வருமாறு.
வான்ஈடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை- யாம் நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும் எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று”
என்ற இப்பாடல் அருக வணக்கமாக அமைகின்றது. வானவில்லின் வரவையும் செலவையும் அறிய இயலாது. அதுபோன்று உயிர்களின் பிறப்பு இறப்பு ஆகியன பற்றியும் அறிந்துகொள்ள இயலாது. பாதம் புவியில் பாடாத அளவு பெருமை உடைய அருகக்கடவுளை வணங்கி நாம் எண்ணியதை முடிக்க வேண்டுவோம் என்பது நாலடியாரின் தெய்வ வணக்கம் ஆகும்.

மேலும் நாலடியாரில் நிலையாமை கருத்துக்கள் முன்னணியில் அமைக்கப்பெற்றுள்ளன. செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியனவும் வலியுறுத்தப்பெற்றுள்ளன. இவற்றின் வழி சமண சமயக் கருத்துகளை அறிந்து கொள்ள முடிகின்றது.
பழமொழி நானூறில் வரும் கடவுள் வாழ்த்து பின்வருமாறு
~அரிதவித்து ஆசின்று உணர்ந்தவன் பாதம்
விரிகடல் சூழ்ந்த வியன்கண் மாஞாலத்து
உரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்
பெரியதன் ஆவி பெரிது
என்ற பாடல் பழமொழி நானூற்றின் முன்பகுதியில் அமைந்துள்ள கடவுள் வாழ்த்துப் பாடலாகும். இதில் பெரியதன் ஆவி பெரிது என்று ஒரு பழமொழி எடுத்தாளப்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. எனவே இக்கடவுள் வாழ்த்தும் பிறறொரு புலவரால் எழுதப்பாடாது முன்றுறையரையனாராலேயே எழுதப்பெற்றிருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது.

பெரியதன் ஆவி பெரிது என்ற இந்த உவமை சமணசமயம் சார்ந்த உவமையாகும். சமண சமயத்தில் உடல் பெரியதாக இருந்தால் அதனுள் இருக்கும் உயிரும் பெரியதாக இருக்கும் என்ற கருத்து விளங்குகின்றது. சீவன் அல்லது உயிருக்குப் பருமனும்அளவும் குறிக்கின்றது சமணரது தத்துவம். உயிர் எந்த உடலை தனக்கு உறைவிடமாகக் கொள்கின்றதோ அந்த உடலின் பருமனுக்கு ஏற்பத் தன்னைக் கூட்டவும் குறைக்கவும் விரிக்கவும் சுருக்கவும் வல்லது (கி.லெட்சுமணன், இந்தியத் தத்துவ ஞானம்,ப.96) என்ற கருத்தினை மேற்கொண்டுப் பார்க்கையில் பழமொழிநானூற்றின் கடவுள் வாழ்த்து சமண சமயக் கொள்கைக்கு இடம் தருவதாக இருப்பதை அறியமுடிகின்றது.

பரந்த கடல் சூழ்ந்த உலகில் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று குற்றங்களையும் கெடுத்துக், குற்றமற்றவராக விளங்கும் இறைவனின் திருவடிகளை அறிந்தவர்களின் உயர்வு பெரிதாகும். அது பெரிய உடலின் ஆவி பெரியதாக அமைவதுபோல் அமையும் என்பது இப்பாடலின் கருத்தாகும்.

இந்நூலுக்கு ஒரு தற்சிறப்புப் பாயிரம் ஒன்று உள்ளது.இதிலும் இந்நூல் சமணம் சார்ந்தது என்பது தெரிவிக்கப்பெற்றுள்ளது.
~பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்
பண்டைப்பழமொழி நானூறும் கொண்டு இனிதா
முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்
இன்றுறை வெண்பா இவை.
என்ற இப்பாடலில் அசோக மரத்தின் நிழலில் இருக்கும் பெருமான் என்று அருகப் பெருமான் வாழ்த்தப் பெறுகிறான். இவற்றின் வாயிலாக பழமொழி நானூறு சமணசமயம் சார்ந்தது என்பது தெளிவாகின்றது.

சிறுபஞ்சமூலமும் சமணம் சமயம் சார்ந்த நூலாகும். இந்நூலில் இடம்பெற்றுள்ள கடவுள் வாழ்த்து பின்வருமாறு.
முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்
பழுதின்றி ஆற்றப் பணிந்து – முழுதேத்தி
மண்பாய ஞாலத்து மாந்தர்க்கு உறுதியா
வெண்பா உரைப்பான் சில
என்ற கடவுள் வாழ்த்து காரியாசானின் சிறுபஞ்சமூலத்தின் முன்பகுதியில் இடம்பெறுகின்றது.

காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்றினையும் ஒழித்து, முழுதுணர்ந்து, முதுமை பெறாத இறைவனின் பாதத்தை குற்றமின்றி வணங்கி அப்பெருமானின் குணங்களைப் போற்றி இவ்வுலகத்திற்கு நன்மை உண்டாகும் வண்ணம் சிறுபஞ்சமூலம் என்ற நூலை நான் உரைப்பேன் என்ற ஆசிரியர் கூற்றாகக் கடவுள் வாழ்த்து அமைகின்றது.
ஏலாதி என்ற நூலும் சமண சமயச் சார்புடைய நூலாகும்.
அறுநால்வர் ஆய்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநாலவர் பேணி வழங்கிப் பெறுநூல்
மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்கு
இறைபுரிந்து வாழ்தலியல்பு.
என்ற இப்பாடலில் சமண சமய அடிப்படைகள் பல கூறப்பெற்றுள்ளன. சமண சமயத்தில்தீர்த்தங்கரர்கள்- 24, அவதராங்கள்-24, தேவராசி -4, சக்கரவர்த்திகள் -12, பலதேவர்-9, வாசுதேவர் -9 என்ற கூறுபாடுகள் ஏற்கப்படுகின்றனர். இவர்கள் கொல்லாமை முதலான அறங்களை உலகில் பரவச் செய்தவர்கள் ஆவர். இவர்களின் மேலாக, வேதங்களால் உணர்த்தப்படுகின்ற இறைவனை எப்போதும் துதி செய்து வாழுங்கள். இறந்தபின் இதற்கு வாய்ப்பில்லை. தேவர்களுக்கு அரசனும் இதனையே செய்து பெரும்பதவி பெற்றான் என்கிறது இப்பாடல்.

ஏலாதி நூலின் ஆசிரியராக விளங்கும் கணிமேதாவியார் பாடிய அகத்துறைப் பாடல் திணைமாலை நூற்றைம்பது ஆகும். இந்நூலும் சமண சமயத்தவரால் எழுதப்பெற்றது என்பதற்கு ஏலாதி சான்றாக அமைகின்றது.

இவ்வாறு சமண சமய நூல்களின் கடவுள் வாழ்த்துகள் அக்கடவுளின் தன்மைகளை, இயல்புகளை, அவர்களின் சுற்றததை எடுத்துக்காட்டுகின்றது. இதன் காரணமாக பதினெண் கீழ்க்கணக்கு காலத்தில் சமணத்திற்கு உயரிய இடம் இருந்ததை உணரமுடிகின்றது. அதாவது ஏறக்குறைய ஐந்து நூல்கள் என்ற பெரிய எண்ணிக்கை சமண சமயத்தின ஆளுமை உயர்வை இக்காலத்தில் காட்டுவதாக உள்ளது.

வைதீக சமயங்கள்
வைதீக சமயங்கள் என்ற நிலையில் வேதநெறிக்கு உட்பட்ட சமயங்களாக சைவம், வைணவம் ஆகியன கொள்ளப்பெறுகின்றன. இவை பற்றிய குறிப்புகள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காணப்பெறுகின்றன.

சைவம்
சிவனை முழுமுதல் தெய்வமாகக் கொண்ட சமயம் சைவ சமயம் ஆகும். இச்சமயத்தின் கடவுளான சிவனைப் பற்றிக் கடவுள் வாழ்த்தில் பாடி சைவசமயப் பின்புலம் ஏற்படுத்திக் கொண்ட நூல்கள் நான்காகும். அவை ஆசாரக் கோவை, ஐந்திணை எழுபது, இன்னிலை ஆகியன சிவபெருமானின் பாடலைத் தம் கடவுள் வாழ்த்தாகக் கொண்டுள்ளன. இவற்றின் வழியாக சிவபெருமான் பற்றி கருத்துகளை அறிந்து கொள்ளமுடிகின்றது.

பெருவாயின் முள்ளியார் பாடிய ஆசாரக் கோவையின் சிறப்புப் பாயிரமாக சிவனைப் போற்றும் கடவுள் வாழ்த்து ஒன்று அமைந்துள்ளது.
ஆர்எயில் மூன்றும் அழித்தான அடி ஏத்தி
ஆரிடத்துத் தான்அறிந்த மாத்திரையான் ஆசாரம்
யாரும் அறிய அறன் ஆய மற்றவற்றை
ஆசாரக் கோவை எனத்தொகுத்தான் – தீராத்
திருவாயில் ஆய திறல்வண் கயத்தூர்ப்
பெருவாயின் முள்ளிஎன் பான்
என்ற இப்பாடலில் ஆர் எயில் மூன்றும் என்பது திரிபுரம் பற்றியதாகும். திரிபுரத்ஐ;த எரித்தவன் அடி ஏத்துவதாக ஆசாரக்கோவையின் சிறப்புப் பாயிரம் அமைகின்றது.

மேலும் இவ்வாசாரக் கோவையின் உட்பகுதியில் அமைந்துள்ள ஒருபாடல் வேதநெறியைப் போற்றுகின்றது.
தக்கிணை, வேள்வி, தவம், கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்து உய்க்க உய்யாக்கால்
எப்பாலும் ஆகா கெடும் (பாடல். 3)
என்ற பாடலில் வேதநெறிமுறை காட்டப்பெற்றுள்ளது. எரியால் பொருள்களை அவிக்கும் வேள்வி, அந்தணர்களுக்கு வழங்கப்பெறும் ;தட்சிணை போன்றன வேதக்குறிப்புகள் ஆகும். இவ்வகையில் வேதநெறியின் பாற்பட்டதாக ஆசாரக்கோவை அமைகின்றது.

மூவாதியார் படைத்த ஐந்திணை எழுபது என்ற நூலில் விநாயக வணக்கம் இடம்பெற்றுள்ளது.
எண்ணும் பொருளினிதே எல்லா முடித்தெமக்கு
நண்ணும் கலையனைத்து நல்குமால்- கண்ணுதலின்
முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் ஆலஞ்சேர்
சண்டத்தான் ஈன்ற களிறு
என்ற பாடலில் ஈசனைக் கண்ணுதல் தெய்வமாக அதாவது நெற்றியில் கண் பொருந்தியவனாக, மூலமாக விளங்குகின்றவனாக, கண்டத்தில் விடம் உடையவனாகச் சிவனைக் காட்டி அத்தெய்வத்தின் மகனான விநாயகப் பெருமான வேண்டிய கலைகள் அனைத்தும் தருவான் என்று உரைக்கப்பெற்றுள்ளது.

வைணவம்
வைணவத்தின் முதல் தெய்வம் திருமால் ஆவார். இவர் முல்லை நிலத் n;தய்வமாகச் சங்ககாலத்தில் வைத்து எண்ணப்பெற்றார். இதன் தொடர்ச்சிப் பதினெண் கீழக்கணக்கு நூல்களில் காணக்கிடைக்கின்றது. திரிகடுகம், கார்நாற்பது, நான்மணிக்கடிகை ஆகிய நூல்கள் திருமால் வணக்கத்தைப் பெற்றுள்ளன.
~மதி மன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்
கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்
முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர்மலர் மற்றவன் கண் ஒக்கும் ப+வைப்
புதுமலர் ஒக்கும் நிறம்
என்பது விளம்பிநாகனார் பாடிய நான்மணிக்கடிகையின் கடவுள் வாழ்த்துப் பகுதியாகும். இதில் திருமாலின் முகம் முழுமதி போன்றது என்றும், திருமாலின் கையிலுள்ள சக்கரம் சூரியனைப் போன்றது என்றும் அவனின் விழிகள் தாமரைமலர் போன்றது என்றும், அவன் திருமேனியின் நிறம் காயா மலர் போன்றது என்றும் கருத்துக்கள் அமையப் பாடப்பெற்றுள்ளன. இதனைப் பாடிய விளம்பிநாகனார் கடவுள் வாழ்த்தாக மற்றொரு பாடலையும் தருகின்றார்.
படியை மடியகத் திட்டான் அடியினால்
முக்காற் கடந்தான் முழுநிலம் – அக்காலத்தும்
ஆப்பனி தாங்கிய குன்றெடுத்தான் கோவின்
அருமை அழித்த மகன்
என்ற இப்பாடலில் திருமாலி;ன் செயல்கள் எடுத்துக்காட்டப்பெறுகின்றன. உலகைத் தன் மடியில் வைத்தவன் திருமால். அவன் மூவடியால் உலகை அளந்தவன். குன்றைக் குடையாகப் பிடித்து ஆநிரைகளைக் காத்தவனும் அவனே. அரிய நெருப்பு மதிலான ~சோ|வை அழித்தவனும் அவனே. இவ்வாறு அவனின் அருமை பெருமைகளைச் சொல்லி நான்மணிக்கடிகை திருமாலை வாழ்த்துகின்றது.
நல்லாதனார் இயற்றிய திரிகடுகத்தில் திருமால் வாழ்த்து அமைந்துள்ளது.
~கண்ணகல் ஞாலம் அளந்துதூஉம் காமருசீர்த்
தண்ணறும் ப+ங்குருந்தம் பாய்ந்ததூஉம் நண்ணிய
மாயச் சகடம் உதைத்தூஉம் இம்மூன்றும்
ப+வைப்ப+ வண்ணன் அடி
என்ற இப்பாடலில் திருமாலின் அலகிலா விளையாட்டுகள் எடுத்துக்காட்டப்பெறுகின்றன. உலகை அளந்தவன் கண்ணன். குருந்த மரம் முறித்ததும், வண்டியை உதைத்ததும் திருமாலே. அவன் காயாம் ப+வைப் போன்ற கரிய நிறமுடைய திருமால் ஆவான். இவ்வாறாக திருமாலின் பெருமையைப் பேசுவதாக அமைவது இக்கடவுள் வாழ்த்தாகின்றது.

கார் நாற்பது என்ற பதினெண்க் கீழ்க்கணக்கு நூலின் கடவுள் வாழ்த்தும் திருமாலைப் போற்றுகின்றது.
~பொருகடல் வண்ணன் புனைமார்பிற்றார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ
வருதும் என மொழிந்தார் வாரார் கொல் வானம்
கருவிருந் தாலிக்கும் போழ்து
என்ற இந்தப் பாடலில் திருமால் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. கார் என்பது முல்லை நிலத்தின் பெரும்பொழுதாகும். இந்நிலத்தினைப் பற்றிய பனுவல் கார் நாற்பது. முல்லை நிலத்திற்கு உரிய தெய்வம் திருமால். அத்தெய்வத்தை முதல் பாடலில் சுட்டி அதனையே கடவுள் வாழ்த்தாகவும் ஏற்கத்தக்க வகையில் இந்நூலின் முதல் பாடலை மதுரை கண்ணங்கூத்தனார் பாடியுள்ளார்.

கடலின் நிறத்தை உடைய திருமாலின் மார்பில் உள்ள மாலை போன்று வானவில்லை குறுக்காக நிறுத்தி மழையானது பெய்யத் தொடங்கியது. இம்மழைக்காலத்தில் வருவோம் என்று சொல்லி விட்டுச்சென்ற தலைவர் வாராது இருப்பாரா என்பது இப்பாடலின் கருத்தாகும்.

இன்னிலையில் சிவபெருமானையும், உமையம்பிகையையும், சிவபெருமான் பெற்றெடுத்த மற்றொரு மகனான முருகனையும் வணங்குவதாகக் கடவுள் வாழ்த்து அமைகின்றது,
~வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான்
வாலிழை பாகத்து அமரிய கொழுவேல்
கூற்றம் கதழ்ந்நெறி கொன்றையன்
கூட்டா உலகம் கெழீஇய மலிந்தே
என்ற பாடல் கடவுள் வணக்கமாக அமைகின்றது. இதனை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. ஆனால் இன்னிலையை எழுதியவர் பொய்கையார் ஆவார். இப்பாடலில் வேலனைப் பெற்றெடுத்த விரிந்த சடையை உடைய பெருமான் எமனைச் சினந்தழித்தக் கொன்றை மாலையை உடைய பெருமான் ஆகிய சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்துள்ள உமையம்பிகையின் இணையோடு அமர்ந்திருக்க உலகம் நன்மை பெறுகின்றது என்பது இப்பாடலின் பொருளாகின்றது.

சிவனையும் திருமாலையும் ஒருங்கிணைந்த நிலையில் பாடப்பெற்றுள்ள கடவுள் வாழ்த்துகள் வைதிக நெறியில் அமைந்த மும்மூர்த்திகளையும் கடவுள் வாழ்த்தில் பாடும் முறைமையும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காணப்படுகின்றது. இனியவை நாற்பதின் கடவுள் வாழ்த்தும் முக்கடவுளர்களைத் தொழும் நிலையில் அமைகின்றது.
~கண்மூன்றுடையான் தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய் மாலையானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது
என்று சிவன், திருமால், நான்முகன் ஆகிய மூவரையும் வணங்குவதாக ப+தஞ்சேந்தனாரின் இனியவை நாற்பது விளங்குகின்றது.

இன்னாநாற்பதின் கடவுள் வாழ்த்து, சிவன், திருமால், பலராமன் ஆகிய மூவரையும் வாழ்த்துகின்றது.
முக்கண் பகவன் அடிதொழா தார்க்கின்னா
பொன்பனை வெள்ளையை உள்ளா தொழுகின்னா
சக்கரத்தானை மறப்பின்னா ஆங்கின்னா
சத்தியான் தாள்தொழாதார்க்கு
என்பது இன்னாநாற்பதின் கடவுள் வாழ்த்துப் பகுதியாகும். இப்பாடலில் மூன்று கண்களை உடைய சிவன், பலராமன், திருமால் ஆகிய மூவரையும் தொழாமல் இருப்பது இன்னாதது என்று குறிக்கிறார் கபிலர்.

மேற்சொன்னவற்றைத் தொகுத்துக் காணும்போது, வேதநெறியின் பாற்படாத அவைதீக சமயங்களுக்கும், வேதநெறியின் பாற்பட்ட வைதீக சமயங்களுக்குமான போட்டி மிகுந்த காலப் பகுதியில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுந்துள்ளன என்பது தெளிவாகத் தெரிகின்றது.

திருக்குறள் வேதநெறியின் படியும் அமையாமல், அவைதீகத்தையும் சார்ந்துவிடாமல் பொதுநிலையில் நிற்கின்றது. திருக்குறள்
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ;ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று (குறள் 259)

என்று வேள்வியை மறுக்கின்றது. ஏனெனில் வேள்வியில் ;உயிர் செகுத்து சதைத் திரளைப் போடும் வழக்கம் இருந்துள்ளது. இவ்விரண்டையும் திருவள்ளுவர் மறுக்கின்றார். அதே நேரத்தில் அவைதீக நெறிப்படவும் அவர் தன் நூலை அமைத்துக்கொள்ளவில்லை.
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக் கெடும் நோய் (குறள் 360)

என்று சமணக் கொள்கையை ஏற்கும் வள்ளுவர் இன்பத்துப்பால் என்ற ஒன்றைப் பாடுகின்றார். இவ்வின்பத்துப்பால் காமம் சார்ந்த ஒன்றாகும். தமிழ் நெறிப்பட்ட நிலையில் அமைந்த களவியல், கற்பியல் ஆகியவற்றை வள்ளுவர் ஏற்றுக்கொள்வதில் இருந்து அவைதீக நெறியிலும் அவர் தன்னைச் சார்ந்து அமைத்துக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது.

நாலடியார் பாடிய காமத்துப்பாலுக்கும் திருக்குறள் காமத்துப்பாலுக்கும் அடிப்படையில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. பொதுமகளிர், கற்புடை மகளிர் ஆகிய இருவரின் இழிவையும் சிறப்பையும் எடுத்துரைக்கும் பணியை மட்டுமே நாலடியார் செய்துள்ளது. ஆனால் வள்ளுவர் காதலின் முதல்நிலை முதல், ஊடல் வரைப் பாடியுள்ளார். இதனால் வள்ளுவர் பொதுநிலை சார்ந்து தன் நூலைச் சமயச் சார்பு இன்றிப் படைத்துள்ளார் என்பது தெளிவு.

இவ்வாறு வெளிப்படத் தன்னை சமய அடிப்படை வாய்ந்ததாகக் காட்டிக்கொள்ளும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை அடிப்படையாக வைத்து அவற்றின் சமய நிலையை அதன் பின்புலத்தை அறிந்து கொள்ள முடிகின்றது.

புத்திலக்கிய வகைகள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை அடிப்படையாகக் கொண்டு நீதிநூல்கள் பாடும் வகைமை தோன்றியது. முற்கால நீதி நூல்கள் என்று பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை வழங்கும் முறைமை ஏற்பட்டது. பிற்காலத்தில் நீதி நூல்கள் தோன்றும் வாய்ப்பும் ஏற்பட்டது.

பிற்கால ஒளவையார் பாடிய ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்றன பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் அமைந்துள்ள நீதிநூல்களின் தொடர்நிலைசார்ந்தனவாகும். இவற்றைத் தொடர்ந்து எழுந்த அருங்கலச்செப்பு, முனைப்பாடியார் பாடிய அறநெறிச்சாரம், அதிவீரராம பாண்டியர் பாடிய வெற்றிவேற்கை, குமரகுருபரர் பாடிய நீதி நெறி விளக்கம், சிவப்பிரகாசர் பாடிய நன்னெறி, உலகநாதப் பண்டிதரால் பாடப்பெற்ற உலகநீதி, மாயுரம் வேதநாயகம் பிள்ளையால் பாடப்பெற்ற நீதிநூல் பெண்மதி மாலை போன்றனவும் நீதி இலக்கிய வகைமையின் தொடர்ச்சியாக அமைகின்றன.

மேலும் புதிய வகைமைகள் தோன்றவும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் காரணமாக அமைந்தன.

ஆத்திச்சூடிகள்
ஒருவரியில் அறத்தைச் சொல்லும் மரபு பதினெண்கீழ்க்கணக்கு நூலான முதுமொழிக்காஞ்சியில் துவக்கி வைக்கப்பெற்றது. இம்மரபு ஒளவையாரின் ஆத்திச்சூடியானது. இதன்பின் பல ஆத்திச் சூடிகள் வர ஆரம்பித்தன.

பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி, பாரதிதாசனின் ஆத்திச்சூடி, வ.சுப. மாணிக்கத்தால் எழுதப்பெற்ற தமிழ்ச் சூடி, ச.மெய்யப்பன் எழுதிய அறிவியல்சூடி, நா.ரா. நாச்சியப்பன் எழுதிய தமிழ்சூடி, சிற்பி எழுதிய ஆத்திச் சூடி போன்ற பல ஆத்திச்சூடிகள் புதுவகையாகப் பதினெண்க் கீழ்க்கணக்கு நூல்களின் தாக்கத்தால் படைக்கப்பெற்றன.

திருக்குறள் தொடர்பான புதிய ஆக்கங்கள்
திருக்குறளை மையமாக வைத்துப் பல ஆக்கங்கள், பல வகைமைகள் தோன்றின. ஒளைவயார் படைத்த ஞானக்குறள், வ.சுப. மாணிக்கானர் படைத்த மாணிக்கக்குறள் ஆகியன திருக்குறளின் தாக்கத்தால் எழுந்தவை. இதன் யாப்பு வடிவமான குறள் வெண்பா யாப்பு வடிவமும் பிறரால் பின்பற்றப்பட்டது. குறிப்பாக சைவ சித்தாந்த நூலான உமாபதி சிவம் படைத்த திருவருட்பயன் வள்ளுவ யாப்புமுறையைப் பின்பற்றியது.

திருக்குறளை முன்னிறுத்த அதனைச் சார்ந்து பல இலக்கியங்கள் தோன்றின. திருக்குறள் குமரேச வெண்பா, ரங்கேச வெண்பா போன்றன இவ்வகையில் குறிக்கத்தக்கன. கவிராஜ பண்டிதர் எனப்படும் ஜெகவீரபாண்டியனார் இயற்றி திருக்குறள் குமரேச வெண்பா மிகச் சிறப்பானது. முதல் இரு அடிகளில் குறள், அடுத்தது ஒரு தனிச்சொல், அடுத்த இருஅடிகளில் மேற்காட்டிய குறளுக்கு எடுத்துக்காட்டு நிகழ்ச்சி என்று அத்தனை குறள்களுக்கும் நேரிசை வெண்பா யாப்பில் ஒரு நூலை கவிராஜபண்டிதர் திருக்குறள் குமரேச வெண்பா எனப் படைக்கின்றார். இதோடு நில்லாமல் குறளுக்கும், எடுத்துக்காட்டிற்கும் உரைவிளக்கம் தருகின்றார். இவ்வடிப்படையில் ரங்கேச வெண்பா போன்றனவும் எழுந்தன.

திருக்குறள் தமிழில் அதிகம் உரையாசிரியர்களைப் பெற்ற நூலாகும். இதன் சொற்சுருக்கம்,செம்மை,தெளிவு கருதிப் பற்பலரும் உரை வரைந்தனர். உரை வரைந்து கொண்டுவருகின்றனர். இவை அனைத்தும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மீது மக்கள் கொண்டுள்ள பற்றினை விளக்குவன என்றால் மிகையாகாது.

இன்னா, இனிய
இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்று வாழ்வில் இன்னாதவற்றையும் இனியவற்றையும் காட்டுவன பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும். பிற்காலத்தில் பாவேந்தர் பாரதிதாசனால் இயற்றப்பெற்ற குடும்பவிளக்கு, இருண்ட வீடு ஆகிய இரு முரண்பட்ட கருத்து கொண்ட இலக்கியங்கள் படைக்கப்படவும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் வழிவகுத்துள்ளன.

இன்னும் பற்பல முயற்சிகள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பெற்று வருகின்றன. இவ்வகையில் சமயநிலையிலும், இலக்கிய வகைப் பெருக்க நிலையிலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன.

முனைவர் மு.பழனியப்பன்
தமிழ்த்துறைத் தலைவர், இணைப் பேராசிரியர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திருவாடானை

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *