கி.வா.ஜ.வின் ‘வாழும் தமிழ்’ சொல்லதிகார ஆராய்ச்சி”
— முனைவர் சி.சேதுராமன்.
தமிழ்த்தாத்தா உ.வே. சா. வின் கூடவே இருந்து தொண்டாற்றியவர்தான் வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன். உ.வே.சா மற்றும் கி.வா.ஜ. இருவரின் பணிகளாலும் முயற்சியாலும்தான் தமிழன்னை புதுப் பொலிவு பெற்றாள்.
கிருஷ்ணராயபுரத்தில் வாசுதேவ ஐயருக்கும் பார்வதி அம்மாளுக்கும் 1906 -ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி கி.வா.ஜ. பிறந்தார். தன் இறுதி மூச்சு உள்ளவரை சொற்பொழிவு செய்து, கேட்போர் மனம் மகிழச்செய்த கி.வா.ஜ., பிறந்தவுடன் அழவே இல்லையாம். எல்லோரும் கவலை அடைந்து மருத்துவம் செய்து குழந்தையை அழ வைத்தார்களாம். அழாமல் பிறந்த அவர், பின்னாளில் எத்தனையோ பேர்களின் கண்ணீரைத் துடைத்துள்ளார்.
கி.வா.ஜ. குடும்பம் பிறகு சேலம் மாவட்டத்தில் உள்ள மோகனூருக்குக் குடிபெயர்ந்தது. இவர், அங்குள்ள திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். மோகனூரில் சிறு குன்று ஒன்று இருக்கிறது. அதற்குக் “காந்தமலை” என்று பெயர். அக்குன்றில் முருகப்பெருமான், தண்டாயுதபாணி திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அம்முருகப் பெருமானிடத்தில் சிறுவயது முதலே இவருக்கு ஈடுபாடு உண்டு. இவர் அப்பெருமான் மேல் பல பாடல்கள் புனைந்துள்ளார். இரவு, பகல் பாராது எப்போதும் அந்த முருகப்பெருமான் அருகிலேயே இருப்பார்.
தன் மேற்படிப்பைத் தொடர கி.வா.ஜ. மீண்டும் கிருஷ்ணராயபுரம் வந்தார். கணிதமும், இயற்பியலும் அவருக்கு மிகவும் பிடித்தமான பாடங்கள். தமிழ்ப் பற்றும் தமிழறிவும் அவருக்குப் பிறப்பிலேயே இருந்தன. சிறுவயது முதல் காந்தியடிகளிடம் பற்றும் மதிப்பும் இருந்த காரணத்தால் அவர் எப்போதும் கதராடையையே அணிய ஆரம்பித்தார்.
கவிதை இலக்கணம் முழுவதுமாகத் தெரிவதற்கு முன்பே கவிதையின் ஓசையை உணர்ந்து பாடும் ஆற்றல், பன்னிரண்டாவது வயதிலேயே கி.வா.ஜ. வுக்கு ஏற்பட்டுவிட்டது. கி.வா.ஜ.வின் கன்னி முயற்சியில் உருவானதுதான் நடராஜரைப் பற்றி அவர் எழுதிய, “போற்றிப்பத்து” என்னும் பதிகம். பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடும் ஆற்றல் பெற்றவர் கி.வா.ஜ. “ஜோதி” என்ற புனைப்பெயரில் அவ்வப்போது கவிமழை பொழிந்தவர். பழமையின் இலக்கண மரபுகளில் ஊறித் திளைத்தவராக இருந்தும், அந்தப் பழமையின் வளத்தையே உரமாக்கிப் புதிய எளிய இனிய உருவங்களில் கவிதைகளைப் பொழிந்திருக்கிறார்.
1925ஆம் ஆண்டு சேந்தமங்கலம் சென்றார். அங்கே ஐராவத உடையார் என்ற ஜமீன்தார் இருந்தார். அவரது தெய்வ பக்தியும் அறிவாற்றலும் கி.வா.ஜ.வைக் கவர்ந்ததால் அவருடைய நண்பரானார். உடையார் ஒரு தெய்வீக ஆஸ்ரமத்தை அங்கே அமைத்திருந்தார். அந்த ஆஸ்ரமத்திலேயே கி.வா.ஜ. தங்கினார். சேந்தமங்கலத்தில் அவதூத மகான் ஒருவர் இருந்தார். அவரிடம் பக்தி கொண்டு அவரை வணங்குவார். அம்மகானது சீடர் துரியானந்த சுவாமிகளிடம் கி.வா.ஜ. நட்புக் கொண்டிருந்தார்.
கி.வா.ஜ. சேந்தமங்கலம் பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறிது காலம் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். அப்போது அவ்வூரில் இருந்த கிறிஸ்தவ சமயப் போதகர் திரோவர் துரை என்னும் ஆங்கிலேயருக்குத் தமிழ் கற்பித்தார். அப்போதும் முருகப்பெருமான் நினைவாகவே இருந்து, பாடல்கள் புனைவார். சேந்தமங்கலத்தில் இருந்த காசி சுவாமிகள் மூலம் உ.வே.சாமிநாதய்யரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்.
1927-ஆம் ஆண்டு உ.வே.சா. சிதம்பரத்தில் மீனாட்சிக் கல்லூரியில் முதல்வராக இருந்தார். அதனால் அவர் சிதம்பரத்தில் வசித்து வந்தார். உ.வே.சா.விடம் முறையாகத் தமிழ் படிக்க வேண்டும் என்ற பேரவா நாளுக்கு நாள் கி.வா.ஜ.வுக்கு வளர்ந்து கொண்டே வந்தது. அவரது வேட்கையை நன்கு உணர்ந்திருந்த ஐராவத உடையார் 1927-ஆம் ஆண்டு தைப் பூசத்துக்காக வடலூர் புறப்பட்டபோது கி.வா.ஜ.வையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். சிதம்பரத்தில் உ.வே.சா.வைக் கண்டு அவரிடம் கி.வா.ஜ.வை ஒப்படைத்தார். அன்று முதல் உ.வே.சா. அமரர் ஆகும் வரை அவரது நிழல் போலவே இருந்தார்.
உ.வே.சா. ஒரு நிகழ்ச்சியைக் கூறினால், கி.வா.ஜ. அதை எழுத்தில் வடிப்பார். அதில் உ.வே.சா. சில திருத்தங்களைச் செய்வார். அத்திருத்தங்களுடன் கட்டுரையை மிகவும் செம்மையாகவும் சுவையாகவும் எழுதிப் பத்திரிகை அலுவலகத்துக்கு அனுப்பிவைப்பார் கி.வா.ஜ. உ.வே.சா.வின் பெரும்பாலான உரைநடை நூல்கள் எல்லாம் அவ்வாறு உருவானவையே.
கி.வா.ஜ., உ.வே.சா.விடம் தமிழை முறையாகக் கற்றுத் தமிழ் வித்துவான் தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய் பரிசையும் பெற்றார். உ.வே.சா.வின் ஏடு தேடும் பணியிலும், வெளியூர்ப் பயணங்களின் போதும் கி.வா.ஜ. உடன் இருப்பார்.
1932-ஆம் ஆண்டு உ.வே.சா.வின் உதவியால், கலைமகள் பத்திரிகையின் துணையாசிரியர் ஆனார். பிறகு ஆசிரியரானார். கவியரசர் பாரதியாரைப் பற்றிப் பற்பல கட்டுரைகளை எழுதி, “கலைமகள்” இதழில் வெளியிட்டார். அரிய தமிழ் இலக்கியச் செல்வங்களைப் பிற மொழிகளில் மொழிபெயர்க்க உதவினார். படிப்படியாகக் “கலைமகள்” இதழை வளர்த்து அதை ஒரு தரமான நிலைக்கு உயர்த்தினார் என்றால் அதற்கு அடிப்படையான காரணம் கி.வா.ஜ.வின் கடுமையான உழைப்பும், ஊழியர்களிடம் அவர் காட்டிய மனிதநேயமுமே கராமாகும்.
கி.வா.ஜ. சிறந்த சிறுகதை ஆசிரியராகவும் விளங்கினார். தமிழக அரசும், தமிழ் வளர்ச்சிக் கழகமும் அவருடைய சிறுகதைத் திறனைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளன. அவருடைய உள்ளத்தில் ஊடுருவி நிற்கும் பக்தி உணர்வு அவருடைய சிறுகதைகளில் சிறப்பாக வெளிப்பட்டுத்தோன்றும். 1932-ஆம் ஆண்டு அலமேலு என்பவரை மணந்து கொண்டார்.
கி.வா.ஜ.வின் முதல் நூல் காந்தமலை முருகன்மேல் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். கலைமகள் ஆசிரியர் பணியுடன் தன் ஆசிரியர் உ.வே.சா.வின் ஆய்வுப்பணி, பதிப்பு, எழுத்துப் பணிகளுக்கும் வழக்கம் போலவே உதவி செய்து வந்தார்.
வாகீசகலாநிதி, திருமுருகாற்றுப்படை அரசு, தமிழ்க்கவி பூஷணம், உபன்யாசகேசரி, செந்தமிழ்ச்செல்வர், தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித்தவமணி, ஆகிய பட்டங்களைப் பல்வேறு அமைப்புகளும் சமயங்களும் இவருக்கு வழங்கி சிறப்பித்துள்ளன.
கி.வா.ஜ., உ.வே.சா.வின் மறைவுக்குப் பிறகும் சோர்வில்லாமல் தமிழ்த் தொண்டு செய்து வந்தார். கி.வா.ஜ. சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். உ.வே.சா.வின் பிற்காலச் சரித்திரத்தை எழுதிப் பூர்த்தி செய்தார். கோபம் என்பதே வராத குணக்குன்று கி.வா.ஜ. தமிழ் தொடர்பாக யார் எப்போது, எவ்விதமான சந்தேகம் கேட்டாலும் அலுத்துக் கொள்ளாமலும் சலித்துக் கொள்ளாமலும் அவர்களின் ஐயங்களைத் தீர்ப்பார்.
கி.வா.ஜ. சிறந்த உரையாசிரியராகவும், சீரிய திறனாய்வாளராகவும் விளங்கினார். ஆய்வுப் பணியை மேற்கொண்டிருந்த காலத்தில் அவர் உருவாக்கிய “தமிழ்க் காப்பியங்கள்” என்னும் நூலும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் “கல்கி” நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவாக அவர் ஆற்றிய “தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூலும் அவருடைய ஆய்வுத் திறனுக்குக் கட்டியம் கூறுவனவாகும்.
பொதுவாக, எழுத்தில் வல்லவர்கள் பேச்சில் வல்லவர்களாக இருப்பதில்லை; அதேபோல், பேச்சில் வல்லவர்கள் எழுத்தில் வல்லவர்களாக இருப்பதில்லை. கி.வா.ஜ.வோ எழுத்து, பேச்சு ஆகிய இரண்டிலும் வல்லவராகத் திகழ்ந்தார். எப்போதும் படித்துக் கொண்டும், எழுதிக்கொண்டும் இருப்பார். தமிழகம் மட்டுமன்றி கடல் கடந்தும் இவரது புகழ் பரவியது. நகைச்சுவையாகவும், சிலேடையாகவும் பேசுவதில் வல்லவர். இவ்வுலகில் இருந்து மறைவதற்குச் சில நாள்களுக்கு முன்புவரை, மருத்துவர்கள் ஓய்வெடுக்கச் சொல்லியதைப் பொருட்படுத்தாமல் பெரியபுராணத்துக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார்.
மிக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தும் மிக அரிய தமிழ்ப் பணிகள் செய்தும், ஓய்வு என்பதையே அறியாத சான்றோராகிய வாகீச கலாநிதி கி.வா.ஜ. 1988-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி நிரந்தரமாக ஓய்வு எடுத்துக்கொண்டார்.
கி.வா.ஜ.வின் வாழும் தமிழ்:
தினமணியில் கி.வா.ஜ. தொடர்ந்து தொல்காப்பியம் சொல்லதிகாரம் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகின்றது. தொல்காப்பியம் அன்றும் இன்றும் வாழுந் தமிழைப் பற்றிக் கூறுவதால் இந்நூலுக்கு வாழும் தமிழ் என்று பெயர் வைத்ததாக கி.வா.ஜ. குறிப்பிடுகிறார்.
இந்நூலில் கி.வா.ஜ. அவர்கள் முழுமையாகத் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரைவகுக்கவில்லை. சிற்சில இலக்கணச் செய்திகளையே இதில் விளக்கிச் செல்கின்றார். பெரும்பான்மையும் சேனாவரையர் உரையையும் சில இடங்களில் நச்சினார்க்கினியர் உரையையும் கி.வா.ஜ. அவர்கள் விரிவாக விளக்கிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நூலில் 32 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதில் கிளவியாக்கத்தில் இடம்பெற்றுள்ள 19 நூற்பாக்களுக்கு விரிவாக கி.வா.ஜ. அவர்கள் விளக்கவுரை எழுதியுள்ளார்.
பெயரியல் பற்றி 10 கட்டுரைகளிலும், வேற்றுமை குறித்து 2 கட்டுரைகளிலும், விளிமரபு குறித்தும் இடைச்சொல், உரிச்சொல் பற்றி ஒவ்வொரு கட்டுரையிலும், எச்சவியலில் இடம்பெறும் சொல் குறித்த சில நூற்பாக்களுக்கும் இந்நூலில் சுவைபட கி.வா.ஜ. அவர்கள் விளக்கம் கூறுகிறார். இறுதியாக இடம்பெறும் 32-ஆவது கட்டுரையான உள்ளுறை என்பதில் தாம் வாழும் தமிழ் நூலில் எடுத்துக் கூறியுள்ள தொல்காப்பிய நூற்பாக்களின் தொகுப்பை கி.வா.ஜ. மொழிந்துள்ளார்.
வாழும் தமிழ் என்று பெயர் வைத்தமைக்கான காரணம்
தாம் தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சி குறித்த இந்நூலிற்கு “வாழும் தமிழ்” என்று பெயர் வைத்தமைக்கான காரணத்தை, “வாழ்க்கையின் நிலையை மொழி காட்டுகிறது; அதன் சிறந்த பகுதிகளை இலக்கியம் காட்டுகிறது. இந்த இரண்டின் இயல்புகளையும் இலக்கணம் வகுத்துக் காட்டுகிறது. ஆகவே தொல்காப்பியம் என்னும் இலக்கணம், அன்றும் இன்றும் வாழுந் தமிழைப் பற்றிச் சொல்கிறது; இலக்கியத்திலும் உலகியலிலும் வாழும் தமிழைப் பற்றிப் பேசுகிறது. இந்தக் கருத்துடனே, ‘வாழும் தமிழ்’ என்ற பெயரை இந்தப் புத்தகத்திற்கு வைத்தேன்”(ப., iv) என்று கி.வா.ஜ. குறிப்பிடுகின்றார்.
மேலும் கி.வா.ஜ. இந்நூலில் பழந்தமிழர்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கின்றார். இதனை, “தொல்காப்பியத்தின் விளக்கம் அன்று இது; அதில் கூறப்பெறும் இலக்கணச் செய்திகளை முறையாகத் தொகுத்துத் தருவதும் அன்று; தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் உள்ள செய்திகளாகிய சிறு புழைகளினூடே பரந்து, விரிந்த பண்டைத் தமிழர் வாழ்க்கையைப் பார்க்க முயலும் முயற்சி” (ப., iv) என்று கி.வா.ஜ. குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
கி.வா.ஜ. வாழ்க்கையோடு இணைத்து சொல்லதிகாரத்தில் இடம்பெற்றுள்ள நூற்பாக்களுக்கு விளக்கம் தருகின்றார். இவ்விளக்கமானது எளிமையானதாகவும், தனித்தன்மையுடையதாகவும் அமைந்துள்ளது. பழந்தமிழர் வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்டு வரும் சொல்வழக்கை வைத்தும் இன்று அச்சொல் எப்பொருளில் மக்களிடையே வழங்கப்பட்டு வருகின்றது என்பதையும் கி.வா.ஜ. உதாரணத்துடன் இந்நூலில் விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வழக்குச்சொற்களைப் பயன்படுத்தி விளக்கம் கூறுதல்:
கி.வா.ஜ. அவர்கள் நூற்பாக்களுக்கு விளக்கம் கூறும்போது நடைமுறையில் வழக்கில் மக்கள் வழங்கும் வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி எளிமையாக விளக்கம் கூறுவது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. சொல்லதிகாரத்தின் முதல் நூற்பாவான,
“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே;
அஃறிணை என்மனார் அவரல பிறவே;
ஆயிருதிணையின் இசைக்குமன சொல்லே”
என்பதற்கு மிக எளிமையாக தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் கி.வா.ஜ. அவர்கள் விளக்குகின்றார்.
வழக்கில் வாயுள்ள பிராணி, வாயில்லாப் பிராணி என்று நாம் பேசுவது வழக்கம். உயர்திணை என்பதை வாயுள்ள பிராணி என்றும் அஃறிணை என்பதை வாயில்லாப் பிராணி என்றும் கி.வா.ஜ. குறிப்பிடுகின்றார்(ப.,3). உணர்ச்சியைச் சொல்லும் ஆற்றல் பெற்ற மனிதன் அது பெறாத பிற என்ற இரண்டு வகைகள் அமைந்துள்ளன. உத்தியோகஸ்தர்-உத்தியோகஸ்தர் அல்லாதார் கெஜட்டில் வருவோர்-அல்லாதார் என்று வழக்கத்தில் வழங்குவர். அதைப்போன்றே மனித சாதியை உயர்திணையென்று பிரித்தபிறகு மற்றவற்றை இழிந்த திணையென்று சொல்லாமல் அல்லாத திணை என்று பிரித்தனர்; அல்லாத திணை என்றாலும் அல்திணை என்றாலும் ஒன்றுதான். என்று எடுத்துரைத்து உலகத்தில் மக்கள் என்று சுட்டப்படும் பொருள்களை உயர்திணை என்று வகுத்துரைப்பர் மக்கள் அல்லாத பிற பொருள்களை அஃறிணை என்று சொல்லுவார்கள் சொற்களும் அந்த இரண்டு திணைகளாக வழங்கும் என்று எளிய விளக்கம் தருகின்றார்.
பொருளைக் குறிக்கும் சொல்லை பெயர் என்றும் ஆற்றலின் உருவத்தைக் குறிக்கும் சொல்லை வினை என்றும் கி.வா.ஜ. குறிப்பிடுகிறார். மேலும் பொருளை சிவம் என்றும் ஆற்றலை சக்தி என்றும் தமிழர்களின் வாழ்க்கை நெறி சார்ந்து சொல் என்பதற்கு கி.வா.ஜ. விளக்கம் கூறுகின்றார்.
பழமொழிகளைக் கூறி விளக்குதல்:
முன்னோர்களின் அனுபவ மொழிகளே பழமொழிகளாகும். இப்பழமொழிகள் வாழ்க்கையை விளக்கும் பண்பாட்டுப் பெட்டகங்களாகும். பால் என்பது குறித்து விளக்கவரும் கி.வா.ஜ. அவர்கள் பல உதாரணங்களைக் கூறி அதனை எளிமையாக விளக்குகிறார். அனைத்தும் ஒன்றாக இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வேறுபட்டு நிற்கின்றது. உயர்திணையில் பால் என்பது ஒன்றாக இருப்பினும் அவை ஆண், பெண், பலர் என்றும் அஃறிணையில் ஒன்று பல என்றும் நம் முன்னோர்களால் பகுக்கப்பட்டிருப்பது நோக்கத்தக்கது.
இதனை கி.வா.ஜ.அவர்கள் “தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறேதான்” (ப.,9) என்ற பழமொழியைக் குறிப்பிட்டு விளக்கம் தருகின்றார். மனிதன் சமுதாய உணர்ச்சியோடு ஒன்றுபட்டு வாழ்ந்தாலும் இயற்கையில் உடம்பும் உயிரும் உள்ளமும் தனித்தனி மனிதனை ஆக்குகின்றன. தனிமனிதன் தோன்றுகிறான் அவன் தன் முயற்சியினால் மற்றவர்களோடு ஒன்றுபட்டு சமுதாய உணர்ச்சி பெறுகிறான் என்று கி.வா.ஜ. தெளிவுறுத்தி,
“ஆடூஉ அறிசொல் மகடூஉ அறிசொல்
பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி
அம்முப்பாற்சொல் உயர்திணை யவ்வே
ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்று
ஆயிருபாற் சொல் அஃறிணையவ்வே”
என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கு விளக்கம் தருகின்றார்.
ஆண், பெண் தவிர்ந்த மூன்றாவது பாலினமாக விளங்கும் திருநங்கை பற்றிய பால்பகுப்பை தமிழர்தம் வாழ்க்கை நெறி சார்ந்து கி.வா.ஜ.அவர்கள் விளக்குகின்றார். அவர், “தமிழ் உயிரோடு வளர்ந்த மொழி. வாழ்க்கையை ஒட்டி வந்த மொழி. அதன் இலக்கணமும் நெட்டுருப்போட்டுத் தலைவலியை உண்டாக்கிக் கொள்ள வந்ததன்று. ….ஆகவே வாழ்க்கையில் அலியின் நிலை எவ்வாறு அமைந்திருக்கிறது?… யாராவது தம்மை அலி என்று சொல்லிக் கொள்ள விரும்புவது உண்டா?
படைப்பிலே ஆண், பெண் என்ற பிரிவிலே சேராவிட்டாலும் செயற்கையினால் தாமே விரும்பி எந்தக் கூட்டத்திலே அவர்கள் சேருகிறார்களோ அந்தக் கூட்டத்திற்குரிய பாலில் சேர்த்து வழங்குவதே சரி என்று சொன்னார். ஆகவே பேடி வந்தாள், பேடி வந்தான் என்று சொல்லும்போது அந்தப் பேடியின் வாழ்க்கை கூட நமக்குத் தெரிந்து போகிறது. மகளிரோடு சேர்ந்து வாழ்கிறதும் ஆடவரோடு சேர்ந்து பழகுகிறதும் சொல்லிலேயே தொனிக்கின்றன” (பக்.,13-14) என்று தெளிவுறுத்துகின்றார்.
கடவுள் தத்துவத்துடன் இணைத்துப் பொருள் கூறுதல்:
தெய்வம் பற்றிய தமிழர்களின் பால்பகுப்பை, “தெய்வத்துக்குச் சாதி, திணை, பால் என்ற பிரிவு இல்லாவிட்டாலும் மனிதன் தன் மனத்துள் தியாணிப்பதற்கும் உரு அமைத்து வழிபடுவதற்கும் சில சம்பிரதாயம் வேண்டும். தனக்குத் தெரிந்த உருவத்தை எண்ணுவதுதான் மனிதன் இயல்பு. ஆகவே தெய்வத்தைச் சிந்தனைக்குக் கொண்டுவந்து உரு அமைக்கும்போதும் பேச்சுக்குக் கொண்டு வந்து உரையாடும்போதும் தான் அறிந்த திணையுள்ளும் பாலுள்ளும் வைத்து வழங்கினான்; தேவன் வந்தான், தேவி வந்தாள் என்று பேசினான்”(ப.,15) என்று வாழ்க்கையோடு இணைத்து கி.வா.ஜ.விளக்குகின்றார்.
கடவுள் திணை, பால் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவர். அதனால் கடவுளை இதற்குள் அடக்க இயலாது. சொல்லில் வழங்கும்போதுதான் தெய்வத்திற்கு திணை, பால் வகுக்க இயலும். பேடி முதலிய சொற்களைப் பற்றி விளக்க வந்த தொல்காப்பியர்,
“பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் அந்தம் தமக்கு இலவே
உயர்திணை மருங்கின் பால்பிரிந்து இசைக்கும்” (487)
என்று குறிப்பிடுகிறார்.
மேலும்,
“ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலாற்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ”
என்று மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசக அடிகளை எடுத்துக் கூறி, ஆயிரம் திருநாமம் சொல்லிக் கொட்டும்போதே இறைவன் ஒரு நாமமும் இல்லாதவன் என்ற உண்மை உள்ளத்தின் அடித் தட்டிலே ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதுபோலத்தான் தெய்வத்தை ஆணாகவும் பெண்ணாகவும் பால் வகுத்துத் தமிழில் பேசும்போதே அத்தெய்வம் இப்பிரிவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்ற உணர்ச்சி தமிழரிடம் இருந்தது. அப்படி இருந்ததென்பதையே தொல்காப்பியர்”பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்” என்ற நூற்பாவில் குறிப்பிடுகிறார் என்று கி.வா.ஜ. விளக்கம் தருகிறார்.
தொல்காப்பியரின் இந்நூற்பாவிற்கு கி.வா.ஜ., “அலிகளையும் தெய்வத்தையும் வந்தான் போனான், வந்தாள் போனாள் என்று சொல்வதைக் கொண்டு இப்படிப் பேசும் தமிழனுக்கு அலியின் லட்சணம் தெரியவில்லை என்று நினைக்காதே. பைத்தியக்காரத் தமிழன் தெய்வத்தையும் தன்னைப் போல வேட்டியும் புடவையும் கட்டுவது என்று நினைத்துவிட்டானென்னு பரிகாசம் செய்யாதே அந்தப் பாற்பிரிவைக் குறிக்கும் குறியீடுகள் அவர்களுக்கு உரியவை அல்ல; கடன் வாங்கிக் கொண்டவை என்று அவர் இதன் மூலம் சொல்லாமற் சொல்லவில்லையா? கடவுள் இந்த அவதாரம் எடுத்ததனால் இதுதான் அவர் திருவுருவம் என்று மயங்காதே.
நம்மைப் போலப் பெண்டு பிள்ளைகளுடன் வாழ்பவரென்று ஏமாந்து போகாதே. எல்லாம் வேஷம்; நமக்காக, நாம் உய்வதற்காக, கடன் வாங்கிக் கொண்டவை என்று சமயக் குரவர்கள் சொல்வது போல இருக்கிறதல்லவா இது? ஆம் ஒன்று சொல்லைப் பற்றிய தத்துவம்; மற்றொன்று பொருளைப் பற்றிய தத்துவம். சொல்லின்றிப் பொருள் இல்லை; பொருளின்றிச் சொல் இல்லை.”(பக்.,15-16) இறைத் தத்துவத்தை எடுத்துக்கூறி விளக்கிச் செல்கின்றார். இது, “சிவம் இன்றி சக்தி இல்லை; சக்தி இன்றி சிவம் இல்லை” என்ற சிவத்தத்துவத்தை விளக்குவதாக அமைந்துள்ளது நோக்கத்தக்கது.
நிகழ்ச்சிகளைக் கூறி விளக்குதல்:
ஒரு நூற்பாவிற்கு விளக்கம் கூறும்போது கதைபோன்று ஒரு சிறு நிகழ்ச்சியைக் கூறி அதன் வழி நூற்பாவிற்கு விளக்கும் கூறும் முறையையும் கி.வா.ஜ. இந்நூலில் கையாண்டுள்ளார். அச்சிறு நிகழ்ச்சி சுவையாகவும் அவர் காலத்திய சொல்லாடல்களை அறியத்தகுவனவாகவும் அமைந்திருப்பது நோக்கத்தக்கது.
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தன்மையும் நிகழ்ச்சிகளைக் கூறி நூற்பாக்களை விளக்கும் முறையில் அமைந்திருப்பது நோக்கத்தக்கது. தொல்காப்பியர் கூறும்,
“செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்”(496)
செப்பே வழீஇயினும் வரைநிலை இன்றே
அப்பொருள் புணர்ந்த கிளவியான”(498)
என்ற செப்பு, வினா குறித்த நூற்பாக்களுக்கு கி.வா.ஜ. பின்வரும் கதைபோன்ற நிகழ்ச்சிகளை எடுத்துக்கூறி விளக்கத் தருகின்றார்.
“ஒரு வேளாளன் நிலத்தை உழுது கொண்டிருக்கிறான். அந்த நிலம் ஒரு பெருவழியின் அருகில் இருக்கிறது. யாரோ பிரயாணி கடம்பூர் என்ற ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறான். தான் போகிற ஊருக்கு அதுதான் சரியான வழியா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அவன் உழவனைப் பார்த்து, “ஐயா கடம்பூருக்கு வழி எது?” என்று கேட்கிறான். உழவன் இரண்டு மாடுகளை ஏரில் பூட்டி உழுகிறான். இடத்து மாடு, வலத்துமாடு என்று அந்த மாடுகளைச் சொல்வது வழக்கு. அந்தக் காலத்தில் இடம்பூணி, வலம்பூணி என்று சொல்லி வந்தார்கள். வலப்பக்கத்தில் பூட்டப்பட்டது, இடப்பக்கத்தில் பூட்டப்பட்டது என்பது அவற்றின் பொருள். “இடத்திலே இருக்கிற மாடு எங்கள் வீட்டில் உள்ள பசுவின் கன்று” என்று அந்த உழவன் சொல்கிறான். ‘கடம்பூருக்கு வழி யாதோ?’ என்று கேட்ட வழிப்போக்கனுக்கு அந்தக் காலத்துப் பேச்சில், “இடம்பூணி என் ஆவின் கன்று” என்று அந்த உழவன் சோல்கிறான். பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டவனிடம் கோட்டைப் பாக்கின் விலை சொன்ன புத்திசாலிக்கு இந்த உழவன் அண்ணனாகத்தான் இருக்க வேண்டும். இந்த வினாவுக்கும் விடைக்கும் பட்டுக்கோட்டை, கொட்டைப்பாக்கு, கடம்பூர், இடம்பூணி என்று எதுகையினால் தொடர்பு இருக்கிறதேயொழியப் பொருளால் ஒரு தொடர்பும் இல்லை”(ப.,18)என்று விளக்கம் தருகின்றார். இந்நிகழ்வை முதலில் கூறிய கி.வா.ஜ. அவர்கள் அந்நூற்பாக்களுக்குரிய எளிமையான விளக்கத்தை,
“வினா விடை என்னும் இரண்டிலும் குற்றம் இல்லாமல் இருக்க வேண்டும்” என்று ஒரு சூத்திரம் சொல்லுகிறது. பிறகு, “வினாவுக்கு நேர்முகமான விடையாக இல்லாவிட்டாலும் மறைமுகமானதாக இருந்தாலும் விடை என்றே கொள்ளலாம் என்று ஒரு சூத்திரம் வருகிறது”(பக்.,18-19) என்று கதை நிகழ்வினைக் கூறிய பின்னர் எடுத்துரைக்கின்றார்.
“வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே”(497)
எனும் நூற்பாவிற்கு, ஒரு வினாவிற்கு எதிரே விடை தரும் கருத்தோடு ஒரு வினாவே வந்தாலும் அதுவும் விடைதான் என்பது பொருளாகும். இதனை கி.வா.ஜ. அவர்கள் நேர்விடை, மறைவிடை, ஏவல் விடை என்ற விடை வகைகளைப் பற்றி விளக்கிவிட்டு,
“ஐந்நூறு ரூபாய் பணம் கொடுப்பாயா?”
“பணம் இல்லை என்பது தெரிந்தும் கேட்பது நியாயமா?”
கேட்ட கேள்விக்கு இல்லையென்று நேர்முகமான பதில் வராவிட்டாலும் சுற்றி வளைத்துச் சொல்வதில் அந்தப் பதில்தான் புலப்படுகிறது. ஆனால் அந்தப் பதில் மற்றொரு கேள்வி உருவத்தில் இருக்கிறது இது வினாவெதிர் வினாதல். “உனக்கு எத்தனை பிள்ளைகள்?” “அதற்கெல்லாம் நான் புண்ணியம் பண்ணி யிருக்கிறேனா என்ன?” இதுவும் வினாவெதிர் வினாதல்”(பக்.,27-28) என்று உரையாடல் வழி விளக்குவது எளிமையிலும் எளிமையாகவும் இலக்கணத்தைச் சுமையாக இல்லாது சுவையாகவும் ஆக்குகின்றது.
உரையாசிரியர்களின் கருத்தை வழிமொழிதல்:
கி.வா.ஜ. அவர்கள் நூற்பாக்களுக்கு உரைகூறும்போது பெரும்பான்மையும் உரையாசிரியர்களின் கருத்தை ஒட்டியே உரைகூறிச் செல்கின்றார். முதலில் தனது கருத்தைக் கூறிவிட்டுப் பின்னர் உரையாசிரியர்களின் கருத்தை வழிமொழிந்து கூறுவது கி.வா.ஜ.வின் உரைத்திறனை புலப்படுத்துவதாக உள்ளது. தகுதி வழக்கையும் இயல்பு வழக்கையும் பற்றி விளக்கும்போது,
“தகுதி வழக்குகளுக்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அப்படியின்றி, இயற்கைக் காரணமும் இன்றி வேறுபட்டு வரும் பேச்சு வகை உண்டு.
பேச்சு வழக்கிலே அவை அப்படி வந்து விட்டன. அவற்றை வழக்கு என்று வகுத்திருக்கின்றனர். வெள்ளாடு என்று ஒரு வகை ஆட்டைச் சொல்கிறோம். தமிழ்நாட்டில் வாழ்ந்து வெள்ளாட்டைப் பார்க்காத அயல்நாட்டார் ஒருவர் புதிதாகத் தமிழ் படிக்கிறார். அவர் வெள்ளாடு என்ற சொல்லைக் கண்டவுடன், வெள்ளை நிறமுடைய ஆடு என்றுதான் அர்த்தம் செய்து கொள்வார். இர்கே வாழ்ந்து பேச்சு வழக்கை அறிந்தவருக்குக் கறுப்பு ஆடானாலும் அது செவள்ளாடுதான் என்று தெரியும். அப்படிச் சொல்லக் காரணம் என்ன? தெரியாது. நெடுங்காலமாக அப்படித்தான் வழர்குகிறார்கள் என்பதுவே காரணம். இதனை வழக்கு என்று கூறுவர். பாத்திரத்தில் இருக்கும் சிறிதளவு நீரை, சில நீர் என்று முற்காலத்தில் சொன்னார்களாம். அதனால் உரையாசிரியர்கள் அதனை வழக்குக்கு உதாரணமாகக் காட்டியிருக்கிறார்கள். ‘குடத்துள்ளும் பிற கலத்துள்ளும் இருந்த நீரைச் சிறிது என்னாது சில என்றலும், அடுப்பின் கீழ்ப்புடையை மீயடுப்பு என்றலும் போல்வன வழக்காம்’ என்று நச்சினார்க்கினியர் எழுதுகிறார்.
காரணம் பற்றிய தகுதியிலும், காரணம் இல்லாமல் வரும் வழக்கிலும் பிற இடங்களில் வரும் சொற்களே வருகின்றன. ஆனாலும் அவற்றின் பொருளைக் கண்டுபிடிக்க, சபை மரியாதையையும் உலக வழக்கையும் பற்றிய அறிவு இருந்தாலன்றி இயலாது. சொல்லுக்குச் சொல் வைத்து இதற்கு இது பொருள் என்று காண சூவண்டிய மொழியில் இது ஒரு விந்தை. சொல்லுக்குப் புறம்பே அமைந்த பொருளை உடையனவாகையால் இவை வறு என்று தள்ளக் கூடாது. தள்ளினால் வாழ்க்கையைப் புறக்கணித்தவர்கள் ஆவோம். இவற்றைத் தள்ளாமல் கொள்ள வேண்டும் என்று தொல்காப்பியர் சொல்கிறார்.”(பக்.,42-43)
என்று எடுத்துரைக்கின்றார். அதன் பின்னர்…
“தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
பகுதிக் கிளவி வரைநிலை இலவே”
என்ற நூற்பாவினைக் இயம்பி, தகுதியையும் உலக வழக்கையும் தழுவிப் பேசப்படும் பகுதியிலே வரும் சொற்கல் நீக்கப்படுவன அல்ல. அவற்றைக் கொள்ள வேண்டும் என்பது இதன் பொருள்” (ப.,43) என்று எளிய முறையில் தனது விளக்கத்தை எடுத்தோதுகின்றார். இது கி.வா.ஜ. அவர்களின் உரைகூறும் தனித்தன்மைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
தமிழ்ப் பண்பாட்டை விளக்கி உரை கூறுதல்:
கி.வா.ஜ.அவர்கள் தமிழ் மீதும் தமிழ்ப் பண்பாட்டின் மீதும் உயர்ந்த எண்ணங் கொண்டவர். எதற்காகவும் கூட தமிழ்ப் பண்பாட்டையும் தமிழினத்தையும் விட்டுக் கொடுக்காத நெஞ்சுரங் கொண்டவர். கி.வா.ஜ.,
“இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை
வழக்காறு அல்ல செய்யுள் ஆறே”
எனும் தொல்காப்பியச் சூத்திரத்திற்கு விளக்கம் கூறும் கி.வா.ஜ.
“தமிழர் தெளிவாகப் பேசத் தெரிந்தவர்கள். அவர்கள் மொழியில் சொல்லுக்குப் பஞ்சம் இல்லை. இப்போது எத்தனையோ வார்த்தைகளுக்குத் தமிழ் தெரியாமல் இடர்ப்படுகிறோமே! என்று சில நண்பர்கள் கேட்கலாம். இந்த நாட்டிலே எண்ணும் எண்ணத்துக்கும் சொல் இல்லை என்றால் அதுதான் குறைபாடே ஒழிய இறக்குமதியான சரக்குக்குப் பேர் இல்லையே என்றால் பொருள் இறக்குமதியாகும்போது பெயரும் இறக்குமதியாக வேண்டியதுதான். அந்தப் பெயர் இங்கே வந்து உரு மாறியோ சொல்லே மாறியோ வழங்குவதும் உண்டு. தமிழ் நாட்டு இட்டிலிக்கு இங்கிலீஷில் வார்த்தை இல்லை என்றால் அது இங்கிலீஷின் குறை அல்ல. அவர்கள் ஊரில் இட்டிலியாகிய பொருள் இல்லை. அதனால் அதற்குரிய சொல்லும் இல்லை. உலக வழக்காகிய பேச்சிலே மயக்கமில்லாமல் இருக்க வேண்டும்”(பக்.,45-46)
நம்வீட்டு வேலைக்காரர்களில் இரண்டு பேருக்கு ராமன் என்ற பெயர் இருக்கிறது. அந்த இரண்டு பேரையும் வேறு பிரிக்க நெட்டை ராமன், குட்டை ராமன் என்று அடைகொடுத்துப் பேசுவதுதான் தெளிவாக இருக்கும். அப்படி இல்லாமல் ஒரே ராமன் இருக்கையில், நெட்டை ராமனைக் கூப்பிடு என்றால் புதிதாக யாராவது அதைக் கேட்கும்போது அவர் நெஞ்சில் குழப்பம் உண்டாகிவிடும். குட்டை ராமன் வேறு இருக்கிறான் போலும்! என்று அவர் எண்ணுவார். ஆகவே ராமனைக் கூப்பிடு என்று சொன்னாலே போதும்.
“ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள” என்று கம்பர் பாடுகிறார். பேசும்போது, ஆழி சூழ் உலகத்தில் மனிதன் நடமாடுகிறான் என்பது அநாவசியம். ஆழி சூழாத உலகம் இருந்தாலன்றி அப்படிச் சொல்வது சில சமயங்களில் மயக்கத்தைக் கூட உண்டுபண்ணும் கம்பர் பாடலாமா? என்றால் அது கவிதைக்குரிய உரிமை. அலங்காரம் பற்றி அப்படிச் சொல்லக் கவிஞருக்கு அதிகாரம் உண்டு(ப.,48)
என்று தமிழர்தம் பண்பாட்டு மரபும் பெருமையும் புலப்படுமாறு விளக்கம் கூறுகின்றார்.
அதோடு மட்டுமல்லாது தமிழர்கள் இறக்குமதி செய்யாது புதிய புதிய பொருள்களைத் தாங்களே உருவாக்குதல் வேண்டும் என்ற கருத்தையும் கி.வா.ஜ. அவர்கள் சொல்லாமல் சொல்லிச் சென்றிருப்பது அவரின் உயர்ந்த எண்ணத்தைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. தொல்காப்பியத்திற்கு தமிழர் பண்பாட்டு அடிப்படையில் காலத்திற்கு ஏற்ப விளக்கம் கூறும் பாங்கு இதில் புலப்படுவது நோக்கத்தக்கது.
நகைச்சுவையுடன் உரைகூறுதல்:
கி.வா.ஜ. அவர்கள் நகைச்சுவையுடன் உரையாற்றுவதில் வல்லவர். எப்படிப்பட்ட சூழலிலும் அவர் நகைச்சுவை மிளிர உரையாடுவார். சிலேடையாகப் பேசி எல்லோரையும் நகைச்சுவையில் ஆழ்த்திவிடும் கலை கி.வா.ஜ. அவர்களுக்கே கைவந்த ஒன்றாகும். இத்தகைய நகைச்சுவைப் பண்பு இலக்கணத்திற்கு விளக்கம் கூறும் கி.வா.ஜ. வின் உரையிலும் இடம்பெற்றுள்ளது.
“பால் மயக்குற்ற ஐயக்கிளவி
தான் அறி பொருள் வயின் பன்மை கூறல்”
“உரு என மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும்
இருவீற்றும் உரித்தே சுட்டுங்காலை”
என்ற நூற்பாக்களுக்கு விளக்கம் கூற வந்த கி.வா.ஜ. அவர்கள்,
“குழந்தை தாயைப் பார்த்து, அம்மா உன்னை என் கல்யாணத்துக்குக் கூபட்பிடமாட்டேன் என்றதாம் தாய், “ஏன் அப்பா?” என்று கேட்டாள்.
“ நீ உன் கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிட்டாயோ?” என்று கேட்டது குழந்தை. கேள்வியைக் கேட்ட தாய் சிரித்து மகிழ்கிறாள். குழந்தைத் தன்மை யாகையால் அந்த மகிழ்ச்சி உண்டாகிறது. ….சந்தேகத்தை வெளிப்படுத்தும் விஷயத்தில் பைத்தியக்காரத்தனத்தை வெளிப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கவலை இலக்கணக்காரருக்கு உண்டாகி இருக்கிறது. .. ஆணென்றும் பெண்ணென்றும் தெரியாத சந்தேகத்தைச் சந்தேக பாஷையிலே பொதுவாகச் சொல்லவேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக ஒரு வார்த்தை இருந்தால் சொல்லலாம். அந்த வார்த்தை இன்னதென்று இலக்கணம் சொல்கிறது. வாழ்க்கையிலிருந்து தெரிந்து கொண்டுதான் சொல்கிறது.”(பக்.,54-55) என்று தமக்கேயுரிய நகைச்சுவை உணர்வுடன் விளக்குகின்றார்.
கதையினைக் கூறி விளக்கம் தருதல்:
கி.வா.ஜ.அவர்கள் ஒரு பொருள் பற்றி விளக்க முற்படும்போது அதன் பொருள் கேட்போருக்கு மனதில் பதியும் வண்ணம் சிறு சிறு கதைகளைக் கூறி அதனை விளக்கிச் செல்வார். விளிமரபுனைப் பற்றி விளக்க வந்த கி.வா.ஜ. அண்மை விளி குறித்தும் சேய்மை விளி குறித்தும் ஒரு கதையினைக் கூறி விளக்கிச் செல்கிறார்.
ஒரு செட்டியார் இரவில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். ஏதோ சத்தம் கேட்டு விழித்துக் கொண்டார். படுத்தபடியே கவனித்தபோது தம் வீட்டில் திருடன் வந்திருப்பது குறிப்பாகத் தெரிந்தது. உடனே எழுந்திருந்து ஏதாவது எசய்தால் திருடன் தம்மை எதிர்த்து அடித்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்தார். மெல்ல அருகில் இருந்த தம் மனைவியைச் சத்தம் போடாமல் நிமிண்டி எழுப்பிப் பேச ஆரம்பித்தார்.
“ஆண்டவன் அருளால் நமக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறது. அதற்கு என்ன பெயர் வைப்பது?” என்று செட்டியார் கேட்டார்.
“எங்கள் தகப்பனார் பெயரை வைக்கலாம்” என்றாள் அவள்.
அதெல்லாம் கூடாது. நான் ராமன் என்ற பெயரைத்தான் வைக்கப்போகிறேன். பல நாளாக அப்படித்தான் மனசில் நினைத்துக் கொண்டிருந்க்கிறேன். நீயும் நல்லபடியாகப் பிள்ளை பெற்றுக் குழந்தை கடவுள் அருளால் நன்றாக இருந்தால் அவனை அலங்காரஞ் செய்து கொஞ்சுவேன். ராமா ராமா என்று வாயார அழைப்பேன். “ என்றார்.
“நான் வேறு பெயர்தான் வைப்பேன்” என்றாள் அவர் மனைவி.
“முடியாவே முடியாது. நான் ராமன் என்றுதான் பெயர் வைப்பேன். ராமா ராமா என்றுதான் கூப்பிடுவேன். நீ என்ன எனக்குச் சொல்வது?” என்று பேசிக்கொண்டே; ராமாஅஅ! ராமாஅஅ! என்று பலமாக அழைத்துக் கூவத் தொடங்கிவிட்டார்.
பக்கத்து வீட்டு ராமன் செட்டியார் இந்தக் குரலைக் கேட்டுத் தம்மைச் செட்டியார் அழைக்கிறாரென்று எண்ணி, ஏதோ அபாயம் போலும்! என்ற நினைவினால் அவசரமாக எழுந்து வந்து கதவைத் தட்டினார். இந்தச் செட்டியார் எழுந்து போய்க் கதவைத் திறந்து அவரை அழைத்து வந்தார்.
“என்னை ஏன் அழைத்தீர்கள்?” என்று வந்தவர் கேட்டார்.
“பாதி ராத்திரியில் உங்களை நான் எதற்காக அழைக்கிறேன்? எனக்குப் பிள்ளை பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்பது பற்றி எனக்கும் இவளுக்கும் விவாதம் ஏற்பட்டது. நான் ராமன் என்றுதான் பெயர் வைத்து அழைப்பேன் என்றேன். இவள் வேறு பெயர்தான் வைக்க வேண்டும் என்றாள். நான் ஒரே பிடிவாதமாக ராமா என்றுதான் கூப்பிடுவேன் என்று இவளுக்குக் கூப்பிட்டுக் காடடினேன். நான் சொல்வதில் நம்பிக்கை இல்லாவிட்டால் அதோ இருக்கிறாரே அவரைக் கேட்டுப் பாருங்கள்” என்று சொல்லி மேல்பரணைக் காட்டினார்.
செட்டியார் விழித்துக் கொண்டது முதல் ஒன்றும் செய்யத் தோன்றாமல் திருடன் அங்கே ஒளிந்து கொண்டிருந்தான். செட்டியார் சுட்டிக் காட்டிய பிறகுதான் ராமன் செட்டியாருக்கு நண்பருடைய தந்திரம் தெரிந்தது. திருடனை இரண்டுபேரும் சேர்ந்து பிடித்துச் செய்ய வெண்டியதைச் செய்தார்களாம்.”
இப்படி ஒரு கதை வெகு காலமாகத் தமிழ் நாட்டில் வழங்குகிறது. செட்டியார் குழந்தையை அழைப்பதாக இருந்தால் அவ்வளவு சத்தம் போட்டிருக்க வேண்டாம்; ராமாஅஅஅ என்று நீட்டியிருக்கவும் வேண்டாம். அவர் அயல் வீட்டு ராமனை அழைக்கவே அப்படிச் செய்தார்; அவன் தூங்குவான் என்று எண்ணியே அதிகமாக நீட்டினார்.
அயலில் இருப்பவரை அழைப்பது ஒரு விதம்; தூரத்தில் இருப்பவரை அழைப்பது வேறு விதம். அழைப்பதை விளித்தல் என்றும் சொல்வதுண்டு. இப்போது மலையாளத்தில் அந்தச் சொல்சாதாரண வழக்கில் இருக்கிறது. ஒருவனை முன்னிட்டு அழைப்பதை விளி என்று சொல்வார்கள். அப்படி அழைக்கும்போது அவனுடைய பெயரின் உருவம் வேறுபடுகிறது. ராமன் என்பவனை விளிக்கும்போது அந்தச் சொல் ராமா என்று ஆகிறது. பெண்ணை விளிக்கும்போது பெண்ணே என்று சொல்கிறோம். இந்த வேறுபாடு பெயர்ச்சொல்லுக்கு உரிய, வேற்றுமை என்னும் பகுதியில் வருகிறது. விளி வேற்றுமை அல்லது எட்டாவது வேற்றுமை என்று இதைச் சொல்வார்கள்”(பக்.,144-145)
என்று விளி என்பதைப் பற்றி கி.வா.ஜ. அவர்கள் கதையின் வழியாக விளக்கிக் கூறுகின்றார். இதுசுவையாகவும் மனதில் பதியும் வண்ணமும் அமைந்திருப்பது நோக்கத்தக்கது.
இலக்கியப் பகுதிகளைக் கூறி சொல்லாய்வு செய்தல்:
கி.வா.ஜ.அவர்கள் சூத்திரங்களுக்கு விளக்கம் கூறும்போது இலக்கியப் பகுதிகளில் இருந்து பாடல்களைக் கொடுத்து சொல்லாய்வு செய்கின்றார். இரண்டாம் வேற்றுமையின் பொருள்களான காத்தல், ஒப்பல் ஊர்தியின் இழையின் உள்ளிட்டவற்றை விளக்கும்போது,
“ஆக்க வேலை, அழிவு வேலை என்று இப்போது சொல்கிறோம் ஆக்க வேலையைக் கடவுளே முதல்ல் செய்துவிடுகிறார் அவர் ஆக்கிய உயிர்களையும் உடல்களையும் உலகத்துப் பொருள்களையும் தக்க வண்ணம் காத்தலே ஆற்றலுடையவருடைய கடமை.
“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்”
என்று திருக்குறள் சொல்கிறது….. மனிதனுடைய செய்கைக்கு உட்படும் பொருளைப் பற்றிச் செல்லும்போது ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபைக் கூட்டிச் சொல்வது தமிழ் மரபு. அதைப் பற்றிச் சொல்லும் இடத்தில் தொல்காப்பியர், பொருளானது எந்த எந்தத் தொழிலுக்குஉட்படும் என்பதைச் சிறிது சொல்கிறார். மனிதன் செய்யும் தொழில் அனைத்தையும் சொல்லி முடிக்க முடியுமா? ஆனாலும் அவர் மிக முக்கியமானவை என்று கருதிய 28 தொழில்களைச் சொல்லிவிட்டு, இவை போன்ற பிறவற்றையும் சேர்த்துக் கொள்க என்று குறிப்பிடுகிறார்.
காப்புக்குப் பின் பல தொழில்களைச் சொல்லும் தொல்காப்பியர் கடைசியில் சிதைப்பு என்ற தொழிலைச் சொல்கிறார். அழித்தல் என்பது அதன் பொருள்.
காத்தலும் சிதைத்தலுமாகிய இரண்டு தொழில்களையும் நினைக்கும்போது அரசனுடைய நினைவுதான் தமிழருக்கு வருகின்றது. இவ்விரண்டுக்கும் உதாரணம் சொல்ல வந்த உரையாசிரியர்கள், ஊரைக் காக்கும், நாட்டை அழிக்கும் என்றே காட்டுகிறார்கள். அரசனது முதல் கடமை தன் நாட்டைப் பாதுகாத்தல். அவசியமாக இருக்குமானால் பலவாறு யோசித்து முடிவு கட்டியபிறகே வேறு வழியின்றி இறுதியாக வைத்துப் பகைவன் நாட்டை அழித்தல் அவன் செயல் என்ற கருத்து இவற்றிலிருந்து தோன்றுகிறது.
ஊரையும் நாட்டையும் காப்பாற்றுகின்ற அரசனைக் குடிமக்கள் போற்றுவார்கள்; புகழ்வார்கள். இவன் கடவுளை ஒப்பான் என்றும் அன்பினால் தாயை ஒப்பான் என்றும் நன்மை பயப்பதனால் தவத்தை ஒப்பான் என்றும் உபமானம் சொல்வார்கள். கம்பர் தசரதனைப் பற்றிச் சொல்லும்போது இப்படிப் பல உவமைகளைக் கூறுகின்றார்.
“தாய்ஒக்கும் அன்பில்
தவம் ஒக்கும் நலம் பயப்பில்
சேய்ஒக்கும் முன்னின்றொரு
செல்கதி உய்க்கும் நீரால்
நோய் ஒக்கும் என்னில்
மருந்தொக்கும், நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால் அறிவொக்கும்”
என்று வருகிறது இராமாயணப் பாட்டு.” (பக்.,125-126)
என்று திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் எடுத்துக்கூறி இரண்டாம் வேற்றுமைப் பொருளாகிய காத்தல் என்ற தொழிற்சொல்லை கி.வா.ஜ. ஆய்வு செய்கின்றார்.
இங்ஙனம் கி.வா.ஜ. அவர்களின் சொல்லாராய்ச்சி தமிழின் சிறப்பையும் தமிழர்களின் சிறப்பையும், பண்பாட்டையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. வழக்கில் வழங்கும் சொற்களை வைத்து கி.வா.ஜ. அவர்கள் சொல்லாய்வு செய்வது என்றென்றும் தமிழ் வாழும் என்று அறுதியிட்டுக் கூறுவதாக அமைந்துள்ளது. கி.வா.ஜ. அவர்களின் சொல்லாய்வில் தமிழர்தம் வாழ்வியல் நெறிமுறைகள் புலப்படுவதுடன் தமிழ் மொழியின் தனித்தன்மை, அதன் இலக்கண இலக்கியத் தொன்மை உள்ளிட்டனவும் தெளிவுறுத்தப்பட்டுள்ளன.
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,(தன்னாட்சி),
புதுக்கோட்டை.
Malar.sethu@gmail.com
கி வா ஜ பற்றி மிகவும் நல்ல தகவல்களை அவரது வரலாற்றோடு தொடர்பு படுத்தி இன்றய தலை
முறையினரும் அறியும் நோக்கில் .. முனைவர் சேதுராமன் அவர்கள் தந்தமை மிகவும் பயனுடைய
முயற்சியாகும்.முனைவர் சேதுராமன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் ! என்னுடைய
மாணவப் பருவத்தில் கி வா ஜ அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்திருந்தது.
முனைவர் சேதுராமன் அவர்களது கட்டுரையை வாசித்ததும் பழையஞாபகங்கள் மனத்தில் படமாக
ஓடியது! நல்ல கட்டுரை ! பயனுள்ள கட்டுரை !