நாகேஸ்வரி அண்ணாமலை

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள முன்னாள் தமிழக அரசின் முதல்வர் – ஜெயலலிதாவின் ஆதரவாளர்களால் என்றென்றும் தமிழக மக்களின் முதல்வர் என்று அழைக்கப்படுபவர் – ஜெயலலிதா அதை எதிர்த்து மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தற்போது அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து வழக்கிலிருந்து அவர் விடுதலை பெற வேண்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பிரார்த்தனைகள் அ.தி.மு.க.வினரால் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை தமுக்கம் மைதானத்தில் மதுரை மேயர் 1008 ஓமகுண்டங்களை வளர்த்து 1008 பிராமணர்களை வைத்துப் பூஜைகள் நடத்தியிருக்கிறார். இவையும், குறிப்பாக ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும், அவரது விடுதலைக்காகச் செய்யப்பட்ட வழிபாடுகளாகத்தான் இருந்தன. அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவை தங்கள் தெய்வமாகவே கொண்டாடட்டும்; அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கட்டும்; அந்தத் தெய்வத்தை யாரும் தண்டிக்க முடியாது என்று நினைக்கும் அறிவிலிகளாக இருந்துவிட்டுப் போகட்டும். அதைப்பற்றி யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை.

ஆனால் இப்போது அவர் வழக்கிலிருந்து விடுதலை பெற தமிழக அரசின் அறநிலையத் துறை ஏற்பாடு செய்திருக்கும் சிறப்பு ஏற்பாடுகள் பற்றிய தகவல்கள்தான் இவர்கள் செய்யும் செயல்களின் அறியாமையால் வேதனையையும் தமிழக மக்களின் வரிப் பணத்தை இப்படி செலவழித்து தமிழக அரசின் கஜானாவைக் காலிபண்ணுகிறார்களே என்பதால் கோபத்தையும் ஏற்படுத்துகின்றன.

அறநிலையத் துறை வெளியிட்ட அறிக்கையிலிருந்து தெரிய வந்துள்ள செய்திகள்: தமிழகத்தில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 32,000-க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள் உள்ளனவாம். இதில் பல பெரிய கோவில்கள்; மற்றவை சிறியவை. இவற்றில் இருந்து தினமும் ஐந்து கோவில்களில் வழிபாடு நடத்தப்பட்டு அதன் பிறகு அந்த பிரசாதங்கள் அந்தந்த கோவில் ஊழியர்களால் சென்னைக்கு எடுத்து வரப்பட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஒப்படைக்கப்படுகின்றனவாம். காலை பத்து மணிக்கு பார்த்தசாரதி கோவிலை வந்தடையும் இந்தப் பிரசாதங்களை பார்த்தசாரதி கோவில் அதிகாரி ஒருவர் ஜெயலலிதாவின் வீட்டில் சமர்ப்பித்துவிடுவாராம். கடந்த மூன்று மாதங்களாக நாள் தவறாமல் இப்பணி நடந்து வருகிறதாம். ஒவ்வொரு கோவிலிலிருந்தும் அந்தக் கோவில் ஊழியர்கள் பிரசாதத்தை பார்த்தசாரதி கோவிலுக்கு எடுத்து வரும் செலவை அறநிலையத் துறையே ஏற்றுக்கொள்கிறதாம். என்றைக்கு எந்தெந்த கோவிலிலிருந்து பிரசாதம் வர வேண்டும் என்பதையும் அறநிலையத் துணை ஆணையர்களே முடிவுசெய்கிறார்களாம்.

இப்படிப் பூஜை நடத்துபவர்களும் பரிகாரம் செய்பவர்களும் இறைவன் இளிச்சவாயன் என்று நினைக்கிறார்கள் போலும். தவறு செய்தவர்களை அவர்கள் தவறு செய்தவர்கள்தானா, அந்தத் தவற்றுக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமா என்று நீதிமன்றம் பரிசீலித்துக்கொண்டிருக்கும்போது இடையில் புகுந்து, குற்றம்சாட்டப்பட்டவர் தவறு செய்யவில்லை என்று இவர்கள் நினைப்பதால் அவரை விடுவிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுபவர்கள் இறைவனை இளிச்சவாயன் என்று நினைக்காமல் வேறு என்ன நினைக்கிறார்கள்?

இறைவனை இளிச்சவாயன் என்று அம்மாவின் பக்தர்கள் நினைப்பது ஒரு புறம் இருக்கட்டும். இவர்கள் தமிழக அரசின் அறநிலையத் துறையிலிருந்து இந்த பூஜைகளுக்கும் பரிகாரங்களுக்கும் பணம் செலவழிப்பது சட்டப்படி சரியில்லை என்பதை இதுவரை யாரும் உணரவில்லையா? முதலாவதாக, மதச்சார்பற்ற ஒரு அரசின் பணத்தை ஒரு மதத்தின் – அதாவது இந்து மதத்தின் – செயல்களுக்கு மட்டுமே செலவிடுவது சட்டப்படி குற்றம். இரண்டாவதாக, தனி மனிதர் நன்மைக்காக ஒருவருக்கு அரசு பொதுப் பணத்தைச் செலவிடுவதும் குற்றம். மூன்றாவதாக, கீழ்நிலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு மேல்நீதிமன்றத்தில் இன்னும் அக்குற்றத்திலிருந்து விடுவிக்கப்படாதவருக்குப் பூஜைகள் செய்வதற்கு அரசு பணத்தைச் செலவிடுவதும் குற்றம்.

இப்படிக் குற்றங்கள் புரிந்துவரும் தமிழக அரசின் அறநிலையத் துறையின் செயல்களைத் தடுக்க யாருமே முன்வரவில்லையா? இதுதான் தமிழகத்தில் ஜனநாயகம் செயல்படும் முறையா? தமிழக மக்கள் இவ்வளவு அறிவிலிகளா? தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கமாக இருக்கிறது.

பி.கு. இது கட்டுரையாளர் நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் தனிப்பட்ட கருத்து மட்டுமே. வல்லமையின் கருத்து அல்ல  – ஆசிரியர்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தனி நபர் துதியின் எல்லை

  1. நல்ல நல்ல கேள்விகளே ….. ஆனால் சிந்திக்கும் திறன் மழுங்கிப் போனவர்களிடம் கேட்பதில் ஒரு பயனும் இல்லையே முனைவர் நாகேஸ்வரி   

  2. பி.கு. இது கட்டுரையாளர் நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் தனிப்பட்ட கருத்து மட்டுமே. வல்லமையின் கருத்து அல்ல  – ஆசிரியர்
    வல்லமையின் கருத்து என்னவாக இருக்கக்கூடும் ஞாயத்தை பே சுவோர் பக்கம் நிற்பதற்கே அச்சப்பட வேண்டியிருக்கிறது.
    பாண்டியன்ஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *