கலைமகள் ஹிதாயா.

“வாழ்கையில் துன்பம் வருவது இயற்கை அதை நான் மறுக்க வில்லை. ஆனால் தொடர்ந்து துன்பம் தான் வாழ்க்கையாகி விட்டாள்…வாழ்வதில் என்னடி அர்த்தம்….?”

“பரீனா, வாழ்க்கை பூராகவும் நீ துன்பத்தைத் தான் அனுவிக்க வேண்டுமென்று இறைவன் தலையில் எழுதியிருந்தால், அதை நானோ, நீயோ தடுத்து நிறுத்த முடியுமா என்ன? “ஓடும் நதி வழியே ஒருத்தி மட்டும் விதி வழியே” என்று கவிஞர் கண்ணதாசன் எழுத எண்ணினாராம். ஆமாம், விதி வழி என்ற ஒரு வழி இருக்கத்தான் செய்கிறது. அதனை ‘இறைவழி’ என்று அழைத்தாலும் பிழை இல்லை என்றே எண்ணுகிறேன். எனவே, எந்த நேரத்தில் எது வந்தாலும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு வாழ்வது தாண்டி வாழ்க்கை. ஆகவே நாம் தான் நாம் மனத்தைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும்.”

அப்போ, காலமெல்லாம் கண்ணீர் வடித்துக் கொண்டு அவரோடு வாழ்வதற்காகவே என்னை அவரையே திருமணம் செய்யும் படி சொல்கிறாய்”…? பரீனா பரிதாபமாகக் கேட்டாள்.

“என் உடலில் என் உயிர் உள்ளவரை என்னிதயத்திலிருந்து எந்தச் சக்தியாலும் உன்னைப் பிரிக்கவே முடியாது….உன்னைத் தவிர வேறு ஓர் ஆடவனின் நிழல் கூட என்னில்படுவதை ஒரு போதுமே விரும்பமாட்டேன் என்று, அன்று ஞாயிற்றுக் கிழமை பல்கலைக்கழக கேட்போர் ஹோல் மண்டபத்தில் வைத்து நஜீமிடம் சொன்னவற்றை இன்று கனவாக நினைத்து மறந்து போய் பேசுகின்றாய் என்று நினைக்கின்றேன். அன்று இதயத்திலே பாசம் படரும் போது சத்திய வாக்கை பனித் துளியாக தூவினாயே … நட்பு மலர் காதலாக செழித்து இல்லற வாழ்வில் நறுமணம் நல்லறமாக வீசவேண்டுமென்று எதிர் பார்த்தாயே … ஆனால் அது இன்று உனக்கெங்கே ஞாபகத்துக்குவரப் போகுது எல்லாமே காற்றோடு காற்றாக பறந்துவிட்ட தூசியாகிவிட்டதே” இர்பானா கிண்டலாகப் பேசினாள்.

“இர்பானா, என் என் நிலைமையை உணராமல் ஏண்டி இப்படியெல்லாம் பேசுகின்றாய். “

“நீ தான் பரீனா உன் நிலைமையை உணராமல் மூடத்தனமாக நிதானமிழந்து பேசுகிறாயா? பரீனா, கொஞ்சம் சிந்தித்துப்பார். நஜீம் வசதியாக இருந்த போது அவருக்கு காதலியாக இருந்து விட்டு இப்போ நீ ஓர் டாக்டராக மாறிவிட்டாய் என்பதற்காக அவரை விட்டு விலகி வாழ்கிறாயே மரம் விட்டு மரம் தாவும் குரங்குக்கும் உனக்கும் என்னடி வித்தியாசம்.”

இர்பானா சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் பரீனாவின் உள்ளத்தை கரையான் அரிப்பது போல அரித்தது. பல்கலைக் கழக படிப்பை முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ளத் துடியாத் துடித்தவர்களை பெற்றோர் பிரித்து வைத்தார்கள். பரீனா பெற்றோரின் கட்டுப் பாட்டுக்குளிருந்து மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் டாக்டராக பணி புரிந்து கொண்டிருந்தாள். நஜீம் எதிர்புகளுக்கிடையில் பெற்றோரின் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து விட்டு தனிமையில் வாழத் தொடங்கினான்.

நஜீம் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரிந்தான். பரீனா நஜீம் இருவருக்கிடையில் கடிதத் தொடர்புகளுமின்றி ஒருவர் நினைவில் ஒருவர் வாழத் தொடங்கினார்கள். இன்பமே நிறைந்திருந்த அந்த இளஞ்ஜோடிகளின் இதயத்தில் திடீரென்று ஒரு நாள் துன்பம் தடவிப் பார்த்தது. நஜீம் பரீனாவின் தற்காலிகப் பிரிவு தாங்கமுடியாமல் அல்சரா புகைப்பதில் பெரிதும் ஈடுபாடு கொண்டான். இதன் விளைவு வயிற்றில் புண்களை உருவாக்கியது. திரும்பத் திரும்ப புகைத்ததால் அல்சராக் கூடி கடுமையாக பாதிக்கப்பட்டான். இதனால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நஜீமை அவனது பெற்றோர் உடனடியாக மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதித்தார்கள்.

பரிசோதனை செய்வதற்காக வார்ட் நோக்கி வந்த பரீனா நஜீமின் நிலைமையை அறிந்து மனவேதனைப்பட்டாள். பனித் துளிகளைப் போல் கண்ணீரை தூவினாள். நண்பி என்ற முறையில், இர்பானாவிற்கு தன்னால் இயன்ற உதவிகளையெல்லாம் செய்து வந்தாள் பரீனா. தன்னோடு ஓர் தாதியாகவும் சேர்த்துக் கொண்டாள். நஜீம் மீது உயிரையே வைத்திருந்த பரீனா, அவரது கீழ்த்தரமான இந்தச் செயலை நினைத்து நினைத்து இரவு நேரங்களில் தலையனையை ஈர மாக்குவதுடன் சுடுமணலில் துடிக்கும் புழுவைப் போல் துடித்தாள்.

உடல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத நஜீம் அவள் காதைப் பிடித்து கட்டிலுக்கு அழைக்கும் போதெல்லாம் அவனது மூளைக்கு அதிகம் வேலை கொடுக்கக்கூடதென்பதற்காக விலகிப் போவாள். சில நேரங்களில் தன்னையும் மறந்து நஜீம் மீது கோபமடைவாள். நாளமையில் அவனது உடல் நிலை பரீனாவிற்கு தாங்க முடியாத துயரத்தையும், சிந்தனைகளையும் ஏற்படுத்தியது. தன் வாழ்க்கை சோகமான வரலாறாகிவிட்டதாக நினைத்தாள். கடைசியில் நஜீம் நினைவை விட்டு விலகி தனிமையில் வாழ முடிவெடுத்தாள்.

“இர்பானா நீ என்ன சொன்னாலும் சரிடி; நான் எடுத்த இந்த இறுதி முடிவை நான் ஒரு போதும் மாற்றிக்கவே மாட்டேன்டி”.

“பரீனா …..இப்பத்தாண்டி தெரியுது ….உன் நஜீமை விட்டு விட்டு எதுக்காக நீ ஓர் இறுதி முடிவு எடுத்துள்ளாய் என்பது. எப்படியாவது நஜீம் மூளைக்கு அதிகமான வேலை கொடுக்காமல் அவரை பழைய நிலைக்கு மாற்ற வேண்டுமென்ற என்ற எண்ணம் உனக்கு இருக்கு. தானும் மாற வேண்டுமென்ற எண்ணம் அவருக்கும் உண்டு. இவர் இனி பிழைத்து மனிதராக மாட்டாரோ என்று நீ நினைத்து இப்படி ஓர் முடிவை எடுத்துக் கொண்டாயோ? “

“அப்படியொரு எண்ணம் என் மனதில் இருந்திருந்தால் எப்பவோ நான் அவரைவிட்டு விலகி என் பெற்றோர் பேசி பிடிவாதமாக கட்டிக் கொள்ளும்படி கூறும் சொந்த மச்சானை திருமணம் செய்திருப்பேன். இத்தனை வருடகாலமாக இவருக்காக நான் இப்படி வாழ்ந்திருக்கவே மாட்டேன்”.

பரீனா சொல்லி முடித்து தலை நிமிர,  தாதி ஒருவர் வந்து அழைத்தாள். பரீனா எழுந்து சென்று நஜீமை பார்க்கச் சென்றாள்.

நஜீம், “பரீனா, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் வருத்தம் நல்லாச் சுகமாகி விட்டது. வீட்டுக்குச் செல்ல ஆசைப்படுகின்றேன். என் டிக்கட்டை வைத்தியசாலையிலிருந்து கட் பண்ணி விடுங்கள்”.

சற்று நேர மௌனத்திற்குப் பின் பரீனா சொன்னாள் “நஜீம் வசதியான குடும்பத்தில் பிறந்த நீங்கள் சந்தோசமாக வாழ்ந்திருக்கலாமே? நான் உங்களுக்கு என்ன துரோகமா செய்தேன். இப்பே நீங்களாகவே நோயை தேடிக் கொண்டீர்களே”

திடீரென்று பரீனா … பரீனா … என அழைக்கும் அழைப்பை கேட்டுத் திரும்பினாள்….அழைத்தவள் இர்பானா .

” என்னடி வந்திட்டியா?”

“ஆமாடி “

“எப்படி நஜீம் வருத்தமெல்லாம்?” இர்பானா கேட்டாள்.

“கொஞ்சம் பரவாயில்லை இர்பானா “

“பரீனா நஜீம் பாவம்டி, உன் பிரிவைத் தாங்க முடியாமல்தாண்டி அவர் இந்த நிலைக்கேத் தள்ளப்பட்டார். நீதாண்டி அவருக்கு நோய் ஏற்படக் காரணமாக அமைந்தவள்”

இர்பானாவை முறைத்துப் பார்த்தாள் பரீனா, அவள் கண்கள் மட்டுமல்ல உள்ளமும் கண்ணீர் வடித்தது.

“இதோ கேள் பரீனா….நஜீம் என் உடன்பிறந்த தம்பியடி. என் பெற்றோருக்கு இவன் மட்டுந்தாண்டி ஆண் செல்வம். என் தாய் இவனை கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தாள். என் தாய் காலமாக தந்தை இன்னும் ஓர் பெண்ணை திருமணம் செய்து கொண்டவர், இவனையும் கூடவே கூட்டிச் சென்று இந்த நிலைமைக்கு படிக்கவைத்தார். நான் என் சிறிய தாயிடம் இணைந்து கொண்டேன். அதனால் எங்கள் இருவரது பாசங்களும் பிரிவில் வாடியது என் தம்பியின் தரத்திற்கும், என் ஏழ்மையின் நிலைக்கும் இடைவெளிகள் பல…. அதனால்தாண்டி பரீனா என் தம்பியிடம் நான் யார் என்பதை காட்டிக் கொள்ளவில்லை. உன் மனதை விட மேலாக என் மனம் வேதனைத்தீயில் எரிந்து கொண்டிருக்கிறது.”

“இர்பானா…..அப்போ நீ என் மைனியாடி….? ஏண்டி இத்தனை வருடமும் என்னிடம் மறைத்தாய்….” இறுக கட்டிப் பிடித்துக் கொண்டு இர்பானாவின் தலையை தடவிக் கொண்டே அழுதாள்.

“இர்பானா என் வாழ்க்கையில் தான் துன்பமும்,வேதனையும் நிறைஞ்சிருக்கின்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். அது உன்னுடைய வாழ்க்கையிலேயும் நிறைஞ்சிருக்கு என்பதை இப்போ நான் தெரிஞ்சுக்கிட்டேன். இன்னும் சொல்லப் போனால், துன்பத்தின் மத்தியில் தான் இன்பமே உண்டு என்பதையும் புரிஞ்சுக்கிட்டேன்……இனிமேல் என்னவரை….ஆமாம், உன் ஆசைத் தம்பி நஜீமை விட்டுப் பிரிந்து ஒரு நிமிடம் கூட விலகி வாழவே மாட்டேன்னம்மா உறுதி”

கன்னத்தில் கொட்டிக் கொண்டிருந்த கண்ணீர் துளிகளை துடைத்துக்கொண்டே பரீனா இர்பானாவை அழைத்துக் கொண்டு நஜீமை பார்க்கச் சென்றாள். இர்பானா நஜீமை கட்டியணைத்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் நஜீம் ஒன்றும் புரியாது விழித்தான்.

பரீனா விடயத்தை விபரமாகச் சொன்னாள். இருவர் கண்களிலும் கண்ணீர் வழிடிந்தோடின. அது ஆனந்தக் கண்ணீர்தான்.

இர்பானா நஜீமிடம், ” தம்பி, பரீனா ஓர் பெயர் பெற்ற தரமான டாக்டர். இறைவன் துணையால் அவள் உன் நோயை சுகப்படுத்துவாள். முதலில் நீ என்னில்லம் போக வா……இரவைக்கே உங்கள் இருவரையும் நான் மனப்பூர்வமாக இணைத்து வைக்கின்றேன்”, என்று அன்போடு அழைத்தாள். பக்கத்து வீதியில் அமைந்திருந்த ஹோட்டலில் இருந்து வானலை ஊடாக….,
நல்வாழ்த்து நான் சொல்வேன்………
நல்லபடி வாழ்கவென்று….
கல்யாணக் கோயிலிலே
கணவன் ஓர் தெய்வம்மா……
எனும் பாடல் தவழ்ந்து கொண்டிருந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *