சாந்தி மாரியப்பன்

என்னைப் பற்றி :

. நான் அமைதிச்சாரல் என்ற புனைபெயரில் எழுதிவருகிறேன்.அதே பெயரில் 2009 டிசம்பர்23லிருந்து வலைப்பூ எழுதிவருகிறேன். தமிழ்நாட்டில் பிறந்து தற்சமயம் மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்துவருகிறேன்.   மும்பைவாசம் கொஞ்சம் முடக்கிப்போட்டிருந்த,.. வாசிப்பதில் உள்ள ஆர்வத்தை வலைப்பூக்கள் ஈடுகட்டுகின்றன. கதைகள்,கவிதைகள் எழுதுவதிலும் வாசிப்பதிலும் நாட்டமுண்டு.

என்னுடைய படைப்புகள், திண்ணை, கீற்று,வார்ப்பு, அதீதம்,லேடீஸ் ஸ்பெஷல்,இவள் புதியவள், அப்புறம் வல்லமை போன்ற இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. ‘கவிதை நேரமிது’ என்ற என்னுடைய இன்னொருவலைப்பூவில் கொஞ்சம் கிறுக்கித்தள்ளியிருக்கேன். பிடித்தமான பாடல்களை சேமிப்பதற்காக ‘பாடும்குயில்கள்’ என்றொரு வலைப்பூவும் உண்டு. என்பெயரில் அமைந்துள்ள தற்சமயம் ஒருவயது நிரம்பியிருக்கும் ‘அமைதிச்சாரல்’ என்ற வலைப்பூவில் என்னுடைய எண்ணங்களை பகிர்ந்துகொள்கிறேன். அவ்ளோதான்.

அன்புடன்,
அமைதிச்சாரல்(சாந்தி மாரியப்பன்)

 

 

டட்ட்டடட்ட்…’ என்று ஒரே சீராகப் போய்க் கொண்டிருந்த ஆட்டோ வேகம் குறைத்து, ஒரு காரின் பின்னால் நின்ற போதுதான்,.. ‘ஓ.. சிக்னல் விழுந்துடுச்சா’ என்று நினைத்தபடி லேசாக தலையைத் தாழ்த்தி, பக்கத்தில் அமர்ந்திருந்த ரோஷினியைத் தாண்டி, கிடைத்த இடைவெளியில் தெரிந்த ஆட்டோமேடிக் சிக்னலுக்கு பார்வையை அனுப்பினேன். ரெய்டு வரப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட அரசியல்வாதியின் பல்ஸைப் போல சிகப்பு நிற எண்கள் வேக வேகமாக இறங்கு வரிசையில் மாறிக் கொண்டிருந்தன.

‘தீதி… ஒரு ரூபா கொடேன்.. காலைலேர்ந்து என் தம்பிக்கு சாயா கூட வாங்கிக் கொடுக்க முடியலை.. பசிக்குது..’ என்றபடி பரிதாபமாக நோக்கியபடி, ரோஷினி தடுக்கத் தடுக்க ஆட்டோவுக்குள் தெரிந்த சல்வார் கால்களைத் தொட இடுப்பிலிருந்த தன் தம்பியுடன் குனிந்தாள்,.. நிமிர்ந்த போதுதான் என்னைப் பார்த்திருக்க வேண்டும். வறுமையின் மொத்த உருவமாய் நின்ற அவள், அடுத்த வினாடியில் கழுகைக் கண்ட கோழிக் குஞ்சாய் ஓடி ரோட்டின் அந்தப் பக்கம் நின்று கொண்டிருந்த பேருந்தின் பின்னால் மறைந்து விட்டாள்.

‘அந்தப்பொண்ணு ஏன் உன்னைப்பார்த்துட்டு ஒளிஞ்சு ஓடுது?..’ கேள்வியாய் நோக்கிய ரோஷினிக்கு பதில் சொல்ல எத்தனிக்கு முன் பச்சை விளக்கு எரிந்து ஆட்டோ புறப்பட்டு விட்டது. அவளுக்கு பதிலாய்ச் சொன்ன சொற்களை காற்றோடு அரைத்துச் சென்றது எங்களைக் கடந்த ட்ரக் ஒன்று. ‘அப்புறம் சொல்கிறேன்.. ‘ என்று கையசைத்து விட்டு, ரயில்வே ஸ்டேஷன் முன்னால் வந்து நின்றதும் இறங்கி கூட்டத்தோடு கூட்டமாய்க் கலந்து டிக்கெட் கூப்பன்களை தானியங்கி மெஷின்களுக்கு தின்னக் கொடுத்து, அடையாளம் வாங்கிக் கொண்டு விட்டு திரும்பினேன்.

ப்ளாட்பாரத்தில் வந்து தூண்களைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த கிரானைட் திண்ணைகள் ஒன்றில் வாகாக அமர்ந்து கொண்டோம். ‘பயணிகள் கவனத்திற்கு..’ என்று ஆரம்பித்து குறிப்பிட்ட இரண்டு ஸ்டேஷன்களுக்கு இடையே ரிப்பேர் வேலை நடப்பதால் சாயந்திரம் வரை அந்தப் பாதையில் மட்டும் ரயில்கள் ஓடாது என்பதை வருத்தத்துடன் சொல்வதாக ரயில்வே அறிவிப்பு ஒலித்து ஓய்ந்தது.  நாங்கள் எங்களது ரயில் வருவதற்காக காத்திருந்த நேரத்தில்,…’ இப்ப சொல்லு..’ என்றபடி என் முகத்தை ஏறிட்டாள். விடமாட்டாள் போலிருக்கிறதே!!..

‘அது ஒண்ணுமில்லை.. வழக்கமா தினமும் அந்த சிக்னல் பக்கம் பார்க்கறது தான். குடும்பம் அங்கியேதான் ப்ளாட்பார்முல வசிக்குது போலிருக்கு. அதான் பார்த்தியே, பத்துப் பதினஞ்சு பசங்க அங்கியே சுத்திக்கிட்டு, சிக்னல்ல நிக்கிறவங்ககிட்ட காசு கேக்கறதை..’

‘ஆமா,.. பார்த்திருக்கேன். சிலதுகள் வெறுமே காசு கேக்கும். சிலதுகள் இன்னிக்கு மாதிரி கால்ல விழுந்துடும். சில பசங்க போட்டிருக்கற சட்டையையோ, துப்பட்டாவயோ வெச்சு காரு கண்ணாடிகள தொடச்சுட்டு காசு கேக்கும். ப்பா.. பார்க்கவே பரிதாபமாயிருக்கும். காசு கொடுத்தா இதுகளை ஊக்குவிக்கறாப்ல ஆகிடுமேன்னும் தோணுது.. பசங்களைக் கடத்திட்டு வந்து இந்தத் தொழில்ல இறக்கி சம்பாத்தியம் செய்யற கும்பல் இன்னும் பெருகிடுமே. அதுக்காக, பார்த்துட்டு சும்மாப் போகவும் முடியலை. என்ன செய்யறதுன்னுதான் தோணலை..’

‘ஒரு வயசு வந்தப்புறம், சில ஆம்பிளைப் பசங்க கெட்ட சகவாசம் காரணமா, சமூக விரோதச் செயல்கள்ல ஈடுபடறாங்க.. ஆனா, அந்தப் பொண் குழந்தைகள்?… அவங்க எதிர்காலம். அறிந்தும் அறியாமலும் இருக்கற வயசுல யாராச்சும் அவங்களை தப்பிதமா உபயோகப் படுத்தவும் சான்ஸ் இருக்கு.. அது இன்னும் பரிதாபம். அதான், இப்ப பார்த்தோமே!!.. அந்தப்பொண்ணுகிட்ட இப்படி பிச்சை எடுக்கறதுக்கு பதிலா, குறைஞ்ச பட்சம் சிக்னல்கள்ல ஏதாவது சின்னச் சின்ன பொருட்களை வித்துப் பொழைக்கலாமேன்னு டோஸ் விடுவேன். அதான், என்னைப் பார்த்ததும் ஓடுது..’

‘ இவ்ளோதானே.. எப்படியும் திரும்பிப் போகறச்சே அந்த வழியாத்தானே போகணும். நான் பார்த்துக்கறேன்…” என்று அந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் ரோஷினி.

போன வேலையை நல்லபடியாக முடித்துக் கொண்டு திரும்பிய போது, அதே ரோடு, அதே சிக்னலில் அதே பெண் பார்வைக்குக் கிடைத்தாள். இப்போது வேறு ஒரு வாகனத்தில், கார்க் கண்ணாடியை துடைத்துக் கொண்டு கெஞ்சிக் கொண்டிருந்தாள். ஒன்றும் கிடைக்கவில்லையோ என்னவோ.. சிக்னல் கிடைத்து அந்த வாகனம் கிளம்பிய போது, என்னவோ உதட்டுக்குள் திட்டுவது போல் தெரிந்தது. துப்பட்டாவை தோள்மேல் போட்டுக்கொண்டு ப்ளாட்பாரத்துக்கு திரும்பியவள், சத்தமில்லாமல் வந்து பின்னால் நின்ற எங்களைக் கவனிக்கவில்லை.

கவனித்து ஓடத்தயாரானவளை கையைப் பிடித்து நிறுத்தினாள் ரோஷினி. ‘ தீதி.. என்னை விட்டுடுங்க.. அப்பா அடிப்பாரு..’ என்று பார்வையை அங்குமிங்கும் செலுத்திக் கொண்டே அலை பாய்ந்தவளை அமைதிப்படுத்திப் பேசிய ரோஷினியை ஏறிட்டாள் அந்தப் பெண்.


‘வேற என்னதான் செய்யறது.. பிச்சை எடுக்கறது எனக்கும் பிடிக்கலை தான். வயிறுன்னு ஒண்ணு இருக்கே.. ஏழையா, ப்ளாட்பாரத்துல பொறந்தது என் தப்பா?..’ வெறுப்பை உமிழ்ந்தன அவளது வார்த்தைகள்.
‘சரி.. அதுக்காக பிச்சை எடுக்கறது ரொம்ப ஒசத்தியோ..’ ரோஷினியும் விடவில்லை. ‘ இங்க பாரு. நான் N.G.O.வுல இருக்கேன்.. என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்யறேன். ஏன்னா, தேவைப்படறவங்களுக்கு உதவுறதுதான் எங்க வேலையே. உன்னாட்டம் எத்தனைபேரு பூவு, சின்னப்பசங்களுக்கு புக்கு, பென்சில்ன்னு கூட சிக்னல்ல வித்துப் பொழைக்கிறாங்க. உனக்கென்ன?..”

‘அதுக்கு காசு வேணுமே..’ தரையைப் பார்த்துக் கொண்டு பதிலளித்தாள் சிறுமி. ‘விவரமானவளாத்தான் இருக்கே.. நேத்து கூட இனிமே பிச்சை எடுக்காதேன்னு சொல்லி பத்து ரூபா கொடுத்தேனே. என்ன செஞ்சே?..’ என்னிடமிருந்து புறப்பட்ட கேள்விக் கணையை, ‘ எங்கப்பா குடிக்கிறதுக்கு புடிங்கிட்டுப் போயிட்டாரு..’ என்ற பதில் கணையால் முறித்துப் போட்டாள்.

‘சரி.. இப்ப நான் காசு தர மாட்டேன். அதுக்குப் பதிலா கொஞ்சம் பூவு வாங்கிட்டு வந்து தருவேன். எப்படி விக்கணும்ன்னும் சொல்லித் தருவேன். புத்தியா பொழைச்சுக்க. என்ன?..’ என்றாள் ரோஷினி.

மெல்ல தலையாட்டிய சிறுமியின் கைகளில், பக்கத்து செக்டரில் இருந்த மொத்தமாய் விற்பனை செய்யும் பூ மார்க்கெட்டிலிருந்து நான் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த,.. ஒரே சீராக வெட்டப் பட்டிருந்த பத்து மல்லிகைப் பூச்சரத் துண்டுகளை திணித்தாள். ‘ஒரு துண்டு மூணுலேர்ந்து நாலு ரூபாய்க்குள்ள விக்கணும்.. பேரம் பேசி வாங்குறவங்களும் இருப்பாங்க. சட்னு ஒத்துக்கிட்டு ஒரேயடியா அவங்க சொல்ற விலைக்கு குடுத்துடாதே. விலையை குறைக்க மாட்டேன்னு கொஞ்ச நேரம் பிகு செஞ்சுக்கிட்டு அப்புறமா கொஞ்சமா குறைச்சுக் கொடு. எல்லாம் போகப் போக நீயே பழகிப்பே.. இப்ப ஓடு. சிக்னல் விழுந்துடுச்சு பாரு..’

ஏதோ பிறந்ததிலிருந்தே இதே தொழில் செய்து கொண்டிருப்பவள் போல ஒவ்வொரு வண்டியாக ஓடியோடி பூ விற்றுக் கொண்டிருந்தாள். ‘ அக்காவுக்கு பூ வாங்கிக் கொடுங்க சாரே.. வண்டிக்குள்ள இருக்கற சாமி படத்துக்கு பூ போடுங்க ஐயா..’ ஒவ்வொன்றாய் விற்றுத் தீர்ந்து கொண்டிருந்தன. கோடு போட்டால் ரோடு போட்டு விடுகிறாளே.. சாமர்த்தியசாலிதான்.

அங்கேயே காத்துக் கொண்டிருந்த எங்களிடம் முகம் கொள்ளாப் பூரிப்புடன் திரும்பி வந்தாள். கையில் இரண்டு மூன்று பூத்துண்டுகள் மட்டுமே எஞ்சியிருந்தன. ஒரு பூத்துண்டு இரண்டு ரூபாய் என்று நான் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தது அவளுக்கு எத்தனை ரூபாய் லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என்று கணக்குப் போட்டு அவளுக்குச் சொன்ன போது நம்ப முடியாமல் விழி பிதுங்கப் பார்த்தாள். மலங்க மலங்க விழித்த அந்தக் குழந்தையைப் பார்க்க பரிதாபமாக இருந்தது..

லேசாக திரையிட்ட கண்ணீரை சமாளித்துக் கொண்டு, ‘ பார்த்தேயில்ல.. பூ விக்கிறப்ப உன்னை யாரும் அடிச்சு வெரட்டலை. வேணாம்ன்னாக் கூட மரியாதையா ‘வேணாம்மா’ன்னுதான் சொல்றாங்க. இந்த வாழ்க்கை உனக்கு வேணும்ன்னா சொல்லு.. என்னால முடிஞ்ச ஏற்பாடு செய்யறேன். உங்க அப்பாவ பத்தி கவலைப்படாதே.. தேவைப்பட்டா நாங்க லேசா மெரட்டி வைப்போம். பயப்படாதே..’ என்றேன்.

‘‘மெரட்ட தேவையிருக்காதுண்ணே.. அதை நான் பார்த்துக்கறேன்.. உங்களுக்கு வசதிப்பட்டா இதேமாதிரி தேவைப்படறப்ப ஒத்தாசை செய்யுங்க. அது போதும்..’ என்றவள், ‘அக்காவுக்கு பூ வாங்கிக் கொடுங்கண்ணா.. வெளியே கூட்டிட்டு வந்துருக்கீங்கல்ல..’ சின்னச் சிரிப்புடன் ஒரு துண்டு பூவை நீட்டினாள் என்னிடம்.

‘எங்கிட்டயேவா!!!.. அது சரி!!. ரெண்டு துண்டாவே கொடு..’ என்று சிரித்தபடி எட்டு ரூபாயை நீட்டினேன் பேரம் பேசாமல்.. அப்போது தான் மலரத் தொடங்கியிருந்த அரும்புகள் மெலிதான வாசனையை அந்தப் பிராந்தியம் முழுவதும் பரப்பத் தொடங்கின.

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “மனசெல்லாம் பூவாசம்..

  1. ரெய்டு வரப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட அரசியல்வாதியின் பல்ஸைப் போல..
    ~சரியாந உவமை.

  2. அருமை‌யா‌ன கதை‌. உழை‌க்‌கச்‌சொ‌ல்‌லி‌ உற்‌சா‌கப்‌படுத்‌தி‌ய வி‌தம்‌ அருமை‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *