— முனைவர் இதயகீதம் இராமனுஜம்.

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.

முன்னுரை:
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வள்ளலார் வாடினார். ஏன் தெரியுமா? பயிர் விளைந்தால்தான் உணவு கிடைக்கும். உணவு கிடைத்தால்தான் மக்கள் வாழ்க்கை செழிக்கும். அந்த வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பது இயற்கை. இதுவே வள்ளலாரின் சிந்தனையாக இருந்தது. அதே போல மக்கள் குறிப்பாக ஏழைக் குழந்தைகள் வாடியதால் சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். பெருந்தலைவர் காமராசர் கொண்டுவந்த மதிய உணவு திட்டத்தை சத்தான முத்தான திட்டமாகக் கொண்டு வந்து நடைமுறைப் படுத்தியவர் பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பேரறிஞர் அண்ணாவின் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதைப் போல மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கி அதில் இறைவனைக் கண்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இன்றும் கிராமத்து மக்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறையவில்லை… எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பிறப்பு:
எம்.ஜி.ஆர். என்று மூன்று எழுத்தால் பாரெங்கும் புகழ் பெற்ற பொன்மனச்செம்மல் மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) மருதூர் கோபால மேனனுக்கும் சத்திய பாமாவுக்கும் 1917ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 17ஆம் நாள் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார்.

இளமையின் கனவும் லட்சிய உணர்வும்:
இளமை பலருக்கு இனிமையாக இருக்கும். சிலருக்கு இன்னலாக இருக்கும். புரட்சித்தலைவரின் இளமை வாழ்க்கை பல சோகங்களும் இன்னல்களும் கலந்து இருந்தது. இளம் தந்தையை இழந்தார் எம்.ஜி.ஆர். அதனால் அவரது தாயார் சத்யபாமா வேதனையில் அவதிப்பட்டார். உழைத்து பிள்ளைகளைக் காக்க முடிவு செய்து மருதூரிலிருந்து தமிழகம் வந்தார். கும்பகோணத்தில் குடியேறினார். தனியாக குழந்தைகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்த சத்யபாமா அம்மையார் வேலை செய்து குழந்தைகளை வளர்த்தார்.

தங்கள் குழந்தைகள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும். உலகிலே சிறந்த பக்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுதான். இதை நீங்கள் செய்ய வேண்டும். ஏழைகளின் துயரத்தைத் துடைத்தாலே கடவுளைத் தொழுத பலன் கிட்டும் என்று தனது தாயார் சொல்லிக்கொடுத்த பாடத்தைத்தான் தனது வாழ்நாளில் இலட்சியமாக இருந்து செயல்படுத்தினார் பொன்மனச் செம்மல்.

மக்கள் சேவை:
நாடும் சமூகமும் நலமாக இருக்க நல்ல பழக்க வழக்கங்கள் அவசியம். அதைத்தான் திரைப்படங்கள் மூலம் எம்.ஜி.ஆர். பரப்பினார். ராமானுஜர், ஆதிசங்கரர், காஞ்சி மகா சுவாமிகள் போல எம்.ஜி.ஆர். ஒரு அவதார புருஷர். ஏனென்றால் நாட்டு நலனுக்காக ஆன்மீக வழியில் அவர்கள் சேவை செய்தனர். ஆனால் எம்.ஜி.ஆர். தன் தொழிலான திரைப்படங்கள் மூலம் மனித நேயத்தையும் மக்கள் பண்புகளையும் மக்கள் மனதில் விதித்தார். எம்.ஜி.ஆர். தனது தாய் சத்யபாமா அம்மையாரின் அறிவுரைகள், தனது வாழ்க்கையில் சந்தித்த பல கஷ்டங்கள், நஷ்டங்கள், வேதனைகள், துயரங்கள் மூலமும் மிகவும் பக்குவமடைந்தார். அதனால் சமூகமும் நாடும் இப்படி இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று உணர்ந்தார். அதனால்தான் ஆட்சிக் கட்டிலில் எம்.ஜி.ஆர். அமர்ந்தபோது பல மக்கள் நலத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி மக்கள் சேவையே மகேசன் சேவை என்னும் தாரக மந்திரத்தைச் சொல்லி நலம் பயக்கும் திட்டங்களை நிறைவேற்றினார்.

தேடி வந்த விருதுகள்:
1960ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டும், விருதில் ஹிந்தி வார்த்தைகள் இருந்ததால் அதை ஏற்க மறுத்தார் பொன்மனச்செம்மல்.
1972ஆம் ஆண்டு ரிக்ஷாக்காரன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றார்.
1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
புரட்சித் தலைவருக்கு டாக்டர் பட்டம் சென்னை பல்கலைப் கழகமும் அரிசோனா உலகப் பல்கலைக் கழகமும் இணைந்து வழங்கிப் பெருமைப்படுத்தியது.

அரசியல்:
திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற எம்.ஜி.ஆர். அவர்கள் தி.மு.கவில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையினால் தி.மு.கவில் இருந்து விலகி அ.தி.மு.க. என்னும் கட்சியைத் துவங்கினார். கட்சியைத் துவக்கிய நிலையில் திண்டுக்கல் எம்.பி. தொகுதி இடைத்தேர்தல் வந்தது. அதுதான் எம்.ஜி.ஆர்.-ன் அ.தி.மு.கசந்தித்த முதல் தேர்தல் களம். ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகள் போட்டியிட்ட நிலையில் தன் கட்சி வேட்பாளரான மாயத்தேவரை வெற்றி பெறச் செய்தார் எம்.ஜி.ஆர். தன்னுடைய சினிமா மாயைக் காட்டி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டார். பொதுத் தேர்தல் வரட்டும்… அப்போது தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து எம்.ஜி.ஆர். வெற்றி பெறுவாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆரால் இவ்வளவு விரிவாகப் பிரச்சாரம் செய்ய முடியாது. சினிமா மாயை கலைந்துவிடும் என்று தன் கட்சியினருக்குத் தைரியம் சொன்னார் கலைஞர் கருணாநிதி.

எம்.ஜி.ஆர். மீது பல வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகளை எல்லாம் முறைப்படி அறப்போராட்டம் மூலம் சந்தித்தார். அரசைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார். எம்.ஜி.ஆருடன் ஜானகி அம்மாளும் உண்ணா விரதத்தில் கலந்து கொண்டார். காலை எட்டு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை உண்ணாவிரதம் இருந்து தன் எதிர்ப்பைக் காட்டுவார். அராஜகத்தில் ஈடுபடமாட்டார்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த வரையில் மக்கள் நலனே தன் நலன் என்ற வகையில், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் ஆட்சி செய்தார். மின் கட்டணம், பால் விலை கூட்டாமல் இருந்தார். விவசாயிகளுக்கு மின் கட்டணம் கட்டும் முறையில் எளிமையும் சலுகையும் காட்டினார். விவசாய மின் கட்டணம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் மற்றும் சாதாரண மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் தடையில்லாமல் கிடைக்குமாறு செய்தார். திறமையான அதிகாரிகளின் ஆலோசனையைக் கேட்டு முடிவு எடுத்தார்.

பொருளாதாரமும் எம்.ஜி.ஆரும்:
1977ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் மாற்றுக் கட்சித் தலைவர்கள்… “எம்.ஜி.ஆருக்குப் பொருளாதாரம் தெரியுமா?” பொருளாதாரம் தெரியாமல் ஆட்சி நடத்த முடியுமா? என்று கேட்டார்கள். இதற்குப் பதிலளித்த எம்.ஜி.ஆர். “அடுத்த வேலை பசியைப் போக்கத் தெரியும். உழைப்பும் எளிமையும் சேமிப்பும் நேர்மையும் இருந்தால் போதும், யாரும் பிரகாசமான வாழ்வு பெறலாம். இதுதான் எனக்குத் தெரிந்த பொருளாதாரம்” என்று பதிலளித்தார். பசியோடு இருந்தவன் நான். பசியை வென்றேன். திரைத்துறையில் ஈடுபட்டு திருப்தியாக வளர்ந்தேன். அதேபோல் என் ஆட்சியிலும் மக்கள் திருப்தியை அடையச் செய்வேன் என்றார்.

திரைப்படப் பாடல்களில் திசையைக் காட்டியவர்:
மீனவ சமுதாயத்திற்காக எழுதிய இப் பாடல் உலக அரங்கம் முழுவதும் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தரைமேல் பிறக்க வைத்தான்…
எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான் …
– என்ற பாடல் வரிகளில் அசைந்தாடுகின்றபோது, சமூகத்தின்மீது இவருக்கு உள்ள அக்கறை புலனாகிறது!

ஒரு தாய் மக்கள் நாமென்போம்..
ஒன்றே எங்கள் குலமென்போம்…
– என்ற பாடல் மூலம் நாமெல்லாம் இந்தியத் தாயின் பிள்ளைகள் என்றும் நாம் அனைவரும் மனிதர்கள் என்னும் குலத்தைச் சார்ந்தவர் என்றும் விளக்கினார்.

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்.. அவர்
என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்..
– என்ற பாடலின் மூலம் அண்ணாவின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்தார்.

திருடாதே பாப்பா திருடாதே..
வறுமை நினைத்து பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே..
-என்ற பாடலில் குழந்தைகளுக்கு திருடக் கூடாது என்ற தத்துவத்தை போதித்து வறுமையை நினைத்து பயந்து போகக் கூடாது. நமக்கு திறமை இருக்கு என்பதை நினைவூட்டி மக்கள் மனதில் திறமையை போதித்தவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.

இவரது பாடல்களை பாமரர் முதல் படித்தவர் வரை கேட்டு மகிழ்கிறார்கள். சோதனையும் வேதனையும் வரும்போது அவரது தத்துவப் பாடல்கள் சோகத்தை விரட்டும் சக்தியாக விளங்குகிறது என்றால் அது மிகையில்லை.

சமூகப் பார்வை:
கடமையைச் செய். பலன் தானாக வரும் என்பது கீதையின் வாசகம். சமார்த்தியத்தைவிட சத்தியம் உயர்ந்தது என்பார் எம்.ஜி.ஆர். புகைக்கக் கூடாது … மது அருந்தக் கூடாது… திருடக் கூடாது… அராஜகம் செய்யக் கூடாது… பணிவு வேண்டும்… விசுவாசம் வேண்டும்… பெற்றோரைத் துதிக்க வேண்டும்… தோல்வி கண்டு துவளக் கூடாது… எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் வேதனை வந்தாலும் பொறுமையும் உழைப்பும் நல்ல வாழ்வைத் தரும் என்பார்.

பழி வாங்கக் கூடாது… அடுத்தவர் பொருளை அபகரிக்கக்கூடது… வரதட்சணை வாங்கக் கூடாது… ஊதாரித்தனம் கூடாது… அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும்… மனித நேயம் பேண வேண்டும்… குழந்தைகளை மதிக்க வேண்டும்… அவர்கள்தான் சமூகத்தில் நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்பார்… பெற்றோர்கள் நேரில் வந்த தெய்வங்கள் என்பார்.

நம்மை யாரும் பார்க்கவில்லை என்கிற தைரியத்தில் தவறு செய்யாதீர்கள். எங்கும் வியாபித்து இருக்கும் தெய்வம் (சத்தியத்தின் கண்கள்) உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சாட்சியிடம் தப்பிக்கலாம். சட்டத்தின் முன் தப்பிக்கலாம். ஆனால் சத்தியத்திடமிருந்து தப்ப முடியாது – சத்தியம் தெய்வம் அத்தனை வலிமை வாய்ந்தது. இந்தத் தத்துவத்தைத்தான் சிரித்து வாழ வேண்டும் திரைப்படத்தில் வரும் மேரே நாம் அப்துல் ரஹ்மான் என்ற பாடலின் வரிகள் வாயிலாக விளக்கியுள்ளார் எம்.ஜி.ஆர்.

முடிவுரை:
தமிழக சட்ட மன்ற வரலாற்றில் முதல்வர்களாக பணி புரிந்ததில் பல சாதனைகள் புரிந்திருந்தாலும், ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த காமராசருக்கு அடுத்தபடியாக தொடர்ந்து பத்தரை ஆண்டுகள் முதல்வராகப் பணி செய்த சாதனை புரிந்தவர் எம்.ஜி.ஆர். அவரது ஆட்சியில் மக்கள் கஷ்டம் இல்லாமல் திருப்திகரமான மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்ந்தனர்.

மனித நேயம், உழைப்பு, உண்மை, பாசம், அர்ப்பணிப்பு, நேர்மை, சேவை எண்ணம் கொண்டு மகத்தான சாதனை புரிந்தவர். காஞ்சி மகா சுவாமிகளின் ஆசியும் பெற்ற எம்.ஜி.ஆர். இந்தப் பூவுலகை விட்டு 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் நாள் பொன்னுலகம் சென்றார்.

பொன்மனசெம்மலின் வழியில் நாமும் மனித நேயத்தை வளர்த்து வாழ்க்கையில் முடிந்தவரை அனைவருக்கும் உதவி செய்து வாழ்வில் வளம் பெறுவோம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மனதில் நிறைந்த மக்கள் திலகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *