–புவனா.

எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து

எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…

தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ..
செவ்வானமே உந்தன் நிறமானதோ ..
பொன் மாளிகை உந்தன் மனமானதோ ..
என்ற பாடலுக்கேற்ப மாளிகை போன்ற மனதை உடையவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் பயிர்கள் (உயிர்கள்) ஏராளம்.

அவர் பிறந்தது இலங்கையாக இருந்தாலும் .. தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால்தானோ என்னவோ “வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் பண்பு – அவரைத் தேடி வந்தவரை எல்லாம் வாழவைத்துக் கொண்டிருந்தார்.

நடிகரில் மனிதர்: மனிதர்கள் நடிகராக வருவது இயல்பு. ஆனால், “நடிகருள் மனிதராக மக்கள் திலகம் வாழ்ந்தவர்”. இன்னும் சொல்லப் போனால் மனிதருள் கடவுளாகவே பலருக்குத் தென்பட்டவர்.

அவரது தோற்றம் போலவே எண்ணமும் அழகு..அதனால்தான் புகழின் உச்சத்தையே அவர் அடைந்தார். திரை உலகில் அவர் தான் ஏந்தி வரும் ஒவ்வொரு வேடத்தையும் அதற்கான முயற்சிகளையும் தானே மேற்பார்வை காட்டினார்; உதாரணம் – அவர் எங்க வீட்டு பிள்ளையில் பாடி நடித்ததை பார்த்து மக்கள் அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பார்த்தனர். எல்லா படங்களிலும் சண்டைக் காட்சிகள் அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஏன்? தன்னை ஒரு பயில்வானாக காட்டிக்கொள்ளவா? இல்லை. ஸ்டன்ட் நடிகரின் பிழைப்பிற்காகவே தனது எல்லா படங்களிலும் சண்டைக் காட்சி வைத்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.

திரையில் அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் கருத்தாழம் நிறைந்தது. ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு பாடல் மூலம் பறை சாற்றிக் கொண்டிருந்தார். அது 2 வயது குழந்தை முதல் 100 வயது வரையிலான வயோதிகர் வரை சென்று சேர்ந்தது.

விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்..
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்..

என்ற வரிகளுக்கேற்ப தமிழினத்திற்காக பாடுபட்ட ‘மன்னாதி மன்னன்’ .. அவர்.

அவரது பாடல்களைக் கேட்டாலே புத்துணர்வு பிறக்கும். அது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி.. நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி.. எதிர்மறை எண்ணங்களே இல்லாது பார்த்துக் கொண்டிருந்தார். பாடல்கள் மட்டுமல்லாமல் அவருடைய படத்தின் பெயரும் எதிர்மறை எண்ணத்தைத் தவிர்த்து .. உதாரணம் – தாய் சொல்லை தட்டாதே.. மன்னாதி மன்னன், நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும், காவல்காரன், ஒளி விளக்கு, இன்னும் பல..

இந்தப் பெயர்களால் ஒரு விதமான நம்பிக்கை மனதில் தோன்றுகிறதல்லவா.. தானும் உயர்ந்து தன்னை சார்ந்தவரையும் உயர்த்துபவன் தான் தலைவன். அந்த வகையில் எம்.ஜி.ஆர். ஒரு உண்மையான தலைவன்.

எதோ நடித்தோம், பணம் சம்பாதித்தோம், மறைந்தோம் என வாழும் நடிகர்களுக்கு மத்தியில் அவரின் சிந்தனையே சொல்லானது.. சொல்லே செயலானது.. அந்த செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார்.

அவர் பற்றி எழுதும் இந்தக் கட்டுரையில் எனக்கு தெரிந்த இருவரின் அனுபவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

1. பட்டப்படிப்பு வரை படித்த இளைஞன் ஒருவர் – அரசாங்க உத்தியோகத்திற்கு முயற்சி செய்த காலத்தில், பல முறை தேர்வு எழுதியும் பலனில்லை. தேர்ச்சி பெறவில்லை. குடும்ப சூழலின் காரணமாக வேலைக்காக மிகவும் பாடுபட்ட காலமது. மனம் வெறுத்து இதுதான் கடைசிமுறை என நினைந்து தேர்வு எழுத சென்றார். அதில் ” உனக்குப் பிடித்த தலைவர் பற்றி” ஒரு கட்டுரை வரையும்படி கேள்வி இருந்தது. அவர் உடனே.. எம்.ஜி.ஆர். எனும் தலைவர் என்னும் தலைப்பில் எழுதினார். தன் மனதில் ஆழப் பதிந்திருந்த .. எண்ணி நெகிழ்ந்திருந்த விஷயங்களை எழுதினார். அந்த முறை தேர்ச்சி பெற்றார். அவரைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்.தான் தன்னை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.

2. ஒரு முதியவர் .. ஒரு நாள் .. எம்.ஜி.ஆர் அவர்களிடம் வந்து உன்னை நம்பி என் பையனை படிக்க வைத்தேன். நீதான் வாழ வழி காட்ட வேண்டும் என்றார். உடனே எம்.ஜி.ஆர். முதலில் நீங்கள் சாப்பிடுங்கள்.. பின்னர் பேசுவோம் என்றார். அனால் முதியவர் விடவில்லை. தன் குறையை அழுது புலம்பிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். நீங்கள் சாப்பிடுங்கள்.. உங்கள் மகன் அடுத்த மாதம் அரசாங்க சம்பளம் உங்களுக்கு கொண்டு வருவான் என்றார். அதுபோலவே, அடுத்த மாதம் அந்தப் பெரியவர் தன் மகனின் சம்பளக் கவரோடு முதல்வரை (மக்கள் திலகத்தை) காண வந்தார்.

எந்த முதல்வரையாவது இப்படி எளிதில் எளிய மக்கள் காண முடியுமா? ஆனால் மக்கள் திலகம் அவர்களை காண முடிந்தது. கர்ணன் மறுபிறப்பு எடுத்து இவராக இம் மண்ணில் தோன்றினாரோ என்று தோன்றுகிறது.

இன்று பலர் அவரைப்போலவே நடித்து, ஆடிப்பாடிப் பிழைக்கிறார்கள். ஒரு சிலருக்கு அவருடைய வேடம் ஒத்துப்போகுமாயின், அதைக் காணும் பொது மக்களும், தாய் மார்களும், “வாங்கையா வாத்தியாரைய்யா’ என பெருமை கொள்வது அவரின் மீது உள்ள பற்றும் ஈடுபாடும் தான் காரணம். அவரை ஓர் அவதார புருஷனாகவே எண்ணியிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டையும் தாண்டி மேல் நாடுகளில் அவரைப் பற்றித் தெரியும். இது ஒரு நடிகனாக இருந்ததால் மட்டுமலா.. அவர் செய்த ஒவ்வொரு நல்ல செயலும் அங்கும் எதிரொலித்தது. நடிப்பதைத் தொழிலாகவும், கொடுப்பதைக் கொள்கையாகவும் கொண்டவர் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் எலும்பிலும் தசையிலும் உடல் இருக்கும். ஆனால். இவருக்கோ தங்கத்தால் வார்த்த உடம்பு….அதனால்தான் எமனையும் ஒரு முறை வென்றார்.

புரட்சித் தலைவர் பள்ளியில் படிக்காவிட்டாலும் பல்கலைக் கழகமாக தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால்தான் அவர் தியாகரஜ சட்டக் கல்லூரியில் சேர்மேனாக அமர முடிந்தது.

மனிதன் உயிர் வாழத் தேவையானது உணவு. மனிதனாக வாழ வைப்பது கல்வி. இந்த இரண்டையும் தான் பிறருக்காக அள்ளி வழங்கிய வள்ளல். அவரது சத்துணவு திட்டம், அவர் காலத்தில் திறக்கப்பட்ட அரசு பள்ளிகளும் சாட்சி.

முடியாது.. இல்லை.. என்ற இரண்டு வார்த்தைகளையும் தமிழில் உள்ள அனாவசிய வார்த்தைகள் என அப்புறப்படுத்தியவர் பொன் மனச் செம்மல்.

எம்.ஜி.ஆர்.

அரிதாரம் இட்டு அடையாளமாகி ..
அகம் நுழைந்து ஜகம் ஆண்டவன்..
மக்கள் மனதில் குடியிருந்த கோவில்
என்றென்றும் ஊருக்கு உழைப்பவன்
அள்ளிக் கொடுப்பதில் அவர் மன்னாதி மன்னன்
மொத்தத்தில் என்றென்றும் அவர் எங்க வீட்டுப் பிள்ளை..

காலத்தை வென்றவர் அவர்..
காவியமானவர் அவர்..

— புவனா, மும்பை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *