துணிவோடு எடுத்துரை!
-ஆர். எஸ். கலா
வெள்ளைக் காகிதத்தையும்
கருமை எழுது கோலையும்
என் கரங்களில் கொடுத்து
விட்டு ஒதுங்கி நின்று பார்…
புனைந்து விடுவேன் நான்
கவிதை ஒன்று, மறுத்துப் பேச
துணிவு இன்றி வெடவெடத்துப்
போகும் சில கால்களும் நின்று!
நான் உருட்டி விடும் வார்த்தை
ஒவ்வொன்றும் சிலரின் நாக்குப்
போட்ட படிகள் அதைக் கண்டும்
தயங்காது நடக்கும் என் எழுது
கோலின் வரிகள் எனப் புரிய
வைப்பேன் நான் நின்று!
தொடர்வண்டிகளாய்த் தொடரும்
உள்பூசல்களை, கதிர்வீச்சை
விட விரட்டி அடிப்பதில் வல்லமை
பெற்றது மனத் துணிச்சல்
என்பது புரியும் இன்று!
இறக்கை இன்றிப் பறக்க
விடும் எழுத்துக்கள் கொடுக்கும்
எத்தனையோ முகவரிகளை
நிறுத்தி விடு, உன் அடக்கு
முறைகளைக் கடக்க விடு பல
பாதைகளை, குவிக்கட்டும் எழுதும்
கரங்கள் சாதனைகளைத்
துணையாகக் கொடு உன் கரம்
கொண்டு நீயும் என்றும்!
இனிய மதிய வணக்கம் !!