–எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

     சித்திரையின் பின்னாலே
     சிறப்பெல்லாம் வருமென்று
     பக்குவமாய்ப் பஞ்சாங்கம்
     பார்த்திடுவோம் யாவருமே!

     பஞ்சாங்கப் பலன்தன்னைப்
     பலபேரும் பார்த்துவிட்டு
     நெஞ்சார மகிழ்ந்தாலும்
     சிலநெஞ்சம் மகிழாது!

     பரிகாரம் செய்துவிடின்                                  Nataraja
     பலன்சிறந்து விடுமென்று
     பலன்குறைந்த நெஞ்சத்தார்
     பலவற்றைச் செய்திடுவார்!

     பூசைகள் பலசெய்வார்
     புதுவழிகள் பலபார்ப்பார்
     ஆசையால் உந்தியவர்
     காசையெல்லாம் செலவிடுவார்!

    சித்திரையை யாவருமே
    சிறப்பாக வரவேற்போம்
    சிக்கலெலாம் போகவேண்டிச்
    சிரத்தையுடன் செயல்படுவோம்!

    புத்தாடை உடுத்திடுவோம்
    புத்துணர்வு பெற்றிடுவோம்
    மொத்தமுள்ள நல்லவற்றை
    முழுமையுடன் செய்திடுவோம்!

    சித்திரையின் பின்னாலே
    சீராகும் எனும்நினைப்பால்
    அத்தனை பேருள்ளமுமே
    சித்திரையைக் கொண்டாடும்!

    வாசலிலே கோலமிட்டு
    வரவேற்போம் சித்திரையை
    நீதிநெறி தனைமனதில்
    நீங்காது தேக்கிவைப்போம்!

    தாய்தந்தை மனங்குளிரத்
    தாள்பணிந்து நின்றிடுவோம்
    பேய்மனத்தை ஒழிப்பதற்குப்
    பெம்மானை வணங்கிடுவோம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *