சு. கோதண்டராமன்.

ஓம்

619px-Rigveda_MS2097

வேதம் ஓதத் துவங்கும் போதும், முடிக்கும் போதும், ஓம் என்னும் மந்திரத்தைச் சொல்வது வழக்கமாக உள்ளது. இறைவனுக்கு எந்த மந்திரத்தைக் கூறி அர்ச்சனை செய்தாலும் அதற்கு முன் ஓங்காரம் உச்சரிக்கப்படுகிறது. இது எல்லா வேதங்களின் சாரம் என்று சாந்தோக்கிய உபநிஷத்தும், ஓங்காரமே பிரம்மம் (பரம்பொருள்) என்று தைத்திரீய, பிரச்ன உபநிடதங்களும் கூறுகின்றன. பிற்கால வேத இலக்கியத்தில் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் ஓங்காரம் ரிக் ஸம்ஹிதையில் காணப்படவில்லை என்று பார்த்தோம். இது இடைப்பட்ட காலத்தில் தோன்றியிருக்க வேண்டும்.

பிற்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் தாய் வேதமாகிய ரிக் ஸம்ஹிதையின் கருத்துக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவை வேதமாகக் கருதப்படும்.

ஓங்காரம் வேதத்துக்கு ஏற்புடையதா என்று பார்ப்போம். ஓங்காரத்தின் பொருள் என்ன?

ஓங்காரத்துக்குப் பொருளே சொல்ல முடியாது என்று சிலரும், இறைவன் தான் ஓங்காரத்தின் உட்பொருள் என்று சிலரும் கூறுவர். இன்னும் சிலர், உலகிலுள்ள அனைத்து ஒலிகளின் சங்கமமே ஓங்காரம் என்பர்.

இறைவனை ஓங்கார வடிவினனாகச் சொல்வது ஏன்?

ஓங்காரத்துக்கு இன்னொரு பெயர் பிரணவம் என்பது. ப்ரணவ என்ற சொல் ப்ர+நவ என்ற இரு சொற்களின் கூட்டு. ப்ர என்ற முன்னொட்டு முதன்மை அல்லது சிறப்பைக் குறிக்கும். நவ என்பதற்குப் புதுமை என்பது பொருள். எனவே ப்ரணவம் என்பது புதுமைக்குச் சிறப்பு என்று பொருள் தருகிறது.

புதுமைக்குச் சிறப்பு அளித்தல் என்பது, அடிப்படையை மாற்றாமல் பிற விஷயங்களில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகும்.

பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் கணம் தோறும் மாறிக் கொண்டே, புதுமை அடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு பிரபஞ்சமே ஓங்கார ஸ்வரூபமாக உள்ளது. இந்த இடை விடாத மாற்றங்களின் காரண கர்த்தாவான இறைவனும் ஓங்கார ஸ்வரூபனாகக் கருதப்படுகிறான். இறைவனை முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே என்று போற்றிய மாணிக்கவாசகர் அடுத்த அடியில் பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே என்று கூறுவதை நோக்குக.

பதஞ்ஜலி யோக சூத்ர உரையில் பாரதி கூறுவதைக் கேட்போம். “ஓம் என்பது பிரணவ மந்திரம். இந்த மந்திரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள் சொல்கின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமையானது என்ற பொருள் தருவது.”

ரிக் ஸம்ஹிதை புதுமையை ஆதரிக்கிறதா? ஆம்.

சாதாரணமாகக் குழந்தைகள் தாம் புதுமையை விரும்புவார்கள். எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறையாகப் பார்ப்பது போல ஆர்வத்துடன் பார்ப்பார்கள். ரிஷிகள் அது போல அக்னி எரியும் அழகை ஒவ்வொரு முறையும் புதிதாகப் பார்த்துப் பரவசப்பட்டு வர்ணித்தார்கள் என்பதை முன்பு பார்த்தோம்.

வைகறைப் பொழுதைப் புகழ்ந்து ரிஷி பாடுகிறார். இதுவரை எத்தனையோ வைகறைகளைப் பார்த்துப் பரவசப்பட்டிருக்கிறார் அவர். அது தான் பார்த்தாயிற்றே, இன்றைக்கும் அதே மாதிரித் தானே இருக்கப் போகிறது என்று அவர்கள் அலுப்பு அடையவில்லை. இன்றைய வைகறை இதற்கு முன்பாக வந்த மற்ற வைகறைகளை விட அழகானது என்று தினமும் சொல்கிறார்.1.123.10 ஒவ்வொரு நாளும் புதுப்புது அழகு தோன்றுகிறது அவருக்கு.

ஒரு பிரபலமான மந்திரம் இது. நவோ நவோ பவதி என்று தொடங்குவது. இதில் ரிஷி தினமும் சந்திரனின் வடிவம் மாறுவதைக் கண்டு சந்திரன் தினமும் புதிதாகப் பிறப்பதாகக் கூறி பரவசப்படுகிறார்.

நவோ நவோ பவதி ஜாயமானோ அஹ்னாம் கேதுருஷஸா மேத்யக்ரம், பாகம் தேவேப்யோ விததாத்யாயன் ப்ர சந்தரமாஸ் திரதே தீர்கமாயு: 10.85.19

எனவே வேத ரிஷிகளுக்குப் புதுமையைக் கண்டு ஆனந்தம் ஏற்படுகிறதே அன்றி அலுப்பு ஏற்படுவது இல்லை.

வேத ரிஷிகள் பல இடங்களில் நான் இந்தப் புதிய தோத்திரம் இயற்றியிருக்கிறேன் என்று சொல்கிறார்கள். தேவர்களை வழிபட முந்தைய ரிஷிகள் செய்த மந்திரங்கள் போதும் என்று அவர்கள் இருந்து விடவில்லை. புதிய மந்திரங்களைப் படைக்கிறார்கள்.

ரிக் ஸம்ஹிதையிலேயே, முந்திய ரிஷிகளின் கருத்துக்கு மாறுபட்ட புதிய கருத்துகள் காணப்படுகின்றன என்று பார்த்தோம். யக்ஞம் செய்தால் தான் தேவ நிலையை அடையலாம் என்று ஒரு கருத்தும் காணப்படுகிறது. ரிபு சகோதரர்கள் யக்ஞம் என்று எதுவும் செய்யவில்லை. சமீகள் மூலமாகவே யக்ஞத்தின் பலனை அடைந்தார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. பசுக்களைக் கொன்று வேள்வி நடத்திய காலத்தில் பசுக்களைக் கொல்லாதீர்கள் என்ற புதிய கருத்தும் எழுகிறது. இந்தப் புதுமையை மக்கள் எதிர்க்கவில்லை. வேதத்தில் அந்தக் கருத்தையும் சேர்த்துக் கொண்டார்கள். இந்த நெறிப்படி, காலத்திற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வந்ததால் தான் இந்து சமயம் எத்தனையோ சோதனைகள் வந்தும், அவற்றைக் கடந்து வந்து இன்று உலகளாவப் பரவத் தொடங்கியுள்ளது. ரிக் வேத ஸம்ஹிதையே இந்தப் பரந்த மனப்பான்மைக்கு அடித்தளம் இட்டது. பின்னர் எழுந்த நூல்களும் இத் தடத்திலேயே சென்றன. எனவே அவையும் வேதம் என்ற தலைப்பின் கீழ்க் கொண்டு வரப்பட்டன.

வேதம் காலம் தோறும் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு இந்த ஓங்காரமே சாட்சி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *