-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

        மன்மத வருடமதை மனமகிழ வரவேற்று
        துன்மதி போயிடவே துதித்துமே கடவுளைநாம்
        பன்முறை வணங்கிநின்றால் பலநன்மை வந்துவிடும்
        என்னினிய நண்பர்காள் இவ்வண்ணம் செய்திடுவீர் !

        புதுவருடம் எமக்கெல்லாம் புத்துணர்வு தந்திடட்டும்
        எமதுளத்தில் என்றென்றும் எழுந்திடட்டும் நல்லெண்ணம்
        தமதுயிரால் எமைவாழ வைத்துநிற்கும் பெரியோரைத்
        தானினைத்து அவர்பாதம் தனைவணங்கி நிற்போமே !

        நல்லவைகள் ஆற்றவெண்ணி நாமென்றும் நினைத்திடுவோம்
        அல்லவைகள் புறந்தள்ளி உள்ளமதைத் திருத்திடுவோம்
        உள்நுழையும் கள்ளமெலாம் உருக்குலையச் செய்துநிற்போம்
        நல்லவரின் அறிவுரையை நாம்கேட்டு நடந்திடுவோம் !

        கோவில்சென்று கும்பிடுவோம் குறையகல வேண்டிடுவோம்
        கோபமெனும் கொடுநெருப்பைக் குளிர்விக்க முயன்றிடுவோம்
        சாபமிடும் பேய்க்குணத்தை சம்காரம் செய்திடுவோம்
        சன்மார்க்கம் மனத்திலெழ சகலருமே வேண்டிநிற்போம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *